என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுவதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடத்தப்படும். 13-ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளன.

    மேலும் ஏப்ரல் 23-ந் தேதி முதல் 26-ந்தேதி வரையில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வித்துறை இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும் , எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
    • பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

    திருச்சி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.

    தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும் , எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நேற்று அறிவித்தார். இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் தொடங்க உள்ளார்.

    அன்று மாலை 4 மணிக்கு திருச்சி வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 26-ந் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், 27-ந் தேதி நாகர்கோவில், சங்கரன்கோவில் பகுதியிலும், 28-ந் தேதி சிவகாசி மற்றும் ராமநாதபுரம் பகுதியிலும்,

    29-ந் தேதி சென்னை மதுராந்தகம், பல்லாவரம் ஆகிய இடங்களிலும், 30-ந்தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும் 31-ந் தேதி மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

     பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க.வை போல அ.தி.மு.க.வும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தினை திருச்சியில் தொடங்க உள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ள நிலையில் வருகிற 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்ய இருப்பதால் திருச்சி விழா கோலம் பூண்டுள்ளது.

    • தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.
    • பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி ஹோலி பண்டிகை வருவதாலும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும் பலர் குழுக்களாக திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.

    பெரும்பாலும் ஒரு குழு சென்றால் மறு குழு பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் திரும்பி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வருகிற 24-ந்தேதி முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.வடமாநிலங்களில் ஜூன் மாதம் வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப மேலும் காலதாமத மாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவதில் காலதாமதமாகும் என்பதால் பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அ.தி.மு.க. தாங்கள் போட்டியிடும் 33 தொகுதிகளில் தி.மு.க.வோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியிடுகிறது.
    • திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அ.தி.மு.க. தங்கள் கட்சி வேட்பாளர்களை களம் இறக்குகிறது. தி.மு.க. 21 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 33 தொகுதிகளில் போட்டியிட்டாலும், இந்த 2 கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

    நேரடி போட்டி நிலவும் தொகுதிகள் வருமாறு:-

    வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி.

    தி.மு.க. போட்டியிடும் மற்ற 3 தொகுதிகளில் மத்திய சென்னை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு எதிராகவும், தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு எதிராகவும் களம் காண்கிறது.

    அதேபோல் அ.தி.மு.க. தாங்கள் போட்டியிடும் 33 தொகுதிகளில் தி.மு.க.வோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மதுரையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். ம.தி.மு.க.வுக்கு எதிராக திருச்சியிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக ராமநாதபுரத்திலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு எதிராக நாமக்கல் தொகுதியிலும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    சில தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே களத்தில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்கின்றன. குறிப்பாக திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், தே.மு.தி.க.வும் மோதிக் கொள்கின்றன. அதேபோல் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்படையினர் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 7 மீனவர்களை சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
    • ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அவர்களை சிறைபிடிப்பதோடு, பல லட்சம் மதிப்பிலான மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இலங்கை சிறையில் இருந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீனவர்கள் விடுதலையானபோதும், படகுகளை அரசுடமையாக்குவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

    கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆரோக்கிய கந்தன், இஸ்ரோல் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளுடன் அதில் இருந்த 21 மீனவர்களை 17-ந்தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக இன்று 32 மீனவர்களை 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்றை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்தநிலையில், அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்படையினர் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 7 மீனவர்களை சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

    இதே போன்று காங்கேசம் கடற்படையினர் 3 விசைப் படகுகளுடன் 25 மீனவர்களை சிறைபிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். படகில் இருந்த மீனவர்கள் விக்டோரியன் என்பவரது விசைப்படகுகளில் இருந்த அந்தோணி ஆரோன், ஜேசு ராஜா, திருப்பால் மற்றும் அருளானந்தம் என்பவரது படகில் இருந்த ஜெகன், அந்தோணி காட்ஷன், ராஜசேகர், ராஜா முகம்மது, ரஞ்சித், ராமு, காயன், மோகன், மனோகரன், சேகரன், முருகன் உள்ளிட்ட 32 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில், 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததுடன் மீனவர்கள் 32 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீதியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை கைது செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் வி.பி.ஜேசுராஜா கூறியதாவது:-

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு கவனம் செலுத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • விருதுநகர், கரூர் ஆகிய தொகுதிகளை கேட்டு பெரிய அளவில் யாரும் மோதவில்லை.
    • விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., சிந்துஜா ஆகிய இருவரது பெயர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இந்த தொகுதிகளில் போட்டியிட மனு கொடுத்திருக்கும் தலைவர்கள் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக தேர்தல் குழுவினர் வாய்ப்பு கேட்டவர்கள் பட்டியலை தயாரித்து டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார்கள். நேற்று இரவு மேலிட குழுவினருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசித்து ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் கொண்ட பட்டியலை தயாரித்தனர்.

    இதில் விருதுநகர், கரூர் ஆகிய தொகுதிகளை கேட்டு பெரிய அளவில் யாரும் மோதவில்லை. இந்த தொகுதிகளில் ராகுலின் நேரடி பார்வையில் உள்ள வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாகவும் அதனால்தான் மற்றவர்கள் மனு செய்யவே தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

    கரூர் தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் ஜோதிமணி எம்.பி. அவரது தீவிர எதிர்ப்பாளர் பேங்க் சுப்பிரமணி ஆகிய இருவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

    அதே போல் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., சிந்துஜா ஆகிய இருவரது பெயர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது.

    மற்ற தொகுதிகளில் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் பெயர் விவரங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி: விஜய் வசந்த் எம்.பி., ராபர்ட் புரூஸ், பிரின்ஸ் எம்.எல்.ஏ.,

    திருநெல்வேலி: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு,

    சிவகங்கை: கார்த்தி சிதம்பரம், எம்.பி., சுதர்சனன் நாச்சியப்பன், திருநாவுக்கரசர்

    கிருஷ்ணகிரி: டாக்டர் செல்லக்குமார் எம்.பி., தங்கபாலு, கோபிநாத்

    மயிலாடுதுறை: திருநாவுக்கரசர், பிரவீன் சக்ரவர்த்தி, டாக்டர் விஷ்ணு பிரசாத்

    கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், சி.டி.மெய்யப்பன், சுதா ராமகிருஷ்ணன்

    திருவள்ளூர்: பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், ரஞ்சன் குமார், லெனின் பிரசாத்.

    இந்த பட்டியலை மத்திய தேர்தல் கமிட்டியினர் இன்று பரிசீலித்து வேட்பாளர்களை முடிவு செய்கிறார்கள். இன்று இரவுக்குள் முதல் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கள்ளக்குறிச்சி தொகுதியில் குமரகுரு போட்டி.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் போட்டி.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள் தவிர மீதமுள்ள 32 பாராளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    ஸ்ரீபெரும்புதூர்- பிரேம்குமார்

    தருமபுரி - அசோகன்

    கள்ளக்குறிச்சி-குமரகுரு

    வேலூர் - பசுபதி

    திருவண்ணாமலை - கலியபெருமாள்

    கோவை- ராமச்சந்திரன்

    திருச்சி- கருப்பையா

    பெரம்பலூர்- சந்திரமோகன்

    பொள்ளாச்சி- கார்த்திகேயன்

    திருப்பூர் - அருணாசலம்

    நீலகிரி (தனி) - லோகேஷ்

    மயிலாடுதுறை - பாபு

    திருநெல்வேலி- சிம்லா முத்துசோழன்

    சிவகங்கை -சேவியர் தாஸ்

    தூத்துக்குடி- சிவசாமி வேலுமணி

    கன்னியாகுமரி- பசிலியா நசரேத்

    புதுச்சேரி- தமிழ்வேந்தன்

    விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் - ராணி

    • தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்போடு இருக்கிறார்
    • நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    பின்னர் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்த பகுதி தண்ணீருக்கு பிரச்சனையான பகுதி. 361 கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிவடைய கூடிய நிலையில் உள்ளது.

    தூத்துக்குடியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வின் பாஸ்ட் (கார் கம்பெனி) நிறுவனத்தில் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பயிற்சி கொடுத்து இங்கு இருக்க கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று முதலமைச்சர் உறுதி கொடுத்துள்ளனர்.

    இன்னும் தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்போடு இருக்கிறார். இதன் மூலம் தூத்துக்குடி புகழ் பெற்ற நகரமாக மிளிரும்.

    நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்றும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது.

    ஒன்றியத்தில் மாற்றம் உருவாகும்போது தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்படும். எங்களை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து எதையுமே செய்யாத எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை கேட்பது வருத்தமாக உள்ளது.

    மக்களுக்கு எதிராக பா.ஜ.க. கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் ஏற்றுக்கொண்டு அது வெற்றி பெறுவதற்காக வாக்களித்த இயக்கம் தான் அ.தி.மு.க.. அப்போது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
    • தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.

    இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

    கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை அடைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் சுமுகமாக தொகுதி பங்கீடு செய்து முடித்து விட்டார். அதன் பின்னர் நேற்று தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

    இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் பிரசார பொதுகூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் நாளை மாலை 4.45 மணிக்கு திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    பின்பு அவர் காரில் சிறுகனூருக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் அவர் கார் மூலமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர்,வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 25, 26, 27,29, 30,31,ஏப்ரல் 2, 3, 5, 7,6,9, 10, 12, 13 ,15 ,16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    இறுதியாக அடுத்த மாதம் 17-ந்தேதி தென்சென்னையில் மத்திய சென்னை வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.

    பரமத்திவேலூர்:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை லோடு ஏற்றிச் செல்ல வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் கேரளா எர்ணாகுளம் பாரிஸ் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் (27) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் வைத்திருந்தார். இந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது. இந்த பணத்தை அதிகாரிகள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதுபோல் திருச்செங்கோடு- மோர்பாளையம் சாலையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க-வை இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.
    • 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும்.

    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த பாராளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.

    மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இந்தியா கூட்டணியை 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

    இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.மு.க-வை இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

    தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும்.

    இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் என்றாலும் 234 சட்டமன்ற சபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும்.
    • கட்சி சின்னம்,கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன் டி-சர்ட் மற்றும் தொப்பிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    தேர்தல்களின்போது அரசியல் கட்சி பெயர்களில் டி-சர்ட் தயாரிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் நடைபெறும் பிரசார பயணங்களுக்கு தேவையான டி-சர்ட்கள் திருப்பூரில் கொள்முதல் செய்யப்படும்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சியினர் மாநிலம் முழுவதும் பயன்படுத்த திருப்பூர் கட்சியினர் மூலம் ஆர்டர் கொடுத்து தயாரிப்பார்கள்.

    தற்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதையடுத்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பிரசாரத்திற்காக தயாரிக்கப்பட்டு இருந்த பனியன்களில் கட்சி கொடி, சின்னம், தலைவர் படங்கள் அச்சிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் என்றாலும் 234 சட்டமன்ற சபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும். கட்சி சின்னம்,கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன் டி-சர்ட் மற்றும் தொப்பிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பிரசாரத்திற்கு தேவையான பனியன்கள் வெள்ளை உள்ளிட்ட கலர்களில் தயாரித்து வைத்து விட்டோம். தற்போது அதில் சின்னம், கொடி, தலைவர் படங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெறுகிறது. 2, 3 நாட்களில் இந்த பணிகள் முடிந்து விடும். தயாரான பனியன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×