search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consumer court"

    • உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
    • தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.

    அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.

    சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • பிஸ்கெட் சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (48). பால் வியாபாரி.

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் தனது சகோதரர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள கடையில் பிரபல நிறுவனத்தின் 5 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார்.

    அதைப் பிரித்து சாப்பிட்டபோது பிஸ்கெட் முழுவதும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் பிறந்தநாள் விழா பாதிக்கப்பட்டது. அதை சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறப்பட்டது. பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தது குறித்து கடை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.

    இதை தொடர்ந்து வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் கடந்த 5-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

    தீர்ப்பின் நகல் வழக்கு தொடுத்த வடமலைக்கு நேற்று வக்கீல் சரவணன் மூலம் அளிக்கப்பட்டது. அதன்படி பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தநிலையில், அதை வாங்கிய வடமலைக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் வடமலைக்கு ரூ.20 மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், இழப்பீடு வழங்கக்கோரி உத்தர விடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
    • 200-க்கும் மேற்பட்ட வர்களுக்காக, வருகிற 15-ந் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், இழப்பீடு வழங்கக்கோரி உத்தர விடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

    இவ்வாறு வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு பணம் செலுத்தாமல் உள்ள 200-க்கும் மேற்பட்ட வர்களுக்காக, வருகிற 15-ந் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான நோட்டீஸ் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை பணம் செலுத்தாததால் கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்களும், மேல்முறையீடு செய்த வர்களும் சமரச பேச்சு வார்த்தைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வரும் 15-ந் தேதி நடை பெறும் சமரச பேச்சு வார்த்தைக்காக வக்கீல்கள் பரமத்திவேலூர் ராம லிங்கம், திருச்செங்கோடு பாலசுப்ரமணியம், நாமக்கல் அய்யாவு, குமரேசன், சதீஷ்குமார், முரளி குமார், அந்தோணி புஷ்பதாஸ் மற்றும் சந்திரசேகர் ஆகி யோர் மத்தியஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

    ஏற்கனவே 10 வழக்கு களில் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்காத நபர்களை கைது செய்யக் கோரி உத்தரவிட்ட வழக்குகளில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் களுக்கு அனுப்பப்பட்ட கைது வாரண்டின் நிலை என்ன என அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி டாக்டர் ராமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த உத்தரவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 72 -படி நுகர்வோர் கோர்ட் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க நுகர்வோர் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே 3 வாரங்களுக்கு முன்னர் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ.55 ஆயிரத்துக்கான காசோ லையை சம்மந்தப்பட்ட நுகர்வோருக்கு நீதிபதி டாக்டர் ராமராஜ் வழங்கினார்.

    • கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் நீதிபதி அறிவுறுத்தினார்
    • தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டுறவு துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கலந்து கொண்டு பேசியது: தற்போது இந்தியா முழுவதும் 5 லட்சம் கூட்டுறவு அமைப்புகளில் 21 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.

    குறைந்த விலையில் பொருள்களையும், சேவைகளையும் நுகர்வோர் பெறுவதற்காக தனியார் வணிக நிறுவனங்களைப் போல விற்பனை மற்றும் சேவை வழங்கும் பணிகளை கூட்டுறவு நிறுவனங்கள் வழங்குகின்றன. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை வழங்க ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

    பிரச்சனை ஏற்படும் போது பாதிக்கப்படும் நுகர்வோர் மாவட்டத்திலுள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகுவதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. கூட்டுறவு துறையில் செயல்படும் குடிமைப்பொருள் அங்காடிகள், விற்பனை நிலையங்கள், கடன் சங்கங்கள், வேளாண்மை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு கூட்டமைப்புகள் அனைத்தும் நுகர்வோர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

    கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றுவது, நியாயமற்ற ஒப்பந்தத்தை திணிப்பது போன்ற நுகர்வோருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என்றார். பயிற்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி தலைமை வகித்தார். திருசெங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குனர் விஜய்சக்தி பங்கேற்று பேசினார். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ஜெயராமன் வரவேற்றார்.


    • கேரளா மாநில நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு கொடுக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.
    • ஃபோர்டு ஃபியஸ்டா மாடல் விளம்பர்த்தில் குறிப்பிடப்பட்ட மைலேஜ் கொடுக்கவில்லை என வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்தார்.

    புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதலில் கருத்தில் வைப்பது அதன் மைலேஜ் எவ்வளவு என்பது மட்டும் தான். கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கும் மைலேஜ் மற்றும் அன்றாட பயன்பாட்டில் கார்கள் கொடுக்கும் மைலேஜ் என இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு என்பது நம்மில் பலரும் அறிந்ததே.

    எனினும், கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது ஃபோர்டு ஃபியஸ்டா கார் அந்நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்ட மைலேஜை வழங்கவில்லை என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஃபோர்டு ஃபியஸ்டா காரின் விற்பனை 2015 முதலை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் இதே காரில் வழங்கப்பட்டு இருக்கிறது. 2011 ஆண்டு வாக்கில் ஆட்டோமொபைல் செய்திகளை வெளியிடும் நாளேடு காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களை ஓட்டி பார்த்தது.

    அதில் இந்த கார் லிட்டருக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கி இருக்கிறது. மிட்-சைஸ் செடான் மாடலில் இவ்வளவு மைலேஜ் கிடைப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். இதே தகவலை விளம்பரமாக வெளியிட ஃபோர்டு முடிவு செய்தது. அதன்படி இந்த செடான் மாடல் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற விளம்பரங்கள் வெளியாகின. இந்த விளம்பரம் தற்போது புது பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.

    இந்த வழக்கை தொடர்ந்த வாடிக்கையாளர் சௌதாமினி பிபி, கார் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற காரணத்தால் தான் இந்த காரை தான் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காரை வாங்கியதில் இருந்து அது அத்தனை மைலேஜ் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றம் சென்றார். இந்த கார் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குகிறது என அவர் மேலும் தெரவித்தார்.

    வழக்கு விசாரணையின் போது இந்த கார் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததை விட 40 சதவீதம் வரை குறைந்த மைலேஜ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கார் உற்பத்தியாளர் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் விற்பனையாளர் கைராளி ஃபோர்டு கார் விற்பனைக்காக அதிக மைலேஜ் வழங்குவதாக விளம்பரம் கொடுத்தது தவறு செய்துள்ளன என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளருக்கு கார் உற்பத்தியாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், விற்பனையாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் இழப்பீடாக கேரளா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டப்போராட்டம் நடத்திய வாடிக்கையாளருக்கு ரூ. 10 ஆயிரம் கூடுதலாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது.
    • வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை.

    அரியலூர் ;

    அரியலூர் அடுத்த தேளூர் கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி (54), வேல்விழி(43), கோவிந்தராஜ்(52), முருகேசன்(53), பாரிவள்ளல்(55), அம்பிகா(48), அருட்செல்வம்(49) உள்ளிட்ட 15 பேர் தங்களது வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம ஊராட்சியில் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களிடமிருந்து ஊராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்புக்கான வைப்புத் தொகையை பெற்றுள்ளது.ஆனால் இதுவரை அவர்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்து, அவர்கள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

    அந்த தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்து செய்துள்ளவர்கள் எவ்வித சேவை கட்டணத்தையும் ஊராட்சி மன்றத்தில் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் நுகர்வோர் அல்ல என்பதால் நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற அரசின் வாதம் ஏற்புடையதல்ல.

    குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது. வறட்சியின் காரணமாக தனிநபர் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் அவ்வாறு இருக்க ஏன் தனி நபரிடம் வைப்புத் தொகையை பெற்றுள்ளீர்கள் என்பதற்கான பதில் ஊராட்சி மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை .

    வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் வழங்க வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு, ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த பின்பும் அதனை மதிக்காமல் குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ள ஊராட்சி மன்ற சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே வழக்கு தொடுத்துள்ள அனைவரது வீடுகளுக்கும் நான்கு வாரத்துக்குள் தேளூர் ஊராட்சி மன்றம் குடிநீர் வழங்க இணைப்பு வழங்க வேண்டும். இதனை அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால் வழக்கை தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையமும் தொடங்கப்படவுள்ளது.
    • மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

    அரியலூர்:

    சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் அரியலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, அதன் விசாரணை நாள் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த 250 வழக்குகளை விரைந்து விசாரணை மேற்கோண்டு, தீர்ப்பு வழங்குவதற்காக, அந்த வழக்குகள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளுக்கு விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆணையத்தில் உள்ள நாட்குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் அல்லது நுகர்வோர் ஆணையகளுக்கான இணையதளத்தின் மூலம் வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

    இந்த வழக்குகளை நடத்துவதற்கு புகார்தாரர்களும், எதிர்தரப்பினரும் வழக்குரைஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விரைவில் சமரச மையமும் தொடங்கப்படவுள்ளது. தொடங்கப்படும் மத்தியஸ்தர் பணிக்கான நேர்காணல் முடிவடைந்து விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. நுகர்வோர் வழக்குகளை சமரச மையத்தின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்தது போக மீதிப்பணம் ரூ.75 தர மறுத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெண் பயணிக்கு ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    பொன்னேரியை அடுத்த வெலூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர்விழி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந்தேதி திருவெல்லிவாயலில் இருந்து தனது கிராமமான வெலூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்தார். அவருடன் உறவினர்கள் 4 பேரும் சென்றனர்.

    இவர்கள் பயணம் செய்த பஸ்சில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கண்டக்டரிடம் மலர்விழி 5 டிக்கெட் தரும்படி கேட்டார். அதற்காக ரூ.100 கொடுத்து டிக்கெட்டுக்கு தலா ரூ.5 வீதம் ரூ.25 போக மீதம் ரூ.75 தரும்படி கேட்டார்.

    அப்போது பஸ்சில் இருந்த 2 பேர் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். எனவே டிக்கெட்டும், மீதிபணமும் தர கண்டக்டர் மறந்துவிட்டார்.

    இதற்கிடையே அரசு பஸ்சில் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏறி பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது மலர்விழி, அவரது உறவினர்களிடம் டிக்கெட் இல்லை. எனவே நடந்த விவரங்களை அவரிடம் மலர்விழி கூறினார். அதை டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் ஏற்கவில்லை.

    மாறாக டிக்கெட்டுகளை கண்டக்டரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர்கள் தாங்கள் கூறியபடி எழுதி தரும்படி மலர்விழியிடம் கூறினர். பயம் காரணமாக அவரும் அப்படியே எழுதி கொடுத்தார். இதையடுத்து அபராதம் எதுவும் வசூலிக்கவில்லை.

    இதற்கிடையே ஊர் வந்ததும் தான் கொடுத்த 100 ரூபாயில் டிக்கெட் கட்டணம் போக மீதி பணம் 75 ரூபாயை திரும்ப தரும்படி கண்டக்டரிடம் மலர்விழி கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாளரிடம் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி புகார் கடிதம் அனுப்பினார். அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அதே அலுவலகத்தின் பொது மேலாளருக்கும் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி புகார் மனு அனுப்பினார்.

    அவரிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. எனவே திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு தரவேண்டிய மீதி பணம் ரூ.75 மற்றும் ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்.

    வழக்கை விசாரித்த கோர்ட் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மலர்விழிக்கு மீதி பணம் ரூ.75 மற்றும் ரூ.7 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

    அதில் ரூ.2 ஆயிரம் கோர்ட்டு செலவுக்கும், ரூ.5 ஆயிரம் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து விமானத்தில் லக்கேஜ் மாயமானதால் சென்னை வியாபாரிக்கு ரூ.90 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பெசன்ட்நகரை சேர்ந்தவர் சுமந்த் சுப்ரமணியன். வர்த்தகரான இவர் மருத்துவ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தனது மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் சென்றார்.

    இவர்கள் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் வழியாக வாஷிங்டன் சென்றனர்.

    சென்னையில் இருந்து புறப்பட்ட போது பல முக்கியமான அலுவலக ஆவணங்கள், சி.டி.க்கள், மருத்துவ அறிக்கைகளையும், பொருட்களையும் உடன் 3 பேக்குகளில் எடுத்து சென்றனர்.

    விமானம் அமெரிக்காவின் வாஷிங்டன் டல்லெஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது அவர்கள் எடுத்து சென்றவற்றில் ஒரு ‘பேக்’கை மட்டும் காணவில்லை. அதில் சுமந்த் சுப்ரமணியன் மனைவிக்கு சொந்தமான ஆவணங்கள், டிசைனர் கைப்பை, 50 டிசைனர் துணிகள், விலை உயர்ந்த ஆடைகள், அழகு சாதன பொருட்கள், ஆபரணங்கள், கண் கண்ணாடிகள், மற்றும் தங்க நகைகள் இருந்தன.

    அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம். இச்சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நடந்தது.

    அதை தொடர்ந்து தனது லக்கேஜ் மாயமானது குறித்து கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சுமந்த் சுப்ரமணியன் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு எந்தவித பதிலும் இல்லை.

    எனவே சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் விமானத்தில் ‘பேக்’ தொலைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் சேவையில் குறைபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனக்கு ரூ.19 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன மேலாளர் பதில் அளித்து இருந்தார். அதில், “விமான சேவையில் எந்த குறைபாடும் வைக்கவில்லை. 1972-ம் ஆண்டு விமான சட்டப்படி புகார்தாரருக்கு விமான நிறுவனம் நஷ்டஈடு எதுவும் வழங்க தேவை இல்லை என தெரிவித்து இருந்தார்.

    ஆனால் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு அமர்வின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர் கே.அமலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதன்படி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் பயணி சுமந்த் சுப்ரமணியனுக்கு ரூ.90 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டனர்.

    அதில், காணாமல் போன லக்கேஜில் இருந்த பொருட்களுக்கு ரூ.50 ஆயிரமும், பயணியின் மன உளைச்சலுக்கு ரூ.35 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    பயணிகள் ஓய்வறையை பூட்டி வைத்திருந்த ரெயில் நிலைய அதிகாரிக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    பேரணாம்பட்டு சின்னதாமல் செருவு கிராமத்தை சேர்ந்தவர் வி.ஏ.மார்கபந்து (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி தனது மனைவியுடன் வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து கடலூருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்தார். அதன்படி மார்கபந்து, மனைவியுடன் ரெயில் நிலையத்துக்கு 23-ந் தேதி வந்தார்.

    ரெயில் வருவதற்கு சுமார் 1½ மணி நேரம் இருந்ததால், அங்குள்ள முன்பதிவு பயணிகள் அறையில் ஓய்வு எடுக்க மார்கபந்து, தனது மனைவியுடன் சென்றார். ஆனால் முன்பதிவு பயணிகள் அறை பூட்டப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர், ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராமனை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். அதற்கு அவர் ரெயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் முன்பதிவு பயணிகள் அறை திறக்கப்படும் என்று கூறி, அறையை திறக்க மறுத்து விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த மார்கபந்து மற்றும் அவரது மனைவியும் ரெயில் நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.

    இந்த சம்பவத்தால் மனஉளைச்சல் அடைந்த மார்கபந்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், முன்பதிவு பயணிகள் அறையை திறக்க மறுத்தது மற்றும் உரிய சேவை வழங்காததால் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிள்ளிவளவன், ரெயில் பயணிகளுக்கு உரிய சேவை வழங்காததற்காக ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராஜனுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை மார்கபந்துக்கு வழங்கும்படி தீர்ப்பு கூறினார்.

    ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராஜன் தற்போது கணியம்பாடியில் பணிபுரிந்து வருகிறார்.
    குஜராத் மாநிலத்தில் திருமண நேரத்தில் கார் அனுப்பாததால் மணமகனுக்கு கார் நிறுவனம் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சத் நகரை சேர்ந்தவர் குலாம் ரசூல் வோரா. தொழில் அதிபர்.

    இவர் தனது மகன் சோயப் திருமணம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி நடந்தது. இந்த நிலையில் திருமணத்துக்காக ஆனந்த் நகரில் உள்ள ஒரு பிரபல கார் நிறுவனத்தில் வாடகைக்கு அதி நவீன சொகுசு கார் முன்பதிவு செய்தார்.

    நாள் ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் கட்டணம் என பேசி முடித்து ரூ.5 ஆயிரம் முன் பணம் செலுத்தினார். ஆனால் திருமணத்துக்கு அந்த நிறுனம் கார் அனுப்பவில்லை.

    வோராவும் அவரது மகன் சோயப்பும் வீட்டில் பல மணிநேரம் காத்திருந்தனர். ஆனால் கார் வரவில்லை. எனவே, ஆனந்த் நகரில் உள்ள வேறு ஒரு நிறுவனத்தின் காரை பதிவு செய்து திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வோரா சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஏற்கனவே முன்பதிவு செய்தும் திருமணத்துக்கு மணமகனை அழைத்துச் செல்ல கார் அனுப்பவில்லை. இதனால் உறவினர்கள் மத்தியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

    ஆகவே, மன உளைச்சலை ஏற்படுத்திய கார் நிறுவனம் மணமகனுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு கார் முன்பதிவை வோரா ரத்து செய்து விட்டார். அதற்குரிய பணத்தையும் திரும்ப வாங்கி கொண்டார். எனவே கார் அனுப்பவில்லை என பதில் அளித்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் கோர்ட்டு கார் நிறுவனம் மணமகனுக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. முன் பதிவு ரத்து செய்ததற்கான ஆதாரத்தை கார் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தது.
    தவறான அறுவை சிகிச்சையால் மகன் இறந்த 20 ஆண்டுக்கு பிறகு தாயாருக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சேலத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி கண்ணன், இவரது மகன் கே.ரவிக்குமார் (28). இவர் கடுமையான காது வலியால் அவதிப்பட்டார்.

    எனவே கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் காது, மூக்கு, தொண்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்காக ஈஸ்வரி கண்ணன் ரூ.21,600 கட்டணம் செலுத்தினார். இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் இரவு ரவிக்குமாருக்கு ஆபரேசன் நடத்தப்பட்டது.

    அப்போது ரவிக்குமாருடன் அவரது சகோதரி இருந்தார். ஆனால் அவரிடம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆபரேசன் முடிந்த ஒரு வாரத்தில் அவர் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் அவர் கடுமையான தலை வலியால் அவதிப்பட்டார். எனவே, அவரை பிப்ரவரி 15-ந்தேதி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாட்களுக்கு பிறகு அவர் மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து சென்னை நுகர்வோர் கோர்ட்டில் ரவிக்குமாரின் தாயார் ஈஸ்வரி கண்ணன் புகார் செய்தார். தவறான ஆபரேசன் மற்றும் சிகிச்சையால் தனது மகன் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.

    வழக்கு விசாரணை நுகர்வோர் கோர்ட்டு தலைவர் கே.ஜெயபாலன் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடந்தது. இறுதியில் ஈஸ்வரிகண்ணனுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

    ரவிக்குமார் மரணம் அடைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. உடனே வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    ×