என் மலர்tooltip icon

    வேலூர்

    குடிநீர் பிரச்சனையை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
    வேலூர்:

    குடிநீர் பிரச்சனையை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், காத்தவராயன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்று குடிநீர் பிரச்சனையை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    இதேபோல் ராணிப்பேட்டை நகராட்சி முன்பு குடிநீர் பிரச்சனையை கண்டித்து நகர பொருப்பாளர் பூங்காவனம் தலைமையில் திமு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் அப்துல்லா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், ஆதிதிரவிட நல துணை அமைப்பாளர் டிஸ்கோ கதிர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் எழில்வாணன், நகர துணை செயலாளர்கள் ஏர்டெல் குமார், சங்கர், தி.மு.க. பிரமுகர் ஜெயசங்கீதா, அசேன், மாவட்ட பிரதி நிதிகள் கிரு‌ஷணன், போலீஸ் பிரகாசம், முத்தழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அதே போல் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட ஆதிதிராவிட நல அமைப்பாளர் சக்திவேல் குமார். ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர்.

    திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ. வேலு எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால், கழக சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் திருவேங்கடம், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட துணை செயலாளர் மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், எம்.எல்.ஏக்கள் கிரி, சேகரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் சுந்தர பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் பாரதி ராமஜெயம் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் எம்.பி.ஏ. பட்டதாரி பெண் தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.

    வேலூர்:

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் எம்.பி.ஏ. பட்டதாரி பெண் தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். அவர் எஸ்.பி.யிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது பெயர் சரண்யா (வயது 23). எம்.பி.ஏ.பட்டதாரி. நான் திருப்பத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுதம் (25). என்பவரை காதலித்தேன். எனது காதல் வீட்டிற்கு தெரியவந்தது. எனது பெற்றோர்கள் காதலை ஏற்கவில்லை.

    இதனால் கடந்த வருடம் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். பின்னர் திருமணத்தை பதிவு செய்து கொண்டு எனது பெற்றோர் வீட்டில் வசித்தேன்.

    இந்நிலையில் எனது பெற்றோர் எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். எனவே நான் வீட்டைவிட்டு வெளியேறி எனது காதல் கணவர் கவுதம் வீட்டிற்கு சென்று விட்டேன்.

    தற்போது எனது பெற்றோர்கள் மூலம் எனக்கும், எனது காதல் கணவர் மற்றும், அவரது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

    ஆம்பூர் அருகே மது போதையில் விவசாயியை தாக்கிய கும்பல் அவரது வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள கதவாளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாட்டை சாரதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் திருவிழா வெகு விமர்சியாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. திருவிழாவிற்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அம்மனை தரிசிக்க வருகை தந்தனர்.

    கோவில் அருகில் கோவிந்தசாமி (64) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி சகுந்தலாவுடன் வசித்து வந்தார். தங்கள் நிலத்தில் கரும்பு, வாழை பயிரிட்டு பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் கோவில் விழாவிற்கு வந்த ஒரு கும்பல் கோவிந்தசாமி வாழை தோட்டத்தில் உட்கார்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட கோவிந்த ராஜ், அவரது மனைவி சகுந்தலாவும் அவர்களை வெளியேறுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இருவரையும் தாக்கினர். மேலும் வீட்டை சூறையாடியும், விவசாய நிலத்தில் இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூரில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரசாந்த் (வயது 21). அரசு காண்ட்ராக்ட் மூலம் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று அதிகாலை திருப்பத்தூர் பஸ்நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் இறந்தவரின் உறவினர்கள் சாலையில் சேர் போட்டு உட்கார்ந்து இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பிரசாந்த் உட்கார்ந்து இருந்தவர்கள் மீது பைக்கில் மோதியதாக கூறப்படுகிறது.

    இதனால் அங்கிருந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்களில் 7 பேர் கொண்ட கும்பல் பிரசாந்த்தை சரமாரியாக தாக்கினர். இதில் பிரசாந்த் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பிரசாந்தை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.


    பிரசாந்தின் பிணம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை மாவட்ட தலைவர் சுபாஷ்சந்திர போஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

    திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி தலைமையில் ஆஸ்பத்திரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    வேலூர்:

    வேலூரில் பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியனுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரப்பன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று மண்டிதெரு, லாங்கு பஜார், ரொட்டிக்கார தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரொட்டிக்கார தெருவில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடையில் 1 டன் பிளாஸ்டிக் கொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் அதிகாரிகள் கூறுகையில்:- வேலூரில் தொடர்ந்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.
    வாலாஜாவில் 4வயது சிறுவனை கொன்று பாலாற்றில் புதைத்தது ஏன்? என்பது குறித்து கைதான தாயின் 2வது கணவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவ்யா (வயது 25). இவர்களுக்கு தருண் (4) என்ற குழந்தை இருந்தது.

    கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் காவ்யா கணவரை பிரிந்து குழந்தையுடன் ராணிப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    காவ்யா ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்போது ராணிப்பேட்டை நகராட்சி குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

    2 ஆண்டுகள் தீவிரமாக காதலித்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். குழந்தையுடன் காவ்யா காதல் கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    முதல் கணவர் ராமச்சந்திரன் குழந்தையை தன்னிடம் தரும்படி காவ்யாவிடம் அடிக்கடி கேட்டு வந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. குழந்தையால் தான் பிரச்சனை வருகிறது. மேலும் குழந்தை தங்களுக்கும் இடையூறாக இருக்கிறது. இதனால் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொல்ல காவ்யாவும், தியாகராஜனும் முடிவு செய்தனர்.

    13-ந்தேதி மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தருணை காவ்யா, தியாகராஜன் இருவரும் தூக்கி வந்தனர். வீட்டுக்குள் சில்வர் அண்டாவில் உள்ள தண்ணீருக்குள் குழந்தையை மூழ்கடித்தனர். மூச்சு திணறிய குழந்தை துடிதுடித்து இறந்தது.

    இதனையடுத்து பிணத்தை அரிசி மூட்டையில் கட்டி வைத்தனர். அன்று இரவு 2 பேரும் மூட்டையில் கட்டப்பட்ட குழந்தையை பைக்கில் எடுத்து சென்றனர்.

    ஆற்காடு டெல்லிகேட் அருகே பாலாற்றில் பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்தனர். பின்னர் இருவரும் எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டனர்.

    காவ்யாவின் தாய் குழந்தையை பற்றி கேட்டபோது குழந்தை கொல்லப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக காவ்யாவை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தியாகராஜனை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் தியாகராஜனிடம் நடத்திய விசாரணையில் கூறியிருப்பதாவது:- காவ்யாவுக்கும் எனக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. காவ்யாவுக்கு தருண் என்ற மகன் இருந்தான். முதல் கணவர், காவ்யாவிடம் வந்து நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போ. என் மகனை என்னிடம் கொடுத்து விடும்படி அடிக்கடி கேட்டு வந்தார்.

    ஆனால் காவ்யா, மகனை அவருடன் அனுப்பாமல் வைத்திருந்தார். இதனால் எனக்கும், காவ்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வேறு ஒருவருக்கு பிறந்த மகனை என்னால் வளர்க்க முடியாது என காவ்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். தருணால் தான் நமக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தருணை கொன்று விடுவோம் என்று 2 பேரும் முடிவு செய்தோம்.

    சம்பவத்தன்று அவனை தண்ணீரில் அமுக்கி கொலை செய்து பிணத்தை பாலாற்றில் புதைத்தோம் என வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    ராணிப்பேட்டை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள பெல் நிறுவனம் நுழைவு வாயில் முன்பு பொதுசெயலாளர் பாண்டியன் தலைமையில் பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஆண்டு தோறும் வழங்கும் மே மாத ஊக்க தொகையை கால தாமதமின்றி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஞானசேகர், கந்தன், செந்தில்குமார், நந்தகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர்.
    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள மிட்டூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்- ஆலங்காயம் செல்லும் சாலையில் இன்று காலை மறியல் செய்தனர். இது குறித்து தகவலறிந்த குரிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. எனவே நாங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம் ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாலாஜாவில் 2-வது கணவருடன் சேர்ந்து பெற்ற குழந்தையை தாய் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவ்யா (வயது 25). இந்த தம்பதிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தருண்(4) குழந்தை இருந்தது.

    மகிழ்ச்சியாக வாழ்ந்த கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காவ்யா கணவரை பிரிந்து குழந்தையுடன் ராணிப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    2017-ம் ஆண்டு காவ்யா ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார். அப்போது ராணிப்பேட்டை நகராட்சி குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

    2 ஆண்டுகள் தீவிரமாக காதலித்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். குழந்தையுடன் காவ்யா காதல் கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் குழந்தை அவர்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்தனர். குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொல்ல முடிவு செய்தனர். கடந்த 10-ந்தேதி வீட்டை காலி செய்து விட்டு வாலாஜா பெல்லியப்பா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

    13-ந்தேதி மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தருணை காவ்யா, தியாகராஜன் இருவரும் தூக்கி வந்தனர். வீட்டுக்குள் சில்வர் அண்டாவில் உள்ள தண்ணீருக்குள் குழந்தையை மூழ்கடித்தனர். மூச்சு திணறிய குழந்தை துடிதுடித்து இறந்தது.

    இதனையடுத்து குழந்தையை அரிசி மூட்டையில் கட்டி வைத்தனர். அன்று இரவு தியாகராஜன் மூட்டையில் கட்டப்பட்ட குழந்தையை பைக்கில் எடுத்து சென்று ஆற்காடு டெல்லிகேட் அருகே பாலாற்றுக்கு சென்று பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்தார். பின்னர் வீடு திரும்பினார். கணவன்- மனைவி இருவரும் எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டனர்.

    இந்த நிலையில் காவ்யாவின் தாய் நேற்று வந்தார். அவர் குழந்தை பற்றி காவ்யாவிடம் கேட்டார்.

    அவர் மழுப்பலாக பதில் கூறினார். இருந்தாலும் அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் குழந்தையை கொன்று புதைத்தது பற்றி கூறினார்.

    இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அதியமானிடம் காவ்யா சரணடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஆகியோர் காவ்யாவை கைது செய்தனர்.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த தியாகராஜன் தலைமறைவாகி விட்டார். போலீஸ் விசாரணையில் அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் பாலாற்றில் புதைக்கப்பட்டுள்ள குழந்தை உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    கடந்த மாதம் ஆற்காட்டில் கணவர், குழந்தையை இளம்பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்தார். அதேபோல் மீண்டும் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஜோலார்பேட்டை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினிவேனில் சாராயம் கடத்திய 3 பேரை கைது செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    காஞ்சிபுரத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு சாராயம் கடத்தி வருவதாக திருப்பத்தூர் கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் போலீசார் தாமலேரி முத்தூர் பகுதியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 கேன்களில் 1500 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    வேனில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் அசூர் (வயது 34), ஜோலார்பேட்டை பெரிய மூக்கனூரை சேர்ந்த ரமேஷ்(43), மகி(41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயத்துடன் வேனை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அருகே தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமாகின.

    வாலாஜா:

    சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் நசீன்வுல்லாஅசேன் (வயது 50). ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூரில் ஷூ கம்பெனி நடத்தி வருகிறார். அதில் 50-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ஷூ கம்பெனி ஸ்டோர் ரூமில் திடீரென தீப்பிடித்து எரிந்து புகைவெளியேறியது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர். ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகின.

    இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூரில் நேற்று 108.9 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இது அக்னிக்கு பிறகு வெயிலின் அதிகபட்ச பதிவாகும். கடுமையான வெயிலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.


    வேலூர்:

    அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. அக்னி முடிந்தாலும் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருகிறது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு தொடர்ந்து 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. அதிகபட்சமாக 112.5 டிகிரி சுட்டெரித்தது.

    அக்னி முடிந்து விட்டது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்த பொதுமக்களை அக்னிக்கு பிறகும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    நேற்று வேலூரில் 108.9 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இது அக்னிக்கு பிறகு வெயிலின் அதிகபட்ச பதிவாகும். கடுமையான வெயிலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    நேற்று கொளுத்திய வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடியது. குளிர்பான கடைகளை தேடி மக்கள் படையெடுத்தனர்.

    இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்தது. இரவிலும் அனல் தெறிந்தது. மின் விசிறிகளும் அனல்காற்றை கக்கியதால் மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். கடுமையான அனல் வெப்ப அலையால் குழந்தைகள், முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

    நேற்று திருத்தணியில் 108 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 107 டிகிரி, மதுரை விமான நிலையம், திருச்சி ஆகிய இடங்களில் 105 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, கடலூர், புதுச்சேரியில் 103 டிகிரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரி, தூத்துக்குடியில் 101 டிகிரி, நாமக்கல், பரங்கிப்பேட்டை, சேலம், காரைக்கால் ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரித்துள்ளது.

    இன்றும் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    “வாயு” புயல் சில நாட்களில் வலுவிழக்கும். பின்னர் இயல்பு நிலை திரும்ப சுமார் 4 நாட்கள் ஆகும். அதன் பிறகே தென்மேற்கு பருவக் காற்று வீசத் தொடங்கி தமிழகத்துக்கு மழை கிடைக்கும்.

    மழை வந்தால்தான் தமிழகத்தில் வெப்பம் தணிந்து வெயில் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ஏற்கனவே குடிநீர் பிரச்சினையில் மக்கள் திண்டாடி இருக்கும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் மக்கள் வருண பகவானை எதிர்நோக்கி உள்ளனர்.
    ×