என் மலர்
தேர்தல் செய்திகள்
தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.சுந்தர்ராஜ் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “ஒட்டப்பிடாரம் தொகுதி வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்தார். இதன் காரணமாக அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதை சென்னை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு உறுதி செய்தது. இதையடுத்து ஒட்டப்பிடாரம் தொகுதி காலியிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகளும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் ஏற்கனவே காலியிடங்களாக இருந்தன.
இதற்கிடையே ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் சிக்கி தண்டனை பெற்றதால் அவர் பதவி இழந்து ஓசூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. எனவே தமிழக சட்டசபையில் 21 தொகுதி இடங்களில் காலியிடங்களாக இருந்தன. இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மற்ற 18 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
3 தொகுதி தேர்தல் நடத்தாததற்கு தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 3 தொகுதிகளிலும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தனர்.

அதுபோல ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தான் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அவரது வழக்கு நேற்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கை வாபஸ் பெறுவதாக” கிருஷ்ணசாமி மனு செய்தார்.
அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை அவர் தள்ளுபடி செய்தார்.
கோர்ட்டின் இந்த உத்தரவு நகலை உடனடியாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விட்டதால் அங்கு தேர்தலை எந்த தடையும் இல்லை. எனவே ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை வேறு தேதியில் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Ottapidaram #EC
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன வாகனம் வந்தது.

வாகனத்தில் இருந்தவர்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆவணத்தில் உள்ள எண்ணும், வேனின் பதிவு எண்ணும் வித்தியாசமாக இருந்தது.
இதைத்தொடர்ந்து வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வேனும், பணமும் திருமங்கலம் தாசில்தார் தனலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தார். #Parliamentelection #LSPolls
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது. #Parliamentelection #LSPolls
அமராவதி:
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மிக முக்கிய பொறுப்புகளில் தலைவராக இருப்பவர்களுக்கு பல்வகை திறமைகள் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியை பொருத்தவரை அது போன்ற திறமைகள் அவரிடம் இல்லை.
மக்கள் அவரிடம் மிக அதிகமாக எதிர் பார்த்தார்கள். அவர் குஜராத் மாடலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறினார். குஜராத்திலும் அவர் பெரிதாக எதுவும் சாதித்துவிடவில்லை. 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற மாதிரி குஜராத்தில் பொருளாதார அறிவுத்திறனை அவர் உருவாக்கவில்லை.
குஜராத்தை உற்று நோக்கினால் அடிப்படை திறன் உருவாக்காமல் இருந்ததை காண முடியும். அங்கு வர்த்தகத்தில் மட்டும்தான் மேன்மையாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் நான் தொழில் தொடங்குபவரை உருவாக்குகிறேன். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்றவற்றில் முதன்மை இடங்களில் குஜராத்தை சேர்ந்தவர்கள் வருவது இல்லை.
அதே நேரத்தில் ஒன்றுபட்ட ஆந்திராவில், அறிவுத்திறன் மிக்க இடமாக ஐதராபாத்தை மாற்றினேன். இன்று ஐதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் அறிவுத்திறன் மிக்க இடங்களாக உள்ளது.
பலரும் நம்புவதுபோல மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை. ஒரு தலைவருக்கு ஆளுமை தகுதி இருந்தால் சிறந்த அறிவுத்திறன் கொண்டவரை மேலும் முன்னேற செய்ய வேண்டும். ஆனால் மோடி அவ்வாறு செய்வதில்லை.
அதிகார வர்க்கங்கள், ஊடகங்கள், அரசியல், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைகளை அழிப்பவராக மோடி செயல்படுகிறார்.
இவ்வாறு தலைமை பண்புகளை அழித்தால் அது நாட்டுக்கே பேரழிவாகி விடும். என்னிடம் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்கள் பலரும் மிகுந்த வேதனையோடு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
அவர்கள் இந்த ஆட்சியில் கடுமையான மனஅழுத்தத்துடன் இருக்கிறார்கள். அவர்களை அவமதித்து இருக்கிறார்கள். மிரட்டி இருக்கிறார்கள்.

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை ஏவி விடுகிறார்கள். இதனால் நாங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இந்த துறைகளை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த யாருமே இவ்வளவு மோசமாக பயன்படுத்தியது இல்லை.
கடந்த காலத்தில் நான் காங்கிரசோடு கடுமையாக மோதல் போக்கில் ஈடுபட்டேன். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் இதுபோன்று எங்கள் மீது நடந்து கொண்டது இல்லை.
எங்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை பல முறை குறி வைத்து சோதனை நடத்தப்பட்டது. நாங்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டதை தவிர என்ன தவறு செய்தோம். இதற்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டுமா? எங்கள் ஆட்கள் எதையும் மறைத்து வைக்கவில்லை.
ஜெகன்மோகன் போன்றவர்கள் ஏராளமாக ஊழல் செய்து சொத்து சேர்த்து உள்ளனர். அவர்களது பாதுகாப்பு நடவடிக்கையில் தான் மத்திய அரசு செய்தது. பல ஆதாரங்களையும் நாங்கள் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
பிரதமர் மோடி தன்னை நாட்டின் காவலன் என்று கூறி கொண்டார் அவரிடம்தான் சாவி இருந்தது. ஆனால் திருடர்களும், ஊழல்வாதிகளும் பணத்தை சுருட்ட அனுமதித்து விட்டார்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்கள் போன்று அடிக்கடி நடந்துள்ளது. என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பயங்கரவாதிகள் ஒவ்வொரு முறை தாக்கும்போதும் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்று மோடி குற்றம்சாட்டி வந்தார். இப்போது மோடி ஆட்சியிலும் அது தான் நடந்துள்ளது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது மைனாரிட்டி ஆட்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுத்து பல்வேறு மாற்றங்களை உருவாக்கினார். அதேபோல வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோரும் மைனாரிட்டி உறுப்பினர்களை கொண்டுதான் ஆட்சியை 5 ஆண்டு நடத்தினார்கள்.
பிரதமர் மோடி தனிப்பெரும் மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். அவர் என்ன வளர்ச்சியை உருவாக்கி இருக்கிறார். ஏன் இதுபோன்ற புள்ளி விவரங்களை மறைக்கிறீர்கள்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu #PMModi
வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா (மதச்சார்பற்றது), சுயேச்சை சார்பில் தலா ஒரு மனு, சோசலிஸ்டு யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) சார்பில் 2 மனுக்கள் என மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தென்சென்னையில் சோசலிஸ்டு யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) சார்பில் 2 மனுக்கள், ஒரு சுயேச்சை என 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பெரம்பூர், திருவாரூரில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இத்தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். #LSPolls #SatyabrataSahoo


திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டவர்கள், ஏதேனும் வெளிநாட்டு குடியுரிமையை பெற்றவர்கள், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஏதேனும் ஒரு சட்டத்தால் தகுதியிழந்தவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 8-ன் கீழ் சில குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் போட்டியிட முடியாது.
இதே போல் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தகுதியிழந்தவர்கள், லஞ்சம் அல்லது அரசுக்கு எதிராக துரோகம் செய்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் (பிரிவு 9), வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் அரசுடன் ஒப்பந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தவறியவர்கள், வேறு ஏதேனும் குற்றங்களுக்காக 2 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தகுதி இல்லாதவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. #LSPolls #ElectionCommission

ஆந்திர மாநிலத்துக்கு 22 வேட்பாளர்கள், மேற்கு வங்காளத்துக்கு 11 பேர், தெலுங்கானாவுக்கு 8 பேர், ஒடிசாவுக்கு 6 பேர், அசாம் மாநிலத்துக்கு 5 பேர், உத்தரபிரதேசத்துக்கு 3 பேர் உள்பட மொத்தம் 56 வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முறித்துக் கொண்டது. அங்குள்ள ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெராம்பூர் தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா தாஸ்முன்ஷி ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
காக்கிநாடா தொகுதியில், முன்னாள் மத்திய மந்திரி பல்லம் ராஜு, பபட்லா (தனி) தொகுதியில் மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஜே.டி.சீலம் ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் மங்கள்டோய் தொகுதியில் மாநிலங்களவை எம்.பி. புவனேஸ்வர் கலிடா, ஒடிசா மாநிலம் கலஹண்டியில் முன்னாள் மத்திய மந்திரி பக்த சரண்தாஸ், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோருக்கும் ‘சீட்’ அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 137 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #LSPolls #Congress #AbhijitMukherjee
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. அமைத்திருக்கும் மெகா கூட்டணியும், அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கையாக அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளும், அ.தி.மு.க. கூட்டணி களமிறக்கியிருக்கும் தலைசிறந்த தகுதிபடைத்த வேட்பாளர்களின் அணிவகுப்பும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கூட்டணியே பிரமாண்ட வெற்றி பெறும் என்பதனை இப்போதே முன்கூட்டி சொல்லும் விதமாக மக்களிடம் எழுந்திருக்கும் ஏகோபித்த ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி வருவதை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

வரலாறு காணாத வகையில் வாகை கனி கொய்து வங்கத்து கடலோரம் துயில் கொண்டிருக்கும் நம் தங்கத்தாரகையாம் ஜெயலலிதா, அவரது வலப்புறத்தில் சந்தனப்பேழையில் சாய்ந்துறங்கும் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கங்களின் வெற்றித் தேரோட்டத்துக்கு வித்திட்ட அண்ணா ஆகியோரது புகழடி பொற்பாதங்களில் 40 தொகுதிகளின் வெற்றியை சமர்ப்பிப்போம் என்கிற குருதி கலந்த உறுதியை நம் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களும் உளமார எடுத்திடவேண்டும்.
40 பாராளுமன்ற தொகுதிகளின் வெற்றியையும், 18 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றியையும் ஒருசேர ஈட்டுவதன் மூலம் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆளும் என்கிற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும். இதற்காக இப்பொழுதே மடைதிறந்த வெள்ளமென அ.தி.மு.க. சிப்பாய்கள் படை புறப்படட்டும். மக்கள் திலகம், மகராசி அம்மா ஆகியோரது நல்லாசி நமக்கிருக்க நாற்பதும் நமதாகும். நாளை திருநாடும் நமக்கென ஆகும் என்பதை சொல்லி, வாகை கனி கொய்திட புறப்படும் எனது அருமை அ.தி.மு.க.வின் போர்ப்படை வீரர்களை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #EdappadiPalaniswami
கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நல்லாட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. அங்கிருந்து வெளியேற்றினர்.
பிற கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக பேசுவதை ஊக்குவிப்பதை அவர் நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #LSPolls #BJP #Kumaraswamy

வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது காட்பாடியில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ. 1 லட்சம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த மணிவண்ணன் (45) என்பது தெரியவந்தது.
சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர். #Parliamentelection #LSPolls






