என் மலர்tooltip icon

    சென்னை

    • புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வண்டலூர்-பாடியநல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வண்டலூர் முதல் திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலான தொலைவிற்கு சுங்கக்கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த வெளிவட்டச் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-நசரேத்பேட்டை இடையே கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனங்களுக்கு ரூ.95, லாரி மற்றும் பஸ்களுக்கு ரூ.200, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.220, ரூ.315, ரூ.385 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன்களுக்கு ரூ.85, இலகுரக வணிக வாகனம் ரூ.135, லாரி, பஸ்கள் ரூ.285, கனரக வாகனங்கள் ரூ.310, ரூ.445, ரூ.545.

    வண்டலூர்-பாடிய நல்லூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.115, இலகுரக வணிக வாகனம் ரூ.190, லாரி, பஸ்களுக்கு ரூ.395, கனரக வாகனங்களுக்கு ரூ.430, ரூ.615, ரூ.750 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-மீஞ்சூர் வரை ரூ.140, ரூ.225, ரூ.470 மற்றும் கனரக வாகனங்களுக்கும் ரூ.510, ரூ.735, ரூ.895 வசூலிக்கப்பட உள்ளது.

    நசரேத்பட்டை- நெமிலிஞ்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம் ரூ.40, லாரி, பஸ்கள் ரூ.85. 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.90, ரூ.130, ரூ.160 புதிய கட்டணம்.

    நசரேத்பேட்டை- பாடியநல்லூர் இடையே கார், ஜீப் ஆட்டோவிற்கு ரூ.55, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.90, லாரி, பஸ்கள் ரூ.195, 3 வகையான கனரக வாகனங்களுக்கு ரூ.210, ரூ.300, ரூ.370. நசரேத்பேட்டை - மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன் ரூ.80, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.125, லாரி, பஸ்கள் ரூ.265, இதர கனரக வாகனங்கள் ரூ.290, ரூ.420, ரூ.510.

    • வக்பு சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
    • எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள்.

    சென்னை:

    மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-

    வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு இந்திய நாடு. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

    இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இத்தகைய உணர்வைக் கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும். ஆனால் ஒன்றியத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசானது, தனது செயல்பாடுகள் அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாகச் செய்து வருகிறது. எதைச் செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் தான் திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.

    குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மை இசுலாமிய மக்களையும், இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது. இந்தியைத் திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலமாக வஞ்சிக்கிறது.

    சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது. நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கையானது அடித்தட்டு மக்களைப் பாதிப்பதாக அமைந்திருப்பதை அனைவரும் அறிவோம். இந்த வரிசையில் கொண்டு வரப்படும் வக்பு சட்டத் திருத்தமானது சிறுபான்மை இசுலாமிய இன மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இம்மாமன்றத்தில் நான் முன்மொழிய இருக்கிறேன் என்பதை முன்னுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வக்பு சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரைவினைக் கடந்த 8-8-2024 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால் அதனை தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.

    எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்தச் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்பு சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக ஏற்படும் மோசமான விளைவுகள் சிலவற்றை இம்மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    வக்பு சட்டத்தை ஒன்றிய அரசு திருத்த நினைக்கிறது. இதன் மூலம் மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும்.

    அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாகக் கருதப்படாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.

    ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்பு அறிவிக்க முடியும் என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்புகளைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.

    இசுலாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

    மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென்று இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும்.

    வக்பு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது வக்பு வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-ன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவது ஆகும்.

    வக்பு பயனர் என்ற பிரிவை நீக்கத் திட்ட மிட்டுள்ளார்கள். நீண்ட காலப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது.

    லிமிட்டேஷன் ஆக்ட் என்று சொல்லப்படும் காலவரையறைச் சட்டம் வக்பு சொத்துகளுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள் இனி வக்பு என கருதப்பட மாட்டாது. இந்தப் பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை ஒன்றிய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை.

    இந்த அடிப்படையில் வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இசுலாமிய மக்களின் மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருக்கிறது.

    இதனை பாராளுமன்றக் கூட்டுக் குழுவிடம் 30.9.2024 அன்று தமிழ்நாடு அரசு தெளிவாகச் சொல்லி இருக்கிறது. பாராளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்ற தி.மு.க. உறுப்பினர்களான முன்னாள் அமைச்சரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவும் கடுமையாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க. மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை பாராளுமன்றக் கூட்டுக் குழு நிராகரித்து இருக்கிறது. பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் முடிவுகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது. இந்த நிலையில் வக்பு திருத்தச் சட்டமானது எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இசுலாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம் என்று நான் கருதுகிறேன்.

    சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, வக்பு நோக்கத்துக்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற, பல்வேறு பிரிவுகள் வக்பு திருத்தச் சட்டத்தில் இருக்கின்றன.

    இந்தத் திருத்தச் சட்டமானது வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும். எனவே நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

    மதநல்லிணக்கம்-அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கூறிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

    இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது.

    ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்குக் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை நான் முன்மொழிந்து அமைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதையடுத்து அரசின் தனித் தீரமானம் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    மத்திய அரசை எதிர்த்து கொண்டு வரப்பட்ட அரசின் தனித் தீர்மானத்துக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • இருமொழிக்கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
    • வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

    தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது.

    தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.

    இருமொழிக்கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.

    அடுத்த முறை டெல்லி செல்லும்போது வக்பு வாரிய திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறுமாறு வலியுறுத்துங்கள் என்று கூறினார்.

    வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.

    • மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
    • தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

    மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    • பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
    • கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு அனைத்துக் கட்சிகளும் இப்போதே தயாராகத் தொடங்கியுள்ளன.

    ஆளும் தி.மு.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. நடிகர் விஜய்யும் நாளை பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் நிலையில் பூத் கமிட்டியிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் கடந்த ஒன்றரை மாதங்களாக திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. வீடு வீடாக சென்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்த பிரசாரம் நடந்து வருகிறது.

    இதுவரை லட்சக்கணக் கான மக்களை திண்ணை பிரசாரம் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

    நாளை (வெள்ளிக்கி ழமை) 7-வது வாரமாக திண்ணை பிரசாரம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் சுமார் ஒரு லட்சம் பேரை சந்தித்து பேச அ.தி.மு.க. இளம் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த திண்ணை பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன.
    • புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது. தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

    இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்


    உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒன்றிய பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.
    • இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

    தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    இதையடுத்து தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எதைச்செய்தாலும் குறிப்பிட்ட பிரிவினரை வஞ்சிக்கும் விதமாகவே செயல்படுகிறது.

    * ஒன்றிய பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.

    * இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

    * பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது.

    * அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கிறது.

    * சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, வக்பு நோக்கத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.
    • இஸ்லாமியர்களின் மத உரிமையில் அரசு தலையிடுகிறது.

    தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

    இதையடுத்து தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம்.

    * வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.

    * வக்பு வாரிய சொத்துக்களை அரசு நிர்வகிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது.

    * இஸ்லாமியர்களின் மத உரிமையில் அரசு தலையிடுகிறது.

    * சட்டத்திருத்தம் நிறைவேறினால் அரசின் தலையீடு அதிக அளவில் இருக்கும்.

    * வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு இந்திய நாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமாக, ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களை ஏமாற்றுவார்கள்.
    • தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது.

    சென்னை :

    தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக பதிலளித்தார். அதில், "இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது. இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?" என தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:-

    "திரு. மு.க. ஸ்டாலின், நீங்கள் நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாவலர் என்று வேடமிட்டு ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர். வழக்கமாக, ஏமாற்றுபவர்கள் பணக்காரர்களைத் தான் ஏமாற்றுவார்கள். ஆனால் தி.மு.க. எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை; அவர்கள் பணக்காரர்களையும் ஏழைகளையும் சேர்த்தே ஏமாற்றுகிறார்கள்.

    தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது. ஆனால் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்த கொள்கையை எதிர்க்கிறது என்பதை இப்போது மொத்த நாடும் அறிந்திருக்கிறது. அவர்கள் உங்களை ஒரு நயவஞ்சகர் என்று அழைக்கிறார்கள், மு.க.ஸ்டாலின்.

    தமிழக முதல்வர் தனது கட்சிக்காரர்கள் அங்கும் இங்கும் திட்டமிட்டு நடத்திய நாடகம் முழு தமிழகத்தின் குரலையும் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறார். மக்களின் கவனத்தை முக்கியமற்ற விஷயங்களில் திசைதிருப்ப நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அம்பலமாகிவிட்டன என்பதை நீங்கள் உணரவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது.

    உங்கள் அறியாமையின் பேரின்ப உலகில் வாழ்க, மு.க. ஸ்டாலின். நாங்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்," என்று கூறியுள்ளார்.



    • அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    • தமிழகத்தின் நலனுக்காக அவர் முன் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் பேசிய வீடியோவில்,

    இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 மணி நேரத்துக்கு மேலாக தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன.

    தமிழகத்தின் நலனுக்காக அவர் முன் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார்.

    • இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    • கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ேராலியம் ஆகியவை மூலம் வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு வினியோகத்தில் ஈடுபட்டுள்ளன.


    சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டலிங் மையங்களுக்கு ஏற்றி செல்லும் பணியில் நாடு முழுவதும் 24 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2025-30-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    புதிய ஒப்பந்தத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை குறைவாக கேட்டு இருப்பதோடு 21 டன் எடை கொண்ட கியாஸ் மற்றும் 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்கிற விதியை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    மேலும் 2 அச்சு லாரிகளை குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் , வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையையே கடை பிடிக்க வேண்டும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் எண்ணை நிறுவனங்கள் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை ஏற்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சந்தித்து சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய தளர்வு ஏதும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் விரக்தி அடைந்த கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    அதன்படி தென் மண்டல அளவில் இயக்கப்படும் 6 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஆங்காங்கே நிறுத்தி இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் கிடங்குகளில் இருந்து கியாஸ் சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் பிளாண்ட்களுக்கு கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் விரைவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உடனடியாக இதில் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் செந்தில் கூறியதாவது-

    புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 2 அச்சு லாரிகள் புறக்கணிப்பு, கிளீனர் இல்லையென்றால் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அபராதம், சிறிய விபத்து என்றாலும் 2 ஆண்டுகளுக்கு தடை என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருந்தன.

    மேலும் 3 அச்சு லாரிகளுக்கு 25 சதவீதம், 2 அச்சு லாரிகளுக்கு 75 சதவீதம் தொழில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது மட்டும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. புதிய டேங்கர் லாரிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதற்கு 60 லட்சம் வரை செலவாகும்.

    இதன் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறியும் கடந்த 24-ந் தேதி வரை விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. புதிய ஒப்பந்தத்தால் நாங்கள் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும், இதனால் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

    இதனால் எண்ணை நிறுவனங்களின் தென் மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்பட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து லாரியில் கியாஸ் எடுத்து செல்லும் பணியில் ஈடுபடும் 6 ஆயிரம் டேங்கர் லாரிகளும் இன்று காலை முதல் இயங்கவில்லை.

    இதில் தினசரி 1500 கியாஸ் டேங்கர் லாரிகளில் கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முடங்கி உள்ளதால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கிடையே இன்று மாலை மும்பையில் இருந்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கோவைக்கு வருகிறார்கள். அவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம், அதில் சுமூக முடிவு ஏற்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம், போராட்டம் தொடர்ந்தால் ஒரு வாரத்திற்கு பிறகு கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும்.

    இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,560-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,235-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,880-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560

    25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

    24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

    23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-03-2025- ஒரு கிராம் ரூ.111

    25-03-2025- ஒரு கிராம் ரூ.110

    24-03-2025- ஒரு கிராம் ரூ.110

    23-03-2025- ஒரு கிராம் ரூ.110

    22-03-2025- ஒரு கிராம் ரூ.110

    ×