என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இரண்டு மாதங்களாக எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன்.
    • இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம்.

    சென்னை:

    பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது.

    1. இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் We the Leaders' அறக்கட்டளை. இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே, இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன்.

    ஆம். கடந்த ஜூலை 12, 2025 அன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி திருமதி. அகிலா அவர்களுக்கு எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது.

    இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40,59,220 செலுத்தியுள்ளோம்.

    மேலும், நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்

    2. நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள நமது இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

    தமிழகத்தில், பாஜக மாநிலத் தலைவரானதிலிருந்து, கடந்த ஏப்ரல் 2025 வரை என் குடும்பத்துடன் செலவிட எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது, எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் சில ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்.

    இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.



    • இரண்டு லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
    • கிராம கமிட்டிகளை உடனடியாக முழு அளவில் தயார் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நெல்லையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் டெல்லி பிரதிநிதி க்ரிஷ் சோடங்கர் கலந்து கொண்டார்.

    இந்த மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில் கிராம கமிட்டிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தவும் அதில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் அவர் தமிழகத்திற்கு வருவதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். இதை அடுத்து இரண்டு லட்சம் பேரை திரட்டி மிகப்பிரமாண்டமான மாநாட்டை நடத்த தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இதற்காக கிராம கமிட்டிகளை உடனடியாக முழு அளவில் தயார் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த மாநாட்டை சென்னை அல்லது திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் ராகுல் கொடுக்கும் தேதியை பொறுத்து இடமும் தேதியும் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வருகிற 16-ந்தேதி சென்னையில் கூட்டம் நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் பா.ஜ.க. அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசிக்க உள்ளார்.

    தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் 2026 தேர்தலுக்கான வியூகம், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தலைவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் பா.ஜ.க. அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசிக்க உள்ளார்.

    கூட்டணி முரண்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என்றும், பா.ஜ.க. தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அடையாறு: எல்லையம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அபிராஞ்சி அவென்யூ, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் 7 முதல் 13வது குறுக்குத் தெருக்கள் மற்றும் 1வது பிரதான சாலை.

    • 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு 25 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • தற்போது விரைவு ரெயில்கள் மெதுவான பாதைகளில் இயக்கப்படுவதால் வேலைக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.

    சென்னை:

    சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஏற்கனவே 3 வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. இதனால் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் எளிதாக செல்ல முடிகிறது. இதன் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்துள்ளது.

    ஆனால் கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு கடற்கரை -வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில்கள் மற்றும் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்கள் இருந்தபோது கடற்கரை -வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில்கள் 10 முதல் 15 நிமிட வெளியில் இயக்கப்பட்டன. ஆனால் 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு 25 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    4-வது வழித்தடம் அமைக்கும் பணியால் ஏற்கனவே சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்துடன் பறக்கும் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டோம். ஆனால் இப்போது 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பின்னர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கும்மிடிப்பூண்டி மற்றும் அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரெயில்களில் செல்லும் பயணிகளும் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. 4-வது வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதால் பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் பறக்கும் ரெயில் நடைமேடைகளின் அகலமும் குறைந்துள்ளது. இது நெரிசலான நேரங்களில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    4-வது பாதை அமைக்கப்பட்ட போது கோட்டை ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்களுக்கான நடைமேடை அகற்றப்பட்டது இதையடுத்து சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான புறநகர் விரைவு ரெயில்கள், விரைவு பாதைக்கு பதிலாக தற்போது மெதுவான பாதைகளில் இயக்கப்படுகின்றன.

    இதற்கு முன்பு செங்கல்பட்டு - எழும்பூர் - கடற்கரை வழித்த டத்தில் விரைவு பாதையில் விரைவு ரெயில் இயக்கப்பட்டதால் புறநகர் பகுதிகளில் இருந்து குறித்த நேரத்தில் சென்னைக்கு வேலைக்கு வர முடிந்தது. ஆனால் தற்போது விரைவு ரெயில்கள் மெதுவான பாதைகளில் இயக்கப்படுவதால் வேலைக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • தமிழக அரசு தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நேற்றைய தினம் கடலுர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமுற்றன. பல இடங்களில் நெல் அறுவடை முடியும் தருவாயில் தற்போது பெய்த மழையால் அறுவடைப்பணி பாதிக்கப்பட்டு, நெல்லும், சில இடங்களில் பருத்தியும் சேதமடைந்துள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.

    இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.

    முன்னதாக பிரசார வாகனம் இன்று மாலைக்குள் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்படுகிறது. திருச்சி பிரசாரத்தை முடித்துக் கொண்டு காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு வழியாக பால் பண்ணை சென்று சிதம்பரம் பைபாஸ் வழியாக அரியலூர் புறப்பட்டு செல்கிறார்.

    பின்னர் அரியலூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மதியம் 12 மணியளவில் திறந்த வெளி வாகனத்தில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

    அதன் பின்னர் அங்கிருந்து மருதையான் கோவில் வழியாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் புறப்பட்டு செல்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு இடங்களில் 21 நிபந்தனைகளுடன் ஒரு மணி நேரம் பேச காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. குன்னம் பஸ் நிலையத்தில் மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் பேரளி வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பாலக்கரை சங்குப்பேட்டை வழியாக மேற்கு வானொலி திடல் செல்கிறார். அங்கு மாலை 5 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருச்சியில் ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள அக்கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் மரக்கடை பகுதியில் ஓரிடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. விஜய்யை வரவேற்று ஆங்காங்கே பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது.



    சாலைகளில் கட்சிக் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் பிரசாரக் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் வார இறுதி நாள் என்பதால் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பல்லாயிரக்கணக்கில் திரளாக பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

    விஜய் வருகையால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரது இந்த சுற்றுப்பயணம் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விஜய் வருகையை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 2 நாட்களாக மூன்று மாவட்டங்களிலும் முகாமிட்டு முன்னேற்பாடு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பெரம்பலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். நாளை தொடங்கும் விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதனிடையே, விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுப்பயண லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் விஜய் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. மேலும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

    அண்ணா அட்சி அமைத்த 1967, எம்ஜிஆர் ஆட்சி அமைத்த 1977 ஆண்டுகளுடன் 2026-ஐ குறிப்பிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகபட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செருதூர் சிங்காரவேலன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 49), பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பை சேர்ந்த இடும்பன் (47), ரெத்தினம் (25) பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணேசன் (55) ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். நேற்று நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் செல்போன் மற்றும் தொழில் நுட்ப கருவிகளை கேட்டனர். அவர்கள் தரமறுத்ததால் மீனவர்களை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலையில் அவர்கள் கரை திரும்பினர். கடற்கொள்ளையர்களால் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் ஆகிய 3 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    இதைப்போல் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரகதீஸ் (வயது 25), திரிசெல்வம் (44), சுந்தரவேல் (30), மீனவர் காலனி வெல்லப்பள்ளத்தை சேர்ந்த சாந்தகுமார் (28), அந்தோணிராஜ் ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 மீனவர்களையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து 200 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை, செல்போன்கள், பேட்டரி, டார்ச் லைட், சார்ஜர், பெட்ரோல் கேன், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைப்போல் செருதூரில் இருந்து சென்ற மற்றொரு பைபர் படகில் இருந்து 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடமிருந்து மீன்பிடி வலை மற்றும் தொழில் நுட்பபொருட்களை பறித்து சென்றனர். இது தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
    • மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    22 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக் கழகங்களிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே நடைபெற்ற கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டில் இடங்களை பெற்ற மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததை விட ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகவும், இதனை வெளியில் சொன்னால் மருத்துவ கல்வியில் தொடர முடியாது என்று அச்சுறுத்தவதாகவும் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    எனவே, ஏழை, நடுத்தர குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    சென்னை:

    அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார விடுமுறை தினங்களான நாளை (சனிக்கிழமை), ஞாயிற்றுக் கிழமை மற்றும் முகூா்த்த தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    இதுபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பஸ்களும், நாளை 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் 20 பஸ்கள் என ஆக மொத்தம் 980 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
    • பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது.

    திசையன்விளையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் வாரச்சந்தையும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள், கருவாடு, மீன், சிக்கன், மட்டன், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதோடு குளிர்பான கடைகள், டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைகள் வியாபாரிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் தரை வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு கடைகள் வைத்திருப்போர் தற்காலிகமாக தென்னந்தட்டி மற்றும் தகர சீட்டு கொண்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெற இருந்த நிலையில் அதிகாலை பேரூராட்சி சந்தையின் வெளிப்புறம் அமைந்துள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென சந்தையின் உள்புறம் இருந்து புகை மண்டலமாக வருவதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது சந்தை வடக்கு வாசல் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.

    இதனை கண்ட அந்த பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அங்கு இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் உடனடியாக திசையன்விளை தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் சந்தை முழுவதும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ விபத்தில் திசையன்விளையை சேர்ந்த ராபர்ட் பாக்கியசீலன்(வயது 30) என்பவரின் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பழக்கடை, வாகனேரியை சேர்ந்த அன்னக்கிளி(48) என்பவரின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிக்கடை மற்றும் தராசு, மர அலமாரி, தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

    தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரூராட்சிக்கு சொந்தமான திசையன்விளை தினசரி மற்றும் வாரச்சந்தையில் இது போன்று தீ விபத்து அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. பேரூராட்சி சந்தையினை நவீனப்படுத்திட ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே ஸ்மார்ட் மார்க்கெட்டாக மாற்றினால் மட்டுமே இதுபோன்ற தீ விபத்தை தடுக்க முடியும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு போன்ற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பயணிகள் பெறலாம்.
    • தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரில் டிக்கெட்டுகளை பெறலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

    சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்று பயணிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×