என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
    • தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.

    You haven't failed;

    Your success is just

    postponed for a while,

    மீண்டும் நன்றாகப் புரிந்து படித்து,

    துணைத் தேர்வை அணுகுங்கள்;

    நிச்சயம் தேர்ச்சி அடைவீர்கள்!

    நீங்கள் ஒவ்வொருவரும்

    வெற்றியாளர்கள் தான்!

    உங்களுக்கும் எனது Advance வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 

    • முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.
    • தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் தலா 500 வீதம் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது யூனிட்டும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதற்கிடையே தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் ஏற்கனவே சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 2 அலகுகளில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • மேட்டுக்குப்பம், ஏஜிஆர். கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் பிற பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (09.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, பட்டாபிராம் பகுதிகள், சிடிஎச் சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், விஜிவி நகர், கண்ணப்பாளையம், தனலட்சுமி நகர், விஜிஎன் 2 முதல் 7 வரை, மேல்பாக்கம்.

    மேலும், வள்ளுவர்சாலை, பஜனை கோவில், அரசமரம் சந்திப்பு, ஆனந்தம்நகர், பாரதி சாலை, டி.என்.எச்.பி., ஸ்ரீராம் நகர், சபரி நகர், தமிழ் நகர், குறிஞ்சி நகர், கங்கை அம்மன் கோவில் சாலை, அம்பாள் நகர், ரத்தின வளாகம், பிரகாசம் தெரு, செந்தமிழ் நகர், சாலரங்கம், சத்ரியர் நகர், கொத்தரை நகர், கலசத்தம்மன் கோவில் தெரு, ராயலா நகர், எஸ்ஆர்எம் திருமலை நகர், பெரியார் சாலை, குரு ஹோம்ஸ், நேரு நகர், பொன்னம்மாள் நகர், ராஜீவ் காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவென்யூ, சாந்தி நகர், மவுன்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், சுபஸ்ரீ நகர், எம்.கே.எம். நகர், கிருஷ்ணா நகர், ராம்னி கோவில், மாரியம்மன் கோவில், எம்.கே.எம். குருசாமி நகர், சிஆர்ஆர் புரம், காவ்யா கிராண்டன், காசா கிராண்டா, ஆறுமுகம் நகர், திருநகர், கணேஷ் நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவென்யூ, ஏவி மல்லிஸ் கார்டன், டிரைமேக்ஸ், விவி கோவில் தெரு, பெருமாள் தெரு, ஏஜிஎஸ் காலனி, மேட்டுக்குப்பம், ஏஜிஆர். கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் பிற பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள்.
    • நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதுபோல கல்லூரிக் கனவு - உயர்வுக்குப் படி - சிகரம் தொடு - நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள் அடுத்து உங்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும்.

    பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

    தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்! என்று கூறியுள்ளார். 

    • அமைச்சர் ரகுபதி கனிமவளத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சர்கள் 2 பேர் இலாகாக்களை திடீரென மாற்றி அமைத்து உள்ளார்.

    அதன்படி அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை மாற்றப்பட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறையுடன் சட்டத்துறையை சேர்த்து கவனிப்பார். அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை (இயற்கை வளத்துறை) அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டது.

    கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை மாற்றி அமைத்த போது பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோரை எடுத்து விட்டு உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி செழியனை நியமித்தார். செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை மின்வாரியத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடமும், மதுவிலக்கு ஆயத் தீர்வை இலாகாவை அமைச்சர் முத்துசாமியிடம் பிரித்து கொடுத்து இருந்தார். இப்போது மீண்டும் ரகுபதியிடம் இருந்த இலாகாவை மாற்றி அமைத்து உள்ளார்.

    தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் அரசும், காவல்துறையும் தூங்கிக்கொண்டிருக்கிறது.
    • தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை, அவரவர் தான் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு.

    சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நான் விழித்து கொண்டு சிறப்பாக செயல்படுவது அமைச்சர் ரகுபதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    * தி.மு.க.வின் கொத்தடிமையாக செயல்படுகிறார் அமைச்சர் ரகுபதி.

    * ரகுபதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது அ.தி.மு.க.

    * அமைச்சர் ரகுபதி கும்பகர்ண தூக்கத்தில் உள்ளார்.

    * தமிழகத்தில் அரசும், காவல்துறையும் தூங்கிக்கொண்டிருக்கிறது.

    * தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டு நாசமாகிவிட்டது.

    * இருசக்கர வாகனத்தை தொலைத்துவிட்டு புகார் கொடுத்த பெண், போலீஸ் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

    * காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் தொடர்பான வீடியோவை சுட்டிக்காட்டி புகார்.

    * தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை, அவரவர் தான் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு.

    * நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் என்ன என்றே தெரியாத முதலமைச்சர்.

    * தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03 சதவீதம் ஆகும்.

    தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்தி வர்மா 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார். இரு கைகளையும் இழந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறும்.
    • விழா 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி மாலை 6 மணி அளவில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நம்பெருமாள் உள்கோடை திருநாள் தொடங்கியது. இந்த விழா 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 10-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவை நடைபெறுகிறது. 12-ந்தேதி சித்ரா பவுணர்மி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    பழனி:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி அந்த பணிகள் நிறைவடைந்தன. மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9ந்தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டது.

    தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகளில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.03 சதவீதம் ஆகும்.

    தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல தேர்வு எழுதிய 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகளில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600-க்கு 599-மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ், பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில தலா 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று 599 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பழனி பாரத் வித்யா பவன் பள்ளியை சேர்ந்த இந்த மாணவிக்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

    • தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
    • கொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை 'ஸ்டாலின் மாடல் ஆட்சி' என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி நிதிப் பற்றாக்குறை, கடன் வாங்குவதில் முதலிடம் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேந்திரமாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை தாமதம் ஆகின்றன. உதாரணமாக, விடியா திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன என்றும், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் ஒரு சொட்டு நீர்கூட தேங்காமல் வடியும் என்றும், முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், நகராட்சித் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேட்டி அளித்தனர். ஆனால், 2021 மற்றும் 2022 ஆண்டில் பெய்த சிறு மழைக்கே சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதுதான் நிதர்சனமான உண்மை.

    உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சாவடி முறைகேடுகள், மறு வாக்குப்பதிவு அதிகாரிகள் மிரட்டப்படுதல் போன்றவை அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

    தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மாநில அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் தாமதம் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு ஆகியவை மாநில வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளன. உதாரணமாக, கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றம் சுமார் பத்து மாத காலம் சென்னை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியதை அனைவரும் அறிவார்கள். சென்னை மட்டுமல்ல. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெட்ரோ திட்டங்கள் போன்றவை நிதி நெருக்கடியால் தடைபட்டன. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று வாய்ஜாலம் பேசிய மு.க. ஸ்டாலின், அதில் 50 சதவீதம்கூட கொடுக்க முடியாதபடி பல நிபந்தனைகளை விதித்தார்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றது. தொடர் கொலைகள், ஜாதி மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல், கொலை செய்யப்படுதல் போன்ற சட்ட விரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    காவல் துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று மு.க.ஸ்டாலின் கூறினாலும், குற்றங்களைத் தடுப்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக, நகரமாக மாற்றியது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சாதனை, கடந்த நான்கு ஆண்டுகளாக, போதைப் பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சென்னை, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் மற்றும் கடத்தல் அதிக அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப் பொருள் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. இவைகளைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இந்த அரசு வாய்ஜாலம் காட்டினாலும், அனைத்தும் ஏட்டளவிலேயே உள்ளது.

    கொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நான், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றைப் பற்றி சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை எடுத்துக் கூறியும். இந்த அரசிடம் கடுமையான, உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச் சாராய மரணம் இரண்டு முறை நிகழ்ந்தேறியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை.

    இந்த அரசின் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, குறிப்பாக அமைச்சர் ஒருவரே அளித்த பேட்டிக்கு இதுவரை எந்தவிதமான மறுப்பையும் ஸ்டாலினால் அளிக்க முடியவில்லை. நான், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஸ்டாலின் மாடல் அரசின் தவறுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியும், அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய மனப் பக்குவம் இல்லாத நிலையில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்த நான்காண்டு கால ஆட்சியில், அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறிப்பாக, அத்திக்கடவு-அவினாசி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, குடிமராமத்துத் திட்டம், விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேர மின் சப்ளை, 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது. அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் உட்பட 17 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்பித்தது, சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றியது, பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மெட்ரோ நகரங்களில் முதலிடமாக சென்னையை தொடர்ந்து தக்கவைத்தது என்று எங்களது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு இதுபோல் ஒரு சாதனையை குறிப்பிட்டுக் கூற இயலுமா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இ-பாஸ் நடைமுறையால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி(சனிக்கிழமை) கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை முதல் 11-ந் தேதி வரை ரோஜா கண்காட்சியும், கூடலூரில் நாளை முதல் 11-ந் தேதி வரை வாசனை திரவிய கண்காட்சியும் நடக்கிறது.

    23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சியும், முதல் முறையாக 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சியும் நடக்க உள்ளது.

    கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி இந்த ஆண்டு வருகிற 16-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 6 நாட்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி ஒருநாள் முன்னதாகவே அதாவது வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்க உள்ளதாகவும், 6 நாள் நடத்த திட்டமிட்ட இருந்த நிலையில் கண்காட்சி தற்போது 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதவாது:-

    இ-பாஸ் நடைமுறையால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்ட மலர் கண்காட்சி தற்போது 10 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.

    நீலகிரி மாவட்டத்திற்கு 12 மீட்டர் அதிகமுள்ள சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
    • மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும்.

    சென்னை:

    பேரிடா் காலங்களில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை, சென்னை துறைமுகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம், காவல் துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படை ஆகியவற்றைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

    இதைத் தொடா்ந்து துறைமுகத்தின் கடல் பகுதியில் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் கடலோரக் காவல் படையின் 2 கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே வந்தடைந்தன. வான்வழித் தாக்குதலின்போது, கொள்கலன் மீது தீப்பற்றியது.

    அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதர குழுவினா் பொது மக்கள், ஊழியா்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், காணாமல் போனவா்களை அடையாளம் கண்டறியவும், காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டனா்.

    இதைத் தொடா்ந்து, சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, மணலியில் உள்ள சென்னை பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் (சி.பி.சி.எல்.) மற்றும் காமராஜா் துறைமுகம், எண்ணூா் ஆகிய இடங்களில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரகால சூழலையும் எதிா்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஒத்திகை பயிற்சியில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊா்க்காவல் படையினா், சென்னை பெருநகர காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்புப் படையினா், தன்னார்வலா்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்கவுள்ளன.

    இந்தப் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபாா்த்துக்கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும். இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ அடைய தேவையில்லை என தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×