என் மலர்
திருவள்ளூர்
- பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
- ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் மதிவாணன் முன்னிலை வதித்தார்.
கூட்டத்தில், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் 34 பூத்துகளில் அதிக வாக்கு எண்ணிக்கை உள்ளதால் அங்கு போலீசாரை கூடுதலாக நியமிக்கவும், தேர்தலின் போது வாக்குச்சாவடி பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, கட்டிடங்கள் பாதுகாப்பு , அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
அப்போது சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் கூறும்போது, அதிக வாக்குகள் உள்ள 34 பூத்துகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்து தேர்தலின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது.
- தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே– கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு முக்கிய தரைப்பாலமாகவும் உள்ளது.
மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது. பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.
ஒவ்வொரு முறை தரைப்பாலம் சேதம் அடையும் போதும் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தரைப்பாலம் தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராமஙகளைச் சேர்ந்தவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தில் பாலப்பணிகள் தொடங்கு வது என்ற குழப்பத்தில் சீரமைக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளின்படி அவசர தேவை பயன்பாட்டுக்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.
அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
- போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..
ஆவடி:
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் சசிகலா, போதைப் பொருளுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
பெண் போலீஸ் எழுதி பாடிய பாடலின் ஒரு சில வரிகள் வருமாறு:
உனக்கும் வேணா, எனக்கும் வேணாம் போதை தானுங்க... ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.
போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க.. வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.
கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க...
கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி.. குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி..
போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..
- குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
- பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி, ராமானுஜ கூடத் தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி உள்ளது. நேற்று இரவு அதன் அருகில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் யுவராணி என்பவர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து யுவராணி உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பை தொட்டியில் எறும்புகள் மொய்த்த நிலையில் பிறந்து சில நாட்களே ஆகி இருந்த பெண் குழந்தையை மீட்டார். பின்னர் குழந்தையை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் யார்? குழந்தையை வீசி சென்றது ஏன்? கடத்திவரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குழந்தையை குப்பை தொட்டிக்குள் வீசி சென்று இருப்பதும் குழந்தை அழுத படியே சோர்ந்து உயிருக்கு போராடியபடி கிடந்து இருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- மகன்கள் மற்றும் மகள் திருமணத்திற்கு பிறகு மூதாட்டி ஜானகி பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார்.
- சொத்துக்களை மீட்டு தரும்படி வருவாய் துறை அதிகாரிகளை நாடிய மூதாட்டி ஜானகி அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் 90 வயது மூதாட்டி ஜானகி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு முன்பே கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன்கள் மற்றும் மகளை வளர்க்க மூதாட்டி ஜானகி பெரும் பாடுபட்டுள்ளார்.
மகன்கள் மற்றும் மகள் திருமணத்திற்கு பிறகு மூதாட்டி ஜானகி பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார். மேலும் சொத்துக்களை மூதாட்டி ஜானகியுடம் இருந்து பிள்ளைகள் எழுதி வாங்கியுள்ளனர். மருமகள்களாலும் மூதாட்டி ஜானகி தாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து சொத்துக்களை மீட்டு தரும்படி வருவாய் துறை அதிகாரிகளை நாடிய மூதாட்டி ஜானகி அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வருவாய்துறையினர் காலம்தாழ்த்தாமல் பிள்ளைகளிடம் இருந்து சொத்துக்களை மீட்டு தரும்படி மூதாட்டி ஜானகி கோரிக்கை விடுத்துள்ளார்.
- பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
- மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு ஊராட்சிக்குட்பட்ட வேம்பேடு கிராமம், செல்லியம்மன் கண்டிகை பகுதியில் சுடுகாடு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இடையே அலமாதியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மின்கம்பங்கள் மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகளை தாங்கி பிடிக்கும் 2 சிமெண்டு மின்கம்பங்களும் முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கின்றன. பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
இதேபோல் அப்பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஆயிலச்சேரி கிராமத்தில் அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் உடைந்து விழுந்ததால் வயல்வெளியில் இருந்த ஒருவர் பலியானார். கோடு வெளி கிராமத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 10 ஆடுகள், ஒரு மாடு பலி ஏற்பட்டது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்னர் இப்பகுதியில் உள்ள சேதம் அடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.
- சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
- சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ளது போளிவாக்கம் சத்திரம் பகுதி. இங்கு இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் சாலையை போளிவாக்கம் சத்திரம் வழியாக புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளகாலனி, மேட்டு காலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம், பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் , மருத்துவசிகிச்சை உள்ளிட்டவைக்கு செல்ல இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
இதற்காக கடந்த ஒரு ஆண்டுகுக்கு முன்பே போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளகால்வா வரை 7 கி.மீ தூரம் ஏற்கனவே இருந்த சாலை அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜல்லி சாலையில் முதியோர் பள்ளி மாணவ மாணவிகள், கிராமத்தினர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதையடுத்து சாலை அமைக்கப்படாததை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்க கோரியும் போளிவாக்கம் சத்திரம் பகுதி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
- ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
பொன்னேரி:
நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன.
இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
இதற்கிடையே பழவேற்காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து வருகின்றன. படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி காயம் அடைந்து அவை இறப்பதாக ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர்.
- ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அவர் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை நடைபயணம் செல்லும் இடங்களில் பாரதிய ஜனதா தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.
சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட இடத்தில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை அங்கு திரளும் மக்கள் மத்தியில் பேசி வருகிறார். அப்போது பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை விளக்கி பேசும் அவர் தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலையின் நடைபயணம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார களமாகவும் மாறி இருக்கிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்து விட்டு அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தனது பயணத்தை தொடங்கினார்.
திருத்தணியில் காலையில் நடைபயணத்தை மேற் கொண்ட அவர் மாலையில் திருவள்ளூரிலும் இரவில் ஸ்ரீபெரும்புதூரிலும் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக அவரது நடைபயணம் நடைபெற்றது. இன்று காலையில் அண்ணாமலை கும்மிடிப்பூண்டியில் நடைபயணம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி ரெட்டைமேடு சந்திப்பில் இருந்து தொடங்கிய நடைபயணம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் இன்று பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர். மாவட்ட நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சியினரும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கும்மிடிப்பூண்டி நடைபயணத்தை முடித்து விட்டு அண்ணாமலை அங்கேயே ஓட்டலில் தங்கினார்.
பின்னர் மாலையில் ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார். பொன்னேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் பச்சையம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் இருந்து மாலை 5 மணி அளவில் தொடங்கும் நடைபயணம் மீஞ்சூர் முப்பாத்தம்மன் கோவில் பகுதியில் நிறைவடைகிறது.

இதன் பின்னர் இரவு 7 மணி அளவில் ஆவடி சட்ட மன்ற தொகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். ஆவடி காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கும் நடைபயணம் அங்குள்ள 'டிரெண்ட்ஸ்' ஷோரூம் பகுதி வரை சென்று முடிவடைகிறது.
இதன் பின்னர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொள்கிறார் இதன் முடிவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி திடலில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.
- பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
- பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை.
பூந்தமல்லி:
பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.
குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது.
எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. குறிப்பாக நண்பர்கள் நகரில் உள்ள பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாகமாறி வருவதால் பொதுமக்கள் வந்து செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.
இதனால் பூங்காக்களை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் சின்னப்பா நகரில் உள்ள பூங்காவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
- கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவொற்றியூர்:
எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியார் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயு வெளியேறியது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பசுமை தீர்ப்பாயத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எண்ணூரை சுற்றி உள்ள 33 மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது போராட்டம் இன்று 42-வது நாளாக நீடித்தது.
இதற்கிடையே வாயு கசிவு ஏற்பட்ட உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் முதல் தாழங்குப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் மீனவ கிராமமக்கள் இன்று காலை திடீரென அன்னை சிவகாமி நகர், தாழங்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மீனவ கிராம மக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டு உள்ளது. துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அன்னை சிவகாமி நகர் முதல் எண்ணூர் மேம்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உரத்தொழிற்சாலை முன்பும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
- மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் பாதுகாப்புடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட திருக்கோவில் ஊழியர்கள் பங்கேற்று, துணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 28 நாட்களில் பக்தர்கள் ரூ.1 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 988 ரூபாய் பணம், 711 கிராம் தங்கம், 8 ஆயிரத்து 880 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






