என் மலர்
விழுப்புரம்
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவேண்டும்.
- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த கணக்கெடுப்புக்கும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
விழுப்புரம்:
பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட ஆசூர்கிராமத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வீதி வீதியாக நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவேண்டும். ஆளும்கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்கள், அவரை சார்ந்தவர்கள் இங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு எப்படி பணம் கொடுக்கலாம், எவ்வாறு வாக்குகளை பெறலாம் என திட்டமிட்டுள்ளனர்.
சட்டசபையில் முதலமைச்சரும், அமைச்சர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தமாக பல பொய்களை பேசியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
இங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நீதிமன்றம் தடை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் சொல்கிறார். ஒவ்வொரு சமுதாயமும் என்னென்ன நிலைமையில் இருக்கிறது, எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது, அவர்களுக்கான இடஒதுக்கீடு பயன்படுகிறதா என்று மாநில அரசு சர்வே எடுத்தால்தான் தெரியும்.
இதைக்கூட நடத்த மாட்டோம் என்று முதலமைச்சர் சொல்வது மோசமான நிர்வாகமாக பார்க்கிறேன். ஆண்டுதோறும் பறவைகளை கணக்கெடுக்கிறீர்கள், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கணக்கெடுக்கப்படுகிறது. ஏன் அரசு பஸ்கள் எவ்வளவு இயக்குவதற்கு தகுதியானது என கணக்கெடுக்கிறீர்கள், மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தகுதியான மாணவர்களை கணக்கெடுப்பு செய்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டுகிறார்கள். சமூகநீதிக்காகசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசு தயக்கம், காட்டுவது ஏன்? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த கணக்கெடுப்புக்கும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை, நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் வன்னியர்களுக்கு மட்டும் கொடுக்க மறுப்பது ஏன்? உங்களுக்கு அதிகாரம் இருந்தும் இல்லை, இல்லை என்று பொய் சொல்கிறீர்கள். இது இடைத்தேர்தல் பிரச்சனை கிடையாது.சமூகநீதிப் பிரச்சனை.
விரைவில் அனைத்து சமுதாயத்தினரையும் திரட்டிபோராட்டம் நடத்துவோம். கருணாநிதி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இதற்கு எப்போதோ கையெழுத்து போட்டிருப்பார். ஏனெனில் அவருக்கு சமூகநீதி உணர்வு உண்டு. வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு பிரச்சனை, சமூகநீதி பிரச்சனை தொடர்பாக நான் தமிழக அமைச்சர்களுடன் விவாதம் நடத்த தயார். சட்டசபையில் சபாநாயகர் யாரையும் பேச விடுவதில்லை. அமைச்சர் பேசக்கூடியதை அவரே பேசி விடுகிறார். ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைய இருப்பதை பா.ம.க. வரவேற்கிறது. அப்போதுதான் அப்பகுதி வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர்.
- மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சி சமரசம் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித அரசியல் பின் புலமும் இல்லாமல் போராடி வருகிறது. நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர். தேர்தல் களத்தை வைத்து தெளிவு பெற வேண்டும். இந்தியம் என்பது இந்தியை திணிக்கும், திராவிடம் அதை ஆதரிக்கும். அதனால் நாம் தமிழர் தமிழ் தேசியம் பேசுகிறது.
தற்போது எந்த இடத்திலும் தமிழ் இல்லை. திராவிடம் தமிழர்களை பிரிக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டால் திராவிடம் இருக்காது. மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை. இதை கேட்கும் தைரியம் திராவிடத்துக்கு இருக்கிறதா என்பதை மக்கள் அறிய வேண்டும். தமிழ் தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் பல்வேறு கருத்தியல் முரண்பாடு உள்ளது. தமிழ்மொழி, பாராளுமன்ற கட்டிடத்தில் இல்லை. அது குறித்தும் தி.மு.க. பேசவில்லை. திராவிடம், தேர்தலின் போது பணத்தை முன்நிறுத்தும். ஆனால் தமிழ் தேசியம் மானத்தையும், தன்மானத்தையும் முன்னிறுத்தும்.
சமூகநீதி குறித்து பேசும் தி.மு.க. மாநில உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து விட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடபங்கீடு தான் கேட்கிறோம். இதை மாநில அரசு செய்யலாம் என உரிமை உள்ளபோது, மத்திய அரசிடம் இந்த உரிமையை திராவிடம் அடமானம் வைக்கிறது. அரசியல் மாற்றம் இலவசங்களை அளித்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ள தி.மு.க.வுக்கு முடிவு கட்ட வேண்டும்.
நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. ஆனால் இத்தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முன்னோட்டமாக அமையும். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ மக்கள், இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.
- முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனையை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போ அவர் கூறியதாவது:-
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசு, மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். வன்னியர்களின் வாக்குகளை வாங்கிய தி.மு.க. இட ஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் பெறுவதை தி.மு.க. விரும்பவில்லை. இதற்கு தி.மு.க. சொல்லும் காரணம் சரியானது அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளி விவரங்களின் மூலம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தி.மு.க. கூறியதை பா.ம.க., வன்னியர் சங்கம் ஏற்காது. இதற்காக நான் மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளேன். தற்போது வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இப்படி ஒரு பொய்யான தகவலை அவர் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படாமல் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ( வன்னியர்) வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனையை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சி.பி. ஐ. விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். இது குறித்து பா.ம.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் தி.மு.க. தான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972-ம் ஆண்டு அறிமுகம் செய்தது தி.மு.க.தான் காரணம். எனவே முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும். நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறைவு. குவிண்டால் ஒன்றுக்கு ரூ 800 உயர்த்தி தரவேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது இரு மாநில உறவுவை கெடுக்கிறது. 22 அணைகள் கட்டியபின்பு இனி அணை கட்டினால் பாலாறு பாலைவனமாகும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சட்டப்பேரவை 100 நாட்கள் நடத்தவேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை அடுத்தகூட்டத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகர் கூறியிருப்பதாவது:-

வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.
இன்று ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர் அறிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது.
- கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
- அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் தொண்டர்களுடன் சென்று வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் நேற்று தி.மு.க.வினர் நூதனப் பிரசாரம் மேற்கொண்டனர். இதில் தி.மு.க. பேச்சாளர் சேலம் கோவிந்தன் அகத்தியர் வேடம் அணிந்து அரிச்சுவடி, கமண்டலத்துடன், காட்சி அளித்து விக்கிரவாண்டியில் வீதி, வீதியாக சென்று பாட்டுப்பாடினார். அகத்தியர் வாக்கு பொய்க்காது, பலிக்கும் எனக்கூறிய இவர், முதலமைச்சரின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.
நூதன முறையில் அகத்தியர் வேடமணிந்து பிரசாரம் செய்வதை அப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் வியப்போடு பார்த்தனர்.
- தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது.
- பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம்தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக 56 வேட்பாளர்கள், 64 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனையின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாளாகும். எனவே வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெற முன்வராத நிலையில் இன்று மாலை 3 மணிக்குள் ஒன்றிரண்டு பேர் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என தெரிகிறது.
அதன்பிறகு தேர்தல் களத்தில் போட்டியிடக் கூடியவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- அ.தி.மு.க. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்குஒரே எதிரி தி.மு.க.தான்.
- எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும் விக்கிரவாண்டி மக்கள், நியாயத்தின் பக்கம் இருப்பார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து ராதாபுரத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர்பேசியதாவது:-
நமக்கு சமூகநீதி கிடைக்க இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. பா.ம.க. வெற்றி பெற்றால் பின்தங்கிய சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம் முன்னேறும், நமக்கு சமூகநீதி கிடைக்கும், அடுத்த மாதமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 10.5 சதவீத இடஒதுக்கீடும் கிடைக்கும், இது உறுதி. தமிழ்நாட்டின் வாழ்க்கை பிரச்சனை விக்கிரவாண்டி தொகுதி மக்களின் கையில் உள்ளது.
மேடைக்கு மேடை நாங்கள்தான் சமூகநீதிக்கு சொந்தக்காரர்கள் என்று தி.மு.க.வினர் பேசுகின்றனர். ஆனால் சமூகநீதிக்கும், இன்றைய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2019 இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம் என்றார்.
அந்த வாக்குறுதி என்னவாயிற்று? மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுக்கமுடியும் என்கிறார். அப்படியென்றால் எதற்கு அரசாணை பிறப்பித்தீர்கள்?, உச்சநீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்தீர்கள்? தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்க எந்ததடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லி 2 ஆண்டுகளாகிறது. ஆனால் நம்மை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. எங்களிடம் தரவுகள் இல்லை என்பதால் கொடுக்க முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் எங்களிடம் தரவுகள் இருக்கிறது, 20 சதவீத விழுக்காட்டில் 10.5 சதவீதத்துக்கு மேல் வன்னியர்கள் இடம்பெறுகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறுகிறார். இது என்ன மோசடி, யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?
கள்ளக்குறிச்சியில் நடந்த சாராயபலிகள் சம்பவம் வெட்கக்கேடானது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் சாராயம் குடித்து இறந்தனர். அதன் பிறகும் இந்த அரசு, பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஆளும்கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் தான் காரணம். அங்கிருக்கிற 2 எம்.எல்.ஏ.க்கள்தான் காரணம் என பள்ளி குழந்தைகள் கூட சொல்கிறார்கள். இவர்கள் நம்மீது வழக்கு போடுகிறார்கள், நாங்கள் சந்திக்க தயாராகத்தான் இருக்கிறோம், எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது, தேவைப்பட்டால் ஒவ்வொன்றாகவெளியிடுவோம்.
58 உயிர்கள் இறந்த பிறகுதான் கைது நடவடிக்கை, சாராய ஊறல் அழிப்பு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம். சி.பி.ஐ. விசாரணை நடந்தால் தான் கடந்த 30 ஆண்டுகளாக யார், யார் சாராயம் விற்றார்கள், யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்ற முழு விவரமும் தெரியும்.
இந்த நேரத்தில் அ.தி.மு.க. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்குஒரே எதிரி தி.மு.க.தான். அதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். உங்களுடைய எதிரி, மக்களின் எதிரி, விவசாயிகளின் எதிரி, முக்கியமாக பெண்களின் எதிரி தி.மு.க., இதையெல்லாம் அனைவரும் சிந்தியுங்கள். தி.மு.க.விடம் பணம் மட்டும்தான் இருக்கிறது.
நம்மிடம் மக்கள் சக்தி, நியாயம் இருக்கிறது. எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும் விக்கிரவாண்டி மக்கள், நியாயத்தின் பக்கம் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதனை தொடர்ந்து தி.மு.க.வும், பா.ம.க.வும் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அபிநயாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை மேற்கொள்ளகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி என சீமான் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்.
- வேட்புமனு வாபஸ் பெற நாளைமறுதினம் கடைசி நாளாகும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. 21-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதில் அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஸ்ரீமதி தாயார் உள்ளிட்ட பலர் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மொத்தமாக 54 பேர் தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனு மீதான பரிசீலனை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீமதி தாயார் உள்பட 35 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் சார்பில் மனு தாக்கலில் குறைபாடு உள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் வேண்டுமென்றே தங்களது வேட்புமனுக்கள் நிராரிக்கப்பட்டது எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
விக்கிரவாண்டியில் ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும். நாளை மறுநாள் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளியில மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளியில் இருந்த பொருட்களும் சூறையாடப்பட்டது.
இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து அவரது தாய் செல்வி சின்னசேலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
- மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி 21-ந்தேதியுடன் முடிவடைந்தது.
இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, ஆகியோர் உட்பட 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக ரங்கநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளர் கலைச்செல்வி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபாவுக்கு மாற்று வேட்பாளராக முகமது இலியாஸ் ஆகிய 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக சதீஷ், விஜயா, அரசன், இசக்கிமுத்து உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 2 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2 மனுக்களும், தாக்கம் கட்சி வேட்பாளர் முத்தையா 2 மனுக்களும், அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த சரசு 2 மனுக்களும், தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபா 2 மனுக்களும், அகிம்ஷா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ் 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
- எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
- இன்று காலை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்:
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து 60 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரத்தில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார்.
விக்கிரவாண்டி:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது40), சுப்பிரமணி (60) ஆகியோர் ஏற்கனவே தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரவின் (21), ஜெகதீஸ்வரன் (24) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கராபுரம் அருகே உள்ள ஆரியரில் நடந்த ஒரு விசேஷத்திற்கு கலந்து கொள்ள சென்றுள்ளனர் .
அப்போது தேவபாண்டலத்தில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். பின்னர்சொந்த ஊருக்கு வந்து விட்டனர். அன்றில் இருந்து வாந்தி, மயக்கத்தில் இருவரும் இருந்த நிலையில் நேற்று அதிகாலை கண்எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனே முண்டியம்பாக்கம் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
தேசிய ஆதி திராவிடர் நல ஆணையர் ரவி வர்மன் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்தார். சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை செய்தார். அப்போது விழுப்புரம் ஆர்டிஓ., ஷாகுல் அமீது , கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கூறும்போது, `நாங்கள் நண்பர்களுடன் உறவினரின் விசேஷத்திற்காக சங்கராபுரம் அருகே உள்ள அரியூர் சென்று விட்டு அங்கு தேவ மண்டலம் என்ற இடத்தில் சாராயம் வாங்கி குடித்தோம்.
பின்னர் ஊருக்கு வந்தவுடன் அன்று இரவில் இருந்தே வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம் என கூறினார்.






