என் மலர்tooltip icon

    ஈரோடு

    அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு அ.தி.மு.க. பிரமுகர் மகன் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

    அந்தியூர், பவானி, சென்னிமலை, கோபி பகுதிகளை சேர்ந்த பலர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும் பாதிப்பு குறைந்தபாடில்லை.

    நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் பலியானார்.

    அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அ.தி.மு.க.வில் சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். அவருடைய மனைவி ரமணி. இவர்களுடைய மூத்த மகன் ரஞ்சித்குமார் (வயது 28). பி.பி.எம். பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தீபாவளி விடுமுறைக்காக ரஞ்சித்குமார் கடந்த 17-ந் தேதி ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ரஞ்சித்குமாருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    அதனால் தவுட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 2 நாட் கள் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    நேற்று மாலை ரஞ்சித்குமார் ரத்த வாந்தி எடுத்தார். உடனே டாக்டர்கள் அவருடைய ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். ஆனால் சிறிதுநேரத்திலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் கிடைத்த ரத்த மாதிரி சோதனை அறிக்கையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிந்தது. ரஞ்சித்குமார் பலியானதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆனது.



    அ.தி.மு.க.வில் உள்ள இளைஞர்களின் பட்டாளம் தினகரன் பின்னால் உள்ளது என ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் பேசினார்.
    ஈரோடு:

    அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் கட்சியின் 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஈரோடு திருநகர் காலனியில் நடந்தது.

    கூட்டத்தில் கட்சியின் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான குண்டு கல்யாணம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவர் நலமுடன் இருப்பதாகவே தம்பிதுரையும், மதுசூதனனும் கூறினார்கள்.

    ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படும்போது நான் தூரத்தில் இருந்து அவரை பார்த்தேன். ஆனால் தற்போது துணை முதல்-அமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை பார்க்கவே விடவில்லை.

    ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த வீடியோ ஆதாரம் சசிகலாவிடம் உள்ளது. இந்த ஆதாரத்தை அரசியலுக்காக பயன்படுத்த அவர் விரும்பவில்லை அதுவே கோர்ட்டில் கேட்கும்போது கட்டாயம் வீடியோ ஆதாரம் வழங்கப்படும். அந்தநேரம், பொய் சொல்லி ஆட்சி புரியும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் முகத்திரை கிழியும்.

    அ.தி.மு.க. உள்ள இளைஞர்களின் பட்டாளம் தினகரன் பின்னால் உள்ளது. நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. அண்ணன் தினகரன் தலைமையில் விரைவில் உண்மையான அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

    இப்போது நடந்து வரும் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் ஆட்சி முடிந்து விடும். சசிகலாவின் ஆதரவாலும், முயற்சியாலும், முதல்வர்கள் ஆன பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களின் அரசியல் வாழ்வு இனி கேள்வி குறிதான். இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குன்றி வனப்பகுதியில் பலத்த மழை குண்டேரிபள்ளம் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே குண்டேரிபள்ளம் அணை உள்ளது. இந்த அணை 42 அடி கொள்ளளவை கொண்டது. அணையையொட்டி உள்ள விளாங்கோம்பை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வறண்டு கிடந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 30 அடியாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியான குன்றி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. மேலும் விளாங்கோம்பை வனப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இதனால் குண்டேரிப் பள்ளம் அணைக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்தது. 5212 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

    நேற்றிரவு ஒரே நாளில் குண்டேரிபள்ளம் அணை 10 அடி உயர்ந்தது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 40 அடியாக இருந்தது. முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடி மட்டுமே உள்ளது.

    இதற்கிடையே காலை 9 மணி நிலவரப்படி நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 310 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒரே நாளில் குண்டேரிப்பள்ளம் அணை 10 அடி உயர்ந்ததையொட்டி டி.என்.பாளையம், சத்தியமங்கலம், கோபி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    என்னை யாரும் கடத்தவில்லை, சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு நானே வந்தேன் என்று ஈரோடு திரும்பிய விசைத்தறி தொழிலாளி கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு காசிபாளையம் பகுதி காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரவி (வயது 44). விசைத்தறி தொழிலாளி.

    வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை பெற இவர் கேரளாவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோர் அதிரடி நடவடிக்கை காரணமாக கேரளாவில் நடக்க இருந்த சிறுநீரக ஆபரே‌ஷன் தடுத்து நிறுத்தப்பட்டு ரவி மீட்கப்பட்டார்.

    கேரளாவில் இருந்து ஈரோடு வந்த ரவி இன்று காலை மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவரது மனைவி சம்பூர்ணமும் உடன் இருந்தார்.

    அப்போது ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. நிர்ப்பந்திக்கவும் இல்லை. நான் வாங்கிய கடன் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.

    எனது வருமானமும், எனது மனைவி வருமானமும் கடனுக்கான வட்டியை கொடுக்கவே சரியாகப்போனது. அசலை கட்ட முடியவில்லை.

    எனவேதான் கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு வந்தேன். என்னிடம் புரோக்கர் போனில்தான் பேசினார். சிறுநீரகத்தை விற்க 6 மாதத்துக்கு முன்பு பேசினார்.

    சிறுநீரகத்தை தமிழகத்தில் ஆபரே‌ஷன் செய்து எடுக்க முடியாது என்று கூறினர். எனவேதான் என்னை கேரளாவுக்கு அழைத்து சென்றனர். இதற்கு நானாக விருப்பப்பட்டுதான் சென்றேன்.

    சிறுநீரக ஆபரே‌ஷனுக்காக என்னை கடந்த 6 மாதமாக கேரள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். எனது உடலை பரிசோதனை செய்தனர். ரத்தம் எடுத்து பரிசோதித்தனர்.

    எல்லாம் சரியாக இருந்ததால்தான் 24-ந் தேதி (நேற்று) ஆபரே‌ஷன் என்று கூறி இருந்தனர். எனவே தான் நான் நேற்று அங்கு சென்றேன்.



    எனது மனைவிக்கு நான் சிறுநீரகத்தை விற்பதில் முதலில் இருந்தே பிடிக்கவில்லை. மறுப்பு தெரிவித்துக்கொண்டே இருந்தாள். அவள் எதிர்க்கிறாள் என்று தெரிந்ததும் அவளுக்கு தெரியாமல் காரியங்களை செய்தேன்.

    அந்த வகையில்தான் நேற்றும் அவளுக்கு தெரியாமல் கேரளாவுக்கு சென்றேன். ஆனால் அவள் என்னை கட்டாப்படுத்தி அழைத்து சென்றதாக புகார் கூறிவிட்டாள். எனவே ஆபரே‌ஷன் தடுக்கப்பட்டு நான் மீட்கப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு ரவி கூறினார்.

    கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு ரவி அழைத்து வரப்பட்ட காட்சி.
    கடனுக்காக கிட்னியை விற்க கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தொழிலாளி ஈரோடு திரும்பினார். இன்று அவரிடம் கலெக்டர் பிரபாகர் விசாரணை நடத்த உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு காசிபாளையம் பகுதி காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரவி(வயது 44). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சம்பூர்ணம் ( 37). டெய்லர்.இவர்களுக்கு நிவேதா(13) என்ற மகளும், விஷால் (11) என்ற மகனும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இருவரும் வேலை பார்த்து வந்தாலும் குடும்ப செலவு அதிகமாக இருந்தது. இந்நிலையில் ரவியின் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது.

    இதனால் ரவி கடன் வாங்கினார். அதற்கு வட்டியும் கட்டி வந்தார். மேலும் மற்றொருவரிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கினார். கடனையும், வட்டியும் திரும்ப செலுத்த முடியாமல் ரவி சிரமப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி முதல் ரவி மாயமானார். இந்நிலையில் ரவிக்கு கடன் கொடுத்தவர்களில் ஒருவர் ரவியை சிறுநீரகத்தை விற்று ரூ.3 லட்சம் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி கேரள மாநிலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளதாக ரவியின் மனைவி சம்பூர்ணம் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தார்.

    அதில் தனது கணவருக்கு நடக்க இருக்கும் சிறுநீரக ஆபரேசனை தடுத்து நிறுத்தி மீட்டு தர வேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து கலெக்டர் பிரபாகர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டரிடம் தொடர்பு கொண்டு விவரங்களை கூறி நடக்க இருந்த ஆபரேசனை தடுத்து நிறுத்தினார்.

    மேலும் இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் நெட்டூர் எஸ்.பி.யிடம் பேசி நடவடிக்கை எடுத்தார்.

    சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ரவிக்கு நடக்க இருந்த சிறுநீரக ஆபரேசனை தடுத்து நிறுத்தினர். விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ரவி தனது தந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தது தெரிய வந்தது. தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆபரேசன் செய்யும் கையொப்பத்தில் ரவி தந்தையே கையெழுத்து போட்டதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.இதையடுத்து ரவி நேற்று இரவு ஈரோடுக்கு வந்தார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கூறும் போது, எங்களுக்கு கிடைத்த தகவல் படிரவி அவருக்கு தெரிந்தே தான் சிறுநீரகத்தை விற்க சென்றார். ஆனால் அவருடைய மனைவியின் அன்பு அவரை மீட்டு இருக்கிறது. ரவி ஈரோடுக்கு வந்து விட்டார்.

    இன்று அவரிடம் கலெக்டர் பிரபாகர் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை முடிவில்தான் கந்து வட்டி கொடுமை காரணமாக கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்டாரா? அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் கேரள சென்றாரா? என்று தெரிய வரும் என்றார்.


    அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு உறுப்பினர் சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி போலி ரசீதுடன் விவசாயி கைது
    கோபி:

    அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு உறுப்பினர் சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி செய்த விவசாயி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த போலி ரசீது, போலி பாஸ்புக் மற்றும் அவர் வந்த ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டம் சேவூரில் வசித்து வருபவர் கண்ணப்பன் (வயது 63). விவசாயி. இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கூடங்குளம். தற்போது திருப்பூர் சேவூரில் வசிக்கும் இவர் ஒரு ஆம்னி வேன் மூலம் ஈரோடு மாவட்டம் கோபி பகுதிக்கு வந்தார். பிறகு கோபி அடுத்த கொளப்பலூருக்கு சென்றார்.

    அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நான் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறேன். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று கூறி உறுப்பினர் ரசீது கொடுத்தார்.

    ரசீது கொடுத்த விவசாயிகளிடம் அவர்களின் வசதிக்கேற்ப 100 ரூபாய், 1000 ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என வசூல் செய்துள்ளார்.

    ஏற்கனவே அப்பகுதியில் உள்ள அத்திக்கடவு- அவினாசி திட்ட உறுப்பினர்களுக்கு கண்ணப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை பிடித்தனர்.

    அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். எனவே அவரை விவசாயிகள் கொளப்பலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கண்ணப்பனிடம் போலி பாஸ்புக், போலி ரசீது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர் போலி ரசீது மூலம் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதாக கூறி பல லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்திருப்பது தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து போலி ரசீது, போலி பாஸ்புக் மற்றும் அவர் வந்த ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் கந்து வட்டி கும்பலால் கடத்தப்பட்ட விசைத்தறி தொழிலாளியின் ‘கிட்னி’யை எடுக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தி தொழிலாளியை மீட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரவி. விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 37) இவர் இன்று ஈரோடு மாவட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், கந்து வட்டிக்காக தன் கணவர் ரவியை கடத்தி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள வி.பி.எஸ்.லேக்ஷோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு அவரது கிட்னியை ஆபரேசன் மூலம் எடுக்க உள்ளதாகவும் ரவியின் மனைவி சம்பூர்ணம் கூறி உள்ளார்.

    இந்த ஆபரே‌ஷன் நாளை (புதன்கிழமை) நடக்க இருப்பதாகவும் சம்பூர்ணம் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் கூறி உள்ளார்.

    நாங்களே வறுமையில் வாழ்கிறோம். இந்த நிலையில் கந்து வட்டி பணத்துக்காக என் கணவரின் கிட்னியை எடுத்தால் அவரது உடல் நலம் பாதிக்க கூடும். ஆகவே நாளை நடக்கும் என் கணவரின் ‘கிட்னி’ எடுக்கும் ஆபரேசனை தடுத்து நிறுத்துங்கள் எனவும் ஈரோடு கலெக்டரிடம் சம்பூர்ணம் கதறியழுதபடி கூறினார்.

    அவரது வேண்டுகோளை உடனே ஏற்றுக்கொண்ட ஈரோடு கலெக்டர் பிரபாகர் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    “ஈரோட்டை சேர்ந்த தொழிலாளி ரவி என்பவரின் கிட்னி தான் ஆபரேசன் எர்ணாகுளம் ஆஸ்பத்திரியில் நாளை நடக்க இருப்பதாக தெரிகிறது. அதை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

    பிறகு ரவியின் மனைவி சம்பூர்ணத்தை ஈரோடு எஸ்.பி ஆபிசுக்கு போய் எஸ்.பி.யிடம் புகார் செய்யுங்கள் நானும் எஸ்.பி.யிடம் பேசுகிறேன் என்று கூறினார்.


    உடனே சம்பூர்ணம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்று எஸ்.பி. சிவக்குமாரிடம் மனு கொடுத்தார்.

    அவரும் எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு போனில் தகவல் கொடுத்து ஆபரே‌ஷனை தடுத்து நிறுத்துவதாக உறுதி கூறினார்.

    இதனையொட்டி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்ற எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆபரே‌ஷன் நடக்க இருந்த ஆஸ்பத்திரிக்கு தகவல் கூறினர். ஆஸ்பத்திரிக்கு கேரள போலீசார் விரைந்தனர். அங்கு கிட்னி ஆபரேசனுக்காக சேர்க்கப்பட்டிருந்த ஈரோடு தொழிலாளி ரவியை மீட்டனர்.

    இன்று மாலை எர்ணாகுளத்தில் இருந்து அவர் ஈரோட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்.

    புகார் கொடுத்த ஒருசில மணி நேரத்தில் கணவரை மீட்டு கொடுத்த ஈரோடு கலெக்டர் பிரபாகர், எஸ்.பி.சிவக்குமாருக்கு ரவியின் மனைவி சம்பூர்ணம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
    ஈரோட்டில் கந்து வட்டிக் கும்பல், கிட்னியை எடுப்பதற்காக தன் கணவரை கடத்திச் சென்றுவிட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் தீக்குளித்தனர்.

    இதில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

    இந்த நிலையில் இதேபோல் ஈரோட்டில் ஒரு கந்து வட்டி கொடுமை சம்பவம் நடந்துள்ளது. கந்து வட்டிக்காரர்களால் என் கணவர் கடத்தி செல்லப்பட்டு உள்ளார். அவரின் கிட்னியை கேட்டு மிரட்டுகிறார்கள் என அவரது மனைவி பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

    பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 37).

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்த சம்பூர்ணம் அங்கு கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

    எனது கணவர் ஒரு விசைத்தறி தொழிலாளி. நான் ஒரு துணி நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறேன். எங்களுக்கு விஷால் (11) என்ற ஒரு மகனும், நிவேதா (13) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    இருவரும் வேலைக்கு சென்றாலும் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தினறினோம். இதனால் என் கணவர் ரவி சிலரிடம் கடன் வாங்கினார்.


    கடன் கொடுத்தவர்களுக்கு உடனடியாக கடனை கொடுக்க முடியாமல் அவர்களுக்கு வட்டி மட்டும் கொடுத்து வந்தார். எனினும் கடன் கொடுத்தவர்கள் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு தொந்தரவு செய்தனர்.

    மேலும் எங்களின் குடும்ப ஏழ்மையை தெரிந்த கடன் கொடுத்த ஒருவர் என் கணவரிடம், “உனக்கு தான் 2 கிட்னி உள்ளதே ஒரு கிட்னியை தானம் செய்தால் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். கிட்னியை விற்று என் பணத்தை கொடு. நானே கிட்னியை எடுக்க அழைத்து செல்கிறேன்” என்று கூறினார். என் கணவர் இதற்கு சம்மதிக்கவில்லை எனினும் என் கணவரை அவர் கடத்தி சென்று விட்டார். அவினாசியை சேர்ந்த கிட்னி புரோக்கர் ஒருவரும் என் கணவரை நிர்பந்தித்து அழைத்து சென்று விட்டார்.

    இப்போது என் கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு கடத்தி சென்று அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் கிட்னியை எடுக்க சேர்த்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால் கந்து வட்டிகாரர்களிடமிருந்து என் கணவரை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு மனைவி சம்பூர்ணம் அந்த மனுவில் கூறி உள்ளார்.

    இந்த பரபரப்பு புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் கூறி உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
    ஈரோட்டில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம் பாளையம், ஹவுசிங்யூனிட் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் மோனீஸ்வரன்( வயது 15). மோனீஸ்வரன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் காலையில் பள்ளிக்கு செல்லும் மோனீஸ்வரன் மாலை வீடுக்கு வந்து விடுவார்.

    நேற்று முன்தினம் வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு செல்வதாக மோனீஸ்வரன் கூறிவிட்டு செனறார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மோனீஸ்வரன் பெற்றோர்கள் மகனை பல்வேறு இடங்களில் தேடினர்.

    எனினும் மோனீஸ்வரன் குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து அவனது தந்தை சண்முகம் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார்.

    மாயமான அன்று மோனீஸ்வரன் சிவப்பு கலர் முழுக்கை சட்டை, நேவி புளுகலர் பேண்ட் அணிந்திருதான். இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு ஈரோடு சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் டெங்கு காய்ச்சலில் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு அடுத்த வெள்ளோட்டை சேர்ந்த 6 வயது சிறுமி பூஜா டெங்கு நோய்க்கு நேற்று முன்தினம் பலியானார்.

    இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த மேலும் ஒரு சிறுமி டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளார்.

    ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 37). தனியார் பெட்ரோல் பங்கில் கேஷியராக பணி புரிகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (30). அஸ்மிதா (7) என்ற மகளும், சரவணன் (4) என்ற மகனும் உள்ளனர்.

    சிறுமி அஸ்மிதா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஒரு வாரத்துக்கு முன் அவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அஸ்மிதாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையொட்டி அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 9 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி அஸ்மிதா நேற்று இரவு பரிதாபமாக இறந்தாள்.

    டெங்கு நோய்க்கு பலியான சிறுமி அஸ்மிதா வீட்டுக்கு இன்று ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி சென்றார்.

    அங்கு அஸ்மிதா பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தந்தை-மகள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த வெள்ளோடு நத்தக்காட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). இவரது மனைவி கலைவாணி (38). மகள் நிசாந்தி (17). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கவுண்டச்சிபாளையத்தில் இருந்து ராசாம் பாளையத்துக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளை மனோகரன் ஓட்டினார். தாய் மற்றும் மகள் பின் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

    அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டது. இதில் மனோகரன் மற்றும் அவரது மகள் நிசாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது.அவர்களை உடனடியாக மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை அரசியல் நாகரீகமற்ற கருத்து தெரிவித்ததாக கூறி போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை அரசியல் நாகரீகமற்ற கருத்து தெரிவித்ததாக கூறி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

    ஈரோட்டில் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியல் நடந்தது. கிழக்கு மாவட்ட பொருளாளர் ஈரோடு அரசாங்கம் தலைமை தாங்கினார்.

    பகுதி செயலாளர் மதிவாணன், அரங்கநாதன், மூர்த்தி, ரஞ்சித், பால்ராஜ் உள்பட 15 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×