என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நடராஜனை ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.
    • நடராஜனை வரவேற்ற வீடியோவுக்கு ”தமிழ் சிங்கம் ரெடி” என டெல்லி அணி தலைப்பிட்டுள்ளது.

    டெல்லி:

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த தொடருக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் டெல்லி அணியுடன் இன்று இணைந்துள்ளார். அவருக்கு இண்ட்ரோ வீடியோ கொடுத்து அசத்தலாக வரவேற்றது டெல்லி அணி.

    நடராஜனை வரவேற்ற வீடியோவுக்கு தமிழில் லியோ படத்தில் வெளியான நான் ரெடியா தான் வரவா பாடலை பின்னணி இசையில் இசைத்துள்ளனர். மேலும் இதற்கு "தமிழ் சிங்கம் ரெடி" என தலைப்பிட்டுள்ளது. இது தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வீரர்கள் மட்டுமே தமிழில் அவ்வபோது பேசி வந்த நிலையில் மற்ற அணிகளும் தமிழை பின்பற்ற தொடங்கி உள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் வீடியோவை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் டெல்லி அணியும் தமிழில் பதிவு செய்தது தமிழக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    நடராஜனை ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது 

    • 2005-ம் ஆண்டில் இந்தியா போட்டியின் போது ஜாகீர் ஐ லவ் யூ என ரசிகை ஒருவர் பெயர் பலகை வைத்திருந்தார்.
    • அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் அவர்களது அணியில் ஒவ்வொருவராக இணைந்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த தொடரில் லக்னோ அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் இணைந்துள்ளார். லக்னோ அணியின் முன்னாள் ஆலோசகராக இருந்த கம்பீருக்கு பதிலாக ஜாகீர் கான் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் ஜாகீர் கான் லக்னோ அணியில் இணைவதற்காக அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகை தந்தார். அப்போது ஹோட்டலில் ரசிகர்கள் கையில் பெயர் பலகையுடன் அவரை வரவேற்றனர். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஜாகீர்கானின் தீவிர ரசிகையும் இருந்தார்.

    20 ஆண்டுகளுக்குப் முன்பு பெங்களூருவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடினர். அப்போது இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகை ஒருவர் ஜாகீர் ஐ லவ் யூ என பெயர் பலகை வைத்திருந்தார். அதனை மைதானத்தின் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.

    இதனை ஓய்வு அறையில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகையையும் ஜாகீர்கானை மாறி மாறி அந்த பெரிய திரையில் காண்பித்து கொண்டிருந்தனர். உடனே ரசிகை ஜாகீர் கானை பார்த்து ஐ லவ் யூ என தெரிவித்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.

    இதனை பார்த்த யுவராஜ், ஜாகீர் கான் சிரித்தனர். யுவராஜ் உடனே நீங்களும் முத்தம் கொடுங்கள் என தெரிவிக்க ஜாகீர் கானும் சிரித்தபடி பறக்கும் முத்தத்தை கொடுத்தார். இதற்கு ரசிகை வெட்கப்பட்டும் அவர் வைத்திருந்த பெயர் பலகையை வைத்து தனது முகத்தை மறைத்துக் கொள்வார்.

    இவர்கள் இரண்டு பேரும் செய்த செயலை மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சேவாக் சிரித்தபடி பார்த்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த ரசிகையை 20 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ அழைத்து வந்து ஜாகீர் கானுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளது.

    அந்த ரசிகை அதே மாதிரி ஜாகீர் ஐ லவ் யூ என்ற பெயர் பலகையுடன் வெட்கத்தில் ஜாகீர் கானை பார்ப்பதும் அவரும் சிரித்தப்படி கடந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவத்தை ரீ கிரியேட் செய்யும் வகையில் லக்னோ அணி இதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    • நான் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டேன்.
    • அவர்களை எப்போதும் கூலாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க முயல்வேன்.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது. இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் எனது அணிக்காக நான் துணை நிற்பேன் என கேப்டன்சி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் மனம் திறந்த பேசினார். அதில், நான் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் போட்டிகளின் நிலவரங்களை உற்று நோக்குவேன். எனது அணிக்காக நான் துணை நிற்பது அவசியம். அவர்களை எப்போதும் கூலாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க முயல்வேன்.

    என ரஜத் படிதார் கூறினார்.

    • தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர்.
    • ராபின்வுட் படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது

    தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

    வார்னர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் வைத்தே புஷ்பா பட ஸ்டைலை செய்து காட்டி இந்திய ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் டேவிட் வார்னர் தெலுங்கு திரைபடத்தில் நடிக்க உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    அதன்படி டேவிட் வார்னர் நடித்துள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த வார்னர், தற்போது திரைபடங்களில் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
    • அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்றெடுத்து.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.

    இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊகங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.

    ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.

    இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்து உள்ளார். எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது.  ரோகித் சர்மா மீண்டும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.

    அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது. 

    • 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது.
    • மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது.

    லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடமும், உ.பி.வாரியர்ஸ் கடைசி இடமும் பெற்று நடையை கட்டின. நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

    2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது. அந்த அணியில் நட்சத்திர பட்டாளத்துக்கு குறைவில்லை. ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கும் நாட் சிவெர் (493 ரன்கள், 9 விக்கெட்), அதிக விக்கெட் வீழ்த்தியதில் முதலிடத்தில் இருக்கும் ஹெய்லி மேத்யூஸ் (17 விக்கெட், 304 ரன்) ஆகியோர் ஆல்-ரவுண்டராக அசத்தி மும்பை அணிக்கு வலுசேர்க்கிறார்கள். பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் அமெலியா கெர் (16 விக்கெட்), ஷப்னிம் இஸ்மாயிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'ஒரே மைதானத்தில் ஒரே ஆடுகளத்தில் தான் இறுதிப்போட்டியையும் விளையாடப் போகிறோம். கடந்த 4 நாட்களில் இங்கு 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். இதனால் நிறைய விஷயங்களை புரிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக இங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மையை நன்கு அறிந்துள்ளோம். இதை எங்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கிறேன்' என்றார்.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 2 தடவையும் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 3-வது முயற்சியிலாவது கோப்பை ஏக்கத்தை தணிக்குமா? என்ற ஆவல் எழுந்துள்ளது.

    டெல்லி அணி பந்து வீச்சையே அதிகம் நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் ஷபாலி வர்மா (300 ரன்), மெக் லானிங்கும் (263 ரன்), பந்து வீச்சில் ஷிகா பாண்டே, அனபெல் சுதர்லாண்ட், மின்னு மணியும் நல்ல நிலையில் உள்ளனர். ஜோனஸ்சென் (137 ரன், 11 விக்கெட்) ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அவர்களும் பார்முக்கு திரும்பினால், டெல்லி இன்னும் வலிமை அடையும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் மும்பை 3 ஆட்டங்களிலும், டெல்லி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு தொடரில் 2 ஆட்டங்களிலும் டெல்லி அணி வெற்றியை ருசித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் நேரில் வந்து உற்சாகப்படுத்துவதால் வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், கமலினி, சன்ஸ்கீர்த்தி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெஸ் ஜோனஸ்சென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சுதர்லாண்ட், சாரா பிரைசி, நிக்கி பிரசாத், ஷிகா பாண்டே, மின்னு மணி, திதாஸ் சாது.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • ஐ.பி.எல். தொடரில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
    • இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

    இஸ்லாமாபாத்:

    இந்திய வீரர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்ற பிறகே வெளிநாட்டு லீக் தொடரில் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் அனைத்து முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்கு சென்று விளையாடுவதில்லை.

    எனவே எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.பி.எல். போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

    நீங்கள் (இந்தியா) உங்களது வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு விடுவிக்காவிட்டால் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏன் அதே மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ராய்ப்பூர்:

    சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் ராய்பூரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கைபந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ராம்தின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரையன் லாரா 41 ரன்னும், சாட்விக் வால்டன் 31 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டினோ பெஸ்ட் 4 விக்கெட்டும், டுவெயின் ஸ்மித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதி ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
    • சிஎஸ்கே முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 சீசன் முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.

    மேலும், மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ், மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு, ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி, ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா, ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத், ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப், மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான் என 7 போட்டிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், இந்த இலவச பயணம் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்க்குள் மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடைசி அணியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று கேப்டன் யார் என்பதை அறிவித்துள்ளது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது.

    ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன் கில்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பேட் கம்மின்ஸ்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய ஐந்து அணிகள் கேப்டன்களை தக்கவைத்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தக்கவைக்கவில்லை.

    மெகா ஏலத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணிகளாக கேப்டன்களை அறிவித்து வந்தது. இறுதியான இன்று காலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது.

    இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். அக்சார் பட்டேல் பகுதி நேர கேப்டனாக பணியாற்றியுள்ளார். தற்போது முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார்.

    10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டும் வெளிநாட்டு வீரரை கேப்டனாக கொண்டுள்ளது.

    • கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயனுக்க வயது ஆகிவிட்டது.
    • ஸ்மித், டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை மட்டுமே அதிக அளவில் நம்பியுள்ளது ஆஸ்திரேலியா

    கிரிக்கெட்டில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆஷஸ் தொடர் மிகக்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடம் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிட அதிக அளவிற்கு இந்த தொடருக்கு உண்டு.

    இந்த வருடம் இறுதியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வென்றதில்லை.

    இந்த நிலையில் வயதான பந்து வீச்சாளர்கள், அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்ட ஆஸ்திரேலியா அணியை இந்த முறை இங்கிலாந்து வீழ்த்தி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் "உண்மையிலேயே, எங்களுக்கு வாய்ப்பு என்பதுடன்தான் ஆஸ்திரேலியாவுக்கு செல்வோம். ஆஸ்திரேலியா உலகின் சிறந்த அணி. சொந்த மண்ணில் நம்பமுடியாதவை. ஆனால் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என வயதான பந்து வீச்சு குழுவை கொண்டுள்ளது. தொடக்க வீரராக விளையாட வாய்ப்புள்ள சாம் கோன்ஸ்டாஸ் உள்ளிட்ட அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.

    அவர்கள் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை மட்டுமே அதிக அளவில் நம்பியிருக்க வேண்டும். மார்னஸ் லபுசேன் ரன் சேர்க்க திணறுகிறார். ஆகவே, இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்தால், வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்வதற்கன அணி. இருந்தாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • ஐபிஎல் அணிகளும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.

    வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதல் டெல்லி வரை பலவேறு இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.

    ஹோலி பண்டிகையை ஐபிஎல் அணிகளும் கொண்டாடி உள்ளனர். ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இன்னும் 8 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் அவர்களது அணியுடன் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் அணிகளும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    இதில் ஆர்சிபி, சென்னை, சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், மும்பை, சென்னை ஆகிய அணிகள் தங்களின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் ஹோலி வாழ்த்து தெரிவித்தனர்.

    கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகள் ஹோலி பண்டிகையை பயங்கரமாக கொண்டாடியு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதே போல சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் விளையாடி வரும் சச்சின் தலைமையிலான இந்திய அணியும் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

    ×