என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த ஆண்டு தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதனை வருடந்தோறும் அ.தி.மு.க. பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக்குழுவினரிடம் வழங்கி வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் மற்றும் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவணன், நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், ராஜ்சத்யன், நிலையூர் முருகன், வக்கீல் ரமேஷ், சோழவந்தான் கருப்பையா, திரவியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உஸ்மான் சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது.
- பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓ
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தி.நகர் உள்ளிட்ட கடை வீதிகளில் விற்பனை படுஜோராக உள்ளது.
வழக்கம்போல தி.நகரில் தினமும் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
வாகனங்களில் வரும் மக்கள், வாகனங்களை பல கிலோ மீட்டருக்கு வெளியேவிட்டு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது மக்களுக்கு வசதியாகவும், தீபாவளி கூட்ட நெரிசலையொட்டியும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
உஸ்மான் சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது. இந்த பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
- தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.
சென்னை:
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.
'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.
இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதை பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.
'கண்டமிதில்' என்பதற்கு பதிலாக 'கண்டமதில்' என பாடி விட்டனர்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும் அதை மீண்டும் பாடும்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் சொன்னார். அதனை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது.
அப்போது பாடல் வரியில் 'புகழ்' மணக்க என்பதை 'திகழ்'மணக்க என்று மீண்டும் பிழையுடன் பாடினார்கள்.
இதையறிந்த உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை ஓரக்கண்ணால் பார்த்தார்.
தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மத்திய இணை அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்," அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. 2 முறை பாடல் தவறாக பாடப்பட்டது. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கூறப் போகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி பதவி விலகுவாரா?. தமிழக அரசின் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?" என சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
- மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும்.
- ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
பொன்னேரி:
பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இப்பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பழவேற்காடு பகுதியை சேர்ந்த எண்ணூர் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம், மற்றும் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் பழவேற்காடு- காட்டுப்பள்ளி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தாங்கல்பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட கருங்காலி பகுதியில் உள்ள இந்த சாலை கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது.
இதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போதும், மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும். இதனால் சாலை மணலால் மூடப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை முழுவதும் கடல் நீர் புகுந்து மணலால் மூடியதால் வாகன போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதானி துறைமுகம் சார்பில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கருங்காலி பகுதியில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை சுமார் 1/2 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வடிந்து மணலாக நிரம்பி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் மணல் உள்ள பகுதியில் இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். பெரிய வாகனங்கள் வஞ்சிவாக்கம், காட்டூர், வாயலூர் வழியாக மாற்றுபாதையில் சுற்றி செல்கின்றன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கடல் அலை சீற்றத்தின் போது ஒவ்வொரு முறையும் சாலை மணலால் மூடப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
- பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம்.
- மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக புகார் வெளியாகியுள்ளது.
பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.
- 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் மீது அவதூறு வழக்கு.
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல்.
சபாநாயகர் அப்பாவுக் எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
சபாநாயகர் பேச்சு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, "புகார்தாரர் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை" என தெரிவித்தார்.
பின்னர், சபநாயகர் அப்பாவு எதிரான அவதூறு வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
- தமிழ்நாடு முழுவதும் 24 ஆயிரத்து 610 முழு நேர ரேஷன் கடைகள், 10 ஆயிரத்து 164 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
- பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 24 ஆயிரத்து 610 முழு நேர ரேஷன் கடைகள், 10 ஆயிரத்து 164 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் ரேஷனில் பொருட்களை பெறும் வகையில் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளும் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
- தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 66 ஏக்கர் பரப்பளவிலான குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வேமாண்டம் பாளையம் குளத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது.
இதனால் வேமாண்டம்பாளையம் குளம் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதுடன், அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியூர்-புஞ்சைபுளியம்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
மேலும் இரவு கனமழை பெய்தால் சேதம் ஏற்படாமல் இருக்க நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் லோகநாயகி மற்றும் வரப்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- சுப்பையா அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21.10.2024 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (25.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
காவல் உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெ.ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துனர் ஜெகன் குமாரின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல மசோதாக்கள் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
- சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்திற்கும், அமைச்சரவை விதிக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்க முழு உரிமை உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் குறையேதும் இல்லை. ஆனால் புதிய உறுப்பினர் சவிதா பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.பி.வி.பி. மாணவர்களுடன் 'செல்பி' எடுத்து விளம்பரப்படுத்தியது தவறு. பொது நலனில் நடுநிலையுடன் செயல்படவேண்டும்.
இந்த பிரச்சினை தொடர்ந்து வருவதால் தான் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம், அரசிடம் முழுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட 10 மசோதாக்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல மசோதாக்கள் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் கவர்னர் அதற்கு அனுமதி தரவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் சட்டவிதி மற்றும் மரபுபடி நடப்பதில்லை.
சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்திற்கும், அமைச்சரவை விதிக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ். விதிப்படி நடப்பது போல் உள்ளது. கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கூடங்குளம் அணுக்கழிவுகளை என்ன செய்வதென்று தெரியாத நிலை உள்ளது. தொடர்ந்து புற்றுநோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடற்கரை பகுதிகளில் இந்த நோய் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அணுக்கழிவுகளை கொண்டு செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மூலப்பிள்ளையார் கோவில் வண்டிக்கார தெரு பகுதியில் ஒரு குக்கர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேக்ராஜ் (50) என்பவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல நிறுவனத்தில் பணி முடிந்த பின் ஊழியர்கள் மற்றும் மேலாளர் மாதேஸ் ஆகியோர் நிறுவனத்தை பூட்டி விட்டி வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியினர் மேலாளர் மாதேசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த அவர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்ததால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாமல் தவித்தனர் .
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தூரத்தில் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அக்கம் பக்கம் பரவாமல் தடுத்து தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த குக்கர் தயாரிக்கும் பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த நிறுவனம் பாதி அளவு எரிந்து உருக்குலைந்து காட்சி அளித்தது.
மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றதாக போலீசார் கூறினர். மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது.
- வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில், 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பருவமழையால் ஆகஸ்டு 31-ந் தேதி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. அணையில் 98 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் இந்த மாதம் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் கன மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தத்தால், அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
அணையில் 237 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மாலைக்குள் ஆனைமடுவு அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என்பதால் அணை ஆயக்கட்டு பாசன விவசாயிகளும், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல ஏத்தாப்பூர், கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை மற்றும் சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளிலும் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவில் 153 மி.மீ. மழை கொட்டியது. சேலம் மாநகர் 16.6, ஏற்காடு 1.8, வாழப்பாடி 3.9, ஆத்தூர் 6.2, கெங்கவல்லி 14, ஏத்தாப்பூர் 22, கரியகோவில் 16, வீரகனூர் 29, நத்தக்கரை 11, மேட்டூர் 0.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 276.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.






