என் மலர்
திருப்பூர்
- அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் நேற்று தமிழக பாஜகவினர் (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், "மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஹோலி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
- பலர் ரெயில்களில் இருக்கை இல்லாமல் படிகளில் அமர்ந்து சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.
திருப்பூர் வழியாக செல்லக்கூடிய டாட்டா நகர் மற்றும் தன்பாத் உள்ளிட்ட ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் சென்றனர். பலர் ரெயில்களில் இருக்கை இல்லாமல் படிகளில் அமர்ந்து சென்றனர்.
எனவே வடமாநில தொழிலாளர்களின் வசதிக்கேற்ப வடமாநிலங்களுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
- தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை.
திருப்பூர்:
திருப்பூர் மணியக்காரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது பயாஸ். இவர் அங்கு பனியன் கழிவுத்துணிகள் குடோன் நடத்தி வருகிறார்.
இந்த குடோனில் நள்ளிரவு 1:30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பனியன் துணிகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான பனியன் கழிவுத்துணிகள் தீப்பற்றி எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மேலும் 5-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இருப்பினும் கரும்புகை வெளியேறி வருவதால் அதனை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் கழிவுத்துணிகள்-பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது.
- கடந்த பிப்ரவரி 25-ந்தேதி வைக்கோல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருணகிரி நாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால் மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது.
சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது.
பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது.
இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, ருத்ராட்சம், இரு இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 17ந் தேதி முதல் திருவோட்டில் விபூதி,ருத்ராட்சம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 25-ந்தேதி வைக்கோல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆறுதொழுவு பகுதியை சேர்ந்த தங்கவேல் என்ற பக்தரின் கனவில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைக்க உத்தரவானது. இதையடுத்து இன்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இது பற்றி கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று முதல் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதன் தாக்கம் போகப்போகத் தான் தெரியவரும் என்றனர்.
- காரை மறித்து 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி ரூ.1 கோடியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.
- காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சம்மந்தம்பாளயைம் பிரிவு அருகே காரை வழி மறித்து நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூரை சேர்ந்த நகை வியாபாரி வெங்கேடஷ் (50) நகை வாங்க காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்த போது சம்மந்தம்பாளையம் பிரிவு அருகே காரை மறித்து 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி ரூ.1 கோடியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.
ரூ.1 கோடியை பறித்து சென்ற சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
- வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
தாராபுரம்:
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2026 தேர்தலுக்குள் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.
வக்பு வாரிய சொத்து என தாராபுரம், அலங்கியம் திருப்பரங்குன்றம் உள்பட பல பகுதிகளில் இந்துக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வக்பு வாரிய மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே நாளில் ஒன்பது பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் இந்துகளின் வாக்கு வங்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக முன்னணியில் அ.தி.மு.க., சீமான், பா.ஜ.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரண்டு ஒரு அணியில் நின்று தி.மு.க. அணியினரை தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம்.
- தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. பங்கேற்காது என்று அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணங்களை, முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விவரித்துள்ளார்.
இதையடுத்து, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ந்தேதி முதல் பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம். தொகுதி மறுவரையறை விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என அமித்ஷா தெளிவுப்படுத்தி உள்ளார். தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான். அப்பிரச்சனைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இந்தி திணிப்பு நாடகத்தை மக்கள் ஏற்க மறுத்ததால் தொகுதி மறுவரையறை குறித்து பேசி திசை திருப்ப முயற்சி. மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என இன்னும் எவ்வளவு காலம் தான் பொய்களை பரப்ப முடியும் கூறினார்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை.
- தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை.
திருப்பூர்:
திருப்பூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
இன்று மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உயர்ந்து விட்டது. பாதாள சாக்கடை வரி 129 சதவீதம் உயர்ந்துவிட்டது. நாய், பூனை வளர்த்தாலும் பூனை குட்டி போட்டாலும் வரி போடுகிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. ஆனால் இன்று வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு விலைவாசியும் உயர்ந்து விட்டது.
தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை. இன்னும் 10 அமாவாசையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றார்.
- பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது.
- நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப, நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதில் நூல் விலையில் மாற்றமில்லை. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.175, 16-ம் நம்பர் ரூ.185, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.243, 24-ம் நம்பர் ரூ.255, 30-ம் நம்பர் ரூ.265, 34-ம் நம்பர் ரூ.283, 40-ம் நம்பர் ரூ.303, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.240, 24-ம் நம்பர் ரூ. 250, 30-ம் நம்பர் ரூ.260, 34-ம் நம்பர் ரூ. 273, 40-ம் நம்பர் ரூ.293-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாலிபாளையம் பகுதிகளில் உள்ள கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
- சுத்திகரிக்காத கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மந்திரி வாய்க்காலில் அவ்வப்போது சாயக்கழிவுநீர் பாய்ந்தோடுவது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் ஆய்வு நடத்திய மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அதிகாரிகள், லட்சுமி நகரில் இயங்கிய ஒரு முறைகேடு பட்டன் - ஜிப் நிறுவனத்தை கண்டுபிடித்து, மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.
கடந்த 10-ந்தேதி, வாலிபாளையம் பகுதிகளில் உள்ள கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை, சாக்கடை கால்வாயில் வெளியேற்றியது தெரிய வந்தது. இதனால் டைஸ் அண்டு கெமிக்கல் நிறுவனங்கள், பேக்கிங் பிரிவு மற்றும் ஆய்வகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில் அருகே மந்திரி வாய்க்காலில் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது. மேலும் நொய்யல் ஆற்றில் கலந்தது.
இதையடுத்து மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான குழுவினர், நடத்திய ஆய்வில் கொங்கு மெயின் ரோடு, முத்துநகர் பகுதியில் 2 பிரின்டிங் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கியதும், சுத்திகரிக்காத கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனங்கள் இயங்கிய வாடகை கட்டிடங்களில் மின் இணைப்புகளை துண்டிக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர்.
- திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தந்தையை இழந்த 16 வயதான சிறுமி அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உறவுக்காரர் ஒருவரை அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் முடிவு செய்தார். அதை விரும்பாத அந்த சிறுமி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தார்.
ஆனால் எவ்வளவோ மறுத்தும் கண்டுகொள்ளாமல் உறவினருடான திருமண வேலைகளை குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் தவித்த அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு பேசி தன் நிலையை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெள்ளகோவில் விரைந்து சென்றனர்.
பின்னர் சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது சட்டப்படி வயது வராமல் பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
அதைத்தொடர்ந்து அந்த சிறுமியுடன் குடும்பத்தினரை திருப்பூர் அலுவலகத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பனியன் நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
- கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.
திருப்பூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தனது கணவன், குழந்தையுடன் திருப்பூர் அடுத்துள்ள தெக்கலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்துள்ளனர்.
பின்னர் அங்கு வேலை பிடிக்கவில்லை என்று அந்த தம்பதி மீண்டும் தங்கள் சொந்த ஊரான ஒடிசா மாநிலம் செல்ல திருப்பூர் ரெயில் நிலையம் வந்துள்ளனர். இந்த நிலையில் ரெயில் நிலையம் அருகில் புஸ்பா பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்து இருந்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் அறிமுகமான பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம்(24), டானிஷ்(25) மற்றும் முர்சித் என்ற மூன்று வட மாநில இளைஞர்கள் நாங்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவனம் அருகில் தான் உள்ளது என கூறியுள்ளனர். அந்த நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி மற்றும் குழந்தை தங்க இடம் இல்லாததை அறிந்த இந்த மூன்று பேரும் அந்த தம்பதியை அவர்கள் தங்கும் லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு உணவு தயார் செய்த இவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் இவர்கள் ஆறு பேரும் ஒரே அறையில் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அக்கம்பக்கதினர் தூங்கிய உடன் நதீம், டானிஷ் மற்றும் முர்சித் என மூன்று வட மாநில இளைஞர்களும் கையில் கத்தியை வைத்து பெண்ணின் கணவனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அந்தப் பெண்ணை கணவன் மற்றும் குழந்தை கண் முன்பே ஒருவர் மாற்றி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளனர். வெளியே வந்த அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் உடனே விரைந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள நதீம், டானிஷ் மற்றும் முர்சித் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர் பின்னர் அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, உயிர் பயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






