என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், என்ன எல்லாம் பளபளப்பாக வந்து இருக்கீங்க? 1000 ரூபாய் தான் காரணமா? என பேசுவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.
ஆனால் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், என்ன பளபளப்பாக வந்து இருக்கீங்க ? என கதிர் ஆனந்த் கேட்க, அங்கிருந்த மக்கள் 1000 ரூபாய் தான் என சொல்ல... அதற்கு கதிர் 1000 ரூபாய் தான் காரணம் என பதில் பேசுகிறார். மேலும், "தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என கதிர் ஆனந்த் கூறினார். இதனால் அங்குள்ள மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்...
- இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- ஏப்ரல் 27-ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
அரசு துறையில் உயர் பதவிக்கான துணை கலெக்டர், போலீஸ் துணை கண்காணிப்பாளர், வணிக வரிகள் உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆகிய 90 பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 27-ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடக்கிறது. முதல் நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது முதன்மை தேர்வு நடைபெறும் நாள் வெளியிடப்படும்.
- முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வரும் 5ம் தேதி அமித்ஷா சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நடைபெற உள்ளது.
இதனால், தேர்தலில் வெற்றி கனியை சுவைக்க, கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகத்திற்கு மூன்று முறை வந்து பிரசாரம் நடத்தினார்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் ஏப்ரல் 4ம் தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
இதைதொடர்ந்து, வரும் 5ம் தேதி அமித்ஷா சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னையை அடுத்து, மதுரை, சிவகங்கை தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
- ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.
- பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது.
- தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.
பெரம்பலூர்:
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். பெரம்பலூரில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. அணி என்பது ஒரு மகத்தான அணி. கொள்கைகான அணி. கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிற அணி. தமிழக முதல்-அமைச்சர் தனது பிரசாரத்தை பெரம்பலூர், திருச்சி தொகுதியில் தொடங்கி தற்போது தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
நடைபெற இருக்கின்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் அல்ல. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியுடன் இந்த தேர்தல் நடக்க இருக்கிறது. முற்றிலுமாக ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னம் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல ம.தி.மு.க.விற்கான பம்பர சின்னம் கொடுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. நம்மை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் கூட பறிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நடுநிலையோடு, நேர்மையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே, இன்றைக்கு கேள்விக் குறியாக இருக்கிறது.
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆகவே நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றவும், மதச்சார் பின்மை என்கிற மகத்தான கொள்கையை காப்பாற்றவும், நாம் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.
அதேபோல மத்தியில ஆளும் மோடி தலைமையிலான அரசு என்பது ஒரு மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது, தமிழ் மக்களை புறக்கணிக்கிறது. தமிழை புறக்கணிக்கிறது. அதே நேரத்தில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது.
நம்முடைய நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டது போல, நாம் செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும், மத்திய அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா தான். அதே நேரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு ரூபாய் வழங்கப்படு கிறது. அதாவது இரு மடங்காக வழங்கப்படுகிறது நமக்கு குறைத்து வழங்கப்படு கிறது. எனவே பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும்.
எதிர் தரப்பில் அமைந்தி ருக்கிற கூட்டணியில், ஒன்று நள்ளிரவு கூட்டணி. மற்றொன்று கள்ளக் கூட்டணி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண் டும். எனவே ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருக்கிற தி.மு.க. தலைமையிலான இந்த அணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் 40 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
- செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
- திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.
சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.
பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.
- தரமணி ரெயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 லட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
- மெட்ரோ ரெயில் குறித்தும் பல முறை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்துள்ள நிலையில் அதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, தென்சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று தியாகராயர் நகரில், 142-வது வட்டத்திற்கு உட்பட்ட சி.ஐ.டி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கடந்த மூன்று நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறேன்; செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்களும், கழகத்தினரும், தோழமைக் கட்சியினரும் அளிக்கும் வரவேற்பையும், அன்பையும், எழுச்சியையும் பார்கின்ற போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார்.
இதனிடையே, ரெயில்வே துறையில் தொகுதிக்காக நீங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதி முழுவதும் உள்ள ரெயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக நான் 2019-ல் வெற்றி பெற்றது முதல் 2024 வரை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு குறைகளை மனுவாக அளித்துள்ளேன்.
ZRUCC கூட்டம் அனைத்திலும் கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து ரெயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக பேசியுள்ளேன். அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை ரெயில் நிலையங்களில் பழுதடைந்த மேற்கூரை மாற்றப்பட்டது. தரமணி ரெயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 லட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் முண்டக்கன்னியம்மன் கோவில் ரெயில் நிலையத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவு வாயில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது; வேளச்சேரி - புனித தோமையர் மலை MRTS இணைப்பிற்காக, பாராளுமன்றத்தில் பலமுறை பேசியும், ரெயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது; மெட்ரோ ரெயில் குறித்தும் பல முறை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன் என கூறினார்.
- 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
- யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.
இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆகும்.
வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வட சென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.
வடசென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோ, தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பா.ஜ.க. வேட்பாளர் வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆகியோர் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள ராயபுரம் மண்டல அலுலகத்திற்கு பரிசீலனையில் போது வந்திருந்தனர்.
அப்போது ஒவ்வொரு வேட்பாளரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மனு ஏற்கப்பட்டது.
அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்புமனுவில் முந்தைய வழக்குகளின் விவரங்களை குறிப்பிடவில்லை என்று தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு அ.தி.மு.க.வினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் அதிகாரி உடனே ராயபுரம் மனோவின் மனுவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மீண்டும் 12.45 மணிக்கு வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் என்று கூறினார்.
இதே போல் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது வேட்புமனு தாக்கலின் போது விதிகளை மீறியதால் தி.மு.க. வேட்பாளரின் மனுவை ஏற்கக் கூடாது என்று அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தி.மு.க. வேட்பு மனுவையும் தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார். இந்த மனு மீது மதியம் 12.45 மணிக்கு பரிசீலனை நடைபெறும் என்று அறிவித்தார்.
அ.தி.மு.க., தி.மு.க. இரு வேட்பாளர்களின் மனுக்களையும் காலையில் நிறுத்தி வைத்ததால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரான எம்.சந்திரகாசன் மனுதாக்கல் செய்திருந்தார். அங்கு வேட்பாளரை மாற்றப் போவதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சந்திர காசி திடீரென்று மனு தாக்கல் செய்தார். அதே நேரத்தில் சந்திரகாசியின் வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படாததால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு பரிசீலனையின் போது வேட்புமனுவில் சில பிழைகள் இருப்பதாக கூறப்பட்டதால் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனுவும் பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் ஏற்கப்பட்டது.
சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த செல்வகணபதிக்கு சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதாக அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆன்லைன் மூலமும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் செய்தனர். அதே போல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் செல்வகணபதி சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாகவும், பழைய வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனுவை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மற்ற மனுக்கள் பரிசீலனை முடிந்ததும் கடைசியாக இந்த மனுவை பரிசீலனை செய்வதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே செல்வ கணபதி சார்பில் கடந்த 2015-ம் ஆண்டே இரட்டை வாக்குரிமைகளில் ஒன்றை நீக்குமாறு மனு கொடுத்ததாக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்தனர்.
தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு மீதான பரிசீலனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விவரங்களை வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடவில்லை என்று கூறி தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.
கரூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மனு ஏற்கப்பட்டது.
மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதி மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தென்சென்னையில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் வேட்புமனுவும், பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனுவும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.
கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மத்திய மந்திரி எல்.முருகன் வேட்புமனு ஏற்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு, விருதுநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதிகா சரத்குமார், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், கடலூர் பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சான் மனுக்களும் ஏற்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, தூத்துக்குடியில் கனிமொழி வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் மனுவும் ஏற்கப்பட்டது.
இதேபோல் பெரும்பாலான அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.
- கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசித்து விட்டு கோவில் வளாகத்தில் கட்சியினருடன் வந்து கொண்டிருந்தார்.
- அண்ணாமலையை பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று அண்ணாமலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனையொட்டி அவர் கோவை பெரியகடைவீதியில் உள்ள கோனியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசித்து விட்டு கோவில் வளாகத்தில் கட்சியினருடன் வந்து கொண்டிருந்தார்.
அண்ணாமலையை பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு வந்த கோவைப்புதூரை சேர்ந்த ரவி-தேவிகா ஆகியோர் திடீரென அண்ணாமலையின் காலில் விழுந்தனர்.
இதை பார்த்ததும் ஒரு நிமிடத்தில் அண்ணாமலை திக்குமுக்காடி போனார். பின்னர் அவர்களை ஆசிர்வதித்து விட்டு எழுந்திருக்கும் படி கூறினார்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது, தங்களுக்கு இப்போது தான் திருமணம் முடிந்ததாகவும், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த போது உங்களை பார்த்ததும், உங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காக காலில் விழுந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலை புதுமண தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து 1989-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வீர கணேசன் என்பவரின் தாயாரை பா.ஜ.கவினர் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். அவரின் காலில் விழுந்து அண்ணாமலை ஆசி பெற்றுக்கொண்டார்.
- அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
- மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கான பரிசீலனை இன்று நடந்தது.
தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பின்னர் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை முடிந்து மன்சூர் அலிகான் வெளியே வந்தார்.
தமிழகத்தில் முதல் நாளில் நான்தான் மனுத்தாக்கல் செய்தேன். எனக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் வருகிற 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும். நான் எந்த கட்சிகளையும் வேறுபாடு பார்க்க மாட்டேன். அனைவரையும் தாக்கி பேசுவேன் என்றார்.
முன்னதாக வேட்பு மனு பரிசீலனைக்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் மன்சூர் அலிகான் சென்றார்.
எதிரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதியில் நீங்கள் (தி.மு.க) தான் வெற்றி பெறுவீர்கள். ஆனால் வேலூர் தொகுதியில் மட்டும் நான் வெற்றி பெறுவேன் என்றார். அதற்கு கதிர் ஆனந்த் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்துவிட்டு சென்றார்.
- 31-ந்தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.
- தமிழக கவர்னர் பயணத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வந்தபோது தோடரின மக்கள் வசிக்கும் முத்தநாடு கிராமம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் 18-ந்தேதி சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது 5 நாட்கள் சுற்றுப்பயணமாக மீண்டும் ஊட்டிக்கு வருகிறார். இதற்காக அவர் நாளை மறுநாள் (30-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி மார்க்கமாக மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
தொடர்ந்து 31-ந்தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு அவர் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து நேரில் பார்வையிடுகிறார். பின்னர் 1-ந்தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
தொடர்ந்து 2-ந்தேதி குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். 3-ந்தேதி குந்தாவில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு செல்கிறார். பின்னர் 4-ந் தேதி காலை 11 மணியளவில் ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மார்க்கமாக சென்னை சென்றடைகிறார்.
தமிழக கவர்னர் பயணத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.






