என் மலர்
விழுப்புரம்
- பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
- அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.
அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் வாக்காளர்களை குறிவைத்து சவுமியா அன்புமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற பாமகவுக்கு வாக்களிக்குமாறு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் பாமக வெற்றிபெறும். ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட இது முக்கியமான தேர்தல் என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பல தேர்தலை சந்தித்துள்ளோம், மாற வேண்டியது நாம்தான் என ரவி பச்சைமுத்து தெரிவித்துள்ளார்.
- 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
- மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பு , மதுவிலக்கு அமல்படுத்த மறுப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனை அறிந்த தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.
பா.ம.க. கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது, உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து பா.ம..க வேட்பாளர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
அ.தி.மு.க.வின் நோக்கமும் பா.ம.க.வின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க.வை தீய சக்தி என்று கற்றுகொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. எனவே பா.ம.க.வின் மாம்பழ சின்னத்தில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத காரணங்களை காட்டி அரசு தட்டிகழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து முருகன் வாங்கி வந்த கள்ளச்சாராயம் என தெரியவந்துள்ளது. இதிலிருந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறியதால் முதல்-அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் பலர் கல்வி கற்றுள்ளார் என்று தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி கூறியிருப்பது கண்டிக்கதக்கது.
தி.மு.க. சமூகநீதிக்கு செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். சட்டநாதன் அறிக்கையை செயல்படுத்த மறுத்தவர் கருணாநிதி. இடைத்தேர்தலுக்கு பின் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்தால் மின் கட்டண உயர்வை அரசு கைவிடும்.
மாநில கல்வி கொள்கை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதால் இதை கைவிட வேண்டும் என பா.ம.க . தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வை திணித்த தி.மு.க.வும், காங்கிரசும்தான்.
அப்போது நீட் தேர்வை அறிமுகம் செய்த தி.மு.க. இன்று அதற்கு எதிராக காட்டிக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்-அமைச்சர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
கல்விகண் திறந்த காமராஜர் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் உள்ளது. இப்பல்கலை கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள் உள்ளது. பிற கல்லூரிகளிடமிருந்து தலா ரூ.50 லட்சம் கேட்டுள்ளது.
தமிழக அரசு இப்பல்கலைக்கு ரூ.500 கோடி கடன் வழங்க வேண்டும். தி.மு.க தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்ததால் தான் முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என தெரிகிறது. அப்படியே பிரச்சாரம் செய்தாலும் தி.மு.க தோல்வி அடையும். மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெரியார் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று மாம்பழம் சின்னத்தில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, இவர்களது மகள் சங்கமித்ரா ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி பெரியார் திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. அனைவரையும் வரவேற்று பேசுகிறார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன்யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பா.ம.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
- தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும்.
- திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து காணை காலனி பகுதியில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும். தமிழக மக்கள் தொகையில் 40 சதவீதம் இந்த இரு சமுதாயத்தினர்தான் உள்ளனர். இந்த இரு சமுதாயங்களும் ஒன்று சேர்ந்து விட்டால், வேறு எந்த கட்சிகளும் நமக்கு தேவையில்லை.
வன்னியருக்கு எதிரி தாழ்த்தப்பட்டோர் என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி வன்னியர் என்றும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் நம்மை முன்னேறவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்கள் தான் நம் முதல் எதிரி. திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.
நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. நியாயம் கேட்க வந்திரு க்கிறேன்.1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க.வில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது 1999-ல் தான்.
ஆனால், பா.ம.க.வில் 1998-ம் ஆண்டிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த தலித் ஏழுமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதுபோல, அம்பேத்கர் சிலையை தமிழகத்தில் அதிகளவில் திறந்தவர்பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தான். உங்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் எண்ணம்.
நமக்குள் சண்டை, பிரச்சினை எதற்கு?. நாம் ஒன்று சேர்ந்தால் இவர்களுக்கு வேலை இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்களே சிந்தித்துப்பாருங்கள். நாம் முன்னேற வேண்டும். நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது.
- தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கெடார் கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசு, பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது. அப்போது கல்வி மாநில உரிமையை பறிகொடுத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.தான். இதை மறந்துவிடுவது மக்களின் இயல்பு. நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. இதைத்தான் நாங்கள் செய்து கொண்டுள்ளோம்.
இன்றைக்கு கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கை விடுக்கின்றனர். எடுத்துக்கொண்டு போகும்போது என்ன செய்தீர்கள்? உங்களால் தடுக்க முடியவில்லை. பள்ளிக்கூடங்கள், பலரை உருவாக்கியுள்ளது. ஆனால் நல்ல ஒரு அரசியல்வாதியை உருவாக்க முடியவில்லை.
ஒரு மாநில கட்சி, ஒன்றிய அரசுடன் 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே கட்சி தி.மு.க.தான். அன்றெல்லாம் இவர்கள் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக என்ன போராட்டம் செய்தார்கள்?
தமிழில் வழக்காடு மொழிகள் வேண்டும் என பல போராட்டங்களை தி.மு.க.வினர் நடத்தினார்கள். இவர்கள் நினைத்திருந்தால் எனது தாய்மொழியில் வழக்காடும் மொழி வேண்டும் என கேட்டிருந்தால், அதை பெற்றிருக்கலாம். ஆனால் இவர்கள் அதனை செய்யவில்லை. எந்த இடத்திலுமே இவர்கள் சரியாக நின்றது கிடையாது.
தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும் குறைந்துள்ளது. இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பை பற்றி சிந்திக்காத அரசு, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகிற மதுவை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைசெய்ய என்ன வழி என சிந்தித்து கொண்டுள்ளது. நாடு எதை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம்.
- தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதியில் சிந்தாமணி, உலகலாம் பூண்டி ஆகிய இடங்களில், பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 45 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்து கொண்டிருக்கிறேன். 10 முறை சிறைச்சாலைகளுக்கு சென்று வந்துள்ளேன்.
பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம். நாங்கள் படியுங்கள் என்று கூறினால் ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு குடியுங்கள் என்று கூறுகிறார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கூறினால் மத்திய அரசு தான் செய்யனும் என்கிறார்கள் திமுகவினர். பெண்கள் விழிப்பாக உள்ளனர். நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும். கொள்ளையர்களை விரட்ட முடியும்.
தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பதால் வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரிந்துவிடும் நான் வன்னியர்களுக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து சமுதாயத்திற்கும் தான் நான் இட ஒதுக்கீடு கேட்டு போராடி சிறை சென்று வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர்.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக அமைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் பணிக் குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 25 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சட்டசபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அனைவரும் விக்கிரவாண்டியில் முகாமிட்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் 2 வீதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பிரிக்கப்பட்டு அங்குள்ள வாக்காளர்களின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர்.
200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டீ, காபி கொடுத்து உபசரிக்கின்றனர். வடை, பஜ்ஜி உள்ளிட்டவைகளும் இலவசமாக கிடைக்கிறது.

காலை, மாலையில் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து செல்லுங்கள், உங்கள் பகுதி குறைகளை சொன்னால் நிறைவேற்றி தருகிறோம் என்று கூறுகின்றனர். இதனால் தி.மு.க. தேர்தல் அலுவலகங்களில் எப்போதும் கூட்டம் 'களை' கட்டுகிறது.
பா.ம.க.வை பொறுத்தவரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார பலமாக ஒவ்வொரு பகுதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.வை கடுமையாக சாடுகிறார்.
மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்பதை கண்காணித்து அன்புமணி ராமதாசுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.
அதன் மூலம் பிரசார வியூகம் மாற்றப்படுகிறது. மதுவின் தீமைகளை எடுத்துக் கூறி பெண்களின் வாக்குகளை மொத்தமாக பெற்றிட டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சவுமியா ஆகியோரும் தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். பா.ம.க. எங்கெல்லாம் எழுச்சியாக உள்ளதோ அங்கு கூடுதலாக தி.மு.க. வினர் வரவழைக்கப்பட்டு களப் பணியாற்றுகின்றனர்.
மொத்தத்தில் இந்த தேர்தலில் சாதனைகளை சொல்லி தி.மு.க.வினர் ஓட்டு கேட்கும் நிலையில் வேதனைகளை சொல்லி பா.ம.க. வினர் ஆவேசமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு செல்லும் என்பதை பொறுத்தே வெற்றி அமையும் என தெரிகிறது.
- அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
- தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அக்கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை
இதனால் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினரின் வாக்குகளை சேகரிக்க பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல தே.மு.தி.க. பிரமுகர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் பா.ம.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ், பேனர்களை பா.ம.க.வினர் எடுத்து செல்கின்றனர். மேலும், தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம். இதனை நிறைவேற்ற மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார கூட்டங்களில் பேசி அ.தி.மு.க.வினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
- பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
- பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்
சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
- மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெற்று பெறுவோம். பா.ம.க. வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும்.
பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தடுப்பனை கட்டுவோம், கட்டுவோம் என்பார்கள். நாங்கள் அதனை தடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டியில் வீடு வாடகை எடுத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
- சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பா.ம.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவாவும், பா.ம.க. சார்பில் சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஒட்டு மொத்த தமிழக அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அது போல் பா.ம.க வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கிராமம் கிராமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டியில் வீடு வாடகை எடுத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கடையம், கருவாட்சி, அத்தியூர் திருக்கை, கெடார் உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். கடையம் ஊராட்சியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது இந்த பிரசாரத்தில் பெண்கள் கலந்து கொள்ளாமல் இருக்க தி.மு.க.,வினர் பணம் கொடுத்து அடைத்து வைத்துள்ளதாக பா.ம.க.,வினர் குற்றம் சாட்டினர்.
இதற்கு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து பா.ம.க.,வினர் கடையம் மைதானம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம். எல்.ஏ., அருள் மற்றும் ஏராளமான பா.ம.க.வினர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது பெண்களை போகவிடாமல் தடுக்கும் விதமாக பணம் கொடுத்து அவர்களை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், இதற்கு துணை போகும் போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் அங்கு திடீர் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பா.ம.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது.
- பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை.
விழுப்புரம்:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.
இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






