என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு பஸ்சில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பா?- தமிழக அரசு விளக்கம்
- பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார்.
- சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர்.
சென்னை:
தமிழக அரசு 'விடியல் பயண' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, சாதாரண கட்டண மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ''மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று போர்டு போட்ட பஸ்சில் காசு வாங்கிக்கொண்டு பெண்களுக்கு, ஆண்களுக்கான டிக்கெட் தருகிறார்கள். என்ன இது?" என்று பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிக்கெட்டுடன் பதிவிட்டிருந்தார். அதில், திருச்சியில் இருந்து முசிறி செல்ல ஆண் ஒருவருக்கு ரூ.42 வீதம் 2 பேருக்கு ரூ.84 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்தனர். சிலர் தமிழக அரசை விமர்சனமும் செய்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது விடியல் பயணத் திட்டத்தின் கீழ் வரும் பஸ் அல்ல. இது திருச்சியில் இருந்து முசிறிக்கு செல்லும் பி.எஸ்.-4 புறநகர் பஸ் (நீல நிறம்). இதற்கு பயண கட்டணம் உண்டு. பஸ்சின் கண்டக்டர் மின்னணு பயணச்சீட்டில் பயணி விவரம் மகளிர் என வருவதற்கு பதிலாக, தவறுதலாக ஆண் என குறிப்பிட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார் என்று துணை மேலாளர் வணிகம் கூட்டாண்மை (சேலம் புறநகர் பேருந்து) தெரிவித்துள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.






