என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க. டெல்லி தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
    • மாத இறுதிக்குள் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு பா.ஜ.க.வுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் தொகுதி, மாவட்டம், அணி அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆனால் புதுச்சேரி, தமிழகத்தில் மாநில தலைவரை தேர்வு செய்வதில் 2 மாநிலங்களிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இன்னும் ஓராண்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலான ஒரு மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைமை உறுதியாக உள்ளது.

    புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்தும் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கிய அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை சந்தித்தார். இது வரும் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமோ? என பா.ஜ.க. தலைமை அச்சப்படுகிறது.

    இதனால் கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க. டெல்லி தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

    பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நமச்சிவாயம் பொருத்தமாக இருப்பார். ஆனால் அவர் அமைச்சர் பதவியோடு, தலைவர் பதவியை அளித்தால் ஏற்க தயார் என தலைமைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதனால் விதியை வளைத்து மாநில தலைவர் பதவி வழங்க கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. அதேநேரத்தில் புதுச்சேரியில் தற்போதைய தலைவரான செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 20-ந் தேதியே புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை. அனைவரும் ஏற்கும்படியும், தேர்தலை எதிர்கொள்ளும்படியும் ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்பதால் இந்த இழுபறி நீடிப்பதாக தெரியவந்துள்ளது.

    இருப்பினும் மாத இறுதிக்குள் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

    • கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
    • வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் 150 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க கடிகாரம், ரூ.1.30 லட்சம் செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கினர்.

    இந்நிலையில் திருமணம் முடிந்த சில வாரத்திலேயே சீர்வரிசையாக அணிந்து வந்த நகைகளை மாமியார் பெற்று கொண்டார். மேலும் சில மாதங்களில் பெண்ணிடம் கூடுதலாக 50 பவுன் நகை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்தார்.

    அதோடு பெண்ணின் பெற்றோர் வீட்டு சொத்தை தனது பெயரில் எழுதித் தர வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

    இதற்கு மறுத்த அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டில் வளர்த்து வரும் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் காங்கோ சாம்பல் பறவையை கொத்த வைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    தொடர்ந்து இதுபோன்ற கொடுமை செய்து வந்ததால் அந்த பெண் புதுச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
    • ஆண்டுதோறும் ஏதேனும் பரிசு ஒன்று வழங்குவது வழக்கம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளுக்கு இனிப்பு மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவித்தார். இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாட்டின் விடுதலைக்கு போராடி தமது இன்னுயிர் நீத்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

    நம் நாட்டின் விடு தலையை பேணி காப்பதுடன், நமது நாட்டின் வளர்ச்சியை விடுதலை போராட்ட தியாகிகள் எண்ணத்தின்படி செயல்பட்டு வருகிறோம்.

    புதுவை மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைக ளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மேம்பட்டுள்ளது. உள் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கி அதிக கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து மாணவர் களுக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை சிறந்த கல்வி வழங்கப்படுகிறது

    குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஏதேனும் பரிசு ஒன்று வழங்குவது வழக்கம். இந்தாண்டு தியாகிகளின் வங்கி கணக்கில் பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தலா ரூ.3 ஆயிரம் ரொக்கம் அவரவர் வங்கிக்கணக்கில் ஓரிரு நாளில் செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.
    • மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.

    இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார் மருத்துவர் கே.எம்.செரியன்.

    சென்னை பெரம்பூரிலுள்ள ரெயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார். மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

    இதய அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர் செரியன் ஆற்றிய பங்களிப்புகள் தனி முத்திரையை பதித்துள்ளது. செரியனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரி சட்டசபையின் பாதுகாப்பை பலப்படுத்த வளாகத்தை சுற்றிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
    • சட்டசபைக்குள் ரவுடிகள் எதற்காக வந்தனர், யாரை சந்தித்தனர் என்ற விபரம் தெரியவில்லை.

    புதுச்சேரி:

    ஒரு மாநில நிர்வாகத்தின் ஒட்டு மொத்த இதயம் சட்டசபை ஆகும். இங்கு உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த இடமாகவும் திகழும். புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

    இத்தகைய சட்டசபைக்குள் சர்வ சாதாரணமாக யாரும் நுழைந்து விட முடியாது. புதுச்சேரி சட்டசபையின் பாதுகாப்பை பலப்படுத்த வளாகத்தை சுற்றிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர, சட்டசபைக்குள் வரும் அனைவரையும் சபை காவலர்கள் பரிசோதித்து, யாரை சந்திக்க செல்கின்றனர் என்ற விபரங்களை கேட்டு, கையெழுத்து வாங்கிய பின்னரே அனுமதிக்கின்றனர்.

    இத்தகைய கட்டுப்பாடுகள் நிறைந்த சட்டசபைக்குள், முகமூடியுடன் (மாஸ்க் அணிந்து) வரும் ரவுடிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். சட்டசபை காவலர்களுக்கு, முகமூடி அணிந்த நபர்கள் ரவுடிகளா, பொதுமக்களா என தெரிவது இல்லை. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்திற்கு செல்வதாக கூறினால் உடனே அனுமதிக்கின்றனர்.

    இதனை பயன்படுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் 2 பேர் முகமூடி அணிந்து கொண்டு சர்வ சாதாரணமாக சட்டசபைக்குள் சென்றனர். 30 நிமிடங்கள் கழித்து சட்டசபையை விட்டு வெளியேறி புறப்பட்டு சென்றனர். சட்டசபைக்குள் ரவுடிகள் எதற்காக வந்தனர், யாரை சந்தித்தனர் என்ற விபரம் தெரியவில்லை.

    சட்டசபை வளாகத்தில் பிரபல ரவுடிகள் சர்வசாதாரணமாக உலா வந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் அக்கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 4,500 பேர் பங்கேற்று தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை உருவாக்கினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

    மாணவ-மாணவிகள் ஒன்று சேர்த்து உருவாக்கிய அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் பார்வையிட்டு அதிகாரபூர்வமாக பதிவு செய்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.

    • பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் கன்னியம்மாளை சங்கர் கொலை செய்தது உறுதியானது.
    • சங்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது28) . ரவுடியான இவர் மீது கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவரும் அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகவேலன் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இடையில் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 14.03.2016 ஆண்டு விநாயகவேலனை கொலை செய்யும் நோக்கில் சங்கர் கையில் கத்தியுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் விநாயகவேலன் இல்லை. அவரது சகோதரி முத்து லட்சுமி மற்றும் பாட்டி கன்னியம்மாள் (86) ஆகியோர் மட்டும் இருந்தனர். அவர்கள் சங்கரை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்தனர்.

    இதில் ஆத்திரமடைந்த சங்கர் முத்துலட்சுமியை மார்பிலும், கன்னியம்மாளை முதுகிலும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு சங்கர் தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த இருவரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கன்னியம்மாள் இறந்து போனார்.

    இது குறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் கன்னியம்மாளை சங்கர் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து சங்கருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விநாயகம் ஆஜராகி வாதாடினார்.

    • டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக தி.மு.க. அரசு காட்டிக்கொண்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடந்த சர்வதேச உளவியல் மாநாடை தொடங்கி வைத்த மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், அம்பலக்காரர்கள், மத்திய கனிமவளத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்தனர். அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வருவதால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய விவசாய பாதிப்பு பிற பாதிப்புகளை விளக்கி கூறினர்.

    இதனடிப்படையில் பிரதமர் மோடியுடன் ஆலோசித்து, மத்திய மந்திரி கிஷன்ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார். இதற்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி கிஷன்ரெட்டிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    சுரங்க விவகாரத்தில் தமிழக திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது. 2017-ம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நடந்து வருகிறது.

    இது கடந்த 2023-ம் ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பொய்யான தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு பரப்பி வந்தது. 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் இத்திட்டம் தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை. மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக தி.மு.க. அரசு காட்டிக்கொண்டது.

    பிரதமர் மோடி உலகம் முழுவதும் திருக்குறளை பரப்பி வருகிறார். தேர்தல் அறிக்கையில் உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 5 நாடுகளில் திருக்குறள் கலாச்சார மையத்தை உருவாக்கியுள்ளோம். டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என தமிழ் பற்றாளர்கள், சான்றாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான தேதியை விரைவில் அறிவித்து டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க திட்டமிட்டார்.
    • நீதிபதியின் உத்தரவின் பேரில் அரியாங் குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவனை அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மூலக்குளம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். இதில் ஒரு தரப்பு மாணவன், மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.

    இதையறிந்த மற்றொரு தரப்பினர் மாணவி பெயரில் போலி சமூகவலைதள ஐ.டி. உருவாக்கி, மாணவருக்கு மாணவி அனுப்புவதுபோல குறுஞ்செய்தி அனுப்பி வந்தனர். அந்த மாணவரும், தான் காதலிக்கும் மாணவி தான் குறுஞ்செய்தி அனுப்புவதாக நினைத்து மெசேஜ் மூலம் பேசி வந்தார்.

    ஒரு கட்டத்தில், இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என மாணவி போல அந்த தரப்பினர் மெசேஜ் செய்தனர். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த மாணவன் ஆவேச மடைந்தார். போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க திட்டமிட்டார்.

    நேற்று முன்தினம் வகுப்பறையில் அந்த மாணவனை கத்தியால் குத்தினார். அப்போது அவரது பையில் 6 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பிலோ, பாதிக்கப்பட்ட மாணவர், பெற்றோர் தரப்பிலோ புகார் தரவில்லை. இருப்பினும் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் பள்ளி நிர்வாகத்தின் அறிக்கையை பெற்று ஆயுதங்களால் தாக்குவது மற்றும், வெடிகுண்டு வைத்திருந்தல் என்ற 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

    மாணவரை கைது செய்து சிறுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு ஆஜர்படுத்தினார். நீதிபதியின் உத்தரவின் பேரில் அரியாங் குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவனை அடைத்தனர்.

    பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேடடு நோட்டீஸ் அளித்துள்ளார்.

    • புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
    • வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.

    ஏற்கனவே புதுச்சேரியில் சாலைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் நாள்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் வாகன ஓட்டிகள் அல்லாடி வருகின்றனர்.

    இதையடுத்து புதுச்சேரி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கேமராக்கள் மூலம் கண்டறிந்து ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக நகரின் முக்கிய இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுமார் 450 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    அரியாங்குப்பம், வில்லியனூர், மேட்டுப்பாளையம், கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதியில் வாகனங்கள் வரும் பகுதிகளை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    இதற்கான கட்டுப்பாட்டு மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இங்கிருந்தபடியே ஊழியர்கள் கண்காணித்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன எண்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதேபோல் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை கண்டறிந்து, உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதுமட்டுமல்லாது மழையின்போது புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்கும் முயற்சியாக மழைக்காலங்களில் முன்கூட்டியே வெள்ள அளவை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சாலைகள், கழிவு நீர் வாய்க்கால்களை கண்காணிக்கவும் கேமரா பொருத்தப்படுகிறது. அதாவது, வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.

    அதன்மூலம் மழை வெள்ளம் அதிகரிக்கும்போது தாழ்வான பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல் பட்டுள்ளனர்.
    • கத்தியால் வெட்டிய மாணவரின் புத்தக பையை ஆசிரியர்கள் சோதனை செய்தனர்.

    புதுச்சேரி:

    காதல் விவகாரம் ஒருவரை ஆத்திரத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புதுச்சேரியில் பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவனை கத்தியால் குத்தும் அளவிற்கு சென்றுள்ளது.

    புதுச்சேரி மூலக்குளம் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பு மாணவன், மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.

    இதையறிந்த மற்றொரு தரப்பினர் மாணவி பெயரில் போலி சமூகவலைதள ஐ.டி. உருவாக்கி, மாணவருக்கு மாணவி அனுப்புவதுபோல குறுஞ்செய்தி அனுப்பி வந்தனர். அந்த மாணவரும், தான் காதலிக்கும் மாணவி தான் குறுஞ்செய்தி அனுப்புவதாக நினைத்து மெசேஜ் மூலம் பேசி வந்தார்.

    ஒரு கட்டத்தில், இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என மாணவி போல அந்த தரப்பினர் மெசேஜ் செய்தனர். இதனால் சோகமடைந்த மாணவர், நேரடியாக மாணவியிடம் சென்று கேட்டார். அப்போது அந்த மாணவி, தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என கூறிவிட்டார்.


    அந்த போலி ஐ.டி.யை உருவாக்கியது யார்? என மாணவர் விசாரித்த போது எதிர்தரப்பு மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ய போலி ஐ.டி. உருவாக்கியது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. அதோடு அந்த மாணவர்கள் ஏமாந்தாயா? என அவரை கிண்டல் செய்துள்ளனர்.

    இதனால் அவமானப்பட்ட மாணவர் போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக புதிதாக கத்தி வாங்கிக் கொண்டு, பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி இடைவேளையில் மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர் போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை குத்த முயன்றபோது, மற்ற மாணவர்கள் தடுத்தனர். இருப்பினும் அந்த மாணவரின் கையில் கத்தி வெட்டு விழுந்தது.

    ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்து கத்தியை பிடுங்கினர். காயமடைந்த மாணவரை மருத்துவமனை அழைத்துச் சென்று ஆசிரியர்கள் சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பள்ளி நிர்வாகம் புகார் அளிக்க வேண்டாம் என கேட்டு கொண்டதால் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை.

    இதனிடையே கத்தியால் வெட்டிய மாணவரின் புத்தக பையை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது அடுத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

    புத்தக பையில் 6 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதைக்கண்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசுக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாணவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அரிவாளால் வெட்டிய மாணவரின் தந்தை போலீஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி வழக்கு பதியவில்லை.  

    புத்தகம் தூக்க வேண்டிய கை கத்தியை எடுத்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடத்தி கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
    • அவர்களுடன் ஆழ்கடலுக்குள் 5 பேர் உடன் சென்றனர்.

    புதுச்சேரி:

    விமானத்தில் பறந்து கொண்டே திருமணம், கடலில் படகில் சென்று திருமணம் உள்பட பல்வேறு வித்தியாசமான திருமணத்தை பார்த்திருப்போம்.

    ஆனால் புதுச்சேரியில் ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று ஒரு ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    புதுவை முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான் டி பிரிட்டோ- தீபிகா.

    இந்த ஜோடி கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி ஆழ்கடலில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.

    இதையடுத்து டெம்பிள் அட்வென்சர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன் இன்று புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்கு சென்றனர். அங்கு 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடு நடந்தது.

    தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடத்தி கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடன் ஆழ்கடலுக்குள் 5 பேர் உடன் சென்றனர்.

    இதுகுறித்து ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் கூறுகையில்,

    இது முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் என்பதால் இதில் சிரமம் ஏற்படவில்லை. முன் ஏற்பாடுகளுடன் சென்று திருமணம் புரிந்து முன்மாதிரியாக செயல்பட்டோம் என்றார்.

    ×