search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Administration"

    • 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை :

    சென்னை நுங்கம்பாக்கம், ரெயில் நிலையத்தில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் சுவாதி. இவரது பெற்றோர் சந்தானகோபாலகிருஷ்ணன், ரெங்கநாயகி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் மகள் சுவாதி, பரனூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தார். தினமும் நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூருக்கு ரெயிலில் சென்று வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி காலையில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தபோது, அவர் கொலை செய்யப்பட்டார்

    இந்த கொலை சம்பவம் தொடர்பான விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், சுவாதிக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். அந்த ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. டிக்கெட் பரிசோதகரும் இல்லை.

    அதனால் 24 வயதே ஆன மகளை இழந்த எங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கிழக்கு ரெயில்வே ஊழியரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

    இதேபோல, விபத்தில் பலியானவர், சிறையில் கொலை செய்யப்பட்டவர் என்று பல சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த ஐகோர்ட்டு வட்டியுடன் இழப்பீடு வழங்கவேண்டும் என்று பல தீர்ப்புகளை அளித்துள்ளது.

    இதன்படி, என் மகள் படுகொலை செய்யப்பட்டதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் ஒரு காரணம் என்பதால், எங்களுக்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்க ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதியின் கொலை திட்டமிட்டு நடந்தது. ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் இழப்பீடு கேட்டு உரிய நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

    • திருச்சியில் வீட்டை காலி செய்யுமாறு கூறியதால் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
    • பல வருட காலமாக இங்கு குடியிருக்கும் நாங்கள் மின்சாரம், சாலை வசதியை தமிழக அரசு செய்து தந்துள்ளது

    திருச்சி:

    திருச்சி முடுக்குப்பட்டி பகுதியில் சுமார் 120 குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் பல வருடங்காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று திருச்சி ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளது.

    அந்த நோட்டீஸில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பதால் அதனை காலி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நோட்டீஸ் ஒட்ட வந்த ெரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து இன்று முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் பொழுது கடந்த 1999-ம் ஆண்டு முடுக்கு பட்டியில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வந்தன.

    அப்பொழுது இந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறி இங்கு உள்ளவர்களை காலி செய்ய வைத்து மணிகண்டன் நாகமங்கலத்தில் வீடு ஒதுக்கி கொடுத்தனர். அதன்பிறகு கடந்த பல வருட காலமாக பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் ரெயில்வே நிர்வாகம் அந்த வீடுகளை காலி செய்யுமாறு கூறி வந்தனர். இதற்கிடையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் உரிமை சட்டத்தில் இந்த இடம் யாருடையது என்று கேட்டபோது இது தமிழக அரசு இடம் என்று கூறியிருந்தனர். இதிலிருந்து இந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது கிடையாது என்று தெளிவாகிறது.

    இதையடுத்து நாங்கள் தொடர்ந்து இங்கேயே வசித்து வருகிறோம். இந்த நிலையில் திடீரென்று ரெயில்வே நிர்வாகத்தினர் வீட்டை காலி செய்யும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். பல வருட காலமாக இங்கு குடியிருக்கும் நாங்கள் மின்சாரம், சாலை வசதியை தமிழக அரசு செய்து தந்துள்ளது.

    இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இந்த இடத்தில் தொடர்ந்து வசிக்க பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    உயர் அதிகாரிகளின் அறைகளை போன்று ரெயில் பெட்டிகளையும், ரெயில் நிலையங்களையும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ரெயில்வே நிர்வாகம் 12 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. #HighCourt #Train
    சென்னை:

    ரெயில்களில் குளிர் சாதன பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணை, தலையணை உறை, படுக்கை விரிப்பு ஆகியவற்றை துவைக்கும் ஒப்பந்த பணியை ரத்து செய்து ரெயில்வே நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் ஒப்பந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். ஒப்பந்தத்தை ரத்து செய்தது சரிதான் என்றும், புதிய அறிவிப்பை வெளியிட்டு, காலதாமதம் இல்லாமல், ஒப்பந்த பணியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும், ரெயில்களில் அசுத்தம் இருப்பதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே பொதுமேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் எல்லாம் மிகவும் சுத்தமாகவும், நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது. அதுபோல, பணம் தரும் பயணிகளுக்கு, குறைந்தபட்சம் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் ரெயில் பயணத்தின்போது வழங்கவேண்டும்.

    பயணிகள் தரும் பணத்தை கொண்டுதான், அதிகாரிகளுக்கு சம்பளம் தரப்படுகிறது. அந்த பணத்தை கொண்டுதான் ரெயில்வே துறையும் இயங்குகிறது. எனவே, அசுத்தம் குறித்து பயணிகள் செய்யும் புகாருக்கு மதிப்பு அளிக்கவேண்டும். தங்களது பொறுப்பை அதிகாரிகள் தட்டிக்கழிக்க முடியாது.

    ஒவ்வொரு பயணிகளும் சுத்தமான சூழ்நிலையில் பயணத்தை மேற்கொள்ள உரிமை உள்ளது. அசுத்தம் குறித்து புகார் செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. குறைந்தபட்சம் இந்திய ரெயில்வே துறை நிர்ணயம் செய்துள்ள தரத்துக்காவது ரெயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் பராமரிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொடுக்கப்படும், படுக்கை விரிப்பு முறையாக துவைக்கப்படுவது இல்லை. பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணையில் இருந்தும், படுக்கை விரிப்பில் இருந்தும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுமட்டுமல்ல, ரெயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சியும், எலியும் ஓடுவதால், இரவு முழுவதும் பயணிகள் அச்சத்துடனே பயணம் செய்கின்றனர். இந்த குறைபாடுகள் குறித்து பயணிகள் புகார் செய்தால், அதற்கு ரெயில்வே ஊழியர்கள் மதிப்பு அளித்து முறையாக பரிசீலிப்பதும் இல்லை.

    இந்த குறைபாடுகள் எல்லாம் பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். அதேபோல பல ஆண்டுகளாக, இதுகுறித்து ரெயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. எனவே, அதிகாரிகளும், ஊழியர்களும் பயணிகள் தெரிவிக்கும் புகாரை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

    ரெயில் பயணிகளின் உரிமைகள் மறுக்கப்படும்போது, அதுகுறித்து இந்த ஐகோர்ட்டு தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். ரெயில்வே துறையில் பல தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுக்காக போராடுகின்றன. அதேநேரம், அந்த தொழிற்சங்கம், தங்களது உறுப்பினர்களான ரெயில்வே ஊழியர்கள், தங்களது பணிகளை அர்ப்பணிப்புடன் செய்கின்றனரா? என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

    எனவே, ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் நிலையங்களையும் சுகாதாரத்துடனும் பராமரிக்கப்பட வேண்டும். அந்த பணிகளை செய்யும் அதிகாரி யார்? என்பதை நிர்ணயம் செய்து, அந்த அதிகாரியிடம் அந்த பொறுப்பை, ரெயில்வே பொதுமேலாளர் ஒப்படைக்க வேண்டும்.

    சுத்தத்தை பராமரிக்காமல், அஜாக்கிரதையுடன், அலட்சியமாக செயல்படும் அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ரெயில் பெட்டிகளுக்கு உள்ளேயும், ரெயில் நிலையங்களிலும் உள்ள அசுத்தம் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க பிரத்யேகமாக தொலைபேசி நம்பரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.

    இந்த தொலைபேசி எண் ரெயில் நிலையங்களிலும், ரெயில் பெட்டிகளிலும் பொதுமக்களுக்கு தெரியும் விதமாக விளம்பரம் செய்யவேண்டும். இந்த உத்தரவின்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, அதுகுறித்து அறிக்கையை 12 வாரத்துக்குள் ரெயில்வே நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  #HighCourt #Train
    ×