என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ?
    • எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தான்.

    அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் டிரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த பிப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.

    எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர்.

    இந்த சம்பவத்தின் போது டிரம்ப் மற்றும் அவரது மனைவி வெள்ளை மாளிகையில் இருந்தனர்.

    அந்த இளைஞன் 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்டான்.

    இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப்,

    "நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை. எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?" என்று நகைச்சுவையாக வினவினார்.

    மேலும், "ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்ற மிகப்பெரிய செல்வாக்குள்ள தலைவர்களையே இதுபோல இலக்கு வைப்பார்கள்.

    ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ? கொஞ்ச காலம் ஒரு சாதாரண அதிபராக இருக்க முயற்சிப்போம்" என்றும் அவர் கிண்டலாகப் பேசினார்.

    கொல்லப்பட்ட இளைஞன் மார்ட்டின், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தது அவனது குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.

    டிரம்ப் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    • 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பனிப்புயல் வீசத்தொடங்கியது. இதன் காரணமாக அங்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு "ப்ளிசர்டு" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பனிப்புயல் தாக்கத்தால், பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    கடும் பனிப்பொழிவு காரணமாக அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுவதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 11,000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா முழுவதும் 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    நியூயார்க் நகர பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் இறக்குமதி வரி கொள்கைகளை ரத்து செய்வதற்கு முன்னதாக இந்தச் சர்வே நடத்தப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அரசு குறித்து அந்நாட்டு மக்களிடம் அண்மையில் சர்வே நடத்தப்பட்டது.

    ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இணைந்து இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.

    இதன்படி, 65% அமெரிக்கர்கள் டிரம்ப் பணவீக்கத்தைக் கையாள்வதில் தோல்வியடைந்துள்ளதாக கருதுகின்றனர்.

    டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 34% பேர் மட்டுமே இதை ஆதரிக்கின்றனர்.

    டிரம்பின் சர்வதேச உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை 62% மக்கள் அங்கீகரிக்கவில்லை.

    குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    குடியேற்றக் கொள்கைகளுக்காக ராணுவத்தைப் பயன்படுத்தும் அவரது திட்டத்திற்கு 54% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக, மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் நடந்த அமலாக்க நடவடிக்கைகளின் போது இரு அமெரிக்கக் குடிமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது.

    ஒட்டுமொத்தப் பொருளாதார நிர்வாகத்தில் 57% மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

    நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க எந்தக் கட்சி சிறந்தது என்ற கேள்விக்கு, டிரம்ப் உடைய குடியரசுக் கட்சி கட்சி என 33% பேரும், ஜனநாயகக் கட்சி என 31% பேரும், யாருமில்லை இல்லை என 31% பேரும் தெரிவித்துள்ளனர்.

    Yahoo மற்றும் YouGov நடத்திய மற்றொரு சமீபத்திய ஆய்வில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபராக டிரம்ப்-ஐ 40% அமெரிக்கர்கள் தேர்வு செய்துள்ளனர்.

    டிரம்ப்பின் ஒட்டுமொத்த அங்கீகார விகிதம் 39% ஆகக் குறைந்துள்ளது. வெறும் 12% பேர் மட்டுமே அவரை ஒரு சிறந்த அதிபர் என்று கருதுகின்றனர்.  

    • அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.
    • அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

    சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது. பரஸ்பர வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கிடையே பரஸ்பர வரியை கோர்ட்டு ரத்து செய்ததால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்தார்.

    பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன்.

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.

    தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
    • வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.

    சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.

    அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

    இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் அதீத வரிவிதிப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட பல பில்லியன் கோடி டாலர் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    அதிக வரி விதிப்பால், மக்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வு சட்டவிரோதமானது என இலினாய்ஸ் ஆளுநர் JB Britzker, கலிபோர்னியா ஆளுநர் Gavin Newsom நியூயார்க் ஆளுநர் Kathey Hochul ஆகியோர் காட்டமாக உள்ளனர்.

    • அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என கண்டித்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.
    • இந்த புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.

    சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை.
    • வர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.

    இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் அரசு விதித்த கூடுதல் இறக்குதி வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் இந்தியா - அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் சிக்கலை சந்தித்துள்ளது. 

    தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் அடங்கிய அமர்வு, வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபரால் மீற முடியாது.

    1974ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் கீழ் அவசர சூழலை பயன்படுத்தி இந்த வரிகளை விதிக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று தெரிவித்தது.

    மேலும், வரி விதிப்பானது தேசிய பாதுகாப்பு தொடர்பான அவசர நடவடிக்கை என்ற டிரம்ப் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 

    தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்தார்.

    டிரம்ப் பேசியதாவது, நாட்டிற்கு நன்மையான முடிவை எடுக்க துணிச்சல் இல்லாத இந்த நீதிபதிகள் ஒரு அவமானம். அவர்கள் தங்களின் குடும்பத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர்.

    தீர்ப்பளித்த நீதிபதிகள் பெயரளிவில் தான் குடியரசுவாதிகள், ஆனால் தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரின் வளர்ப்பு நாய்களாக மாறிவிட்டனர். அவர்களுக்கு தேசப்பற்றோ, அரசியலமைப்பின் மீது விசுவாசமோ இல்லை. 

    நான் கோடிக்கணக்கான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன். ஆனால் இந்த நீதிபதிகள் முட்டாள்கள். அவர்கள் அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்கு கட்டுப்படுகிறார்கள்.

    அதேநேரம் ஒன்பது பேர் கொண்ட அமர்வில் எனது கொள்கைக்கு ஆதரவாக நின்ற நீதிபதிகள் தாமஸ், அலிட்டோ மற்றும் கவனோ ஆகியோரை வலிமையும் துணிச்சலும் மிக்கவர்கள்" என்று தெரிவித்தார்.

    தீர்ப்பளித்த நீதிபதிகள் பலர் முன்னர் டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டிருந்ததும் அவர்கள் தற்போது டிரம்ப்புக்கு எதிராக தீர்பளித்துள்ளதே டிரம்ப் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. 

    இதற்கிடையே உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும், தான் விதித்த வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று டிரம்ப் பிடிவாதமாகக் கூறியுள்ளார்.

    அதேநேரம் அனைத்து நாடுகளுக்கும் தாற்காலிகளமாக 10 சதவீத கூடுதல் வரியையும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 

    • சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க அதிபர் டிரம்ப் பீஜிங் செல்கிறார்.
    • உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 4-ம் தேதி அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.

    அப்போது, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியை சீனா வரவேண்டும் என அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மார்ச் 31-ம் தேதி சீனா புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி வரை சீனாவில் பயணம் மேற்கொள்கிறார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காக அதிபர் டிரம்ப் ஏப்ரல் மாதம் பீஜிங் செல்வதாகத் தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக அமெரிக்க ஊடகத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது என தெரிவித்தார்.

    • பல்வேறு நாடுகளின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.
    • இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

    உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே அமெரிக்க கீழமை நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக்கூறி கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது.
    • ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன் என்றார்.

    வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்று உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டில் இருந்தே பல விவாதங்கள் இருந்து வருகிறது.

    அவற்றுக்கு வலு சேர்க்கும் வானில் ஏற்படும் வினோதமான நிகழ்வுகள், விண்கலம் போல் தென்படும் வினோத வாகனங்கள் குறித்த புகைப்படங்கள் கசிவது உண்டு.

    அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளை பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான 'ஏரியா 51'-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

    இதற்கிடையே அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, "பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்த ஆதாரமும் தனக்குக் கிடைக்கவில்லை" என்றார்.

    ஒரு முன்னாள் அதிபரே வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்று கூறியது அமெரிக்காவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இந்த சூழலில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

    இதன்மூலம் அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகன், மற்றும் தொடர்புடைய துறைகள் தங்கள் வசம் உள்ள வேற்றுகிரகவாசிகள் தொடர்புடைய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

    அதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. நான் அதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நிறைய பேர் அதை நம்புகிறார்கள். நான் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன்" என்று தெரிவித்தார். 

    • அவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியும். மோடியை பற்றி நன்றாகவே தெரியும்.
    • 200 சதவீத வரி விதிப்பேன் என்றவுடன் போரை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

    இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    நேற்று அவர் அமைத்த அமைதி வாரியத்தின் கூட்டத்தில் பேசிய டிரம்ப், இரு நாடுகள் மீதும் 200 சதவீதம் வரி விதிப்பேன் என மிரட்டியதால் இந்தியா பாகிஸ்தான் போரை கைவிட்டன என்று தெரிவித்தார்.

    மோதல் தீவிரமடைந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நான் இருவரையும் (மோடி, ஷெபாஸ் ஷெரீப்) போனில் அழைத்தேன். அவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியும். மோடியை பற்றி நன்றாகவே தெரியும்.

    இந்த பிரச்சனையை உங்களுக்குள் தீர்க்கவில்லை என்றால் உங்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் தரமாட்டேன் என்று நான் மிரட்டினேன். நீங்கள் சண்டை போட்டால் ஒவ்வொருவர் மீதும் 200 சதவீத வரி விதிப்பேன் என்றவுடன் போரை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

    இருவரும் சண்டை போடவே விரும்பினர், ஆனால் பணம் என்று வந்துவிட்டால், அதை போல உலகில் வேறெதுவுமில்லை.

    இதில் நிறைய பணம் சம்பந்தப்பட்டுள்ளது என்று உணர்ந்தவுடன் இருவரும், சரி நாங்கள் சண்டையை நிறுத்துகிறோம் என்று கூறிவிட்டனர். ஆனால் ஏற்கனவே 11 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. மிகவும் விலையுயர்த்தவை அவை" என்று கூறி முடித்தார்.  

    2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் 16 பேர் கொல்லப்பட்ட பாஹலாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7 அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து இரு நாடுகளும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று மாலை உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது. 

    • டிரம்ப் உடைய குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்கொள்வார்.
    • வாஷிங்டன் டி.சி.-யில் ஜனநாயகக் கட்சிக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ளது.

    அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் டி.சி. நகரம் உள்ளது. இங்கு விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த் தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    ரினி சம்பத் தேனி மாவட்டத்தில் பிறந்தவர். தனது 7 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

    ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இவர், மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

    அதில் வெற்றி பெற்றால், ஜனநாயக கட்சி சார்பில் மேயர் தேர்தல் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டு டிரம்ப் உடைய குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்கொள்வார்.

    வாஷிங்டன் டி.சி.-யில் ஜனநாயகக் கட்சிக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால், உட்கட்சி தேர்தலில் ரினி சம்பத் வெற்றி பெற்றால், மேயர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

    ரினி சம்பத் ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக 15,000 டாலர்களுக்கும் மேலாக நிதி திரட்டியுள்ளார். 

    ×