யு.பி.எஸ்.சி. தேர்வில் சாதனை படைத்த திருப்பூர் விவசாயி மகள்- முதலமைச்சர் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்

மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.
யு.பி.எஸ்.சி. தேர்வில் சாதனை படைத்த திருப்பூர் விவசாயி மகள்- முதலமைச்சர் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்
Published on

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெறுவேடம்பாளையத்தை சேர்ந்த விவசாய தம்பதிகளான சந்திரசேகர்-ராஜேஸ்வரி தம்பதிகளின் மகள் மோகன தீபிகா (வயது 23). இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பதவிகளுக்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மோகன தீபிகா செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்விலும் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா வெறு வேடம்பாளையத்தை சேர்ந்த ஏழை விவசாயி மகளான நான் எனது ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன்.

மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் படித்தேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத தயாரானேன். அதற்கு எனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர்.

மேலும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு மிகவும் பயனளித்தது. தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னை போன்று கிராமத்தில் உள்ள மாணவ- மாணவிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு அரசு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை.

இவ்வாறு அவர் கூறினார்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com