என் மலர்
தலைப்புச்செய்திகள்
- விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைக்க முடியாது.
- மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எந்த தேர்தலிலும் களம் கானாத பல கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைக்க முடியாது. இதனால் இந்த கூட்டத்துக்கு தடை வதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது
- அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கியுள்ளது.
இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளை வழங்கியது.
2025 ஆண்டிற்கான ஆஸ்கர் விருது யார் யாருக்கு கிடைத்ததை பற்றிய முழு விவரத்தை இந்த செய்தியில் காணலாம்.
அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை 25- வயதே ஆன மைக்கி மாடிசன் வென்றுள்ளார்.

சிறந்த இயக்குனர், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான விருதை சீன் பேக்கர் வென்றார். ஒரு நபர் நாங்கு ஆஸ்கர் விருதினை வாங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கான்கிலேவ் (CONCLAVE) திரைப்படத்திற்காக Peter Straughan வென்றார்.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரதிற்கான விருது THE SUBSTANCE திரைப்படத்திற்காக PIERRE-OLIVIER PERSIN, STÉPHANIE GUILLON AND MARILYNE SCARSELLI வென்றனர்.
சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை Anora திரைப்படத்திற்காக Sean Baker வென்றார்.
சிறந்த கலை வடிவமைப்புக்கான விருதை WICKED திரைப்படத்திற்காக NATHAN CROWLEY மற்றும் LEE SANDALES வென்றனர்.
சிறந்த பாடலுக்கான விருதை EMILIA PÉREZ திரைப்படத்தில் இடம் பெற்ற El Mal பாடல் வென்றது. இப்பாடலை பாடியவர்கள் Clément Ducol, Camille மற்றும் Jacques Audiard என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை எ ரியல் பெயின் ( A Real pain) படத்திற்காக கீரன் கல்கின் ( Kieran Culkin) வென்றார்.

சிறந்த ஆனிமேடட் படத்திற்கான விருதை ஃப்லோ {FLOW} திரைப்படம் வென்றது. இப்படத்தை Gints Zilbalodis இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆனிமேடட் குறும்படத்திற்கான விருதை IN THE SHADOW OF THE CYPRESS குறும்படம் வென்றுள்ளது. இப்படத்தை Shirin Sohani and Hossein Molayemi இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை Wicked திரைப்படத்திற்காக Paul Tazewell வென்றார். இவரே ஆஸ்கர் விருது வெல்லும் முதல் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anora திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
The Brutalist திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
Dune 2 திரைப்படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது .
Wicked திரைப்படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது .
Emilia perez திரைப்படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது .
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த அக்டோபர் 1ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.20 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராகேஷ்காஷ்யப் தலைமையில் மத்திய கண்காணிப்பு குழு இருந்தது. ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வந்தது.
கடந்த ஆண்டு ஜூன் 13ந் தேதி அணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2022ம் ஆண்டு எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதத்திற்குள் முல்லைப்பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்தது.
கடந்த அக்டோபர் 1ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்பட்டது. புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர், 2 தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் உள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழு வருகிற 7ந் தேதி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்கசிவு கேலரி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அன்றைய மாலை குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.20 அடியாக உள்ளது. 97 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1763 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 61.01 அடியாக உள்ளது. 234 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 722 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3821 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.20 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.14 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை 1.2, மஞ்சளாறு அணை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
- டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
நடிகர், பாடகர் என பல பரிணாமங்கள் கொண்ட சிலம்பரசன் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இவர் இப்படத்தில் காட் ஆஃப் லவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டிராகன். இத்திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டடித்துள்ளது.

குறிப்பாக வழித்துணையே பாடல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சென்சேஷனலாக இருந்துக் கொண்டு வருகிறது. அடுத்ததாக அஷ்வத் இயக்கும் சிலம்பரசன் படத்திலும் லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளராக இருப்பார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
- உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி சீமான் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின் பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. அப்போது, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த வழக்கு திரும்ப பெறப்பட்ட நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். சீமான்- நடிகை தரப்பு பரஸ்பரம் பேசி முடிவெடுக்க வேண்டும்.
இடைப்பட்ட காலத்தில் செட்டில்மென்ட் (settlement) வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவெடுக்க வேண்டும். மேலும், நடிகையின் பாலியல் புகார் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "நாம் தடை கேட்டு இருந்தோம். அதன் பிறகு வழக்கை முடித்து வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயர்நீதிமன்றத்திலும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். இது ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு என்று பார்ப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
நானே தான் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து இருந்தேன். இது தொல்லை. இதனை 15 ஆண்டுகளாக இழுப்பது நல்லதல்ல. இதனால் தான் நானே அந்த வழக்கை தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்தால் இது முழுவதும் பொய், அவதூறு, திட்டமிட்டு பரப்பப்பட்ட பழி. இந்த இடைக்கால உத்தரவை நான் வரவேற்கிறேன். தொடர்ந்து சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வோம். உடன்பாட்டுக்கு வாய்ப்பும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை.
- மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது இல்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
- அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி என்றும் நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை கொளத்தூரில் தமிழக அரசால் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என்றும், அங்கு மருத்துவம் அளிப்பதற்காக மாதம் ரூ.60,000 ஊதியத்தில் 35 மருத்துவர்கள், ரூ.18,000 ஊதியத்தில் 156 செவிலியர்கள் உள்ளிட்ட 266 மருத்துவப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவமனைகளை உருவாக்கும் அரசு அதற்கு தேவையான மனிதவளங்களை ஏற்படுத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை கொளத்தூரில் ஏற்கனவே இருந்த மருத்துவமனை தான் இப்போது பெரியார் மருத்துவமனை என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு புதிய மருத்துவப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு புதிய சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆனால், அங்கு ஏற்கனவே பணியில் இருந்த மருத்துவர்கள் தவிர புதிய சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக, பிற மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை 2023-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட போதும் அங்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. சிறப்பு மருத்துவர்கள் அனைவரும் பிற மருத்துவமனைகளில் இருந்து தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இப்போதும் கூட அங்குள்ள தலைமை மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதற்கு காரணம் போதிய மருத்துவர்கள் இல்லாதது தான். ஒரு மருத்துவரால் தொடர்ந்து 24 மணி நேரம் பணி செய்ய முடியாது. அவ்வாறு பணி செய்தால் அவர்களால் முழுமையான திறனை வெளிப்படுத்த முடியாது. அதற்கெல்லாம் மேலாக இது மனித உரிமை மீறல் ஆகும்.
புதிய மருத்துவமனைகளை ஏற்படுத்துவது என்பது கட்டிடங்களைக் கட்டி, எந்திரங்களைப் பொருத்துவது மட்டும் அல்ல. மருத்துவமனைகளுக்கு மனிதவளம் தான் மிகவும் முக்கியமானது ஆகும். சாதனை செய்து விட்டதாக கணக்குக் காட்டிக் கொள்வதற்காக மருத்துவமனைகளை மட்டும் கட்டி விட்டு, அவற்றுக்கு பிற மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை இடமாற்றம் செய்தால் எந்த மருத்துவமனையிலும் மக்களுக்கு முறையான சேவை கிடைக்காது என்பதை அரசு உணர வேண்டும்.
அதுமட்டுமின்றி, மருத்துவ சேவையில் பொறுப்புடைமை மிகவும் அவசியம் ஆகும். மருத்துவர்களை தற்காலிகமாகவோ, ஒப்பந்த அடிப்படையிலோ நியமித்தால் பொறுப்புடைமையை ஏற்படுத்த முடியாது. எனவே, மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது இல்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் வளர்ச்சி, தமிழ் மொழியின் சிறப்பு சிலரது கண்களை உறுத்துகிறது.
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.
நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதால் எல்லா புள்ளி விவரங்களிலும் முன்னிலையில் உள்ளது.
* தமிழ்நாட்டில் வளர்ச்சி, தமிழ் மொழியின் சிறப்பு சிலரது கண்களை உறுத்துகிறது.
* ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர். இந்தியை கற்பதால் என்ன பயன்?
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.
* சுயநலத்திற்காக தமிழகத்தின் எதிர்காலத்தை அடகு வைக்காமல் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள்.
* அரசியல் வேறுபாடுகளை களைந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என்று மீண்டும் அவர் அழைப்பு விடுத்தார்.
- ரோகித் சர்மா உடல் பருமன் கொண்டுள்ளார்.
- அவர் உடல் எடையை குறைக்க வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது கருத்துக்கு சமூக வலைதளத்தில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரோகித் சர்மா குறித்த காங்கிரஸ் விமர்சனத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறும் போது, "காங்கிரசுக்கு அவமானம். தற்போது அவர்கள் இந்திய கிரிக்கெட் கேப்டனை நோக்கி செல்கிறார்கள்."
"இந்திய அரசியலில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாடுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? காங்கிரஸ் செய்தி தொடர்பாளரின் கருத்து கட்சியின் அவசரகால மன நிலையை பிரதிபலிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியை எல்லா வழியிலும் ஆதரிக்கும் ஒவ்வொரு தேச பக்தரையும் அவமதிப்பதாகும். காங்கிரஸ் விமர்சனத்தை நான் கேள்வி கேட்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
- தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது.
- தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை.
நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 3,000-க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது.
* மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக தொடர முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
* சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை.
* மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
* மீனவர் பிரச்சனையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
* ஒவ்வொரு பிரச்சனைகளிலும் தமிழக அரசு போராடிக்கொண்டு தான் இருக்கிறது என்று கூறினார்.
- ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் 2 நபர்களுக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
- போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களின் வாக்காளர் அட்டை EPIC எண்கள், ஹரியானா, குஜராத் மற்றும் பஞ்சாபில் வசிக்கும் மக்களின் வாக்காளர் அட்டை EPIC எண்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
EPIC எண்கள் என்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் 10 இலக்க வாக்காளர் அடையாள அட்டை எண்ணாகும்.
இந்நிலையில், மமதா பானர்ஜி குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
"வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. EPIC எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி, பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும். ஆகவே ஒரே ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் இருந்தாலும் ஒருவர் அவருடைய தொகுதியில் உள்ள நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க முடியும்" என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
13 பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் ஏராளமானார் பலன் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
வேதாரண்யம் தலைஞாயிறு பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். விழுந்தமாவடி, வானமா மாகாதேவி பகுதிகளில் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். 3 பல்நோக்கு பஸ் நிலையம் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும். நாகையில் 3 தளங்கள் கொண்ட பேரிடர் மையங்கள் அமைக்கப்படும். ரூ. 65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் சென்னையில் அமைக்கப்படும்.
இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தருவதில்லை. பள்ளிக்கல்வி க்கான நிதியையும் தருவதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தருவோம் என்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தனித்துவம் பிடிக்காததால் இப்படி செய்கிறார்கள்.
இந்தி திணிப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குழந்தைகள் கூட தங்களது சேமிப்பை கல்வி நிதிக்கு தருகிறார்கள். அவர்களது இந்த செயலை காணும் போது கண் கலங்குகிறது.
தமிழ்நாடு முன்னேறியதற்கு இரு மொழி கொள்கைதான் காரணம். மக்களின் துணையோடு தமிழ்நாட்டின் உரிமையை நான் மீட்பேன். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதிகளை மத்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. எனவே நாளை மறுநாள் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மார்கோ திரைப்படம்.
- அடுத்ததாக கட்டாளன் என்ற திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரிக்கிறார்.
கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி மலையாள மொழியில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மார்கோ திரைப்படம்.
இத்திரைப்படம் மிகவும் ஆக்ஷன், வயலன்ஸ், துப்பாக்கி, ரவுடிசம் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. இதுவரை இப்படி வன்முறை நிறைந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகவில்லை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இத்திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரித்தார்.
இந்நிலையில் அடுத்ததாக கட்டாளன் என்ற திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரிக்கிறார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்குகிறார். படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டனி வர்கீஸ் கையில் கோடாரியுடன் எறியும் நெருப்பின் அருகே நிற்கிறார். இத்திரைப்படமும் ஒரு ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






