என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் தேவையான அனைத்து அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும்.
- 8 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
மதுரை:
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி ரூ. 2 கோடி இழப்பீடு ஏற்படுத்திய வழக்கில், அந்த வங்கியின் தலைமை மேலாளர் உள்பட 13 பேர் மீது சென்னை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூர்த்தி, அம்மா முத்து உள்ளிட்ட 8 பேருக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 8 பேர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சி.பி.ஐ. மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சில வழக்குகளில் போலீஸ் விசாரணை வேண்டாம் என, சி.பி.ஐ. விசாரணை கோரி பாதிக்கப்பட்டோர் மனுதாக்கல் செய்கின்றனர். ஏனென்றால் சி.பி.ஐ. எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் விசாரணை மேற்கொள்ளும் என பொது மக்கள் நம்புகின்றனர்.
ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் தவறு இருப்பது தெரிகிறது. சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்துவிட்டு, சில நபர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
நிதி, பண மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் அந்தத் தொகையை திருப்பி செலுத்தினாலும் அவர்களை சாட்சிகளாக சி.பி.ஐ. சேர்த்து விடுகின்றனர். சி.பி.ஐ. மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சி.பி.ஐ. மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
சி.பி.ஐ. விசாரணை அமைப்பானது யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கின்றனரா?. எனவே சி.பி.ஐ. மீது பொது மக்கள் நம்பிக்கை பெறுவதற்கு இந்த நீதிமன்றம் சில பரிந்துரைகளை செய்ய விரும்புகிறது.
சி.பி.ஐ. வழக்குகளில் குற்றவாளிகள் பெயர் சேர்ப்பது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது என அனைத்தையும் சி.பி.ஐ. இயக்குநர் கண்காணிக்க வேண்டும். மேலும் அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை அதிகாரியையும் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் தேவையான அனைத்து அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே 8 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.
- தி.மு.க. அரசின் பார்ட் 2 பெயிலிர் தான்.
- ஊர்ந்து என்பதற்கு பதிலாக தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது.
மேலே பாம்பு கீழே நரிகள் குதித்தால் அகழி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என்று கூறினார்.
இதையடுத்து, பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க. அரசு ஊர்ந்து சென்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை ஏற்க முடியாது. தி.மு.க. அரசின் பார்ட் 2 பெயிலிர் தான் என கூறினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், ஊர்ந்து என்பதற்கு பதிலாக தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள். யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, உறுத்தினால் சொல்லுங்கள் நீக்க சொல்லுவோம். அன் பார்லிமென்ட் சொல்லி மட்டுமே அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியும் என்றார்.
இதனை தொடர்ந்து ஊர்ந்து, தவழ்ந்து என்று முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
- கோவில் பகுதியில் முகாமிட்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கரடி வந்தது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள தெற்கு பாப்பன்குளம், ஆலடியூர், மணிமுத்தாறு போன்ற பகுதியில் அவ்வபோது மிளா, காட்டுப்பன்றி, யானை,
சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் சுற்றி திரிகின்றன.
இந்த பகுதிகளில் கரடி நடமாட்டம் என்பது சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இரவு நேரங்களில் அவை சாவகாசமாக வந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், தெருக்களில் நடமாடுவதுமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கரடி வந்தது. அதனை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மணிமுத்தாறு அருகே அண்ணா நகர் பகுதியில் உள்ள தங்கம்மன் கோவிலில் கரடி ஒன்று கோவில் வளாகத்தில் உள்ளே நுழைந்து சுற்றி திரிந்தது. கோவிலில் தீபம் ஏற்ற வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் சுவாமிகளுக்கு படைக்கப்பட்டிருந்த சக்கரை பொங்கல் உள்ளிட்டவற்றை அந்த கரடி தின்றது.
இதுகுறித்தான காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த தகவலை அப்பகுதி மக்கள் அம்பை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து சென்று கோவில் பகுதியில் முகாமிட்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு கட்டப்படும்.
- விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் தொடங்கப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று காவல் துறை மானிய கோரிக்கை மீது பேசுகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
கோவை மாவட்டம் நீலாம்பூரில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ. 4.88 கோடி செவில் உருவாக்கப்படும்.
கீழடியில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.2.83 கோடியில் உருவாக்கப்படும்.
சேரன்மாதேவி உட்கோட்டத்தில் உள்ள மேலச்செவலில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.
பொங்கலூரில் புதிதாக காவல் நிலையம் ரூ.2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.
திருவண்ணாமலை கோவிலுக்கு என புதிதாக போலீஸ் நிலையம் ரூ.2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.
குழித்துறையில் புதிதாக இருப்புப்பாதை காவல் நிலையம் ரூ.2.15 கோடி செலவில் உருவாக்கப்படும்.
மதுரை மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சிந்தாமணியில் புதிதாக காவல் நிலையம் ரூ.6.57 கோடியில் உருவாக்கப்படும்.
மதுரை மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாடக்குளத்தில் புதிதாக போலீஸ் நிலையம் ரூ.6.57 கோடி செலவில் உருவாக்கப்படும்.
திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை, பெரம்பூரில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் தலா ரூ.7.50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
ரூ.72.30 லட்சம் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் புதிதாக போலீஸ் உட்கோட்டம் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவல், அரும்பாக்கம் சரகத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூ.2.68 கோடி செலவில் அமைக்கப்படும்.
சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப்பிரிவு ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஒன்று ரூ.8 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவின் இணையவழி குற்றப் பிரிவில், தேவையான பணியிடங்களுடன் சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு ஒன்று புதிதாக ரூ.63 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத் தில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு என புதிய அலகு ஒன்று ரூ. 1.95 கோடி செலவில் உருவாக்கப்படும்.
செங்குன்றம் மாவட்ட போக்குவரத்து காவல் பிரிவு புதிதாக ரூ.59 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகரில் உள்ள விருகம்பாககம் காவல் நிலையத்திற்கு ரூ.6.46 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
ஆவடி மாநகரில் சட்டம்-ஒழுங்கு குற்றப்பிரிவு மற்றும் துணை ஆணையாளர் அலவலகங்களுக்கு என ஒருங்கிணைந்த புதிய காவல் நிலைய கட்டிடம் ரூ.7.71 கோடி செலவில் கட்டப்படும்.
மொத்தம் 321 குடியிருப்புகள் ரூ.143.16 கோடி செலவில் கட்டப்படும்.
காவலர் தங்குமிடம் வசதி இல்லாத அல்லது குறைவாக உள்ள 20 மாவட்ட, மாநகரங்களில் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்காக 50 படுக்கை வசதிகள் கொண்ட காவலர் தங்கும் இடங்கள் ரூ.30 கோடி செலவில் கட்டப்படும்.
நுண்ணறிவுப் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு கோவை மாநக ரத்தில் ரூ.5.98 கோடி செலவில் அலுவலக கட்டிடம் கட்டப்படும்.
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மாநகரங்களின் (சென்னை பெருநகரம் தவிர) பயன்பாட்டிற்கு என 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ரூ. 12 கோடி செலவில் வாங்கப்படும்.
சென்னைப் பெருநகரில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய, காவல் துறையில் உள்ள பாதுகாப்புப் பிரிவின் பயன்பாட்டிற்கு என வெடிகுண்டுகளை கண்டு பிடித்து செயலிழக்கச் செய்யும் கருவிகள் ரூ.3.99 கோடி செலவில் வாங்கப்படும்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.1.08 கோடி ஆகும்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் 3000-ல் இருந்து 4000 ஆக உயர்த்தப்படுவதுடன், மாதாந்திர பதக்கப்படி ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.4.80 கோடி ஆகும்.
தடய அறிவியல் துறையின் குற்ற நிகழ்விடப் பார்வையிடல் விசாரணை முறையை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, 50 நடமாடும் தடய அறிவியல் வாகனங்களும் அவற்றிற்கு தேவையான மனிதவளம், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றிற்கு என ரூ.38.25 கோடி வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோவில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, வேலூர் மாவட்டம் பள்ளிக் கொண்டா, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், கரூர் மாவட்டம் குளித்தலை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஆகிய 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ரூ.16.80 கோடி செலவில் அமைக்கப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் திருச்சியை தலைமை இடமாக கொண்ட மத்திய மண்டலத்தை 2 ஆக பிரித்து விழுப்புரத்தை தலைமை இடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் ரூ.1.04 கோடி செலவில் உருவாக்கப்படும்.
தலா 25 தீயணைப் போர்களைக் கொண்ட 2 கமாண்டோ படைகளை உருவாக்குவதற்கு என அவர்களுக்கு பயிற்சி மற்றும் சிறப்பு உபகரணங்கள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்.
- சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு வரலாறு படைக்கும்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழ்நாடு படைத்த சாதனைகளை கூறினார். மேலும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும். உதகை, தருமபுரியில் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும். விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கம் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக 5-வது ஆண்டாக அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன் எனது பயணம்.... தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading.... அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். வாழ்க தமிழ்... வெல்க தமிழ்நாடு... என்றார்.
- 'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்து இருந்தார்.
- ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* 'காலனி' என்ற சொல் வசைச்சொல்லாக மாறி இருப்பதால் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்.
* ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்.
'காலனி' என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக பாலக் கோடு போலீஸ் டி.எஸ்.பி மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கொலசனஅள்ளி நெடுஞ்சாலையில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான 156 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி கொத்தப்பள்ளியை சேர்ந்த சிராஜ் (25) என்பதும், உடன் வந்தவர் கர்நாடகா மாநிலம் சிக்ககொல்லர அட்டி கிராமத்தை சேர்ந்த திலக்குமார் (24) என்பதும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் 2 பேரும் பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்க்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து குட்காவுடன் ரூ.5 லட்சம் மதிப்பிலான சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.
- காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* பல்வேறு தடைகளையும் தாண்டிதான் திராவிட மாடல் ஆட்சி சாதித்து வருகிறது.
* சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.
* தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
* குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதால் அமைதி நிலவுகிறது.
* குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கூறுங்கள்.
* ஆண்டுதோறும் செப்.6-ந்தேதி காவலர் நாள் கொண்டாடப்படும்.
* காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.
* அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் காவலர்களுக்கு மருத்து பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
* காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
* குற்றம் நடந்த உடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் தனது உறவினருக்கு மாத்திரை வாங்க சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மருந்தகத்திற்கு நேற்று மாலை வந்தார்.
தொடர்ந்து டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டை அங்கு பணியில் இருந்த மருந்தாளுனர் மாதேஸ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது ஹரி கொடுத்த மருந்து சீட்டை மருந்தாளுனர் கீழே போட்டு விட்டு வேறொரு நோயாளிக்கான மருந்து சீட்டை பார்த்து மாத்திரை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது ஹரி மருந்தாளுனர் குடிபோதையில் இருப்பதாகவும், மாத்திரையை மாற்றி கொடுத்தது குறித்தும் கேட்ட போது பதில் சொல்லாமல் இருந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய படி கூச்சலிட்டார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மருந்தாளுனர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், மருந்தாளுனர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கருதுவதால் இன்று அவருக்கு டாக்டர்கள் குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவ குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு.
* தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது.
* இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
* இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை.
* இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்.
* திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது.
* மேலே பாம்பு கீழே நரிகள் குதித்தால் அகழி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்.
* இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை
* என் 60 ஆண்டுகால பொதுவாழ்வு குறித்து ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் முன்னதாக கூறியிருந்தார்.
* கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என கூறியிருப்பார்.
* கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.
* கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள்.
* கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
* கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது. உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது.
* நிதி ஆயோக் வெளியிட்ட வளர்ச்சி இலக்க குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
* தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போர் 1.43 சதவீதம் மட்டுமே.
* இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது.
இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.65-ம், ஒரு சவரன் ரூ.520-ம் குறைந்து, முறையே, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,980, சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-04-2025- ஒரு கிராம் ரூ.111
27-04-2025- ஒரு கிராம் ரூ.112
26-04-2025- ஒரு கிராம் ரூ.112
25-04-2025- ஒரு கிராம் ரூ.111
24-04-2025- ஒரு கிராம் ரூ.111
- தமிழ்நாடு முழுவதும் “தமிழ் வாரம்” கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை:
பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில், அவர் பிறந்த நாளான ஏப்ரல் 29-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் "தமிழ் வாரம்" கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பாரதிதாசனின் 135-வது பிறந்தநாளான இன்று சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவருடைய உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






