search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tejas Express"

    • தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதுரை வரும் போதும், மதுரையில் இருந்து சென்னை செல்லும் போதும் தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
    • நேற்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

    மதுரை:

    தேசிய அளவில் 4 தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் 2-வதாக அறிமுகமான ரெயில் ஆகும். இதனை பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

    இந்த தேஜஸ் ரெயில் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளூர் தொழில் நுட்பத்துடன் தயாரானது. முற்றிலும் குளிர்சாதன பெட்டிகள் அடங்கிய இந்த ரெயில் கட்டணம் மிகவும் அதிகம் ஆகும். அதில் பயணிக்கும் பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டி, படிப்பதற்கு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் வழங்கப்படும்.

    அதிநவீன வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்றது. சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் செல்லக்கூடிய இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

    இதையடுத்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதுரை வரும் போதும், மதுரையில் இருந்து சென்னை செல்லும் போதும் தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

    சென்னையில் இருந்து புறப்படும் மதுரை தேஜஸ் விரைவு ரெயில் (22671) தாம்பரத்துக்கு காலை 6.25 மணிக்கு வந்து, 6.27 மணிக்கு புறப்படுகிறது. அதேபோல் மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் (22672) தாம்பரத்துக்கு இரவு 8.38 மணிக்கு சென்று, 8.40 மணிக்கு புறப்படுகிறது.

    இந்தநிலையில் மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வது டிரெண்டிங் ஆகி உள்ளது. மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், வசதியான இருக்கைகளுடன் கூடிய தேஜஸ் விரைவு ரெயிலின் உட்புற தோற்றத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை நேற்று மாலை வரை 1.70 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

    49 ஆயிரத்து 700 லைக்குகள், 3 ஆயிரத்து 840 மறுபதிவுகளுடன் இது டிரெண்டிங் ஆகி வருகிறது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் தாம்பரம் நிறுத்தத்தின் மூலம் தென் மாவட்ட பயணிகள் அதிகாலை நேரத்தில் எழும்பூர் சென்று மீண்டும் தாம்பரம் வரும் சிரமம் குறையும். மேலும் இந்த ரெயிலை பயணிகள் முழுமையாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×