என் மலர்
புதுக்கோட்டை
- மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும்.
- எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.
புதுக்கோட்டை:
அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் வைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அ.தி.மு.க. ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி படம் போடப்பட்டது. மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தார்கள். அந்த சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மீண்டும் நாங்கள் அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தபோது கவர்னர் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பினார். அதற்கு சேர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் கலைஞருக்காக, அவர்களது தலைவர் ஜெயலலிதாவிற்கும் சேர்த்து அவரது பெயரை வைக்க வேண்டும் என்று வாதாடி பெற்றிருக்கின்ற இயக்கம் தான் தி.மு.க.
எங்களுக்கு கட்சி வேறுபாடு கிடையாது. எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களுடைய முதலமைச்சர் பெயரை சூட்ட வேண்டுமோ அந்த பெயரை சூட்ட கடமைப்பட்டுள்ளோம். அதையெல்லாம் விமர்சித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது வரவேற்கத்தக்கது.
பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் மோடியால் வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்ததா? இல்லை... மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் தமிழ்நாடு இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டி உள்ளோம். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுடைய உழைப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கின்ற முயற்சிக்கு கிடைத்து உள்ள மிகப்பெரிய அங்கீகாரம்.
திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் திறப்பதற்கு கவர்னருக்கு அனுப்பிய சட்ட மசோதாவை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி என்ன பதிலளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு எதிர்க்கட்சி சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கின்றது என்று சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அந்த சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. மக்கள் எங்களுக்கு சான்றிதழ் தரவேண்டும். அந்த மக்கள் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம், நலமாக இருக்கின்றோம் என்று மக்கள் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சான்றிதழ் தருகின்றனர். அந்த சான்றிதழ் எங்களுக்கு போதும். எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்.
திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பா சென்றதால் தான் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது. காவல்துறைக்கு பாதுகாப்பு தேவையில்லை. காவல்துறை தனியாக போய் சில சமயங்களில் இது போன்ற கொலை சம்பவம் நடைபெறுகிறதே தவிர வேறு எங்கேயும் கிடையாது.
இதைவிட மோசமான சம்பவங்கள் எல்லாம் வட மாநிலங்களில் வருகின்றது. இந்தியாவிலேயே தொழில் தொடங்கவும், வசிக்கவும் தகுந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். ஆணவ படுகொலைகள் எங்களுக்கு தெரிந்து நடப்பது கிடையாது. தெரிந்தால் நிச்சயம் அதை தடுத்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன.
- வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான திருமயம் அருகே ராங்கியத்திற்கு முருகேசன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அங்கு இரவு தங்கி விட்டு நேற்று காலை புதுக்கோட்டை பாசில் நகருக்கு முருகேசன் தம்பதியினர் திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன் உள்பக்க கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன. மேலும் 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள், பணம் எல்லாம் காணாமல் போய் இருந்தது. மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், முருகேசனின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். தனது வீட்டில் இருந்த நகைகள் எல்லாவற்றையும் மர்மநபர்கள் அள்ளிச்சென்று விட்டதாக கூறி ராணி கண்ணீர் விட்டு கதறி அழுதார். வீட்டில் 160 பவுன் நகைகளும், ரூ.3 லட்சமும் கொள்ளை போனதாக போலீசாரிடம் முருகேசன் தெரிவித்தார். வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர். அதில் வீட்டில் தனது மனைவி மற்றும் மருமகள்கள் நகைகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பிச்சென்று உள்ளனர். வீட்டின் எதிர்பகுதியில் உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் முருகேசனின் வீட்டிற்குள் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சி எதுவும் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 160 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அதிமுக என்ற கட்சியினால் தான் ரகுபதி எம்எல்ஏ, அமைச்சராக ஆனார்.
- மாற்றுக் கட்சிக்குப் போன பிறகு அதிமுகவை விமர்சனம் செய்யலாமா?
புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ நடைபெற்று வருகிறது.
மக்களவை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொடு வருகிறார்.
அங்கு, எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அங்கு பேசியதாவது:-
இரவு, பகல் பாராமல் அதிமுக தொண்டர்கள் உழைத்ததால் தான் ரகுபதிக்கு பதவி வழங்கப்பட்டது.
அதிமுக என்ற கட்சியினால் தான் ரகுபதி எம்எல்ஏ, அமைச்சராக ஆனார்.
அதிமுக கொடுத்த அடையாளத்தை வைத்து தானே மாற்றுக் கட்சிக்கு சென்றார் ரகுபதி. மாற்றுக் கட்சிக்குப் போன பிறகு அதிமுகவை விமர்சனம் செய்யலாமா?
திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது. என் வீட்டிற்கு ரூ.4,000 என்று வந்த மின்கட்டணம் தற்போது ரூ.12,000 வரை வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனுமதி பெறாத கட்டிடங்களை கிராம ஊராட்சி நிர்வாகமே சீல் வைக்கலாம் என்று அரசு கூறுகிறது.
- மக்களின் பிரச்சனை என்ன என்றே தெரியாத ஒரு அரசாகத்தான் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் மரியாதை கிடையாது. நேர்மையாக பணியாற்றுபவர்களை உடனடியாக சஸ்பெண்டு செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல என்று கூறினார்.
மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்திப்பது குற்றம் என்றால், முதலமைச்சரும், அவரது மகனும் சென்று அவர் வீட்டு கதவை தட்டினார்களே அதற்கு பெயர் என்ன? அவர்கள் சந்தித்தால் தவறு இல்லை. நாங்கள் சந்தித்தால் தவறு. இந்திய நாட்டுடைய உள்துறை மந்திரிதானே அவர். வேறு யாரும் இல்லையே. அவரை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது.
நான் டெல்லி சென்றவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடப்பாடி டெல்லி சென்றிருக்கிறார் என்று கருத்து தெரிவித்தார். ஏதோவொரு சூழ்நிலையில் அமித்ஷாவை சந்தித்தால் தமிழ்நாட்டு பிரச்சனைகளை கூறுங்க என்று அவரே சொல்லிவிட்டு, இப்படியான கேள்விகளை அவர்களே கேட்பது நியாயம் தானா?.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவருடைய அமைச்சர்களும் அனைத்து இடங்களிலும் சொல்வது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்கிறார்கள். அவர்கள் கூறிய 525 அறிவிப்புகளில் ஒரு 10 அறிவிப்புகளை முன்வைத்து புதிய பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். ஸ்க்ராட்ச் கார்டுகள் மூலமாக அ.தி.மு.க நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வழங்கி அவர்கள் நிறைவேற்றப்பட்டது எது? நிறைவேற்றப்படாதது எது? என கேள்வி எழுப்பி உள்ளோம்.
அனுமதி பெறாத கட்டிடங்களை கிராம ஊராட்சி நிர்வாகமே சீல் வைக்கலாம் என்று அரசு கூறுகிறது. மக்களின் பிரச்சனை என்ன என்றே தெரியாத ஒரு அரசாகத்தான் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நானும் கிராமத்தில் உள்ளவன்தான். ஒரு தோட்டத்தில் வீடு இருந்தால் அனுமதி வாங்க சொல்வது நியாயம். அனுமதி வாங்கலைன்னா உடனே சீல் வைக்கலாம் என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ரூ.7 ஆயிரத்து 50 கோடிக்கு லேப்டாப் கொடுத்துள்ளோம். தாலிக்கு தங்கமும் கொடுத்து கொண்டுதான் இருந்தோம். இந்த 4 ஆண்டு ஆட்சியில்தான் கொடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில்தான் லேப்டாப்க்கு என்று டெண்டர் அறிவிக்க முடியாமல் ஓராண்டு காலம் எல்லா பணிகளும் தள்ளிப்போனது. பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் அதனை கைவிட்டுவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டங்களை எல்லாம் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைவிட்டு விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருகட்சிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சில கட்சிகளுடன் மற்ற கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் முறிந்த கூட்டணியை சட்டசபை தேர்தலை நோக்கி புதுப்பித்த அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. கூட்டணி அறிவித்ததில் இருந்து இருகட்சிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கூட்டணி ஆட்சியா? முதலமைச்சர் வேட்பாளர் யார்? போன்ற கேள்விகளால் கூட்டணிக்குள் கருத்துவேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.
இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் திடீர் திடீரென சலசலப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், பா.ஜ.க.வுடன் பாராளுமன்ற தேர்தலில் இருந்து கூட்டணியில் தொடரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம் பெறும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் டி.டி.வி. தினகரன் கூறியது குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, சிரித்துக்கொண்டே... அவருக்கு எல்லாம் பதில் சொல்ற அளவுக்கு கேட்க வேண்டாம். தயவு செய்து வேறு கேளுங்கள் என்றார்.
மேலும், பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கிறதா சொல்கிறார்கள் சார்... என்ற கேள்விக்கு, அவர் இருக்கிறதா சொல்கிறார். அதற்கு நாங்கள் ஒன்னும் சொல்லலையே. நாங்கள், அ.தி.மு.க-பா.ஜ.க.கூட்டணி என்று கூறினார்.
- 2026-ல் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
- கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.
புதுக்கோட்டை:
தி.மு.கவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக என்ற அ.தி.மு.க. வின் புதிய பிரசார திட்டங்களை புதுக்கோட்டையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பதில் சொல்லுங்க அப்பா என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொலியையும் வெளியிட்டார்.
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை அறிய மக்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்களிடம் கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டையும் வெளியிட்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* 2026-ல் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
* தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது.
* நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல.
* அ.தி.மு.க கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும்.
* கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.
* தி.மு.க.வினர் சென்று பிரதமரின் வீட்டு கதவை தட்டினால் மட்டும் சரியா? என்றார்.
- கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. அந்த வகையில் எதிர்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக களப்பணியை தற்போதே தொடங்கி விட்டனர். அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிறைவு செய்தாா். தொடர்ந்து 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கினார். அவர் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.
நேற்று கந்தர்வகோட்டை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசினார். அப்போது ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திற்கு சென்றவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கட்டுக்கட்டாக பணம் விநியோகம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி உரையாற்றியதாவது:-
அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ரூ.16000 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி- குண்டாறு திட்டம் முடக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் பயன் பெறுகின்றனர்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்களுக்காக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருதங்கோன் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
வீட்டு மனை இல்லாத ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனை கொடுத்து, இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.
தைப்பெங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2500 வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு ஷிப்ட் முறையில் திமுக ஆட்சியில் மின்சாரம் தருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான்.
- பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.
அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. அதனால் பா.ஜ.க. வை நன்மை பயக்கும் கட்சி என்று மாற்றுகிறார். நாங்கள் என்ன நன்மை செய்யாமலா இருக்கின்றோம்.
முன்பு பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணி வைத்து நன்மை பயக்கும் கட்சி என்று கூறுகிறார். அதனை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமிக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. பிரசாரத்தின் தொடக்க இடம் என்பதால் அதனை ஒருங்கிணைப்பு செய்து அந்த கூட்டத்தைக் கூட்டி உள்ளனர்.
எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான். நாளை முதலமைச்சர் திருவாரூர் வருகிறார். திருவாரூருக்கு வந்து பாருங்கள். முதலமைச்சருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று. 15-ந்தேதி மயிலாடுதுறைக்கு முதலமைச்சர் வருகிறார். அப்போது பாருங்கள் யாருக்கு கூடிய கூட்டம் அதிகம் என்று.
ஓரணியில் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. அனைத்து இடத்திலும் அதிகப்படியான உறுப்பினர்கள் சேருகின்றனர். மக்களே முன்வந்து சேருகின்றனர். மிகவும் பிரியமாக இருக்கின்றனர். சர்வர் சரியாக வேலை செய்யும் இடத்தில் எல்லாம் 30 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர்.
சர்வர் சில இடங்களில் வேலை செய்யவில்லை. அந்த இடத்தில்தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது. சர்வர் வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக இருக்கிறது. பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.
பாலம் இணைப்பு கூட கொடுக்கவில்லை, நிலத்தை கையகப்படுத்தி நாங்கள் கொடுக்காமல் இல்லை, நிலம் கையகப்படுத்தும் பொழுது நிலத்திற்கு சொந்தக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் சூழல் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடிக்கு என்றைக்குமே தார்மீக உணர்வே கிடையாது.
- நாங்கள் செய்வதை பின்பற்றி செய்து அதில் தோல்வியை தழுவக்கூடிய ஒரு வெற்றிகரமான நபர்தான் எடப்பாடி பழனிசாமி.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எதிரிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நாங்கள் இல்லை. அதேநேரத்தில் எதிரிகளை சமாளிக்கக்கூடிய சக்தியும் ஆற்றலும் எங்களுடைய தலைவருக்கு உண்டு என்பதை எடுத்துச்சொல்வதில் நாங்கள் முன்னணியில் நிற்கின்றோம்.
இன்று நாங்கள் செய்து இருக்கும் சாதனைகள் இந்தியாவிலேயே தமிழ்நாடு அடைந்து இருக்கும் நன்மைகள், தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் இவை எங்கள் கூட்டணியை முன்னேற்றி சென்று வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும்.
எடப்பாடிக்கு என்றைக்குமே தார்மீக உணர்வே கிடையாது.
தூத்துக்குடி சம்பவத்தில் காக்கை, குருவிகள் போல் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். அதைக்கேட்டபோது நான் டி.வி.யில்தான் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு முதலமைச்சராக இருந்தவர். அவரிடத்தில் நாம் நாகரித்தை எதிர்பார்க்க முடியாது.
அதேநேரம் தலைவர் தளபதி அவர்கள் நாகரிகம் உள்ளவர். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தரக்கூடியவர். இறந்துபோன அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஆறுதல் சொல்ல வேண்டியது அவரது பணி, கடமை. அதை உணர்ந்து செயலாற்றக்கூடியவர் எங்களுடைய முதலமைச்சர். கடமை உணர்வு எதுவுமே இல்லாத ஒரு கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி.
நாங்கள் மக்களின் மனதில் இருக்கிறோம்.
ஏட்டிக்கு போட்டி அதுக்கு பெயர் பழனிசாமி. நாங்கள் செய்வதை பின்பற்றி செய்து அதில் தோல்வியை தழுவக்கூடிய ஒரு வெற்றிகரமான நபர்தான் எடப்பாடி பழனிசாமி.
இதுவரை தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்வி காண்பார். நாங்கள் எடுத்து இருக்கக்கூடிய நடவடிக்கைகள் இன்னும் எங்கள் பலத்தை அதிகரித்து இருக்கிறதே தவிர நாங்கள் பலவீனமாக ஆகவில்லை. எங்களுடைய பலம் அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
- தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்துத் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி, கோவில் உண்டியல்கள் உடைப்பு எனத் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கீரமங்கலம் காவல் சரகத்தில் உள்ள வேம்பங்குடி மேற்கு கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், கொத்தமங்கலம் கூலாட்சி கொல்லை காமாட்சியம்மன் கோவில் உண்டியல்கள் உடைத்துத் திருடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சேந்தன்குடி பெரியாத்தாள் ஏரிக்கு வடக்குப் பக்கம் உள்ள புதருக்குள் ஒரு சில்வர் உண்டியல் கிடப்பதைப் பார்த்து பொது மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரித்ததில் அது நகரம் காளியம்மன் கோவில் உண்டியல் என்பது தெரிய வந்துள்ளது.
கீரமங்கலம் காவல் சரகத்தில் மட்டும் கடந்த 27-ம் தேதி ஒரே இரவில் 3 ஊர்களில் 3 கோவில் உண்டியல்களை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர்.
இதனால் கீரமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்பாக கீரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறையினர் கைரேகை பதிவுகளைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
- காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
- பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ராக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் தினேஷ். இவர் புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் விடுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக தனக்கு சொந்தமான காரில் வந்தார்.
காரை வேறு ஒரு டிரைவர் ஓட்டினார். தினேஷ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட நிலையில் டிரைவர் அந்த காரை போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் கார் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருந்தது.
பொதுமக்கள் சத்தம் போட்டும் அந்த காரில் இருந்த டிரைவர் வாகனத்தை விட்டு இறங்காமல் இருந்ததோடு, வாகனத்தை நகர்த்தாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் கஸ்தூரி அங்கு வந்தார். காரை எடுக்க சொல்லி கஸ்தூரி வற்புறுத்தினார். அதற்கு இது போலீஸ்காரர் கார் என்று டிரைவர் கூறியதாக தெரிகிறது.
உடனே பெண்போலீஸ் காயத்ரி யார் காராக இருந்தாலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியது தவறு என கூறி 2 பிரிவுகளில் அந்த வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார். அந்த காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் இருந்தபோதிலும் தனது கடமையில், கருத்தாக செயல்பட்டு பெண் போலீஸ் அபராதம் விதித்ததுடன் அந்த காரை உடனடியாக நகர்த்தவும் நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால் அந்த பெண் போலீஸ் காயத்ரிக்குக்கு பாராட்டுகள் குவிகிறது. விழா முடிந்து வந்த போலீஸ்காரர் தினேஷ் தனது டிரைவரை கண்டித்தார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






