என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
- வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.
அவினாசி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி அவினாசியில் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவினாசி வாணியர் வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தின் பிற தாலுகாக்களில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார். அவருடன் கலெக்டர் மணிஷ் நாரணவரே , அவினாசி தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜபிரபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.
- கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 51.16 அடியாக உள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் எந்த நேரத்திலும் திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.
எனவே பாலாற்றின் கரையோரத்தில் உள்ள தேவனூர் புதூர், பொன்னாலம்மன் சோலை, தீபாலப்பட்டி, அர்த்தநாரி பாளையம், ஆண்டியூர் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருமூர்த்தி அணை நீர்வளத்துறை உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முறைகேடுகள் நடைபெறுவதை கண்டித்தும் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம். எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார் , முன்னாள் எம்.பி., சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் கவுன்சிலர் தங்கராஜ் மருத்துவமனையில் சுவாச பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
- அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
- பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும். கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 15 (3)-வது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்தமையால், தனது செயல்பாடுகளில், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார் நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
கோவை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர்கள் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து அவர் கார் மூலமாக காந்திபுரத்திற்கு வந்தார். காந்திபுரம் மத்திய ஜெயில் வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அங்கு உள்ள மலைக்குன்றின் அருகே வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டினையும் திறந்து வைத்தார். பூங்காவில் வைக்கப்பட்டுள்ள கடையெழு வள்ளல்களின் சிலைகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழி பூங்காவில் உள்ள செம்மொழி வனம், ரோஜா வனம், மூலிகை வனம், புதிர் வனம், நீர்வனம் செயற்கை நீருற்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் முதலமைச்சர் கண்டு ரசித்தார்.
பின்னர் அங்குள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 150 பேருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி பூங்காவானது 45 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே மிகப்பெரிய பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்தோட்டம், மணம் கமழ் தோட்டம், பாலைவன தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் என 23 வகை தோட்டங்கள் உள்ளது. மேலும் 2 ஆயிரம் வகையான 5 லட்சம் தாவரங்களும் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர திறந்தவெளி அரங்கம், தோட்டக்காரர்கள் அறை, செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், கடையெழு வள்ளல்களின் கற்சிலைகள், நடைபயிற்சி செய்ய வசதியாக நடைபாதை சாலை வசதி, உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாற்றுத்திறனாளிகள் வசதிக்கு ஏற்ப பிரத்யேக விளையாட்டு திடலும் உருவாக்கப்பட்டு உள்ளது.
செம்மொழி பூங்கா திறப்பு நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கோவை-அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அங்கு தமிழ்நாடு தொழில்துறை சார்பில் நடந்த டி.என்.ரைசிங்(தமிழ்நாடு வளர்கிறது) முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை கோவையில் இருந்து கார் மூலமாக ஈரோடு மாவட்டத்திற்கு செல்கிறார்.
முன்னதாக கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ் செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையிலும், புறநகரில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன்படி மாட்டுக்குளம், ரத்தினபுரி, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, பை-பாஸ் சாலை, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சிவன் கோவில் வடக்கு அக்பர்ஷா நகர் பெரு வெள்ளத்தால் தத்தளிக்கிறது. அங்குள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், தீவு தெரு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.
மழை வெள்ளத்தை வடிய வைப்பதற்காக நகராட்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இருந்த போதிலும் இந்த நடவடிக்கை மழை வெள்ளம் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தருமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளது.
- உழவர்களை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
- மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு குறித்து அரசு முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதால், உழவர்களை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. மழை பாதிப்புகளை கணக்கிட 35 நாள்கள் என்பது மிக அதிக காலம் ஆகும்.
காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. மழையில் நனைந்து சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததன் மூலம் உழவர்களை தி.மு.க. அரசே கடன் வலையில் வீழ்த்தி விடக் கூடாது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
- இரண்டு விமானங்கள் சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாக வந்துவிட்டு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
ஆலந்தூர்:
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் புகை சுமார் 15 கி.மீட்டர் உயரத்திற்கு எழுந்தது. வான்வெளியில் பரவி வரும் இந்த சாம்பல் புகை இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா மாநில பகுதியிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து மும்பைக்கு இன்று காலை 7.15 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா பயணிகள் விமானம், காலை 11 மணிக்கு, தாமதமாக புறப்பட்டு சென்றது. காலை 9.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு எதிரொலி காரணமாக, சில குறிப்பிட்ட இடங்களில் பறந்த விமானங்களில், முன்எச்சரிக்கை சோதனை செய்யப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமானங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
சென்னை-மும்பை விமானம் மட்டுமின்றி, டெல்லி-ஐதராபாத், மும்பை-ஐதராபாத், மும்பை-கொல்கத்தா விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதோடு சென்னை விமான நிலையத்தில் லண்டன்-சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், சென்னை லண்டன்-பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள், சுமார் 3 மணி நேரங்கள் தாமதமாக வந்துவிட்டு தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இது தவிர இன்று மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும், தாமதமாக இயக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 8.30 மணி அளவில் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரிலிருந்து, (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. இது மெதுவாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.
நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று காலை 5.30 மணி அளவில் குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.
இன்று மற்றும் நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
29-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
30-ந்தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
01-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
- 17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விற்பனை செய்யப்படும் விதைகள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.
- விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பது எப்படி முடிவு செய்யப்படும் என்று தெரியவில்லை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா-2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகளின் விதைக்கு விலை வைக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக்கட்டுபாட்டு விதிமுறைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து விதை விற்பனையை தனியார்மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவவோ அல்லது தன்னளவில் பொருளாதார பலன்களை அடையவோ இந்த புதிய விதை மசோதா தடை செய்கிறது. கார்ப்பரேட்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து புதிய விதை வாங்கி, பயிர் செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
விதைகள் மசோதாவை பொறுத்தவரை ஒவ்வொரு விற்பனையாளரும் விதைகள் குறித்து பதிவு சான்றிதழை ஒன்றிய-மாநில அரசுகளிடம் பெற்ற பிறகு தான் விதைகளை விற்கவோ, ஏற்றுமதி, இறக்குமதி செய்யவோ, தனிப்பட்ட நபருக்கு வழங்கவோ முடியும் என்ற வகையில் இந்த மசோதா பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. விற்பனை செய்யப்படும் விதைகள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதன்மூலம் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கிற விதை மசோதா மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் இறக்குமதி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த புதிய விதை மசோதாவை பொறுத்தவரை போலி மற்றும் தரமற்ற விதைகளை விநியோகம் செய்தால் சிறு குற்றங்களுக்கு முதலில் ரூபாய் 1 லட்சம், தவறுகள் தொடர்ந்தால் ரூபாய் 2 லட்சம், பெரிய குற்றங்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
அப்படி அபராதம் கட்டத் தவறினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பது எப்படி முடிவு செய்யப்படும் என்று தெரியவில்லை.
விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி செலவை அதிகரிக்கும். ஏற்கனவே, மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி, அந்த சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற்றது. அதேபோல, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் ஒன்றிய அரசின் விதை மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.
- இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது.
- இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கபடி அணி இந்தத் தொடர் முழுவதுமே தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டியிலும் தங்கள் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.
இறுதிப்போட்டியில் 35- 28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணியினர் வென்று உலக அரங்கில் இந்திய மகளிரின் விளையாட்டு வீரத்தை நிரூபித்திருக்கிறார்கள். மொத்தம் 11 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றதால் ஒட்டு மொத்ததேசமும் பெருமை அடைந்துள்ளது.
மேலும் இந்திய மகளிருக்கு விளையாட்டில் ஆர்வத்தை, ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்திய மகளிர் கபடி அணியின் வீராங்கனைகளுக்கு துணை நின்ற பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். இந்திய மகளிர் கபடி அணியினர் தொடர்ந்து விளையாட்டு சாதனைகளைப் படைத்து முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






