என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற வியாழக்கிழமை அன்று அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
- இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 10.4.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி குற்றவியல் கோர்ட்டு எண் 4-ல் நடந்து வருகிறது.
- நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
திருச்சி:
திருச்சி சரக டி.ஜ.ஜி. வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி குற்றவியல் கோர்ட்டு எண் 4-ல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக 7-ம் தேதி சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த விசாரணையின்போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் அதற்கான நோட்டீசை பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக டி.ஐ.ஜி. வருண்குமார் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். சீமான் ஆஜராகவில்லை என்றால் அவர்மீது ஜாமினில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே சீமான் 8-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி, சீமான் 8-ம் தேதி காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் இன்று காலை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், அண்ணாமலை எனக்கு நண்பர். அண்ணாமலை இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பார்க்கிறார். நான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவைப் பார்க்கிறேன். நான் டிரம்ப் மற்றும் புதினோடும் நெருக்கமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
- சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
- புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.
தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை (9-ந்தேதி), 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். அதே போன்று சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக விழுப்புரம்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதி விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம்-மயிலாடுதுறை மெமு ரெயில் சேர்ந்தனூரில் இருந்தும், புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் விரைவில் ரெயில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.
- கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டது என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.
- துரைமுருகன் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் வலியுறுத்தினர்.
சட்டசபையில் உணவுத்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர சக்கரபாணி பதில் உரையாற்றினார். அப்போது அ.தி.மு.க.வினர் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டது என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் முன்னவர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் பேச அனுமதி கேட்டனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னவர் துரைமுருகன் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய அ.தி.மு.க.வினர் உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கொடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
- நேற்று சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டி வெளிநடப்பு செய்து இருந்தார்.
- தான் பேசும்போதெல்லாம் சபாநாயகர் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நேற்று சட்டசபையில் பேச தனக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என சபாநாயகர் மீது வேல்முருகன் குற்றச்சாட்டி வெளிநடப்பு செய்து இருந்தார்.
இந்த நிலையில், நேற்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த வேல்முருகன் இன்று சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளார். தான் பேசும்போதெல்லாம் சபாநாயகர் இடையூறு செய்வதாக குற்றம்சாட்டி புறக்கணித்துள்ளார்.
சபாநாயகர் செயல்பாடு குறித்து நாளை முதலமைச்சரை சந்தித்து பேசவும் வேல்முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இந்த கூட்டத்தொடரில், என்னை மட்டும் குறிவைத்து, பேசவிடாமல் சபாநாயகர் தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியிருந்தார். இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேல்முருகன் மீது கடிந்து கொண்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேல்முருகன் விளக்கம் அளித்து இருந்தார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களை பற்றி கடுமையான விமர்சிக்கிறார்.
- தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்.
சென்னை:
சட்டபேரவை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் பேசுவதற்கு பிரதான எதிர்க்கட்சிக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் மற்ற கட்சித் தலைவருக்கு வாய்ப்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.
நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் சொன்ன பிறகு தான் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார்.
நாங்கள் மக்கள் பிரச்சனையை சுட்டி காட்டுகிறோம். எங்கள் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதை காண்பிப்பது இல்லை. அமைச்சர் பதில் சொல்வதை காட்டுகிறார்கள். இரண்டையுமே காட்டினால் தான் மக்களுக்கு தெரியும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களை பற்றி கடுமையான விமர்சிக்கிறார். அது அவை குறிப்பில் இடம் பெறுகிறது. ஆனால் மக்கள் பிரச்சனையை நாங்கள் பேசினால் அதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறார்கள்
தில்லு, திராணி, தெம்பு இருந்தால் எங்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள். கோழை தனமாக திட்டமிட்டு அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு எங்கள் மீது கடுமையான விமர்சனங்களை பதிவு செய்வது எந்த விதத்தில் நியாயம் ஆகும்.
எங்கள் உரிமைகளை பறிக்கும்போது நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். நான் முதலமைச்சராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எத்தனை முறை வெளிநடப்பு செய்துள்ளார்.
இன்னும் 9 மாத காலத்துக்கு பிறகு தி.மு.க. ஆட்சி இருக்காது. எதிர்க்கட்சியாக கூட தி.மு.க. இருக்காது. அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மு.க. ஸ்டாலின் அகம்பாவத்தில் இருக்கிறார்.
பிரதமர் மோடி வரும் போது கருப்பு கொடி காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தபிறகு, வெள்ளை கொடி பிடிக்கிறார். எனவே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பேச முற்பட்ட தங்களை அவையிலிருந்து வெளியேற்றம் செய்துவிட்டு, தமிழக முதலமைச்சர் தங்களை அவதூறாக பேசி இருப்பது கோழைத்தனத்தின் உச்சமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசாக மழை பெய்யும்.
- புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ரூ.10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
- மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை நகருக்குள் வெளியூர் பஸ்கள் வருவதை தடுக்கும் வகையில் தற்போது அனைத்து பஸ்களும் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்தும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் 4-வது பஸ்நிலையமாக திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இதில் ரூ. 336 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கூடுதல் தளத்துடன் ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள், ரூ.10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதையடுத்து பஸ்நிலைய திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக உயர்ந்தது. தற்போது பஸ்நிலையத்தில் பெரும்பாலும் பணிகள் முடிந்து விட்டன. வர்ணம் பூசும் இறுதி கட்ட பணிகள் மட்டும் நடந்து வருகிறது.

எனவே திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் 70 பஸ்கள், தனியார் சேவைகளுக்காக 30 பஸ்கள், மாநகர போக்குவரத்து கழகத்தின் 30 பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளனர். மேலும் இங்கு டிரைவர், கண்டக்டர்கள் தங்க இடவசதி, கடைகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 200 நான்கு சக்கர வாகனங்கள், நகரும் படிக்கட்டு வசதி, குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகளும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, திருமழிசை, குத்தம்பாக்கம் பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலோ, தண்ணீர் தேக்கமோ இருக்கக்கூடாது என்று திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த மாத இறுதியில் புதிய பஸ்நிலையம் திறப்பு இருக்கும் என்றார்.
- அப்பகுதி மக்கள் காரில் இருந்த 2 சிறுவர்களையும் மடக்கி பிடித்தனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிய மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, வடபழனி, ராஜாங்கம் மத்திய வீதியை சேர்ந்தவர் சாம். தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக உள்ளார். இவரது 13 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் வாகனத்தை நிறுத்தும் வசதி இல்லாததால் சாம் தனது காரை அருகில் உள்ள குமரன் காலனி 7-வது தெருவில் நிறுத்துவது வழக்கம். நேற்று மாலை பணி முடிந்து திரும்பிய சாம் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது மகனை அழைத்து காரின் மேல் பகுதியில் கவரை போட்டுவிட்டு வருமாறு கூறி அனுப்பினார்.
இதையடுத்து மாணவன் காரின் சாவியை எடுத்துக் கொண்டு தனது நண்பரை உடன் அழைத்து சென்றார். பின்னர் மாணவர் காரை இயக்கி ஓட்டினார். உடன் அவரது நண்பரும் இருந்தார்.
அப்போது பிரேக் எது என்று தெரியாமல் மாணவன் ஆக்சிலேட்டரை மிதித்ததாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சாலையில் ஓடியது. பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் மோதியபடி சாலையோரத்தில் நின்ற அதே பகுதி தனலட்சுமி காலனியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியான முதியவர் மகாலிங்கம் (69) உட்பட 2பேர் மீது அடுத்தடுத்து மோதி நின்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்த 2 சிறுவர்களையும் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முதியவர் மகாலிங்கத்திற்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். ஆட்டோ முழுவதும் நசுங்கியது. காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிய மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
- சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் அனுமதி அளிக்கப்பட்டது போல், பங்குனி உத்திரத்திற்கு இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவித்தார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது பங்குனி உற்சவத்தையொட்டி எங்கள் பகுதியில் இருந்து நிறைய பேர் சாலை மார்க்கமாக செல்கிறார்கள். ஆனால் சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.
இதை அமைச்சர் கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் இன்றும் நாளையும் 2 நாட்கள் பக்தர்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு அப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தாலும் துறை செயலாளர் மற்றும் கலெக்டர் இடம் கலந்து பேசி இரண்டு நாட்கள் அங்கு சாலை பணிகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
- பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் ராம்கி (வயது 35). மீன் வியாபாரி. இவரது மனைவி பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராம்கி கடந்த 1 ஆண்டாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ராம்கி கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடற்பயிற்சிக்காக திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் ஜிம்மில் சேர்ந்தார். அங்கு கடந்த 6 மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். மேலும் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற ராம்கிக்கு ஊக்கமருந்தை உடற்பயிற்சியாளர் பரிந்துரை செய்து சாப்பிட சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ராம்கி ஊக்கமருந்து பயன்படுத்தி வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ராம்கிக்கு பயங்கர வயிறு வலி ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறுநீர் வெளியேறவில்லை.
இதனால்அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராம்கியை மீட்டு மண்ணடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராம்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜிம் பயிற்சியாளரின் அறிவுரையின் பேரில் ஊட்டச்சத்து மருந்துகள் எடுத்துக் கொண்டதால் தான் ராம்கி உயிர் இழந்து இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காசிமேடு போலீசில் புகார் செய்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடற்பயிற்சியின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை:
திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்.
இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 2 வாரங்கள் விழாகோலம் பூண்டிருக்கும்
இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிற்பகல் 11 மணிக்கு மேல் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.
அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் இரவு எழுந்தருளுகிறார். 13-ந்தேதி (செவ்வாய்கிழமை) வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கு மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் ராஜாங்க அலங்கராத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார்.
அன்று இரவு அங்கிருந்து பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் 15-ந்தேதி இருப்பிடம் நோக்கி செல்கிறார். 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் கோவிலுக்கு கள்ளழகர் வந்தடைகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையம் யக்ஞ நாராயணன் தெரிவித்துள்ளனர்.






