என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெஞ்சுவலி"

    • வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.
    • மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும்.

    வாய்வு பிடிப்பு, மாரடைப்பு இரண்டுமே நெஞ்சு வலியை உண்டாக்கும். அநேக மக்களுக்கு எல்லா நெஞ்சு வலியும் இதயம் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்குமோ என்ற பயமும், கவலையும் தான் அதிகமாக இருக்கின்றது. ஆனால் எல்லா நெஞ்சு வலிகளும் இதயம் சம்பந்தப்பட்டது இல்லை என்று நினைத்து ஒதுக்கிவிடவும் முடியாது.

    வாய்வு உண்டாக்கும் நெஞ்சுவலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

    அடிக்கடி ஏப்பம் வரும், வயிற்றைப் புரட்டும், வயிறு உப்புசமாக ஊதிப்போய் இருக்கும். ஆசனவாய் வழியாகவும் காற்று வெளியேறிக் கொண்டே இருக்கும். நெஞ்சுவலி விட்டுவிட்டு குத்துகிற மாதிரி பிடிப்பு மாதிரி இருக்கும். வாய்வு வலி மேல் வயிற்றில் நெஞ்சுக்குக் கீழே உருவாகி நெஞ்சுப் பகுதிக்கு பரவும்.

    இனி மாரடைப்பை உண்டாக்கும் நெஞ்சு வலியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். சிலருக்கு மார்பு பகுதி திடீரென கனமாகி மிகமிகக் கடுமையான நெஞ்சுவலி வரலாம். திடீரென வரும் மாரடைப்பு மிகுந்த சக்தியுடன் வருவதால் சில நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்க வைக்க நேரிடும்.

    மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலியானது தொடர்ந்து இருக்கும். வலி மிக மிக கடுமையானதாக இருக்கும். நெஞ்சைக் கசக்கி பிழிகிற மாதிரி இருக்கும். நெஞ்சுப்பகுதியிலிருந்து இடது கை விரல்கள், இடது பக்க தாடை, தோள்பட்டை, கழுத்து, முதுகுப் பகுதி முதலிய இடங்களுக்கு வலி பரவும். மூச்சு விடுவதில் சிரமம், அதிகமாக வியர்வை, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே இருக்கும். சிலருக்கு இவைகளில் ஒருசில அறிகுறிகள் மட்டும் ஏற்படலாம்.

    கடின உடற்பயிற்சி செய்யும்போது, கடின உடல் உழைப்பு செய்யும்போது அதிக மன அழுத்தம், மன உளைச்சலில் இருக்கும்போது மாரடைப்பு வலி வரக்கூடும்.

    நீங்கள் இருக்கும் இடத்தை உட்கார்ந்திருக்கும் நிலையை சற்று மாற்றினால் வாய்வு உடலிலிருந்து வெளியாகி உங்களுக்கு பிரச்சினை தீர வாய்ப்புண்டு. வெந்நீர், சீரக நீர் குடித்தால் கூட வாய்வு வெளியேறி வலி குறைய வாய்ப்புண்டு. இதற்குப்பிறகும் வலி போகவில்லை என்றால் அது இதயம் சம்பந்தப்பட்ட வலிதான் என்று முடிவு செய்யலாம்.

    மாரடைப்பினால் நெஞ்சுவலியா, வாய்வுக் கோளாறினால் நெஞ்சுவலியா என்பதைக் கண்டுபிடிக்க இரண்டுக்கும் உண்டான அறிகுறிகளை மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனோ தானோ என்று மெத்தனமாக இருக்கக்கூடாது.

    மாரடைப்பு மட்டுமல்லாது பலவிதமான இதய நோய்களும், நுரையீரல் நோய்களும், ஆஸ்துமா, காசநோய், கொரோனா நோய், கணைய நோய், நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக்குழாய் சுருங்கிப் போதல், விலாஎலும்பு விரிசல் போன்றவைகளினால் கூட நெஞ்சுவலி ஏற்படலாம். உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையுடன் இதய சிகிச்சை நிபுணரை உடனே சந்தித்து அவசர முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.

    • நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
    • நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும்.

    'இடதுபக்க நெஞ்சுவலி என்றதுமே, நாம் முதலில் நினைத்து மிகவும் பயப்படுவது 'மாரடைப்பு' அதாவது 'ஹார்ட் அட்டாக்' தான். கொஞ்சமாக நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.

    நெஞ்சின் இடதுபக்கம் கனமாக, பாரமாக, இறுக்கமாக இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை: இதயம், நுரையீரல், நெஞ்சிலுள்ள தசைப்பிரச்சினைகள், ஜீரணக்கோளாறு, மன நல பிரச்சினைகள், விலா எலும்பு நோய், அதிக அளவில் வாயு சேருதல், ஆஸ்துமா, நிமோனியா போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.


    இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றால், நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும். இடது தோள்பட்டை வலிக்கும், இடது கை, இடது கைவிரல்கள் வரை வலி பரவும், உடம்பெல்லாம் மிக அதிகமாக வியர்த்துக் கொட்டும். தலை லேசாக வலிக்கும், வாந்தி வருவது போன்று இருக்கும், இதயத் துடிப்பு மிக அதிகமாக துடிக்கும்.

    மூச்சு வாங்கும், இதயத்துக்கு நேராக பின்பக்க முதுகில் வலி, நெஞ்சைச் சுற்றி கயிற்றைக் கட்டி இறுக்குவது போன்றதொரு உணர்வு ஏற்படும். இதுபோன்ற மாரடைப்புக்கான அறிகுறிகளில் சில உங்களுக்கு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.


    வாய்வுக்கோளாறு தான் நெஞ்சுவலியை ஏற்படுத்துகிறது என்று முடிவுசெய்து அதற்குண்டான வீட்டு வைத்தியம், மருந்துக் கடையில் நீங்களே மருந்தை வாங்கி சாப்பிடுவது போன்றவை மிகப்பெரிய தவறாகும்.

    மேலும், அதிக காரம், கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது நெஞ்செரிச்சலை உண்டுபண்ணும். இதுவே நெஞ்சு வலி வந்துவிட்டதோ என்ற பயத்தை உண்டாக்கும். எனவே இவைகளை குறையுங்கள்.

    மது, புகைப்பழக்கம் கூடாது. ஆஸ்துமா இருப்பவர்கள் அதை தூண்டிவிடும் பொருட்கள், உணவுகளிடமிருந்து விலகி இருங்கள்.

    உங்களுக்கு இதயப் பிரச்சனையைவிட, மனப்பயம் தான் அதிகமாக இருக்கிறது. வீடு, அலுவலகம், தொழில் போன்ற பிரச்சனைகளால் டென்ஷனாகும் போது சிலருக்கு நெஞ்சுவலி வரலாம். முதலில் மன தைரியம் வேண்டும். நெஞ்சுவலி வந்தால், உடனே அருகிலுள்ள இதய நோய் சிகிச்சை நிபுணரை சந்திக்க வேண்டும். 

    • கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும்.
    • உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.

    'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்பது இதயத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும். இதை உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.


    உலகளவில் ஏற்படும் மாரடைப்புகளில் 22 முதல் 60 சதவிகிதம் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சுவலி அல்லது இடது தோள்பட்டை, கழுத்து, முதுகு, தாடை போன்ற இடங்களில் வலியையும், வயிறு எரிச்சல், குமட்டல், வாந்தி, வியர்த்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.

    ஆனால் மேற்கூறிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலோ அல்லது மிக குறைவான அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படுவது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.

    பெரும்பாலும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வேறு காரணங்களுக்காக சில நாட்கள் கழித்து மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்யும் போது தான் தற்செயலாக கண்டறியப்படுகிறது.

    இது ஏற்பட ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, உடல் பருமன், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், அதிக தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், பரம்பரை இதய நோய்கள் போன்றவை முக்கிய காரணிகளாகும்.


    சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட முதன்மைக் காரணம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் கரோனரி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் கட்டிகளால் ஏற்படும் அடைப்பு.

    சில சமயங்களில் கரோனரி ரத்த நாளங்களின் இறுக்கத்தால் கூட சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக இதயம் மற்றும் மார்பு பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சில சமயங்களில் மாரடைப்பின் அறிகுறிகளை அவர்களால் உணர முடியாமல் போகிறது. இவர்களுக்கு சோர்வு, வயிறு எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் அப்போது ஏற்படலாம்.

    சர்க்கரை நோயாளிகளின் அலட்சியத்தால் சில சமயங்களில் கண்டறிய தவறிய சைலன்ட் ஹார்ட் அட்டாக் தீவிர சிக்கலாக மாறி பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள போலீஸ் குடியி ருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவுஇவர் நெஞ்சுவலிக்கிறது என்று கூறி உள்ளார். அதன் பெயரில் அவர் குடும்பத்தி னர் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடி யாக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார். இவரது சொந்த ஊர் வானூர் அருகே புதுப்பாளையம் கிராம மாகும். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மதுரை கடச்சநேந்தலை சேர்ந்த கிருபாகரன் (36) ஒட்டி வந்தார். பஸ் உலுப்பகுடி அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சி வலி ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் கிருபாகரன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார்.

    இதனை தொடர்ந்து பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் டிரைவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சின்ன வாய்க்கால் பகுதியில் வசித்து வருபவர் சுருதி (வயது 28) இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றது.
    • முன்தினம் நெஞ்சுவலி அதிகமாகவே தனது வீட்டில் தலைக்கு தடவும் எண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த த.ச. பேட்டை மீனவர் காலனி சின்ன வாய்க்கால் பகுதியில் வசித்து வருபவர் சுருதி (வயது 28) இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றது. கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நெஞ்சுவலி அதிகமாகவே தனது வீட்டில் தலைக்கு தடவும் எண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
    • மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நெல்லை:

    விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.

    அதன்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு, சாலை விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நி லைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றலாம் என்பது குறித்து பயிற்சி வகுப்பு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் மருத்துவர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். செயற்கை மனித உடல் மற்றும் மின்திரை மூலம் விபத்து மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்க ப்பட்ட பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து செய்து காண்பித்து செயல் முறை விளக்கத்து டன் பயிற்சி யளித்தனர்.

    பயிற்சி வகுப்பில் விபத்தில் காயம் அடைந்தவ ர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.

    பயிற்சியில் மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. சுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • கதிர்வேல் (வயது 60). தூக்கணாம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தார்.
    • சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த கதிர்வேலுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 60). தூக்கணாம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த கதிர்வேலுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கதிர்வேலை புதுவை மாநிலம், கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர்.
    • தனபாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேச்சேரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது.

    இதனை தடுக்க முற்பட்ட காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட கார் டிரைவர் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிர் இழந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கொடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எருமைப்பட்டி பகுதியில் உள்ள வாசுதேவனுக்கு சொந்தமான இடத்தை ரூ. 5 கோடிக்கு துரையரசு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலம் வாங்குவதில் இடைத்தரகராக தனபால் இருந்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்த நிலையில் குறிப்பிட்டப்படி துரையரசு வாசுதேவனுக்கு பணத்தை கொடுக்காமல் தலைமறை வாகியுள்ளார்.

    இதனையடுத்து வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில் இடைதரகராக செயல்பட்ட தனபாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேச்சேரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த தனபாலுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . இதனால் அவர் கதறி துடித்தார். தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர்.
    • மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    நெல்லையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவராக தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பெத்தநாடார்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கார்மேகம் (வயது 47) என்பவர் பணியில் இருந்தார். கண் டக்டராக வண்ணமுத்துக் குமரன் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

    இந்த பேருந்து ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே பஸ்சை ஓரங்கட்டி நிறுத்திய அவர் தொடர்ந்து இயக்க முடியாமல் தவித்தார். இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து கண்டக்டர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். சற்று தெளிவான நிலையில் இருந்த டிரைவர் கார்மேகன் தொடர்ந்து பஸ்சை இயக்கியவாறு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்து சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டிக்கெட் எடுத்திருந்த பயணிகள் மட்டும் வேறு பஸ்சில் ஏற்றிவிடப்பட்டனர்.

    பின்னர் டிரைவர் கார் மேகத்தை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கண்டக்டர் வண்ணமுத்துக்குமரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றிய தகவல் அவரது மனைவி ராதாபுஷ்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். இதற்கிடையே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி டிரைவர் கார் மேகம் பரிதாபமாக இறந் தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தைரியமாக பஸ்சை ஓட்டி வந்து பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்ட டிரைவர் சிகிச்சையின்போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இறந்த டிரைவருக்கு கார்த்திக் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து டிரைவரின் மனைவி ராதாபுஷ்பம் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள செம்பரக்கல் பகுதியை சேர்ந்தவர் பரீத் (வயது49). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக தம்பனூர் சென்ட்ரல் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    கருநாகப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்பு நெஞ்சுவலி தாங்க முடியாமல் பஸ்சுக்குள்ளேயே சுருண்டு படுத்தார். இதையடுத்து அவர் கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக வந்தனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், பரீத் தான் ஓட்டிவந்த பஸ்சை கவனமாக மெதுவாக ஓட்டிச்சென்று ரோட்டோரமாக நிறுத்தி விட்டார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 30 பயணிகள் தப்பினர்.

    பயணிகளை காப்பாற்றி விட்டு, தனது உயிரை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார்.
    • ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் ஏற்காடு அடிவாரம் உள்ள கொண்டப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 59). போலீஸ்காரர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஹரிதாசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு ஹரிதாசுக்கு அவசர வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த போலீஸ்காரர் ஹரிதாஸ் உடலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், சக போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

    ×