என் மலர்
புதுச்சேரி
- புயல் சேதத்தை பார்வையிட்டு மதிப்பிட மத்திய குழுவை அனுப்புமாறு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார்.
- முதல் குழு புதுச்சேரி நகராட்சியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது.
புதுச்சேரி:
ஃபெஞ்ஜல் புயல் புதுச்சேரியில் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கன மழையால் 4 பேர் உயிரிழந்தனர்.
புயல் சேதத்தை பார்வையிட்டு மதிப்பிட மத்திய குழுவை அனுப்புமாறு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய குழுவினர் கடலூர், கள்ளகுறிச்சி, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். கடலுார் மாவட்டம், நெய்வேலியில் இரவு தங்கினர்.
அடுத்த கட்டமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) என, 2 நாட்கள் மத்திய இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில், மத்திய குழு புதுச்சேரியில் புயல், மழை சேதத்தை ஆய்வு செய்ய உள்ளது.
மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி முள்ளோடைக்கு வரும் மத்திய குழுவிற்கு புதுச்சேரி அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 2 பிரிவுகளாக பிரிந்து புதுச்சேரியில் ஆய்வு செய்கின்றனர்.
முதல் குழு புதுச்சேரி நகராட்சியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது. 2-வது குழு பாகூர் தாலுகா, முள்ளோடை, கொம்மன் தான்மேடு, பரிக்கல்பட்டு, பாகூர், இருளன் சந்தை, சோரியாங்குப்பம், குருவி நத்தம், மணமேடு, பனையடிக்குப்பம், பண்டசோழநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்க உள்ளது. இரவு ஓட்டல் அக்கார்டில் மத்திய குழு தங்குகிறது.
நாளை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மீண்டும் 2 பிரிவுகளாக பிரிந்து மத்திய குழு ஆய்வு செய்கிறது. முதல் குழு வில்லியனூர் தாலுகா பகுதிகளிலும், 2-வது குழு உழவர்கரை பகுதிகளிலும் ஆய்வு செய்கிறது. 11.30 மணியளவில் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசனை நடத்தும் குழுவினர் மதியம் 2 மணியளவில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர்.
- தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
- பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தீபத் திருவிழா திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு, நாளை முதல் வரும் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி, தனியார், அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 156 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை.
- பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ரங்கசாமி தனது வாகனத்தை விட்டு இறங்காமல் பார்வையிட்டார். காரை விட்டு ஏன் இறங்கவில்லை? உள்துறை அமைச்சர் வெளிநாடு சென்று விட்டார். முதலமைச்சர் கிராமப்புற பகுதிக்கு சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் செல்லவில்லை.
அமைச்சர்கள் யாரும் கிராமத்திற்கு செல்லவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் என்பது கண்துடைப்பு. இது வெறும் அறிவிப்பு மட்டும்தான். மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் பிரதமர் மீது பழி போடுவார். இதுதான் முதலமைச்சர் ரங்கசாமியின் வேலை.
ஒட்டுமொத்தமாக புதுவை அரசு இந்த புயலை எதிர்கொள்ள தவறிவிட்டது. நிவாரண பணிகள் திருப்திகரமாக இல்லை. இதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நிவாரண நிதியை கேட்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் முழு கணக்கெடுப்பை நடத்தி நிவாரணத்தை முறையாக வழங்க வேண்டும். புதுவையில் உட்கார்ந்து கொண்டு நிதி கேட்கக்கூடாது, டெல்லி சென்று கேட்க வேண்டும்.
அப்படி கேட்காமல், பிரதமர் நிதி தரவில்லை என ரங்கசாமி கூறுவார். பிரதமர் மோடி பணம் தரவில்லை என பழி போடுவார். இந்த பழி போடும் காலமெல்லாம் முடிந்து விட்டது. இந்த இரட்டை என்ஜின் ஆட்சி ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. எதுவும் நடக்கவில்லை.
உண்மையில் இந்த இரட்டை என்ஜின் ஆட்சி என்றால், உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு பள்ளியை 15 ஆண்டுகளாகியும் கட்ட முடியவில்லை.
- மக்களுக்காக என்றால் எந்த செயலையும் செய்து முடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
அரசு அதிகாரிகளுக்கான பயிற்சி ஒப்பந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
நிர்வாகம் விரைவாக இருக்க பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் தற்போது வளர்ச்சி கிடைத்துள்ளது. அதைதான் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். நாட்டின் வளர்ச்சி போல் புதுச்சேரி வளர்ச்சி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ஒரிடத்தில் முடியும் என்று சொல்லி மறு இடத்தில் வேறு கேள்வியை அரசு செயலர்கள் எழுப்பினால் எப்படி விரைவாக செய்ய முடியும்? ஒரு பள்ளியை 15 ஆண்டுகளாகியும் கட்ட முடியவில்லை. எப்படி முன்னேற்றம் கிடைக்கும்? கோப்புகள் திரும்பினால் முதலமைச்சர் நிலை எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க வேண்டும்.
மக்களுக்காக என்றால் எந்த செயலையும் செய்து முடிக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் அதுபோல் இல்லை. முதலமைச்சராகி 3½ ஆண்டுகளாகி விட்டது. சுற்றுலாவை மேம்படுத்த வளர்ச்சி திட்டத்தை 4 ஆண்டுகளாகியும் செய்ய முடியவில்லை.
நிர்வாக நிலையில் வெவ்வேறு எண்ணத்தில் கோப்புகள் செல்கிறது. ஒரு திட்டத்தை கொண்டு வர ஓராண்டு ஆகலாம் ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எதற்கு இத்தனை ஆண்டுகள்? எந்த சங்கடமும் இல்லாமல் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
அரசு பணிகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை தர முடிவு எடுத்தோம். காலிபணியிடங்களை நிரப்பினால் அரசு பணிகள் விரைவாக நடக்கும். அரசு முடிவு எடுத்து நிலையில் விரைவாக பணியிடங்களை நிரப்புவதில் என்ன சிரமம் என தெரியவில்லை.
பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப முடிகிறது. ஆனால், மின்துறையில் முடிய வில்லை. அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து விரைவாக நிரப்ப வேண்டும். செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். காலம் கடத்துவதுபோல் இருக்க கூடாது. காலம் கடத்தாமல் மக்களுக்கு சேவையாற்றினால்தான் வளர்ச்சியை கொண்டு வரமுடியும்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
- விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
- பாலம் சீரமைப்பு பணிகள் முடிந்தாலும் உடனடியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
ஃபெஞ்ஜல் புயல் தமிழகத்தை தாக்கியதால் அங்கு வரலாறு காணாத மழை பொழிந்தது.
வீடூர், சாத்தனூர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதில் உபரி நீர் திறக்கப்பட்டதில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின. அன்று மாலை கடலூர்-புதுவை சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் கடலூர்-புதுவை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடிந்ததால், மாலை 3 மணிக்கு பிறகு கடலூர்-புதுவை இடையே நேரடி போக்குவரத்து தொடங்கியது.
ஆனால் இரவு 10 மணிக்கு, தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தில் ஓடைப்பாலம் உள்வாங்கியது. இதனால், புதுவை- கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடலூர் சென்ற அனைத்து வானங்களையும், முருங்கப்பாக்கம் சந்திப்பு, கொம்பாக்கம், வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம் வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.
பாலம் உள்வாங்கியதால் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி, அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து நேற்று காலை உடைந்த பாலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.40 லட்சத்தில் உடனடியாக சீரமைக்கும் பணியை தொடங்கினர்.
பாலம் சீரமைக்கும் பணியினை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாலத்தின் முக்கியத்துவம், சேதத்திற்கான காரணம் குறித்து கவர்னரிடம் விளக்கினார்.
நேற்று மாலை வரை பணிகள் தொடர்ந்தது. பணிகள் நிறைவடையும் வரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அங்கேயே இருந்து பணிகளை பார்வையிட்டு, தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார். பாலம் சீரமைப்பு பணிகள் முடிந்தாலும் உடனடியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
கான்கிரீட் உறுதித்தன்மை அடைவதற்காக கால அவகாசம் தேவைப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) மதியம் முதல் கடலூர் சாலையில் போக்குவரத்தை தொடங்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில் இலகுரக வாகனங்களை இயக்கி பார்த்து பரிசோதனை செய்துவிட்டு, பின்னர் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.
- குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த 3 நாட்களில் மட்டும் 1600 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 1-ந் தேதி ஃபெஞ்ஜல் புயல், கனமழை காரணமாக நகரம், கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.
பலத்த காற்று வீசியதால் சாலையோரத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்தது. இதை தீயணைப்பு துறையினர், வருவாய், பொதுப்பணித்துறை ஊழியர்கள் பொக்லைன் மற்றும் மரம் வெட்டும் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றி சாலையோரம் குவித்தனர்.
மழை நின்றதால் மரங்கள், இதர குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குப்பை அள்ளும் ஒப்பந்த நிறுவனங்கள் கூடுதலாக வாகனங்களை வைத்து குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
புயலால் புதுவை நகரம், கிராமப்புற பகுதிகளில் 3 ஆயிரம் டன் குப்பைகள் சேர்ந்துள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் 1600 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
- சிறிய மணல் பரப்பில் மொத்த படகுகளையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
- வருவாய்த் துறை அதிகாரிகள் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
சேதராப்பட்டு:
புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் மற்றும் சோதனைக்குப்பம் மீனவ கிராமங்கள் உள்ளது.
நடுக்குப்பம் பகுதியில் சுமார் 120 மீன்பிடி விசைப்படகுகளும், சோதனைக்குப்பம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விசை படகுகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றத்தால் நடுக்குப்பம் மற்றும் சோதனைக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்ததால் மீனவர்களுடைய படகு, வலை மோட்டார் இயந்திரங்கள் பாதிப்படைந்தது.
இதற்கு தீர்வுகாண தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே இது போன்ற பாதிப்புகளிலிருந்து மீனவ கிராமத்தை காப்பாற்ற முடியும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு கடற்கரையோரத்தில் அரசு சார்பில் தற்காலிகமாக கருங்கற்கள் கொட்டப்பட்டது. இதனால் கரையில் இருந்து கடலுக்கு படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதி அடைந்த னர்.
சிறிய மணல் பரப்பில் மொத்த படகுகளையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடலிலிருந்து மீன் பிடித்து விட்டு மீனவ குப்பத்திற்கு திரும்பும் மீனவர்கள் காற்றின் விசையால் கடலில் கொட்டப்பட்ட கருங்கற்களில் படகு மோதி விபத்து ஏற்பட்டு நடுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கசாமி, முருகன், பூபாலன், மணிகண்டன் மற்றும் மதுரை ஆகிய 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதற்காக அரசு தரப்பில் நிதி உதவியும் வழங்கப்பட்டது. நடுகுப்பம் மற்றும் சோதனைக்குப்பம் மீனவப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் தடுக்கப்பட்டு கடல் மண் அரிப்பு தடுக்கப்படும் என்ற நோக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 2 மீனவ கிராம மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அமைச்சர் பொன்முடி, ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் அமைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை தூண்டில் வளைவு அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட ஃபெஞ்ஜல் புயலால் 2 மீனவ மக்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று நடுக்குப்பம் மற்றும் சோதனைக்குப்பம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தினால் புதுவையில் இருந்து சென்னை சென்ற வாகனங்களும் அதுபோல் சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்களும் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நின்றன.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- புயல் சேதத்தை பார்வையிட்டு மதிப்பிட மத்திய குழுவை அனுப்புமாறு மத்திய அரசை புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டது.
- அனைத்து துறைகளிலும் சேத விபரங்களை மதிப்பிட்டு அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
புதுச்சேரி:
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது புதுச்சேரியில் சூறைகாற்றுடன் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. கனமழை பொழிந்தது.
இதனால் புதுச்சேரியில் 50 ஆயிரம் வீடுகள், 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களில வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. 50 கி.மீ. மேல் சாலைகள் சேதமடைந்தது. மழை வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து தமிழக பகுதியில் பெய்த கனமழையை அடுத்து வீடூர், சாத்தனூர் அணைகள் திறக்கப்பட்டது. இதில் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் ஆற்றங்கரையை ஒட்டிய புதுச்சேரி கிராமங்கள், விளை நிலங்களில் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்பட்டது.
வெள்ள நிவாரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம், விவசாய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் என ரூ.210 கோடிக்கு புதுச்சேரி அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
புயல் சேதத்தை பார்வையிட்டு மதிப்பிட மத்திய குழுவை அனுப்புமாறு மத்திய அரசை புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டது. அதன் பேரில் வரும் 8 மற்றும் 9-ந்தேதி என 2 நாட்கள் டெல்லியில் இருந்து புயல் சேதத்தை ஆய்வு செய்ய மத்திய இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்திய குழு புதுவை வருகிறது.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பொதுப்பணி, வேளாண், உள்ளாட்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் சேத விவரங்களை சேகரித்து அறிக்கையாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து அனைத்து துறைகளிலும் சேத விபரங்களை மதிப்பிட்டு அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
- ஃபெஞ்சல்' புயல் காரணமாக புதுவையில் 48.4 செ.மீ., காரைக்காலில் 16.9 செ.மீ. மழை கொட்டியது.
- கடந்த நவம்பர் 27, 28, 29 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந்தேதி அன்று கனமழை பெய்தது. அன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 48.4 செ.மீ., காரைக்காலில் 16.9 செ.மீ. மழை கொட்டியது. தொடர்ந்து சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 2 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீரால் தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறான மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கத்தின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் வசித்த பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கடந்த நவம்பர் 27, 28, 29 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் புயல்-வெள்ள பாதிப்புகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நவம்பர் 27, 28, 29 தேதி விடுமுறையை ஈடுசெய்ய வரும் டிசம்பர் 7, 14, 21-ந்தேதி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது.
- புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.600 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சூறாவளி புயலின் போது ஏறத்தாழ 500 மரங்கள் மற்றும் 1,596 மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. மேலும் 2,15,750 ஏ.சி.எஸ்.ஆர் கண்டெக்டர்கள், 53 எண்ணிக்கையிலான ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகள் மற்றும் 52 பள்ளிகள்/கல்லூரிகள் கட்டிடங்கள் சேதமடைந்தன.
புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது. சுமார் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சுவிடுவது அவசியம் என்று கருதுவதால், இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது. இந்த நிர்வாகத்தின் அந்தந்தத் துறைகள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைத் துறை வாரியாக கீழ்க்கண்டவாறு தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பொருட்களும் சேதமடைந்தன.
- மறியலால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புயல் மழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் மழை நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் நிவாரணம் அறிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பொருட்கள் சேதமானவர்களுக்கும், மழையை வேடிக்கை பார்த்தவர்களுக்கும் ஒரே நிவாரணமா? என்ற கேள்வியை அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், பொதுமக்களும் எழுப்பி வருகின்றனர். உப்பனாறு வாய்க்காலில் அதிக நீர் வந்ததால் கரையோரம் இருந்த உருளையன்பேட்டை தொகுதி கடும் பாதிப்புக்கு ஆளானது. குறிப்பாக இளங்கோ நகர், சாரதி நகர், சாந்தி நகர் உட்பட பல பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பொருட்களும் சேதமடைந்தன.
இந்த பொருட்களை மினி லாரியில் கொண்டு வந்த நேரு எம்.எல்.ஏ., தொகுதி மக்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகளுடன், காமராஜர் சாலை நேரு வீதி சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். மறியலால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், எம்.எல்.ஏ, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
மறியலில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏ. கூறியதாவது:-
புதுவையில் மழை நீர் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். ரேசன் கார்டுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்தார். ஆனால் எங்கள் தொகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து பொருட்கள் பல நாசமாகி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளம் புகுந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தவேண்டும். இழப்புகளுக்கு தகுந்த நிவாரணம் தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
- இப்பணி உடனே நிறைவடைய சாத்தியமில்லாததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
தொடர் மழையால் சாத்தனுார் அணை நிரம்பியதாலும் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் அணையின் பாதுகாப்பை கருதி கடந்த 1-ந் தேதி நள்ளிரவு சாத்தனூர் அணை திறக்கப்பட்டது.
இதனால் கடலுார் தென்பெண்ணை யாற்றில் கடந்த 2-ந் தேதி தண்ணீர் பெருக்கெடுத்ததால், கடலுார் மற்றும் புதுச்சேரி மாநிலம் பாகூரை சுற்றியுள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின.
அன்று மாலை கடலுார்-புதுச்சேரி சாலையும் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
இதனால் வாகன ஓட் டிகள் கடலுார்-புதுச்சேரி இடையே கூடுதலாக 10 கி.மீ. பயணம் செய்தனர். நேற்று மதியம் கடலுார்-புதுச்சேரி சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடியத் தொடங்கியதால் 3 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை 3 மணிக்கு கடலூர்-புதுச்சேரி இடையே நேரடி போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் புதுவை-கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பாலம் உள்வாங்கியது. இதனால், புதுச்சேரி-கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் இப்பணி உடனே நிறைவடைய சாத்தியமில்லாததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாலம் உள்வாங்கியதையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றப்பட்டது.
கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் வாகனங்கள் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம், வில்லியனுார் வழியாக புதுச்சேரிக்கு வரவேண்டும். அதுபோல் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு செல்லும் வாகனங்கள் வில்லியனூர், அபிஷேக பாக்கம், தவளக்குப்பம் வழியாக கடலூர் செல்ல வேண்டும்.






