கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- சபாநாயகர்

பல மசோதாக்கள் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்திற்கும், அமைச்சரவை விதிக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- சபாநாயகர்
Published on

நெல்லை:

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்க முழு உரிமை உள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் குறையேதும் இல்லை. ஆனால் புதிய உறுப்பினர் சவிதா பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.பி.வி.பி. மாணவர்களுடன் 'செல்பி' எடுத்து விளம்பரப்படுத்தியது தவறு. பொது நலனில் நடுநிலையுடன் செயல்படவேண்டும்.

இந்த பிரச்சினை தொடர்ந்து வருவதால் தான் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம், அரசிடம் முழுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட 10 மசோதாக்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல மசோதாக்கள் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் கவர்னர் அதற்கு அனுமதி தரவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் சட்டவிதி மற்றும் மரபுபடி நடப்பதில்லை.

சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்திற்கும், அமைச்சரவை விதிக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ். விதிப்படி நடப்பது போல் உள்ளது. கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கூடங்குளம் அணுக்கழிவுகளை என்ன செய்வதென்று தெரியாத நிலை உள்ளது. தொடர்ந்து புற்றுநோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடற்கரை பகுதிகளில் இந்த நோய் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அணுக்கழிவுகளை கொண்டு செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com