என் மலர்tooltip icon

    சேலம்

    • காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா மொத்தமாக வாங்கி சிறிய பொட்டலங்களாக தயார் செய்து வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கருங்கல்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராசு (வயது 25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலம் நகர், நெடுஞ்சாலைநகர், கென்னடிநகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளை யார்கோவில், சண்முக செட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்காரப்பட்டி,பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் போடிநாயக்கன்பட்டி, கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், ராமகவுண்டனூர், எம்.ஜி.ஆர்.நகர், காமநாய்க்கன்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    • சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருக்கல்யாணம்

    கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (சனிக்கிழமை) மாலை வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் வள்ளி- தெய்வானை வசந்த் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் 6-ம் ஆண்டு குண்டம் தீ மிதி விழா நடைபெறுகிறது.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுப்ரமணிய சாமி ஆசி பெற விழா கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது.
    • கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சின்னாகவுண்டம் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சின்ன மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு ெதாடங்கியது. கணபதி வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு சாமிக்கு கண் திறப்பு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30. மணிக்குள் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சாமி சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் வைத்து பூஜை செய்து பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கலசங்களுக்கு ஊற்றி தீபாராதனை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மோகன்ராஜ் (60). இவரது மனைவி விமலா ராணி. இவர்கள் உறவினர் திருமணத்திற்காக ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி தனியார் திருமண மண்டபத்திற்கு எெலக்ட்ரிக் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தனர்.
    • அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் சென்ற தனியார் பஸ், அவர்கள் வந்த ஸ்கூட்டி மீது மோதியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (60). இவரது மனைவி விமலா ராணி. இவர்கள் உறவினர் திருமணத்திற்காக ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி தனியார் திருமண மண்டபத்திற்கு எெலக்ட்ரிக் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் கொத்தம்பாடி பகுதியில் மண்டபத்தின் எதிரே வாகனத்தை திருப்பினர். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் சென்ற தனியார் பஸ், அவர்கள் வந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் பஸ்சின் அடியில் சிக்கி தலை சிதறி பரிதாபமாக சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அந்த பகுதி கிராம மக்கள் இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு பல்வேறு முறை கோரிக்கைகள் வைத்தும், சாலை மறியல் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சாலை மறியல் செய்தனர்.

    இதையடுத்து ஆத்தூர் ஆர்.டி.ஓ. ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நெடுஞ்சா லைத்துறை மூலம் பேச்சு வார்த்தை நடத்தி மேம்பாலம் அமைக்கவும், தடுப்புகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட் டனர். சுமார் 2 மணி நேரத் திற்கு பின்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன்.
    • கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவருடைய மனைவி செல்வி (28).

    இவர் நேற்று முன்தினம் இளம்பிள்ளை அருகில் உள்ள திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு சென்ற செல்வியை குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி குமார் (42) என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

    செல்வியை கொலை செய்தது குறித்து பூசாரி குமார் போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். எனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தேன். கடன் பிரச்சனை மற்றும் குழந்தையின்மைக்கு தீர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு அருள்வாக்கு பெற எனது கோவிலுக்கு பலர் வந்தனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பல பெண்களுடன் சகஜமாக பேசி எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்தேன். குறிப்பாக 20 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளேன்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த செல்வியை எனது வலையில் வீழ்த்த நினைத்து நைசாக பேசி வந்தேன். பூசாரி என்பதால் என்னிடம் செல்வி சகஜமாக பேசினார். அவரிடம் உல்லாசம் அனுபவிக்க நான் நினைத்தேன். அதே நேரத்தில் அவர் தங்க நாணயம் குறைவான விலைக்கு தனக்கு கிடைப்பதாகவும் தான் வாங்கி தருவதாகவும் கூறினார். அதை நம்பி நானும் ரூ.20 ஆயிரம் கொடுத்தேன்.

    ஆனால் செல்வி தங்க நாணயம் வாங்கி தரவில்லை. இருந்தாலும் அவரை எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவிக்க மீண்டும் திட்டம் போட்டேன். அவர் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டார். இது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. உல்லாசத்துக்கும் மறுத்து விட்டார். தங்க நாணயமும் வாங்கி தரவில்லை. எனவே எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி செல்போனில் அவரை கோவிலுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் காலை 11 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அங்கிருந்து எனது வீட்டுக்கு அவரை அழைத்து சென்றேன். அங்கு ஆசைக்கு இணங்க செய்யலாம் என திட்டமிட்டேன். அதற்கு செல்விக்கு விருப்பம் இல்லாததை உணர்ந்தேன். ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் அவரிடம் கொடுத்த பணமும் வீணாக போச்சே என்று நினைத்த போது அவர் அணிந்திருந்த நகைகள் என் கண்களை உறுத்தின.

    ஏற்கனவே காட்டு பகுதியையொட்டி எனது வீட்டின் அருகே நாய் தொல்லை இருப்பதால் அவற்றுக்கு விஷம் வைக்க, வெள்ளிப்பட்டறையில் பயன்படுத்தும் சயனைடு வாங்கி வீட்டில் வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அந்த விஷத்தை 10 ரூபாய் குளிர்பானத்தில் கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அவரிடம் நைசாக பேசி சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டார். அதன்பிறகு நான் அவரது உடலை தூக்கிச்சென்று சுமாா் 200 மீட்டர் தொலைவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர்பகுதியில் வீசினேன். இதற்கு முன்னதாக செல்வி கழுத்தில் இருந்த தாலி மற்றும் நகை என 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

    பின்னர் செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன். மீதமுள்ள 5 பவுன் நகையை எனக்கு பழக்கமான சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த இன்னொரு செல்வியிடம் கொடுத்து அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நகைக்கடனாக பெற்றேன்.

    அதில் 80 ஆயிரம் ரூபாயை எனது நண்பரிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதமுள்ள பணத்துடன், எனது கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ஏற்காட்டுக்கு சென்று அன்று இரவே விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தேன். இந்த நிலையில் செல்வியின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் நான் போலீசிடம் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    போலீசார் பூசாரி குமாரை அழைத்துச் சென்று அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

    கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன. இதனால் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த செல்வி அந்த கவலையை மறக்க இன்ஸ்டாகிராமில் 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டு பிரபலம் அடைந்தார். அவரை 1,200-க்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் மேலோங்கியது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருமலைகிரி பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தை வரம் வேண்டி வழிபட்ட செல்விக்கும், பூசாரி குமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து இன்ஸ்டாகிராம் பெண்ணை பூசாரி கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திற்கு பிறகு வார்டன் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கிருஷ்ணகிரியில் இருந்து அழைத்து வரப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு மது வாங்கி கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.

    சேலம்:

    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசிங் (வயது 35). இவரை அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து கடந்த 22-ந் தேதி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதற்கான ஆணையை எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகிரி கிளை சிறைக்கு சென்றார். அங்குள்ள சிறையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகளை வைக்கக் கூடாது என்பதால் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கிளை சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கிருஷ்ணசிங்கை அழைத்து வந்தனர்.

    அப்போது சேலம் சிறை வார்டன்கள் கிருஷ்ணசிங்கை சோதனை செய்தனர். அவர் மீது மது வாசனை வந்தது. இது பற்றி சிறை அதிகாரிகளிடம் வார்டன்கள் தெரிவித்தனர். பின்னர் சிறை மருத்துவர் அங்கு வந்து கிருஷ்ணசிங்கை பரிசோதனை செய்தபோது அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து ரத்த பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். இதில் சிறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திற்கு பிறகு வார்டன் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்று பார்த்தபோது கைதிக்கு 3 லிட்டர் தண்ணீரை வாங்கிக் கொடுத்ததும், மதுவாடையை போக்குவதற்காக வாயை சுத்தப்படுத்து வதற்கான ஸ்பிரே வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதுபற்றி வார்டன், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கைதிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரத்த மாதிரியை எங்களிடம் தர வேண்டும். நாங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் முடிவை பெற்று தருகிறோம் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதேபோல் சிறை அதிகாரிகளும் எங்களுக்கும் ஒரு ரத்த மாதிரி தாருங்கள். நாங்களும் பரிசோதனை செய்து கொள்கிறோம் என்றனர்.

    இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு 11.30 மணியளவில் ரத்த மாதிரி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைதியிடம் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும், சிறை வார்டனும் ரத்த மாதிரியை ஆய்வகத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கான முடிவு நாளை கிடைத்த பிறகே கைதி மது அருந்தினரா? கிருஷ்ணகிரியில் இருந்து அழைத்து வரப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு மது வாங்கி கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், கைதியின் ரத்த மாதிரி அறிக்கை கிடைத்த பிறகு அதில் அவர் மது குடித்து இருந்தார் என தெரிவிக்கப்பட்டு இருந்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குஞ்சப்பன். இவரது மனைவி தங்கம்மாள் (65). இவர்களுக்கு கோவிந்தராஜ் (40) என்ற மகனும், பவளக்கொடி (38) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    தங்கம்மாளின் கணவர் குஞ்சப்பன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமாகிவிட்டார். இதனால் தங்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தங்கம்மாளின் மகள் பவளக்கொடி தனது கணவர் முருகேசனிடம் கோபித்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இதையடுத்து பவளகொடியின் கணவர் முருகேசன் மதுபோதையில் வந்து என்னுடன் குடும்பம் நடத்த வரவேண்டும் இல்லை என்றால் இங்கேயே இறந்து விடுவேன் என கூறி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் பவளக்கொடியின் மகன் தமிழ்ச்செல்வன் நேற்று இரவு தனது நண்பர் மணி என்பவருடன் பாட்டி தங்கம்மாள் வீட்டிற்கு வந்து உள்ளார். அங்கு பாட்டி சமைத்து கொடுத்ததை சாப்பிட்டு விட்டு இரவு 12 மணி அளவில் கஞ்சா போதையில் இருந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர் மணி ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென பாட்டி தங்கம்மாளின் மார்பு பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது தங்கம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர் மணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தமிழ்ச்செல்வனிடம் போலீசார் விசாரித்த போது எனது தந்தையின் சாவுக்கு காரணமான பாட்டி தங்கம்மாள் தாய் மாமன் கோவிந்தராஜ், தாய் பவளக்கொடி ஆகிய 3 பேரையும் கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி வந்ததும் பாட்டியை கொலை செய்வதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால் ஓடிவிட்டது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உன்னாவிரதம் இருந்து வருகின்றனர்.
    • சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டம் மூலம் வறண்ட 116 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக விவசாய நிலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிட மக்கள் வசிக்கும் சூரப்பள்ளி, குப்பம்பட்டி, ஜலகண்டாபுரம் பெரிய கிணறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கும் என்றும், இந்த திட்டத்தை மாற்று நீர் வழிப்பாதையில் அமைக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் ஜலகண்டாபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 வயது குழந்தை உள்பட குப்பம்பட்டியை சேர்ந்த பாக்கியம் (வயது 53), லோகாம்மாள் (65) ஆகியோர் நேற்று மயக்கம் அடைந்தனர். இதில் சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாக்கியம், லோகாம்மாள் ஆகியோர் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை குடியிருப்பு பகுதியில் அமுல்படுத்தாமல் மாற்று நீர் ஓடை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது.

    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு கார் உள்ளது. தனது காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள கார் பழுதுபார்க்கும் இடத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

    காரை மணிகண்டன் ஓட்டி வந்தார். கார் புதுப்பேட்டை பகுதியில் வந்தபோது காருக்குள் முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் ராஜேந்திரன் காரை சாலையின் ஓரத்தில் அவசரமாக நிறுத்தினர்.

    பின்னர் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பாம்பு சிக்கவில்லை.

    தீயணைப்பு வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது. பாம்பு கிடைக்காத ஏமாற்றத்தில் தீயணைப்பு துறையினரும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் சிங்கள கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
    • நிர்மலா சீதாராமன் இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய மீனவர்கள் என்று எடுத்துக்கூறி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் ராஜூ ஆகியோருக்கு சொந்தமாக இரண்டு நாட்டுப்படகுகள் (பெரிய ரக வல்லம்) 22 மீனவர்கள் நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை துறைமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் கடலுக்கு சென்றால் 3 முதல் 5 நாட்கள் வரை கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு திரும்புவார்கள்.

    இந்நிலையில், வழக்கம் போல மீன்பிடிக்க சென்ற நிலையில் நேற்று (சனிக்கிழமை) நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளுடன் 22 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் சிங்கள கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதனைதொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சுதாகர், மேரிட்டேன், சிவா, பெவின்ராஜ், அந்தோணிராஜ், திப்பி ஜோன், ரோஜன், பாஸ்கர், ஜீனோ, ரோஜன் உள்ளிட்ட 22 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ராமேசுவரத்திற்கு வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சந்தித்து கைது குறித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில், நிர்மலா சீதாராமன் இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய மீனவர்கள் என்று எடுத்துக்கூறி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து இலங்கை அரசு 22 மீனவர்கள் இனி மேல் எல்லை தாண்டி மீன் பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து அவர்களது படகுகளுடன் 22 மீனவர்களை விடுவித்தனர். இன்று அந்த 22 மீனவர்களும் பாம்பன் துறைமுகத்திற்கு வருகின்றனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாம்பன் மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டது மீனவர்களிடையே பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் இலங்கை சிறையில், 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கூறி சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாம்பன் மீனவர் நம்பு முருகனை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அதனை பரிசீலிப்பதாக மந்திரி உறுதியளித்துள்ளார்.

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர துணை கமிஷனர்கள் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலத்தில் இன்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் மாலை 4 மணியளவில் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் இருந்து நடக்கிறது. இந்த ஊர்வலம் அம்பேத்கார் சிலை வழியாக சங்கர் நகர், தமிழ்சங்கம் சாலை வழியாக மீண்டும் மரவனேரி மாதவம் வளாகத்திற்கு வந்து அடைகிறது.

    பின்னர் மரவனேரி பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் செந்தில்குமார் செய்து வருகிறார்.

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை முன்னிட்டு சேலம் மாநகர துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா ஆகியோர் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், சேலம் சாலை சந்திப்பு, பாவடி வீதி, கிழக்கு ரதவீதி சந்திப்பு, பூக்கடை சந்திப்பு, ஆறுமுகசாமி கோவில், வன்னியர் தெரு, திருச்செங்கோடு நகர காவல் நிலையம், வேலூர் சாலை, சங்ககிரி சாலை வழியாக 2.8 கி.மீ. தூரம் வந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது.

    இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆர்.எஸ்.எஸ். பேரணியை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ×