என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்வோர் நீதிமன்றம்"

    • மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.
    • எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    சென்னை புரசைவாக்கத்தில் பிரபல இனிப்பகம் உள்ளது. இந்த இனிப்பகத்தில் ரவிசங்கர் என்பவர் இனிப்பு வாங்கும்போது கிலோவுக்கு ரூ.25 கூடுதலா வசூலித்ததாக குற்றம்சாட்டினார்.

    இதனால், இனிப்பகத்திற்கு எதிராக ரவிசங்கர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த புகார் மனுவில்,"தான் கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் வாங்கயதாகவும், இதற்கு ரூ.425 பணம் பெறுவதற்கு பதிலாக ரூ.450 வசூலித்தனர்" என்றும் குற்றச்சாட்டினார்.

    மேலும், "இனிப்புக்கு கூடுதலாக ரூ. 25 வசூலித்ததில் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.

    அப்போது," மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இனிப்பகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், திருப்பி அளிக்கப்பட்டபோதும், இனிப்பகத்தின் செயல்பாடு, சேவை குறைபாட்டை காட்டுகிறது" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர்.
    • ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கனூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்-காவேரி தம்பதியின் மகள் நந்தினி (வயது 14). இவர் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காதில் கட்டி ஏற்பட்டு வலி இருந்து வந்தது.

    இதனால் கடந்த 9.10.2021 அன்று நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மல்டி லெவல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், முன் பணமாக ரூ.20 ஆயிரம் கட்டுமாறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    பணத்தை கட்டிய பிறகு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு காதில் இருந்து தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது. இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

    உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர். தங்கள் மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால்தான் அவர் உயிரிழந்து விட்டதாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் தரப்பில் வக்கீல்கள் ஆரோக்கிய செல்வரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் வாதாடினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் குறைதீர் ஆணைய தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்தது உறுதியானதால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம், டாக்டர் நாச்சிமுத்து ரூ.4 லட்சம், டாக்டர்கள் சுதாகர், தீபக் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் செலுத்திய ரூ.20 ஆயிரம் பணத்துடன் சேர்த்து 2 மாதத்துக்குள் வழங்காவிட்டால் 12 சதவீத வட்டியுடன் வழங்க நேரிடும் என்று உத்தரவிட்டனர்.

    • ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் எடை 76 கிராம் என்ற அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.
    • பாக்கெட்டுக்கு உள்ளே உள்ள பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை.

    சென்னை:

    சென்னை மணலி மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரு நாய்களுக்காக ரெண்டு 'சன் பீஸ்ட் மேரி லைட்' பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட் கவரில் உள்ளே 16 பிஸ்கட்டுகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் அதைத் திறந்து பார்த்தபோது 15 பிஸ்கட்கள் தான் இருந்தது. இதுகுறித்து அவர் கடைக்காரரிடமும் அந்த பிஸ்கட் நிறுவனமான ஐ.டி.சி., நிறுவனத்திடமும் முறையிட்ட போது சரியான பதில் இல்லை. இதையடுத்து அவர் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஐடிசி நிறுவனம் சுமார் 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்கிறது.

    ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா என்று கணக்கிடும் பொழுது, இதுபோல 15 பிஸ்கட்களை ஒரு பாக்கெட்டில் வைத்து நாள் ஒன்றுக்கு பொதுமக்களிடம் இந்த நிறுவனம் ரூ. 29 லட்சம் மோசடி செய்கிறது என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவுக்கு ஐடிசி நிறுவனம் தரப்பில் அளித்த விளக்கத்தில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் எடை 76 கிராம் என்ற அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டுக்கு உள்ளே உள்ள பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை. பொதுவாக வணிக சட்டத்தின்படி ஒரு பாக்கெட் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களில் 4.5 கிராம் வரை குறைவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

    இதை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம், "ஒரு உணவுப் பொருள் பாக்கெட் செய்யப்பட்ட பின்பு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது அல்லது காற்று, மழை போன்ற இயற்கை காரணங்களால் 4.6 கிராம் எடை குறையலாம் என்று வணிக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சலுகை பிஸ்கட்டுகளுக்கு கிடையாது. பிஸ்கட் பாக்கெட் இதுபோன்ற காரணங்களால் எடை குறைய வாய்ப்பில்லை.

    மேலும் பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யவில்லை. எடையின் அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறும் காரணத்தையும் ஏற்க முடியாது. ஏனென்றால் பிஸ்கட் பாக்கெட் கவரில் 16 பிஸ்கட்டுகள் உள்ளே உள்ளன என்று தான் கூறப்பட்டுள்ளது.

    தவிர எடையை பற்றி கூறவில்லை. எனவே, நேர்மையற்ற முறையில் வியாபாரம் செய்ததற்காகவும், சேவை குறைபாட்டிற்காகவும் வழக்கு தொடர்ந்த டெல்லி பாபுவுக்கு ஐ.டி.சி., நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தீர்ப்பு அளித்துள்ளது.

    • துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

    திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா வரையிலான ரெயில் பயணத்தின் போது 55 வயது நபரும் அவரது குடும்பத்தினரும் கடும் சிரமத்திற்கு ஆளானதால் அவருக்கு இழப்பீடாக 30,000 ரூபாய் வழங்குமாறு இந்திய ரெயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருமலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் மூர்த்தி என்பவர் 4 ஏ.சி. டிக்கெட்டுகளை பதிவு செய்து பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது அவர்களின் பெட்டியில் ஏர் கண்டிஷன் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் கழிப்பறை அசுத்தமாகவும், தண்ணீரும் வரவில்லை. பயணம் முழுவதும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சிரமங்களை எதிர்கொண்டு பயணம் மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றச்சாட்டை மறுத்த ரெயில்வேதுறை, பொய்யான குற்றச்சாட்டை மூர்த்தி கூறியுள்ளதாகவும், ரெயில்வே வழங்கிய சேவைகளைப் பயன்படுத்தி மூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறியது.

    இருப்பினும், நுகர்வோர் நீதிமன்றம், புகாரைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அதைப் பார்வையிடவில்லை என்றும் கழிப்பறைகளுக்கு நீர் தடைபட்டதைக் கண்டறிந்ததாகவும் தெரியவந்தது. இதனால் குறைந்தபட்ச வசதிகளைக் கூட சரிபார்க்காமல் பிளாட்பாரத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதை நிரூபித்த நீதிமன்றம், திருப்பதியில் இருந்து துவ்வாடா (வைசாக் மாவட்டம்) செல்லும் போது ஏற்பட்ட சிரமத்திற்காக மூர்த்திக்கு 25,000 இழப்பீடு வழங்க ரெயில்வேக்கு உத்தரவிட்டது. வழக்கிற்கு ஏற்பட்ட செலவுகளுக்காக ஈடுகட்ட கூடுதலாக 5,000 என மொத்தம் ரூ.30,000 வழங்க உத்தரவிட்டது.

    • தில்மில் மேட்ரிமோனி நிறுவனம் பாலாஜிக்கு 45 நாட்களில் மணப்பெண் தேடித்தருவதாக உறுதியளித்துள்ளது.
    • மனஉளைச்சலால், வேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பெங்களூருவைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு தில்மில் மேட்ரிமோனி நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து மணப்பெண்ணை தேடி வந்தனர்.

    பெங்களூருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மார்ச் மாதத்தில் தனது மகன் பாலாஜிக்காக, தில்மில் என்கிற மேட்ரிமோனியில் ரூ. 30 ஆயிரம் கொடுத்து பதிவு செய்துள்ளார்.

    தில்மில் மேட்ரிமோனி நிறுவனம் பாலாஜிக்கு 45 நாட்களில் மணப்பெண் தேடித்தருவதாக உறுதியளித்துள்ளது.

    ஆனால், நாட்கள் ஆகியும் நிறுவனம் தரப்பில் இருந்து மணப்பெண்ணை தேடித் தரவில்லை எனத் தெரிகிறது. இதனால், கல்யாண் நகரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிபவர்கள் அவரை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

    இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் செலுத்திய ரூ.30,000, சேவை குறைபாட்டிற்காக ரூ.20,000, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.5,000, வழக்கு செலவு ரூ.5000 என மொத்தம் ரூ.60,000-ஐ விஜயகுமாருக்கு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் மேட்ரிமோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    • சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.
    • சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வாடிக்கையாளரை ஏமாற்றி அதிக பணம் வசூலித்ததாக ஸ்விக்கி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.35,000 அபராதம் விதித்துள்ளது.

    ஐதராபாத்தில் வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்விக்கிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.

    அந்த புகாரில், "ஸ்விக்கி மெம்பர்ஷிப்பை நான் வாங்கியுள்ளேன். இதன்மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்படும். ஆனால் நவம்பர் 1 அன்று ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தேன். எனது வீட்டிற்கும் உணவகத்திற்கும் இடையிலான தூரம் 9.7 கிமீ ஆகும். ஆனால் 9.7 கி.மீ-ஆக இருந்த டெலிவரி தூரத்தை வேண்டுமென்றே 14 கி.மீ-ஆக அதிகரித்து என்னிடமிருந்து அதற்காக 103 வசூலித்தார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுரேஷ் பாபுவுக்கு ஸ்விக்கி நிறுவனம் இழப்பீடாக ரூ.35,453 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் இந்த இழப்பீடு தொகையை ஸ்விக்கி நிறுவனம் வழங்கவேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2017 ஆம் ஆண்டு பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார்.
    • அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் தான் வாங்கிய சிலிண்டரின் விலையை விட ரூ.1.50 அதிகமாக பெற்ற கேஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடர்ந்த சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் இழப்பீடாக ரூ.4,000 பெற்றுள்ளார்.

    2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பாரத் கேஸ் ஏஜென்சியிடம் இருந்து சக்ரேஷ் ஜெய்ன் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 ரூபாய்க்கு பில் தரப்பட்டுள்ளது. ஆனால் சிலிண்டரை டெலிவரி செய்தவர் அவரிடமிருந்து 755 ரூபாய் வசூலித்துள்ளார். மீதம் 1.50 ரூபாயை சக்ரேஷ் கேட்டபோது அந்த பணத்தை கேஸ் ஏஜென்சியிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் இது தொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

    7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மனுதாரருக்கு 4000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இது மட்டுமன்றி சக்ரேஷிடம் பெற்ற ரூ1.50யை ஆண்டுக்கு 6% வட்டியுடன் சேர்த்து வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    'இது வெறும் 1.50 ரூபாய்க்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல. எங்களது உரிமை மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம் இது' என்று வழக்கில் வெற்றி பெற்ற சக்ரேஷ் தெரிவித்தார்.

    • குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது.
    • வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை.

    அரியலூர் ;

    அரியலூர் அடுத்த தேளூர் கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி (54), வேல்விழி(43), கோவிந்தராஜ்(52), முருகேசன்(53), பாரிவள்ளல்(55), அம்பிகா(48), அருட்செல்வம்(49) உள்ளிட்ட 15 பேர் தங்களது வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம ஊராட்சியில் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களிடமிருந்து ஊராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்புக்கான வைப்புத் தொகையை பெற்றுள்ளது.ஆனால் இதுவரை அவர்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்து, அவர்கள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

    அந்த தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்து செய்துள்ளவர்கள் எவ்வித சேவை கட்டணத்தையும் ஊராட்சி மன்றத்தில் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் நுகர்வோர் அல்ல என்பதால் நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற அரசின் வாதம் ஏற்புடையதல்ல.

    குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது. வறட்சியின் காரணமாக தனிநபர் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் அவ்வாறு இருக்க ஏன் தனி நபரிடம் வைப்புத் தொகையை பெற்றுள்ளீர்கள் என்பதற்கான பதில் ஊராட்சி மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை .

    வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் வழங்க வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு, ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த பின்பும் அதனை மதிக்காமல் குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ள ஊராட்சி மன்ற சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே வழக்கு தொடுத்துள்ள அனைவரது வீடுகளுக்கும் நான்கு வாரத்துக்குள் தேளூர் ஊராட்சி மன்றம் குடிநீர் வழங்க இணைப்பு வழங்க வேண்டும். இதனை அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால் வழக்கை தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×