என் மலர்
கிருஷ்ணகிரி
- உறவினர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன்.
இவர் கப்பல்வாடியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவன் நேற்று மாலை சக்கில்நத்தம் கிராமத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவருது மாந்தோப்பில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.
இதனால் அங்கு சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்படடோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த உறவினர்கள் சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவனது உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் 6 மணி நேரம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் டி.எஸ்.பி. முரளி கிராம மக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை செய்து மாந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் உடலை கைப்பற்றிய பர்கூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மாந்தோப்பு பகுதிகளில் தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு யாராவது சிறுவனை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரத்த காயமடைந்த முஸ்தபாவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு சவுகத் அலியை கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரிய அலேரஹள்ளி பகுதியை சேர்ந்த பாதுஷா என்பவருடைய மகன் சவுகத் அலி (வயது 31).
இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்தவரும் அத்தை மகனான முஸ்தபாவுக்கும், சவுகத் அலிக்கும் ஆகிய இருவருக்கும் நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சவுகத்அலி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முஸ்தபாவின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி உள்ளார்.
இதில் ரத்த காயமடைந்த முஸ்தபாவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு சவுகத் அலியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.
- குமாரின் கடையின் அருகில் உள்ள ஜெயராமனின் பேன்சி ஸ்டோர் கடையிலும் அந்த தீப்பற்றி கொண்டது.
- தீ விபத்தால், கோவிலுக்குள் சென்றவர்கள், அந்த பகுதியில் மற்ற கடைகளில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் அருகே பூக்கடை, எலெக்டரிக்கல் பொருட்கள் பழுது பார்க்கும் கடை, பேன்சி ஸ்டோர் கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
இதில் கோவிலையொட்டி அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். அதன் அருகே ஜெயராமன் என்பவர் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை 2 பேரும் கடைகளை திறந்து வைத்திருந்தனர். அப்போது திடீரென்று குமாரின் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் கடையில் இருந்து புகை வெளியேறியது. இந்த புகை சிறிது நேரத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது.
அப்போது குமாரின் கடையின் அருகில் உள்ள ஜெயராமனின் பேன்சி ஸ்டோர் கடையிலும் அந்த தீப்பற்றி கொண்டது.
உடனே கடையில் இருந்து வெளியே குமாரும், ஜெயராமனும் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதில் தீ மளமளவென பரவி கடைகள் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதற்குள் குமாரின் கடையில் இருந்த பழைய எலெக்ட்ரிக்கல் பொருட்களும், ஜெயராமன் கடையில் இருந்த பேன்சி பொருட்களும் முழுவதும் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்தால், கோவிலுக்குள் சென்றவர்கள், அந்த பகுதியில் மற்ற கடைகளில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
தகவலறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும், தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீப்பற்றி கொண்டதா? அல்லது வேறு யாரவாது தீ வைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீவிபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) நிறுவனம், திரூர்கரன் பைஜு என்பவரால் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு.
- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு காலநிலை செயல்திட்டத்தில் சத்தமில்லாமல் சாதிக்கும் ஒரு நிறுவனம்
சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) நிறுவனம், திரூர்கரன் பைஜு என்பவரால் தொலைநோக்கு திட்டத்துடன் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு. இந்நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிலப்பரப்பை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வளப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை விளைநிலங்களில் நட்டு தமிழகத்தின் காலநிலை மாற்ற செயல்திட்டத்துக்கு பங்காற்றியுள்ளது. இயற்கையை மீட்டெடுப்பது மற்றும் நகர்ப்புற மக்களை அதனுடன் மீண்டும் இணையக்கூடிய சூழலை உருவாக்குவதே பைஜுவின் முக்கிய நோக்கம் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. 'நிர்வகிக்கப்பட்ட விளை நிலங்களை' சந்தைப்படுத்தும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களைப் போல் அல்லாமல், சான்க்டிட்டி ஃபெர்ம் நிறுவனம் தனது உண்மையான செயல்பாட்டை செய்து காட்டியுள்ளது. முதல் மூன்று கட்டங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலங்கள், மனநிறைவோடு நிலத்தை வாங்கிய நூற்றுக்கணக்கான உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் இதற்கு நேரடி சான்று.
இயற்கை மற்றும் நிலையான வாழ்வுக்கான பைஜு வின் அர்ப்பணிப்பு:
"சான்க்டிட்டி ஃபெர்ம் என்பது மரங்களை நடுவது மட்டுமல்ல; மக்களும் இயற்கையும் இணக்கமாக வாழும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றியது" என்கிறார் பைஜு . 300 ஏக்கர் தரிசு நிலத்தை பசுமையான இயற்கை உணவு உற்பத்தி காடாக மாற்றி நிலத்துக்கு புத்துயிர் அளிப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையான விவசாய நடைமுறைகளுக்கான தமிழ்நாட்டின் முயற்சிகளுடன் இணைந்து, நிலையான ஆதாரத்தை வழங்கியுள்ளது. இந்த பண்ணையில் தற்போது 150 க்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறி வகை பயிர்கள் உள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவக்கூடியதாக அமைந்துள்ளது.
ஒரு தனித்துவமான கூட்டணி : தொழில்நுட்பத்திலிருந்து இயற்கைக்கான பயணம்
பெங்களூருவில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த பைஜு, விவசாயத்தின் மீது எப்போதுமே ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத் துறையில் இருந்து இயற்கையை மறுமலர்ச்சி அடைய வைக்கும் அவரது பயணம் சுற்றுச்சூழலின் மீதான ஆழ்ந்த அன்பு மற்றும் அமைதியான, நிலையான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான விருப்பத்தின் உந்துதலால் ஏற்பட்டதாகும். சூளகிரியில் அவர் உருவாக்கிய 300 ஏக்கர் நிலப்பரப்பு, அவரது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் சான்றாக திகழ்கிறது.
"தொழில்நுட்பம் சார்ந்த வேலையில் இருந்து பண்ணையை நிர்வகிப்பதற்கு மாறுவது என்பது நம்பிக்கையின் பாய்ச்சலாக இருந்தது. ஆனால், நான் எடுத்த முடிவுகளில் இது மிகவும் மனநிறைவான முடிவு" என்கிறார் பைஜு. "சான்க்டிட்டி ஃபெர்மில், நாங்கள் உணவுக்கான தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்ல; நாங்கள் ஒரு சமூகத்தை வளர்த்து வருகிறோம், பல்லுயிர்ப் பெருக்கத்தை வளர்த்து வருகிறோம். மேலும், ஆரோக்கியமான ஒரு கோளுக்கு (planet) பங்களிக்கிறோம்" என அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ்நாட்டின் காலநிலை ஆய்வுகளுடன் இணைந்து செயல்படுவது:
சான்க்டிட்டி ஃபெர்மின் முயற்சிகள், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்களை வலுவாக பிரதிபலிக்கக்கூடியவை. இவை இரண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்டவை. இந்த இரண்டு அமைப்புகளின் பணிகள் மாநிலத்தின் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்துவது மற்றும் வனப்பகுதியை கணிசமாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சான்க்டிட்டி ஃபெர்மின் பணி என்பது இந்த மாநிலத்தின் பரந்துபட்ட முயற்சிகளின் நுண்ணிய வடிவமாக செயல்படுகிறது. "நாங்கள் பொதுவான நோக்கத்தை மாநிலத்தின் தலைமையுடன் பகிர்ந்து கொள்கிறோம். பசுமையான, நிலையான தமிழ்நாட்டுக்கான பார்வை அது" என்று பைஜு குறிப்பிடுகிறார்."
சமூக ஈடுபாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
சான்க்டிட்டி ஃபெர்ம், சூளகிரியில் உள்ள உள்ளூர் மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பண்ணையை 300 ஏக்கரில் இருந்து கிட்டத்தட்ட 600 ஏக்கராக விரிவுபடுத்தும் திட்டத்துடன், உள்ளூர் மக்களில் 250 பேருக்கு இந்த திட்டம் வேலையை வழங்கியுள்ளது. இந்த விரிவாக்கம், கிருஷ்ணகிரியில் உள்ள நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும். இது பற்றிக் குறிப்பிடும் பைஜு, "நாங்கள் பண்ணையை மட்டும் உருவாக்கவில்லை; ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம்" என்கிறார் பெருமிதத்துடன்.
"இயற்கைக்கு இசைவாக மக்கள் பணிபுரிய, வாழ மற்றும் செழித்து வளரக்கூடிய இடத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். எங்களுக்கு உள்ளூர் சமூகத்தின் ஆதரவு அமோகமாக உள்ளது. நாங்கள் வளர வளர அதற்கேற்ற வகையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், இந்த சமூகத்துக்கு திருப்பித் தருவதற்கு உறுதி ஏற்றுள்ளோம்" என மேலும் கூறுகிறார் பைஜு.

சான்க்டிட்டி ஃபெர்மை அனுபவியுங்கள்: இயற்கையின் சரணாலயம்
சான்க்டிட்டி ஃபெர்ம் என்பது நிர்வகிக்கப்படும் விளைநிலம் மட்டுமல்ல; நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு இது ஓர் அற்புத அனுபவம். வார இறுதியில் இந்த விவசாயப் பண்ணையில் பொழுதைக் கழிக்கலாம், இயற்கையான சூழலுடன் தடையின்றி நம்மை ஒன்றிணைக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட வீடுகளில் தங்கலாம். அமைதியான ஓய்வு அல்லது புத்துணர்ச்சிக்கான விடுமுறையை விரும்புவோருக்கு சிறந்த இடமாகும். குதிரை சவாரி மற்றும் மலையேற்றப் பாதைகள் முதல் பருவகால அறுவடை திருவிழாக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் வரை அனைத்தும் நடக்கிறது. ஒரு கைவிடப்பட்ட குவாரியை அழகான பொழுதுபோக்கு பகுதியாக மாற்றியிருக்கிறோம் இங்குள்ள கொலோசியம் (Colosseum) ஓர் அற்புதமான பகுதி. இது நீச்சல் குளம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான மேடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. "சான்க்டிட்டி ஃபெர்மின் அமைதியான அரவணைப்பில் மூழ்கி, மறக்க முடியாத அனுபவங்களின் பயணத்தைத் தொடங்குங்கள்" என அழைப்பு விடுக்கும் பைஜு.

நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரி
சான்க்டிட்டி ஃபெர்மில், விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
பண்ணையில் நாட்டு மாடுகள், ஆடுகள், வாத்துகள், முயல்கள், கோழிகள் மற்றும் குதிரைகள் உள்ளன. இவை அனைத்தும் பண்ணையின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உயிரி உரம் மற்றும் இயற்கை உரங்கள் போன்ற இயற்கை வேளாண்மை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"உங்கள் கனவு இல்லத்தை 15% நிலத்தில் கட்டுவது என்பது ஒரு கட்டமைப்பை உருவாக்குவதைவிட அதிக மதிப்புமிக்கது" என்கிறார் பைஜு. "இயற்கை சுற்றுச்சூழலை மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் உங்கள் கண்ணோட்டத்தை உயிர்ப்பிப்பதைப் போன்றது. தடையற்ற கட்டுமானப் பயணத்திற்கு நாங்கள் அதற்கான உதவியை வழங்குகிறோம். உண்மையிலேயே வீடு போல் உணரும் ஒரு சரணாலயத்தை உருவாக்க உங்களை வழிநடத்துகிறோம்." என்கிறார் பைஜு.
பசுமை வளர்ச்சியில் பாரம்பரியத்தை உருவாக்குதல்
ஃபெர்ம் போன்ற திட்டங்கள், தனிநபர் முயற்சிகள் எவ்வாறு பரந்த சுற்றுச்சூழல் இலக்குகளுடன் இணைந்து, நிலையான மற்றும் அற்புதமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு வலிமையான எடுத்துக்காட்டுகளாக செயல்படுகின்றன. இயற்கையின் மடியில் உள்ள அமைதியான சரணாலயமான சான்க்டிட்டி ஃபெர்மில் அமைதியைப் பெறுங்கள். அங்கு நிலையான வாழ்க்கை என்பது வெறும் கருத்து மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையாகும்" என்று உற்சாகமாக கூறி முடித்தார் பைஜு.
வருங்கால குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு
"ஒவ்வொரு சொத்தும் ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் எங்களுடன் தங்கியிருப்பது அசாதாரணமானது அல்ல. எங்களின் நிர்வகிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அமைதியில் மூழ்கி, எங்கள் கட்டடக்கலை அதிசயங்களின் வசதி மற்றும் அழகியலில் பொழுதை கழியுங்கள்" என்கிறார் பைஜு.
நான்காம் கட்ட திட்டம் செயல்பாட்டில் இருப்பதாலும், ஐந்து மற்றும் ஆறாவது கட்டங்கள் பற்றிய திட்டமிடுதல் இருப்பதாலும், சான்க்டிட்டி ஃபெர்ம் அதன் வளர்ச்சியையும் தாக்கத்தையும் தொடர, தயாராக உள்ளது. சான்க்டிட்டி ஃபெர்ம், சுற்றுச்சூழலின் மிகப் பெரிய இலக்குகளுக்கு பங்களிப்பதில் தனிப்பட்ட செயலின் வல்லமைக்கு ஒரு சான்று எனலாம். பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் மற்றவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள சான்க்டிட்டி ஃபெர்ம் அழைக்கிறது.
- நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டார்.
- இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வட்டாரத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வட்டார செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டு டாக்டர். ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அப்பழுக்கற்ற பணி செய்து இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் 10 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இரும்பு பேரிகார்டை சேதப்படுத்தி திருடி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
- பேரிகார்டு திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜி பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் பகுதியில் தர்மபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
இந்த ஏரியின் வளைவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாலும் வாகன ஓட்டிகள் நேரடியாக தண்ணீரில் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்தது. அதனை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இரும்பாலான பேரிகார்டு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த பேரிகார்டை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அதனை திருடிச் சென்றனர். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது மர்மகும்பல் சரக்கு வாகனத்தில் வந்து இரும்பு பேரிகார்டை சேதப்படுத்தி திருடி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பேரிகார்டு திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜி பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேருந்தின் பின் படிகட்டுகள் உடைந்து தரையில் உரசியவாறு வந்தடைந்தது.
- பலர் படிகட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு இறங்கினர்.
போச்சம்பள்ளி:
திருப்பத்தூர் டிப்போவிற்கு உட்பட்ட 13-பி அரசு பேருந்து திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை நாள்தோறும் இயக்கப்படுகிறது.
பல்வேறு சிறு கிராமங்களின வழியாக சென்று வரும் இந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று காலை போச்சம்பள்ளி வந்த பேருந்தின் பின் படிகட்டுகள் உடைந்து தரையில் உரசியவாறு வந்தடைந்தது. பயணிகள்
பலர் படிகட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு இறங்கினர். மேலும் ஆபத்தான முறையில் உள்ள இந்த படிக்கட்டு ஒரு வார காலமாக இதே நிலையில் இருப்பதாகவும், இதனை சீர்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆபத்தான முறையில் தொடர்ந்து ஒரு வார காலமாக பயணித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார். எனவே இந்த உடைந்த படிக்கட்டுக்கள் சீர்படுத்து பொதுமக்கள் பயன்பாடிற்கு கொண்டுவரவேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது.
- சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவராமன் மீது மற்றொரு பள்ளி மாணவி பாலியன் வன்கொடுமை செய்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என்பவர் கைதாகியுள்ளார்.
இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளியாக சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.
- கருத்துகள் ஒவ்வொன்றும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அண்ணாமலை தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார். இவர் வெற்றி பெறும் தொகுதியில் தோற்கக்கூடிய தலைமை பொறுப்பில் இருக்கிறார். இதனால் அவருக்கு பயம் வந்துவிட்டது.
ஏனென்றால் அண்ணாமலை தனக்கு தலைமை பொறுப்பு நமக்கு தொடர்ந்து இருக்காது. அதனால் இருக்கின்றவரையில் ஏதாவது கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
நிச்சயமாக அக்கட்சியின் தலைமையில் உள்ளவர்கள் உணர்ந்து, விரைவில் அவரை இந்த தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
எப்படி வெளியேற்றுவது என்று அக்கட்சிக்கு தெரியாமல்தான் அண்ணாமலை லண்டனுக்கு படிப்பதற்காக செல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றி வருகிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஆகி உள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் அவர் எந்த மக்களையும் சந்திக்கவில்லை. மாறாக ஊடகங்களையும், பத்திரிகைகளையும் சந்தித்து அரசியல் செய்து வருகிறார்.
இந்த 3 ஆண்டுகளில் ஒரு தற்குறி எப்படி பேசுவாரோ அதுபோல்தான் அவர் கூறும் கருத்துகள் ஒவ்வொன்றும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு அவர் கூறியதாவது, இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னார்.
மேலும் அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்றும், பா.ஜ.க. 2-வது பெரிய கட்சி என்றும் கூறினார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்கிறேன், 2-வது பெரிய கட்சி கூறினீர்கள் ஆனால் ஒரு இடத்திலாவது நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்களா?
கடந்த முறை வென்ற கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியடைந்த அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டதால் தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார்.
- இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
- இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமேலம்பட்டி கிராமத்தில் கந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புறனமைக்கபட்டு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து கோவில் கட்டுமான பணிகள் மற்றும் வண்ணம் தீட்டும் பணிகளை செய்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் தீர்மானித்து விரதம் இருந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் காலை, மாலை என கடந்த 15 நாட்களாக பூஜை நடந்து வந்த நிலையில் வட மலைப்பட்டி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர்.
இதில் சாமிக்கு சீர் கொண்டு வந்து அதனை மேளதாளம் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு இந்து, இஸ்லாமிய மக்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஆரத்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் சீர்வரிசைகளை கோவில் நிர்வாகத்திடம் வழங்க அதனை பூசாரியிடம் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். இரு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்து கோவிலுக்கு சீர் கொண்டு வந்து பூஜை செய்து அன்னதான வழங்கிய சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.
- விபத்தின்போது, 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்டுள்ளன.
- 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின்போது, 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார்.
- மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை அசோக்குமார் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளர் சிவராமன் கைது செய்யப்பட்டார்.
போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது அவரது வலது கால் முறிந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று காலை தகவல்கள் வெளியானது.
இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் காவேரிப்பட்டினம் நடேசா திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்ததில் சிவராமனின் தந்தை அசோக்குமார் (61) படுகாயம் அடைந்தார்.
தலையில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.






