என் மலர்
ஈரோடு
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
நாளை 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. இப்போதிலிருந்தே புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. பெரிய பெரிய ஓட்டல், ரிச்சார்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டின் போது ஒருவர் ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புத்தாண்டின்போது ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இளைஞர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். சிலர் கேட்கலை வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வாகன ஓட்டிகள் மது அருந்துவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
இதை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போலீஸ் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்திலுள்ள மாநில மாவட்ட சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 80 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட முழுவதும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு தொந்தரவு செய்வது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறும்போது,
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தாலோ, புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை பாயும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றார்.
- பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன.
- ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோபி:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.
எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மட்டும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்டம், தகவல் தொழில்நுட்பம் பிரிவு சார்பில் பரபரப்பான போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிரு ந்தன.
அந்த போஸ்டரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற வாசகம் கேள்விக்குறியுடன் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் சேவ் அவர் டக்டர்ஸ் (நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்) என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிச்சாமி படமும் அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டி ருந்தது.
இதைப்போல் கவுந்தப்பாடி, பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது.
- கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- யானை ஒன்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தாளவாடியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை சாப்பிடு வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.
அந்த வழியாக வந்த கார், அரசு பஸ், லாரிகளை வழி மறித்து கரும்பு கட்டு உள்ளதா என பார்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த யானை சாலையோரம் நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு கட்டுகளுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் வாகனங்களை தற்போது வழிமறித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலையில் வாகனத்தை மிக வேகத்தில் இயக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் ஏர்கா ரன்களை ஒழிக்க கூடாது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
- கட்டிடத்தின் உள்ளே சென்று ஏணி எடுத்துவர சென்றுள்ளார். அப்போது கட்டிடத்தின் சுவர் கூலிதொழிலாளியின் மீது விழுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது கேர்மாளம் ஊராட்சி. இந்த ஊராட்சி அலுவலகம் கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்ததாரர் பழுதடைந்த அலுவலக கட்டிடத்தை ஆட்கள் மூலம் இடித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது கூலி தொழிலாளி கடம்பூர் மாக்கம் பாளையத்தைச் சேர்ந்த சிக்குமாதன் (வயது 45) என்பவர் கட்டிடத்தின் உள்ளே சென்று ஏணி எடுத்துவர சென்றுள்ளார். அப்போது கட்டிடத்தின் சுவர் கூலிதொழிலாளியின் மீது விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த சிக்குமாதனை அங்கிருந்தவர்கள் கேர்மாளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கூலிதொழிலாளி சிக்குமாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடம்பூர் வனப்பகுதியில் குன்றி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.
- குன்றி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடம்பூர் வனப்பகுதியில் குன்றி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. கடம்பூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் குன்றி செல்லும் வழியில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை சாலையில் உலா வந்தபடி வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். யானை பார்ப்பதற்கு மிகவும் பெரிய தோற்றத்தில் பெரிய தந்தங்களுடன் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தற்போது யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக திம்பம், ஆசனூர், குன்றி போன்ற வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக உணவு ஏதாவது உள்ளதா என காலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பார்த்து வருகிறது.
தற்போது குன்றி சாலையில் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் முகாமிட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே குன்றி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனங்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என்றனர்.
இந்நிலையில் சாலை ஓரமாக சுற்றி வரும் ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணாநகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் விவசாயக் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்திருந்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாகியும் பட்டா வழங்காததால் அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் தொப்பம்பாளையம், கணபதி நகர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க பொருட்களுடன் நேற்று திரண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பவானிசாகர் போலீசார் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் சமாதானம் அடையாமல் தங்களுக்கு பிடித்த இடத்தை பிடித்து குச்சிகளை நடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி சரவணன், சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, வருமானத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தோம்.
சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று எப்போது கேட்டாலும் இடம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் என்று கூறி அனுப்பிவிடுகின்றனர். உடனடியாக எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
விண்ணப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட குரும்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் நிலத்தை அளவீடு செய்து, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளிக்கவே பொதுமக்கள் அதனை ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- ஈரோடு இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றின் தொடக்கம்.
- 222 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்கினார்.
ஈரோடு இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றின் தொடக்கம். பெரியாரை கொடுத்த மண் இந்த மண். தந்தை பெரியார் நமக்கு அண்ணா, கலைஞரை கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் திராவிட இயக்கம் இல்லை. இன்றைய வளர்ச்சி நிறைந்த தமிழ்நாடும் இல்லை. நாமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு தான் தந்தை பெரியார் ஏற்று நடத்திய வைக்கம் நூற்றாண்டு விழா கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கேரள மக்கள் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் இந்த ஈரோடு மண்ணின் மைந்தரான பெரியார் போட்ட அடித்தளம் தான். பல புரட்சிகராமான தொடக்கம் விளைந்திருக்கக் கூடிய இந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறக்கூடிய இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். உங்களை எல்லாம் நான் பார்த்து மகிழ்ச்சியடைந்தாலும் இந்த நேரத்திலே ஒரு சோகமும், வேதனையும் உள்ளது.
கடந்த வாரம் நம்முடைய ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம் தான் அது. தந்தை பெரியாரின் பேரன் அவர். மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக மிக சிறப்பாக செயல்பட்டவர் இளங்கோவன். அவருடைய இழப்பு ஈரோடு தொகுதிக்கு மட்டுமல்ல, ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. இன்றைக்கு அவர் நம்முடன் இருந்திருந்தால் நமது திராவிட மாடல் அரசின் செயல் திட்டங்கள் குறித்து எடுத்து உரைத்திருப்பார்.
அவருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாகவும், என்னுடைய அஞ்சலியை நான் செலுத்திக் கொண்டு இருக்கிறேன். இன்றை நாள் இந்த விழாவின் மூலமாக 951 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 559 புதிய திட்டங்களுக்கான திறப்பு விழா தொடங்கப்பட்டது. 222 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 50 ஆயிரத்து 88 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மொத்தமாக சொன்னால் ஆயிரத்து 368 கோடிமதிப்பிலான திட்டங்களின் விழாவாக நடந்து வருகிறது. விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த அமைச்சர் முத்துசாமியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். பரபரப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் நினைத்த காரித்தை நிகழ்த்தி காட்டுபவர் அமைச்சர் முத்துசாமி.
கடந்த 3 ஆண்டுகளில் நமது திராவிட மாடல் அரசு ஈரோட்டுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவதில் அந்த பட்டியல் மிகவும் நீளமானது. சிலவற்றை மட்டும் நினைவில் கூற விரும்புகிறேன். மேற்கு மண்டல மக்களின் நீண்ட கால கோரிக்கையான அத்திகடவு-அவினாசி திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி தொடங்கி வைத்தோம். இதற்கு ஈரோடு மாவடத்தில் உள்ள 357 ஏரிகளுக்கு நீர் வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட நகர் பகுதிகளில் 70 ஆண்டுகளாக குடியிருந்து வரக்கூடிய 4191 நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு உள்ளது. நத்தம் நிலவரி திட்டம் புதிய அரசாணைப்படி 2922 பட்டா வழங்கப்பட்டு இன்னமும் அந்த பணி தொடங்கி கொண்டு இருக்கிறது.
ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சிந்தடிக் ஓடுதளம் பாதைகூடிய கால்பந்து மைதானம் 7 கோடி மதிப்பில் புணரமைக்கப்பட்டு பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளது. 1368 கோடி திட்டங்களின் மதிப்பீட்டு விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்த கொண்டு இருக்கிறது.

அந்தியூர், பர்கூர், தாளவாடி, தலமலை, ஆசனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 9 கிராமங்களில் வசிக்க கூடிய மலைவாழ் மக்களின் வசதிக்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு தற்போது 3 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 6 பணிகள் நடைபெற்று வருகிறது. மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டு கணக்கின் அடிப்படையில் கொண்டு தாளவாடி மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 5 கோடியே 64 லட்சம் மதிப்பில் தலா 500 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு தற்போது உழவர்கள் மற்றும் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஐ.டி. பூங்கா அமைக்கப்படும்.
இவ்வாறு ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். அந்த உறுதியோடு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இன்னும் சில அறிவிப்புகளை நான் வெளியிடுகிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் உங்கள் அரசின் முதல் அறிவிப்பாக நான் சொல்வது ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்ககூடிய சாலைகள் 100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 15 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடமும், ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு 8.3 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டம் 18 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல் சத்தியமங்கலம், நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்துக்கான கூட்டு குடிநீர் திட்டம் 12 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும். அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கத்திரி மலை பகுதியில் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றுகிற வகையில் 2.50 கோடி மதிப்பீட்டில் மின் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டாரத்தில் நீர்பாசன திட்டத்தின் கீழ் 18 கோடி செலவில் இந்த திட்டம் மேம்படுத்தப்படும். உயர்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ள சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியில் 10 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதி, குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையமும் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் 15 சுகாதார நிலையங்களுக்கு 6.75 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் கட்டி தரப்படும். பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் மற்றும் வீர நாராயண பெருமாள் திருக்கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள் 10 கோடி மதிப்பில் அமைத்து தரப்படும். இவை எல்லாம் விரைவில் நிறைவேற்றப்படும். மக்களை பற்றி கவலை படாமல் செல்லும் முந்தைய அரசு இல்லை இது.
சொன்னதை செய்யும் கலைஞரின் திராவிட மாடலின் உங்கள் ஸ்டாலின் அரசு இது. நேற்று நான் ஈரோட்டு வந்த உடன் இந்த மாவட்டத்தில் நடந்து கொண்டு இருக்க கூடிய பணிகள் என்ன என்ன என்பது ஆய்வு செய்வதோடு, கலெக்டருடன் பல்வேறு திட்டம் குறித்து ஆய்வு செய்தேன். இப்படி தொடர்ந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
நமது திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்பு திட்டங்களை முழுமையாக சொல்ல நேரமில்லை. சிலவற்றை கூறுகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 4 லட்சத்து 90 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் பயனடைந்து வருகின்றனர். காலை உணவு திட்டத்தில் 46 ஆயிரம் 365 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். புதுமை பெண் திட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்புதல்வன் திட்டத்தில் 12 ஆயிரத்து 407 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். நான் முதல்வன் திட்டத்தில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் 67 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 7,630 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 6 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். 78 ஆயிரத்து 738 உழவர்களுக்கு 3 ஆயிரத்து 684 கோடி ரூபாய் பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 71 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 75 திருக்கோவில்களுக்கு திருகுடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. இப்படி தொடர் திட்டங்களை தருகின்ற காரணத்தால் தான் மக்களாகிய நீங்களும் எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டு இருக்கிறீர்கள். இது கடந்த ஆட்சியாளர்கள் அதாவது இப்போதைய எதிர்க்கட்சியாக இருக்க கூடியவர்களால் இந்த வெற்றியை தாங்கி கொள்ள முடியவில்லை.
தி.மு.க.வுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கிடைக்கும் வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவராக இருக்ககூடிய எடப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டே இருக்கிறார். ஒரு எதிர்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம். தவறு கிடையாது. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சாட்ட எதுவும் இல்லாததால் எதுவும் கிடைக்காமல் பொய் சொல்ல கூடாது. பழனிசாமி என்கிற தனி நபராக அவர் பொய் சொல்லவில்லை.
எதிர்க்கட்சி தலைவராக சொல்கிறார். அது அவர் வகிக்க கூடிய பதவிக்கு அழகல்ல. அன்மையில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் யாரும் எதிர்பார்க்காத அளவில் மழை வந்ததது. தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அதை நாம் எதிர்கொண்டோம். பல லட்சம் மக்களை நாம் காப்பாற்றி உள்ளோம். மழை தொடங்கிய உடன் துணை முதலமைச்சர், அதிகாரிகளை அனுப்பினோம். கலெக்டருடன் தொடர்ந்து தொலைபேசியில் நானே பேசினே். மாநில கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினேன். அதுமட்டுமல்ல அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு நானே நேரில் சென்று உதவிகள் செய்தேன்.
இரவு, பகல் பார்க்காமல் அரசு எந்திரம் பணி செய்த காரணத்தினால் ஓரிரு நாட்களில் பாதிப்பில் இருந்து மக்களை நாம் மீட்டோம். மக்கள் மழைக்கு பிறகு என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமோ அதை துரிதமாக செய்தோம். நிவாரண தொகை வழங்கி உள்ளோம். மத்திய அரசின் நிதியை பற்றி கூட கவலை படாமல் மாநில அரசே உடனடியாக எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளோம். இதை பார்து பொருத்து கொள்ள முடியாமல் கற்பணை குற்றசாட்டுகளை பழனிசாமி சொல்லி கொண்டு இருக்கிறார். முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்து விட்டதாக ஒரு பொய்யை பரப்பினார். ஆனால் உண்மை என்ன 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
முன்கூடியே எச்சரிக்கை செய்த காரணத்தினால் தான் பெரிய அளவில் உயிரிழப்புகளை நாம் தவிர்த்து உள்ளோம். இது தான் உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெரிவிப்பு இல்லாமல் திறந்து விட்டதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்து போனார்கள். சென்னையில் 23 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போதைய அமைச்சர்கள் யாரும் களத்திற்கு செல்லவில்லை. தன்னார்வலர்கள் தான் உதவி செய்தார்கள், இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் நினைக்கிறாரா, வெள்ளம், பூகம்பம் இதெல்லம் இயற்கை சீற்றம். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டது மனிதனால் உண்டாக்கப்ட்ட பேரழிவு. இதை நான் சொல்லவில்லை இது சி.ஏ.ஜி. அறிக்கையில் சொல்லி உள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்தார்கள். இதையெல்லாம் வைத்து சாத்தனூர் அணை பற்றி பொய் பேசி கொண்டு இருக்கிறார். அந்த பொய்யை சட்டமன்றத்தில் நாம் விரிவாக ஆதாரத்துடன் அம்பலபடுத்தி உள்ளோம்.
அதனால் உடனடியாக டங்ஸ்டன் சுரங்கத்தை கையில் எடுத்து கொண்டார். நமது அரசு எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு முன்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்த தீர்மானத்தில் மீது எதிர்க்கட்சித் தலைவர் என்ன பேசினார், ஏலமிட்ட மத்திய அரசை கண்டிக்காமல் நம்ம அரசை குறை கூறினார். அதற்குரிய பதில்களை எல்லாம் அமைச்சர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள். அதை கேட்காமல் சொன்னதையே சொல்லாமல் திரும்ப திரும்ப இந்த வாழைப்பழ செந்தில் காமெடி போன்று சட்டமன்றத்தில் திரும்ப திரும்ப சொன்னார். அதற்கு நான் உயிரோடு இருக்கும் வரை அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாக சொன்னேன், அதையும் கேட்கவில்லை. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்ததே அ.தி.மு.க. தான் என்பதை நாம் கேள்வி பட்டோம். அதையும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அரசை விமர்சனம் செய்து சட்டசபையில் கத்தி பேசினார். அவையெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தால் ஆட்சி கலைந்து போய் இருக்கும் என்றார். இது என்ன ஒரு காமெடி. நான் உங்களுக்கு அன்போடு பொறுமையோடு சொல்கிறேன். காலிக்குடம் உருண்டால் சத்தம் அதிகமாக தான் வரும். அதே போல் நீங்கள் உருண்டு புரண்டு சத்தம் போட்டாலும் உண்மை ஒரு துளியும் கிடையாது. பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது. 4 வருடம் ஆட்சியில் இருந்தும் உங்கள் பதவி சுயநலத்துக்காக துரோகம் செய்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்தது மக்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசை பார்த்து ஒரு கேள்வி கூட கேட்க தைரியம் இல்லாமல் உள்ளீர்கள். உங்களுக்கு மடியில் கனம் உள்ளது. இந்த லட்சணத்தில் எதிர்க்கட்சி உள்ளது. இப்படி தொடர்ந்து பொய் பிரசாரங்கள். நாள் தோறும் திட்டமிட்டு பரப்பும் அவதூறுகள். இப்படி எல்லா தடைகளையும் கடந்து தான் நாள்தோறும் நமது அரசு செயல்படுகிறது. மக்கள் திட்டங்களை செயல்படுத்தும் நமது திராவிட மாடல் அரசுக்கு மக்கள் வெற்றியை கொடுக்கிறார்கள். அதிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் மக்கள் கொடுத்த வெற்றி மகத்தானது. வெற்றியை வாரி, வாரி வழங்கக்கூடிய உங்களுக்கு திட்டங்களை வாரி, வாரி நாங்கள் வழங்குகிறோம். என்னை பொறுத்தவரை மக்களாகிய நீங்கள் என்மீது வைக்க கூடிய அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நான் என்றும் உண்மை உள்ளவனாக இருப்பேன். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு என்றும் தமிழ்நாட்டுக்கு நல்லதே தான் வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு செல்லும் முந்தைய அரசு அல்ல இது.
- பொய் கூறுவது எடப்பாடி பழனிசாமி வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அழகல்ல.
ஈரோடு:
ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* ஈரோட்டில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் புதிதாக செயல்படுத்தப்படும்.
* ஈரோடு மாநகராட்சி அந்தியூர், கோபி, மொடக்குறிச்சியில் ரூ.100 கோடியில் சாலை மேம்படுத்தப்படும்.
* கத்திரிமலை பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மின் இணைப்பு வழங்கப்படும்.
* உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள சிஎன்சி கல்லூரியில் TNPSC பயிற்சி மையம், நூலகம் அமைக்கப்படும்.
* 15 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
* ஈரோட்டில் ரூ.100 கோடி செலவில் பல ஒன்றியங்களில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
* மகளிர் உரிமை திட்டத்தில் ஈரோட்டில் 4 லட்சத்து 90 ஆயிரம் பெண்கள் பயன் பெறுகின்றனர்.
* புதுமை பெண் திட்டத்தில் 10 ஆயிரம் மகளிர் ஈரோட்டில் பயன் பெறுகின்றனர்.
* ஈரோட்டில் கடந்த 3 ஆண்டில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு
* வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு செல்லும் முந்தைய அரசு அல்ல இது.
* திமுக தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றுவதால் அதிமுகவுக்கு வயிற்றெரிச்சல்.
* திமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகுவதால் எடப்பாடி பழனிசாமி உளறி கொண்டிருக்கிறார்.
* பொய் கூறுவது எடப்பாடி பழனிசாமி வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அழகல்ல.
* மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டன. சாத்தனூர் அணை திறக்கும் முன் 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
* முன்னெச்சரிக்கையால் பெரிய அளவிலான உயிரிழப்புகளை தவிர்த்துள்ளோம்.
* செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதை மக்கள் மறந்துவிட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறாரா? சாத்தனூர் அணைணை வைத்து எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார்.
* மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் நிவாரண தொகை வழங்கி வருகிறோம்.
* டங்ஸ்டன் விவகாரத்தில் ஏலமிட்ட மத்திய அரசை விமர்சிக்காமல் மாநில அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வரப்பட காரணமான சட்டத்திருத்தத்தை அதிமுக ஆதரித்தது.
* கவுண்டமணி- செந்தில் வாழைப்பழ காமெடி போல் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
* காலி குடம் உருண்டால் சத்தம் அதிகம் வரும்.
* எங்களை பார்த்து கத்தி பேசும் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை பார்த்து கீச்சு குரலிலாவது பேச கூடாதா? என்றார்.
- மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த கோரிக்கை.
- குழந்தைகளிடம் நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பிச்சாண்டம்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூட்டங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் நெசவாளர்களின் தேவை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட் வரை உயர்த்தி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறதா? என அங்குள்ள நெசவாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.
அதற்கு நெசவாளர்கள் தொழில் மேன்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றனர். மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்தினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் நெசவாளர்களின் குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
குழந்தைகளிடம் என்ன படிக்கிறீர்கள். நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதனை அடுத்து முதலமைச்சருடன் நெசவாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- பவானி சாகரில் ஐயா ஈஸ்வரன் நினைவு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்.
ஈரோடு:
ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பில் 559 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஈரோடு தமிழகத்தில் புதிய வரலாற்றிற்கான தொடக்கம். வளர்ச்சி நிறைந்த தமிழகத்திற்கு காரணமான பெரியார், அண்ணா, கலைஞரை தந்த மண் ஈரோடு. வைக்கம் போராட்டத்தில் பெரியார் போட்ட அடித்தளத்தால் கேரள மக்கள் தமிழகத்தை பாராட்டுகின்றனர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம் எனக்குள் இருக்கிறது. தந்தை பெரியாரின் பேரசன் இளங்கோவனின் இழப்பு தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு.
பரபரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நினைத்த செயலை வெற்றிகரமாக நிகழ்த்தக் கூடியவர் அமைச்சர் முத்துசாமி.
ஈரோடு மாவட்டத்திற்கு தமிழக அரசு செய்துள்ள பணிகள் மிக பெரியது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வைத்தோம்.
தந்தை பெரியார் மருத்துவமனையில் பல்நோக்கு மலுத்துவமனை கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது.
பவானி சாகரில் ஐயா ஈஸ்வரன் நினைவு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும்.
பால்வள தந்தை பரமசிவத்தின் முழு உருவ சிலை பால் பண்ணையில் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
- முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் வருகிறார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் வருகிறார்.
மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் 2-வது கோடி பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம்பாள் என்ப வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 2 கோடியே ஒன்னாவது பயனாளியான வசந்தா என்பவர் வீட்டுக்கு நேரடியாக சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு விவரங்களை கேட்டு அறிந்தார்.
இதைத்தொடர்ந்து காளிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் முதல்-அமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உள்ள தங்கம் மஹாலில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிர்வாகிகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக முத்து மஹாலில் நடைபெற்ற மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திர குமார் இல்ல திருமண வர வேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்து சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு காளிங்கராயன் விருந்தினர் மாளிகை சென்று இரவில் ஓய்வெடுத்தார்.
அதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க சென்றார். அவருக்கு சாலை இருபுறங்களிலும் இருந்து மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டம் சென்னி மலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
இதேபோல் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளை திறந்து வைத்தார்.
நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு திட்டத்தில் கோபி, சத்திய மங்கலம், பவானி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியி ருப்புகள், ரூ.59.60 கோடியில் 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட்ட ஈரோடு ரிங் ரோடு, ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் ரோடு, ஈரோடு பஸ் நிலைய புதிய வணிக வளாகம், பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் மணிமண்டபம் மற்றும் ஊர்வசி சிலை என மாவட்ட முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதேபோல் சோலார் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சந்தை, தியாகி பொல்லான் அரங்கம் மற்றும் சிலை உள்பட மாவட்ட முழுவதும் ரூ.133 கோடியே 41 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் விழாவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்வாறு ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1,368 கோடியே 88 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலமாக ஈரோட்டுக்கு கிளம்பினார். ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பெருந்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சரை வரவேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். இவ்வாறாக 20 இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியான அதே பகுதியை சேர்ந்த சுந்தராம்பாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த திட்டத்தின்படி பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருக்கும். இந்த திட்டத்தின் 50வது லட்சம் பயனாளிக்கு சித்தலம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். 60-வது லட்சம் பயனாளிக்கு மைட்டாபட்டியிலும், 75-வது லட்சம் பயனாளியான நாமக்கல் மாவட்டம் போதமலையிலும், 80வது லட்சம் பயனாளிக்கு சைதாபேட்டையிலும், 90வது லட்சம் பயனாளிக்கு சென்னை விருகம்பாக்கத்திலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகம் வழங்கினார்.
1 கோடியாவது பயனாளிக்கு திருச்சியில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்.
இந்த திட்டத்தை பாராட்டி ஐ.நா.சபை சமீபத்தில் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஈரோடு, மேட்டுக்கடை பகுதியில் உள்ள தங்கம் மகாலில் நடைபெறும் தி.மு.க கட்சி நிர்வாகி கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சி குறித்தும், நிர்வாகிகள் கருத்துகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பெருந்துறை ரோடு, முத்து மகாலில் நடைபெறும் தி.மு.க மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பின்னர் இரவில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் ஓய்வு எடுக்கிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையிலிருந்து கிளம்பி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொது
மக்கள் மத்தியில் பேசுகிறார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளை திறந்து வைக்கிறார். நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு திட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.59.60 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஈரோடு ரிங் ரோடு, ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் ரோடு, ஈரோடு பஸ் நிலைய புதிய வணிக வளாகம், பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் மணிமண்டபம் மற்றும் உருவசிலை என மாவட்டம் முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் செலவில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
இதைப்போல் சோலார் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சந்தை, தியாகி பொல்லான் அரங்கம் மற்றும் சிலை உள்பட மாவட்டம் முழுவதும் ரூ.133 கோடியே 66 லட்சம் செலவில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதன்படி ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1,368 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.
விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவை பிரம்மாண்டமாக நடத்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.






