என் மலர்
திருப்பூர்
- பலத்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அத்துடன் பலத்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 72.34 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. ஒரே நாளில் 8 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திருப்பூர் மாநகரின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி பல்லடத்தில் 4 மில்லி மீட்டர் மழை , தாராபுரம் தாலுக்கா பகுதியில் 4 மி.மீ., , உப்பாறு அணை பகுதியில் 10 மி.மீ., உடுமலைப்பேட்டை பகுதியில் 27 மி.மீ., அமராவதி அணை பகுதியில் 22 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில் 51 மில்லி மீட்டரும் , மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 10 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 178 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாகவும், சராசரியாக 8.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் திருப்பூரில் குளுகுளு வானிலை நிலவி வருகிறது. உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரி த்துள்ளதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
- மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர்-பல்லடம் சாலை குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). இவரது மனைவி சுருதி (45). இவர்கள் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல்லடம் பகுதியில் வசித்து வரும் ரவி (41), அவரது மனைவி துர்கா (35) ஆகியோர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தில் ஒருவராக பழகி வந்துள்ளனர்.
இந்த தம்பதியினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சுருதியிடம் " பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மற்றொரு கணவன்-மனைவியிடம் ஒரு கிலோ தங்க கட்டி இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும், அதனை எப்படி விற்பனை செய்வதென்று தெரியாமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனே சுருதி அவர்களிடமிருந்து தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்று விடலாம் என்ற பேராசையில் தான் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மளிகை கடை நடத்தி வரும் தம்பதியை ரவியும், அவரது மனைவி துர்க்காவும், பல்லடம் பகுதியில் குடியிருக்கும் ஆந்திர மாநில மற்றொரு தம்பதியான முனுசாமி ( 38), அவரது மனைவி குமாரி (31) வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த தம்பதி தங்கக் கட்டி என்று கூறி 2 கட்டிகளை சக்திவேல் மற்றும் சுருதியிடம் கொடுத்துவிட்டு ரூ.13 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். அந்த கட்டிகளை வீட்டிற்கு கொண்டு வந்த மளிகை கடை தம்பதியினர் பரிசோதித்துப் பார்த்த போது அவை தங்க கட்டிகள் அல்ல என்றும், தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மளிகை கடை தம்பதியினர் உடனடியாக பல்லடம் சென்று தங்க கட்டி என்று கூறி ஏமாற்றிய தம்பதிகளை தேடிப்பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சக்திவேல் மற்றும் சுருதி வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநில மோசடி தம்பதிகளை தேடி வந்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க திருப்பூர் தெற்கு இணை கமிஷனர் நந்தினி உத்தரவின் பேரில் வீரபாண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் ரவி அவரது மனைவி துர்கா, முனுசாமி அவரது மனைவி குமாரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ போலி தங்க கட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் திருப்பூரை சேர்ந்த மேலும் சில பெண்களிடம் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை சந்தித்து பேசும் அவர்கள் உண்மையான தங்க கட்டிகளை கொடுத்து அதனை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். அந்த தங்க கட்டிகளை பெண்கள் வாங்கி பார்த்து ஆய்வு செய்யும் போது தங்க கட்டிகள் உண்மையானது என தெரியவரவே அவர்கள் தங்க கட்டிகளை வாங்க முன்வந்துள்ளனர்.
பின்னர் மறுநாள் செல்லும் போது போலி தங்க கட்டிகளை கொண்டு சென்றுள்ளனர். பெண்கள் அதனை உண்மை என்று நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி ஏமாற்றமடைந்துள்ளனர். இப்படி பலரிடம் அவர்கள் போலி தங்க கட்டிகளை கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
- தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
- நாளடைவில் இவர்கள் சமூகவிரோதிகளாக மாறுகின்ற அபாய சூழல் உள்ளது.
திருப்பூர்:
இந்து மக்கள் எழுச்சி பேரவை, இந்து மக்கள் புரட்சி படை, இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மது பாட்டில்களுடன் வந்து மதுவை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இளம் வயது சிறுவர்கள் முதல் வயதாகிய முதியவர்கள் வரை மதுவின் கோரப்பிடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கூலித் தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வருமானத்தை மதுகுடிக்கும் பழக்கத்திற்கே செலவு செய்யும் வண்ணம் உள்ளனர்.
நாளடைவில் இவர்கள் சமூகவிரோதிகளாக மாறுகின்ற அபாய சூழல் உள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளால் தினசரி விபத்துகளும் அதனால் பல உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றது. இதனால் மது குடிப்பவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே மாநில அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தி தமிழக முழுவதும் உடனடியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- சாரல் மழை காலை முதல் குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு பெய்து வந்தது.
- தளி, அமராவதி பகுதியில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி, மடத்துக்குளம் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை உடுமலை பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குளிர் வாட்டி வதைத்தது. குளிர்ந்து காற்று வீசியது. சாரல் மழை காலை முதல் குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு பெய்து வந்தது.
இதே போன்று தளி, அமராவதி பகுதியில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்தது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
- முன்னோர்கள் வழிபாடு செய்தும், மலையை சுற்றி தேர் ஓட்டியும், பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
- சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் இல்லாததன் காரணமாக சிறப்பாக பூஜைகள் நடத்த முடியாமல் இருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் அறிவொளி நகர், ராக்கியாபட்டி, ஈட்டி வீரம்பாளையம், முட்டியங்கிணறு, ஊஞ்சப்பாளையம், பரமசிவம்பாளையம் மற்றும் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சியில் உள்ள செல்வமுத்துகுமாரசாமி ஆலயத்தில் எங்கள் முன்னோர்கள் வழிபாடு செய்தும், மலையை சுற்றி தேர் ஓட்டியும், பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் இல்லாததன் காரணமாக சிறப்பாக பூஜைகள் நடத்த முடியாமல் இருந்தது. 2 வருடங்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் சேர்ந்து சிறப்பாக வழிபாடு செய்து வணங்கி வருகிறோம். இந்த கோவில் அமைந்துள்ள இடத்தை வேறு எந்த அரசு பயன்பாட்டிற்கும் வழங்காமல் இந்த கோவிலில் தொடர்ந்து எங்களை வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு தங்களை கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
- சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.
தாராபுரம்:
ஈரோடு மாவட்டம் கொடிமுடி அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் சத்யா (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பணம் சம்பாதிக்கவும், உல்லாச வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக அரசு அதிகாரிகள், வசதி படைத்த திருமணமாகாத வாலிபர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த செயலில் ஈடுபட்டார். இதற்காக திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் தனது தகவல்களை பதிவிட்டு இருந்தார்.
இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
தனக்கு திருமணமானதை மறைத்து அந்த வாலிபரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சத்யா மீது சந்தேகமடைந்த அந்த வாலிபரின் உறவினர்கள் கொடிமுடி சென்று விசாரித்த போது அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் மனமடைந்த வாலிபரின் தாத்தா தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சத்யாவை அழைத்து விசாரணை நடத்திய போது அவர், திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டி.எஸ்.பி., சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத வாலிபர்கள், தொழிலதிபர்கள் உள்பட 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை-பணம் பறித்தது தெரியவந்தது.

தனது மோசடி செயல் போலீசாருக்கு தெரியவரவே, சத்யா போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக தப்பி சென்று விட்டார். 53 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணியின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மீம்ஸ்களும் வெளியாகின.
இதையடுத்து தலைமறைவான சத்யாவை பிடிக்க தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சத்யாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்த போது அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் புதுச்சேரி சென்று சத்யாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்தனர். தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் சத்யாவை கோவை மகளிர் சிறையில் அடைத்தனர்.
அவர் மீது கொலை முயற்சி, ஏமாற்றி பணம் பறித்தல், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பல திருமணங்களை செய்தல், ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலம் தன்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை சத்யா தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தன் அழகில் அவர்களை மயக்கும் அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும் போது சத்யா ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து தன்னிடம் உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை-பணம் பறித்துள்ளார். அவ்வப்போது செலவுக்கு ரூ.10ஆயிரம், 20ஆயிரம் என கேட்டுள்ளார். ஆபாச வீடியோ காட்சியை வைத்து மிரட்டியதால் பலர் பயந்து சத்யா கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர். இவரிடம் திருமணம் ஆன ஆண்களின் குடும்பத்தினர், மானம் போய் விடும் என்று பயந்து கேட்டபோதெல்லாம் பணத்தை வாரி வழங்கியுள்ளனர். சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ளனர். இதனால் சத்யாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது சத்யா போலீஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் ஆன்லைன் மூலம் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். அதில் சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறு கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய சத்யாவிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்யவும் உள்ளனர்.
இதனிடையே சத்யாவின் இந்த செயலுக்கு உறுதுணையாக கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்த தமிழ்செல்வி இருந்துள்ளார். அவர்தான் புரோக்கராக செயல்பட்டு சத்யாவுக்கு ஆண்கள் பலரை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தலைமறைவான தமிழ்செல்வியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.
- திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- திருமண மோசடி திருவிளையாடல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 35 வயதான இவர் தாராபுரம் - உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். குமாருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக வரன் தேடி வந்தனர்.
இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு மேட்ரிமோனியல் ஆப் மூலம் மூலம் சந்தியா (35) என்பவருடன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்ததுடன், தமிழ்ச்செல்வியையும் குமாருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அதோடு திருமண வரன் அமையாமல் இருந்ததால் சந்தியாவை திருமணம் செய்ய குமார் விரும்பியுள்ளார். இதனிடையே, இருவரும் நெருங்கி பழகி வந்த சமயத்தில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் எனக் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு குமாரிடம் சந்தியா வற்புறுத்தி உள்ளார்.
இந்த நிர்பந்தத்தின் காரணமாக தமிழ்ச்செல்வி தலைமையில் குமாருக்கும் சந்தியாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழனி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை குமாரின் பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில் சந்தியாவுக்கு 12 பவுன் நகைகள், புடவைகள் என அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். இதனிடையே, இவர்களுடைய திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கடந்த நிலையில் சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சந்தியா தனக்கு 30 வயது எனக் கூறிய நிலையில் அவர் கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது அடையாள அட்டையை குமார் வாங்கி பார்த்துள்ளார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையை சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயது அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், சந்தியாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, குமார் தரப்பிற்கும் சந்தியாவிற்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், கோபமடைந்த சந்தியா, குமாரையும், அவரது குடும்பத்தையும் மிரட்டினார்.
இதனால் உஷாரான குமார், தனது மனைவி சந்தியாவை சமாதானம் செய்வதுபோல் பேசி நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா போலீஸ் விசாரணையின் போதே அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியா குறித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிவந்தது. அந்த நேரத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தியா அவரை விட்டு பிரிந்தார். காலப்போக்கில் தனிமையில் இருந்த சந்தியா பணத்திற்காக வேறு திசையில் பயணிக்க தொடங்கினார். திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சந்தியாவின் திருமண மோசடி பட்டியலில் டிஎஸ்பி., ஒரு காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசார், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபர் என சுமார் 53 பேருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
தனக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சந்தியா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருப்பூர், ஈரோடு, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள், அரசு அதிகாரிகள், சர்வேயர், சாப்ட்வேர் என்ஜினீயர் , போலீஸ் அதிகாரிகள் எனச் சந்தியாவின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கல்யாண ராணியான சந்தியாவின் இந்த திருமண மோசடி திருவிளையாடல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீம்ஸ்களும் வெளியிட்டு வருகின்றனர்.
இதையடுத்து சந்தியாவை பிடிக்க தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா தலைமையில் 5 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சந்தியாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே சந்தியாவின் திருமண மோசடி குறித்து தினமும் புது புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மேட்ரிமோனி மூலம் திருமணமாகாத வாலிபர்களை வலைக்கும் சந்தியா பின்னர் அவர்களுடன் நெருங்கி பழகுவதுடன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களை காமவலையில் வீழ்த்தி அவ்வப்போது செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். இதையடுத்து திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். திருமணமானதும் வீட்டின் அறையில் இருந்து வெளியே வராமல் உள்ளே இருந்து நீண்ட நேரமாக செல்போனில் பேசியுள்ளார். இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விசாரணை நடத்தவே சந்தியா திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அதன்பிறகு கணவர் வீட்டாரை மிரட்டி நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு உடந்தையாக ஒரு வக்கீல், தமிழ்செல்வி மற்றும் வாலிபர் 4 பேர் இருந்துள்ளனர். சந்தியா சிக்கலில் மாட்டும் போது அந்த கும்பல் வந்து உதவியுள்ளனர். அவர்கள் வாலிபர் வீட்டினரை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். மேலும் ஜீவனாம்சம், சொத்துக்களையும் கேட்டுள்ளனர். கொடுக்க முன்வராத நபர்களிடம் கற்பழிப்பு வழக்கு தொடர்வோம், விவாகரத்து தரமாட்டோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போய் பலர் நகை-பணத்தை கொடுத்துள்ளனர். சிலர் இன்று வரை சந்தியாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுத்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை காம வலையில் வீழ்த்திய சந்தியா 7 மாத கர்ப்பமாகி உள்ளார். பின்னர் கருவை கலைத்து விட்டார். சந்தியாவுக்கு நடவடிக்கை பிடிக்காததால் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். தாய் பிரிந்து சென்று விட்டார்.
சந்தியாவுக்கு தற்போது பக்கபலமாக தமிழ்செல்வி, ஒரு வக்கீல் உள்பட சிலர் இருந்து வருகின்றனர். அவர்களை பிடித்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
- ஆத்திரம் அடைந்த இளங்கோ அழகுவை தாக்கி உள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த கரைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அழகு (வயது 51). இவர் வீரபாண்டி அடுத்த நொச்சிப்பாளையம் பிரிவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு புறப்பட தயாராக இருந்தார். அப்போது அருள்புரம் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜென்ட் இளங்கோ (23) மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி அதிவேகமாக ஆட்டோ மீது மோதுவது போல வந்து நின்றதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அழகு பார்த்து போக வேண்டியதுதானே என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோ அழகுவை தாக்கி உள்ளார். இதில் அழகு வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் இளங்கோவிடம் பேசி உள்ளனர். அப்போது இளங்கோ அவர்களையும் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் இளங்கோவை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ டிரைவர்கள் இளங்கோவை தாக்கிய சிசிடிவி., காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது.
- டாஸ்மாக் கடைகளை குறைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
திருப்பூர்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது. காவல்துறையின் கைகள் பல நேரங்களில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழக அரசு பல பெரிய குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்க நினைப்பது என்பது செயல் திறனற்ற அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் தொடர்கிறது. டாஸ்மாக் கடைகளை குறைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. வருமானத்தை பெருக்க, மக்கள் மேலும் குடிப்பதற்கு அரசு உடந்தையாக இருப்பது வேதனையானது.
கள்ளச்சாராயம், போதைப்பொருட்களுக்கு மாணவர்களும், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் அடிமையாகி உயிர்பலி அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் இனியும் நடைபெறாமல் தடுக்கஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். சமீபத்தில் தேசிய கட்சியின் மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் தமிழகத்தில் கொலையானது மக்களை பீதியடைய செய்துள்ளது.
இந்த ஆண்டு, த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் வருகிற 14-ந் தேதி மாலை திருச்சி உழவர் சந்தை அருகே நடக்கிறது. தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.
- பொக்லைன் எந்திரங்கள் மூலம் எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்துள்ள பல்லடத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மங்கலம் பூமலூரில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோன் வைத்துள்ளார். இவரது குடோனுக்கு அருகில் இப்ராஹிம் என்பவர் பழைய பஞ்சுக்கழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் நூல் தயாரிக்கும் ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் ஜன்னல் வழியாக அருகில் இருந்த பனியன் துணி குடோனுக்கும் பரவி பற்றி எரிந்தது.
இதையடுத்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் 5 மணி நேரமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பனியன் துணி கழிவுகள் மற்றும் பனியன் ரோல்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இதனிடையே பனியன் வேஸ்ட் குடோனில் தீயை அணைத்து கொண்டிருக்கும் போது மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்ததால் தீயினை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு துறை வீரர்கள் மிகவும் போராடினர். கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.
பொக்லைன் எந்திரங்கள் மூலம் எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தீ விபத்தில் தப்பிய பனியன் ரோல்களை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.
- விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
திருப்பூர்,ஜூலை.11-
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.
எனவே கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக பிழித்திறன் இழந்து கடந்த ஆண்டு முற்றிலும் ஆலை இயங்காமல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கரும்பு விளைவதற்கு ஏற்ற நீர் வளம் மற்றும் நிலவளம் கொண்ட பகுதியாகும்.
சிறப்பம்சம் கொண்ட இந்த ஆலை பராமரிப்பு இன்றி தற்போது இயங்கப்படாமல் இருப்பதால் கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள னர் .
எனவே மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு முழுமையாக ஆலையை புனரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலு வலகம் முன்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் பால தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ரவீந்திரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினார். விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
- மர்மநபர்களின் செயலாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் எண்ணினர்.
- வீடுகளின் மீது வந்து விழுந்த கற்களை சேகரித்து போலீசாரிடம் காண்பித்தனர்.
ஒட்டப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 12 நாட்களாக இங்குள்ள வீடுகளின் மீது மர்மமான முறையில் சிறிய மற்றும் பெரிய கற்கள் விழுந்தன. இதனால் பயந்து போன அப்பகுதி பொது மக்கள் இரவு முழுவதும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்ச மடைந்தனர்.
கற்கள் விழுந்ததில் பல வீடுகளில் ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது கற்கள் விழவில்லை. உள்ளே சென்றதும் ஓடுகள் மீது கற்கள் விழுந்தன. இதனால் மர்மநபர்களின் செயலாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் எண்ணினர்.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஓட்டப்பாளையம் கிராமம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். புதர் பகுதிகள், மறைவான இடங்களில் யாரும் பதுங்கியிருந்து கற்களை வீசுகின்றனரா? என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அப்படி யாரும் சிக்கவில்லை. இதனால் வீடுகளின் மீது கற்கள் எப்படி விழுகிறது. எங்கிருந்து வந்து விழுகிறது என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் மர்மமான முறையில் கற்கள் விழுவது குட்டிச்சாத்தானின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் பொது மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கற்கள் விழுவதின் உண்மையான பின்னணி என்னவென்று தெரியாமல் தவிப்புக்கு ஆளானதுடன் கடந்த 12 நாட்களாக இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தனர். இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து படியூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். வீடுகளின் மீது வந்து விழுந்த கற்களை சேகரித்து போலீசாரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து வீடுகளின் மேல் எங்கிருந்து கற்கள் வந்து விழுகிறது என்பதை கண்காணிக்க போலீசார், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி ஓட்டப்பாளையம் கிராமம் முழுவதும் 6 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் , 20 போகஸ் லைட்டுகள் பொருத்தப்பட்டன. ராட்சத கிரேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் போலீசார் , அதிகாரிகள், பொதுமக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிரேன் மூலமும் , டிரோன்களை பறக்க விட்டும் கண்காணிக்கப்பட்டது.
நேற்றிரவு 7 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எந்தவித கற்களும் வீடுகளின் மீது வந்து விழவில்லை. எனவே மர்மநபர்கள்தான் மறைவான இடங்களில் பதுங்கியிருந்து கற்களை வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஒட்டப்பாளையம் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் குட்டிச்சாத்தான் பீதியால் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் நேற்றிரவு பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று வீடுகளின் மீது கற்கள் வந்து விழுந்தன.
அதேப்போல் இப்போதும் நிகழ்ந்துள்ளதால் கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிறப்பு வழிபாடுகள் நடத்தினோம் என்றனர். காங்கயம் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒட்டப்பாளையம் கிராமத்தில் முகாமிட்டு நேற்றிரவு முதல் கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடந்த 12 நாட்களாக வீடுகளின் மீது கற்கள் விழுந்ததில் தூக்கத்தை தொலைத்து தவித்து வந்த ஒட்டப்பாளையம் கிராமமக்கள் நேற்றிரவு கண்காணிப்பில் ஈடுபட்டதன் காரணமாக கற்கள் வந்து விழாததால் நிம்மதி அடைந்துள்ளனர்.






