

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அப்போது, திண்டிவனம் புறவழிச் சாலை தீர்த்தகுளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, ஓசூரில் இருந்து புதுவை சென்று கொண்டிருந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சவுந்தர்ராஜன் தனது குடும்பத்தாருடன் வந்த கார் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அரசு பஸ் டிரைவரும், சவுந்தர்ராஜனும் சமாதானமாகி அங்கிருந்து சென்றனர். இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இது திண்டிவனம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.