என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது.
    • கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இதனால் ராட்சத அலைகள் கடற்கரையை தாண்டி உள்ள பகுதிகளில் புகுந்தது. அந்த பகுதியில் இருந்த கோவிலுக்குள் கடல்நீர் சூழ்ந்தது.

    அங்கு வைக்கப்பட்டிருந்த கடைகளையும் தண்ணீர் சூழ்ந்தது. மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது. இதையடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று 2-வது நாளாகவும் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. ராட்சத அலைகள் அவ்வப்போது எழும்பி வருகின்றன. இதனால் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குமரி மேற்கு மாவட்டம் பகுதிகளிலும் கடல் இன்று சீற்றமாக இருந்தது. 

    • தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
    • புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் திறனற்ற திமுக அரசு, இருக்கும் வேலைவாய்ப்புகளையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சேலம் மாநகரம் சூரமங்கலத்தில் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சில நாள்களுக்கு மின் கதவடைப்பு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்கள் அனைவரும் தானாக பணி விலகும் சூழலை ஏற்படுத்தி நிறுவனத்தை நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    சூரமங்கலத்தில் 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தலேமா நிறுவனம் பின்னர் ஸ்வீடனை தலைமையிடமாகக் கொண்ட காமிக் குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் தலேமா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வந்த நிறுவனத்தை மூடுவதற்காக நஷ்டக் கணக்குக் காட்டப்படுவதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த அநீதியை அனுமதிக்கக் கூடாது.

    தலேமா நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்காகவே அதன் நிர்வாகம் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அங்கு பணியாற்றும் 300 பெண்கள் உள்ளிட்ட 600 பணியாளர்களையும் பணியிலிருந்து தானாக விலகிக் கொள்ளும்படி அதன் பொதுமேலாளர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதற்கு தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், தலேமா நிறுவனம் தானாக முன்வந்து கதவடைப்பு செய்திருக்கிறது.

    தலேமா நிறுவனம் கதவடைப்பு செய்யக்கூடாது என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியும் அதையும் மீறி தலேமா நிறுவனம் கதவடைப்பு செய்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு, அதன் கடமையை மறந்து தலேமா நிறுவனத்தின் தொழிலாளர் விரோத செயல்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரசுத் துறை மூலம் 5.5 லட்சம் பேருக்கும், தனியார் நிறுவனங்கள் மூலம் 50 லட்சம் பேருக்கும் வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டைக் கூட நிறைவேற்றவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் திறனற்ற திமுக அரசு, இருக்கும் வேலைவாய்ப்புகளையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலேமா நிறுவனத்தின் உயரதிகாரிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி, ஆலை எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, அதை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பணியாற்றும் 600 தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து பணி வழங்கப்படுவதையும், அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். 

    • தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே காலநிலை முற்றிலும் மாறி காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், மிதமான மழையும் பெய்த வண்ணம் இருக்கிறது. மழையால் மாவட்டம் முழுவதுமே மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர், கூடலூர் என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. இரவிலும் சாரல் மழை நீடித்தது.

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

    அதிகபட்சமாக மாவட்டத்தில் கொடநாட்டில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்சரிவு, மரங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் வெறிச்சோடியது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் வாட்ஸ் அப் எண்ணான 9488700588க்கும் தகவல் அளிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு-0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261296, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநகரை பொறுத்தவரை நேற்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, சத்தி சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி நின்றது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கொடநாடு-53, பார்சன்வேலி-26, கோத்தகிரி-23, கெத்தை-22, மசினகுடி-20, ஊட்டி-18.6, நடுவட்டம்-15, போர்த்தி மந்து-10, குன்னூர்-10.

    • நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை நிலவரம்.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,370-க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 125 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    31-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-08-2025- ஒரு கிராம் ரூ.123

    03-08-2025- ஒரு கிராம் ரூ.123

    02-08-2025- ஒரு கிராம் ரூ.123

    01-08-2025- ஒரு கிராம் ரூ.123

    31-07-2025- ஒரு கிராம் ரூ.125

    • மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவிப்பினை அனுப்பியுள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் ஒரு பல் மருத்துவர் கூட நியமனம் செய்யப்படாததும், பதவி உயர்வு வழங்கப்படாததும்தான்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கடலூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததன் காரணமாக, அந்த மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவிப்பினை அனுப்பியுள்ளது.

    இந்த நிலைமைக்கு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தள்ளப்பட்டதற்குக் காரணம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் ஒரு பல் மருத்துவர் கூட நியமனம் செய்யப்படாததும், பதவி உயர்வு வழங்கப்படாததும்தான்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடி கவனம் செலுத்தி, அரசு பல் மருத்துவமனைகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் விரைந்து நிரப்பவும், ஆட் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்தவும், பல் டாக்டர்களுக்கான பதவி உயர்வை அவ்வப்போது அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துவிட்டது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.

    இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 12 ஆயிரம் கன அடியாக வந்தது. மாலையில் 9,500 கன அடியாக குறைந்தது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன.
    • வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான திருமயம் அருகே ராங்கியத்திற்கு முருகேசன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். அங்கு இரவு தங்கி விட்டு நேற்று காலை புதுக்கோட்டை பாசில் நகருக்கு முருகேசன் தம்பதியினர் திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன் உள்பக்க கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் படுக்கையில் சிதறிக் கிடந்தன. மேலும் 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள், பணம் எல்லாம் காணாமல் போய் இருந்தது. மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், முருகேசனின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். தனது வீட்டில் இருந்த நகைகள் எல்லாவற்றையும் மர்மநபர்கள் அள்ளிச்சென்று விட்டதாக கூறி ராணி கண்ணீர் விட்டு கதறி அழுதார். வீட்டில் 160 பவுன் நகைகளும், ரூ.3 லட்சமும் கொள்ளை போனதாக போலீசாரிடம் முருகேசன் தெரிவித்தார். வீட்டில் இருந்த மொத்த நகைகள் விவரத்தை போலீசார் விசாரித்தனர். அதில் வீட்டில் தனது மனைவி மற்றும் மருமகள்கள் நகைகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பிச்சென்று உள்ளனர். வீட்டின் எதிர்பகுதியில் உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் முருகேசனின் வீட்டிற்குள் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சி எதுவும் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 160 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 3 மகள்களை கொன்று விட்டு தந்தை கோவிந்தராஜ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
    • வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா திம்மநாயக்கன்பட்டியை அடுத்த சிங்கிலியன் கோம்பை அருகே உள்ளது வேம்பாகவுண்டன்புதூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40), ரிக் வண்டி தொழிலாளி. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு பிரித்திகாஸ்ரீ (8), ரித்திகா ஸ்ரீ (6), தேவ ஸ்ரீ (5) ஆகிய 3 பெண் குழந்தைகளும், அனீஸ்வரன் (1½) என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    கோவிந்தராஜ் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரிக் லாரி வாங்குவதற்காக ரூ.14 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால் அந்த பணத்தை வைத்து அவர் வீடு கட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழில் செய்ய முடியாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். மேலும் கடனை அடைக்க கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தனியார் நிதி நிறுவனத்திற்கு 7 மாதங்களாக தலா ரூ.27 ஆயிரம் வீதம் மாதத் தவணையை செலுத்தி வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கோவிந்தராஜ் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

    இங்கு வேலை இல்லாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். இதனால் மாத தவணை செலுத்துவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க சென்றனர். அப்போது படுக்கை அறையில் கோவிந்தராஜின் மனைவி பாரதி தனது 1½ வயது ஆண் குழந்தை அனீஸ்வரனுடன் தூங்க சென்றார். வீட்டின் ஹாலில் கோவிந்தராஜ் மற்றும் 3 மகள்களும் தூங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த கோவிந்தராஜ், மனைவி மற்றும் மகன் தூங்கி கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டார்.

    பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஹாலில் தூங்கி கொண்டிருந்த மகள்கள் பிரித்திகா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவ ஸ்ரீ ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டினார். தூக்கத்தில் இருந்த குழந்தைகள் திடீரென எழுந்து கதறி துடித்தனர். குழந்தைகள் அழும் சத்தம் கேட்டதும் படுக்கை அறையில் இருந்த பாரதி அலறியடித்துக் கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது வெளிப்புறமாக கதவு தாழிடப்பட்டு இருந்ததால் அவரால் வர முடியவில்லை.

    இந்த நேரத்தில் கோவிந்தராஜ் துடிக்க துடிக்க 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டினார். இதில் தலை துண்டிக்கப்பட்டு 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் கோவிந்தராஜ் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    பாரதியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இவர்களது வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது குழந்தைகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், விஷம் குடித்த நிலையில் கோவிந்தராஜ் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பாரதி மற்றும் அவரது 1½ வயது மகனையும் அவர்கள் மீட்டனர். வீட்டின் படுக்கை அறையில் பாரதி தனது 1½ வயது மகனுடன் படுத்து தூங்கியதால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த கொடூர சம்பவம் குறித்து உடனடியாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் மங்களபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் கொலை நடந்த வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட 3 பெண் குழந்தைகள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் கோவிந்தராஜ் 3 மகள்களையும் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும்.
    • தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22671) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும். அதே போல, மதுரையில் இருந்து தாம்பரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) இனி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும். அதே போல, புதுச்சேரியில் இருந்து வந்த பயணிகள் ரெயில் இனி தாம்பரத்திற்கு பதிலாக எழும்பூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ரெட்ஹில்ஸ்: ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், பம்மதுகுளம் காலனி, இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.

    திருமுல்லைவாயல்: பாண்டிஸ்வரம், மாகறல், கொமக்கம்பேடு, காரணை, தாமரைபாக்கம், கொடுவேலி, வேளச்சேரி, கர்லபாக்கம், கடவூர், ஆரம்பாக்கம்.

    பல்லாவரம் டிவிசன்: காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர், திருநகர், பத்மநாப நகர், லட்சுமி நகர், எல்ஆர் ராஜமாணிக்கம் சாலை, அண்ணா சாலை 7 முதல் 15-வது தெருவரை, சிக்னல் அலுவலம் ரோடு, காந்தி ரோடு, கலைஞர் ரோடு, செந்தமிர் சாலை, ஸ்ரீனிவாசன் நகர், திருமலை நகர், ஆதம் நகர் 1 முதல் 9-வது தெருவரை, சங்கர் நகர் கிழக்கு மெயின் ரோடு, வெங்கடேஷ்வரா நகர் மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர், கஸ்தூரிபாய் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ECTV நகர், சித்திரை நகர், எம்ஜிஆர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, டிஎஸ் லட்சுமி நாராயண நகர், பஜனை கோவில் தெரு.

    பொழிச்சலூர்: திருநகர், பத்மநாப நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலணி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர்.

    • பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார்.
    • சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர்.

    சென்னை:

    தமிழக அரசு 'விடியல் பயண' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, சாதாரண கட்டண மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ''மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று போர்டு போட்ட பஸ்சில் காசு வாங்கிக்கொண்டு பெண்களுக்கு, ஆண்களுக்கான டிக்கெட் தருகிறார்கள். என்ன இது?" என்று பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார். அதில், திருச்சியில் இருந்து முசிறி செல்ல ஆண் ஒருவருக்கு ரூ.42 வீதம் 2 பேருக்கு ரூ.84 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்தனர். சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது விடியல் பயணத் திட்டத்தின் கீழ் வரும் பஸ் அல்ல. இது திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் பி.எஸ்.-4 புறநகர் பஸ் (நீல நிறம்). இதற்கு பயண கட்டணம் உண்டு. பஸ்சின் கண்டக்டர் மின்னணு பயணச்சீட்டில் பயணி விவரம் மகளிர் என வருவதற்கு பதிலாக, தவறுதலாக ஆண் என குறிப்பிட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார் என்று துணை மேலாளர் வணிகம் கூட்டாண்மை (சேலம் புறநகர் பேருந்து) தெரிவித்துள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

    ×