என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
    • ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தேர்வுகளை உடனடியாக நடத்தி அந்த இடங்களுக்கு நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாத கவுரவ விரிவுரையாளர் நியமனத்தை மேற்கொள்வது சமூகநீதிக்கு எதிரானது.

    எனவே, 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த காலி இடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரித்து, ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தேர்வுகளை உடனடியாக நடத்தி அந்த இடங்களுக்கு நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்பதுதான் எங்களது கொள்கை.
    • மத அப்படையில் பிளவுப்படுத்தும் அரசியலை விரும்பவில்லை.

    தமிழ்த்திரை உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநில அரசியல் மாநாடு நேற்று விழுப்புரம் வி.சாலையில் நடைபெற்றது. 101 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிய விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை விவரித்தார்.

    திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்பதுதான் எங்களது கொள்கை. தமிழ்நாட்டு உரிமைகளை சார்ந்த மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம் எனக் கூறினார்.

    மத அப்படையில் பிளவுப்படுத்தும் அரசியலை விரும்பவில்லை எனத் தெரிவித்தார். இதன்மூலம் தேசிய கட்சியான பா.ஜ.க.-வுக்கு நேர் எதிரான கட்சி என்பதை வெளிப்படையாக விளக்கிவிட்டார்.

    2-வதாக அரசியல் எதிரி தி.மு.க. என்பதை தெளிவிப்படுத்தியுள்ளார். திராவிட அரசு என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றுவதாக தி.மு.க.-வை நேரடியாக சாடினார். இதனால் அவருடைய முக்கியமான எதிரி தி.மு.க.தான் என்பது தெளிவாகிவிட்டது.

    மாநாட்டின் இறுதியில் தனி மெஜாரிட்டி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறினார். ஆனால், தம்முடன் வருபவர்களை அரவணைக்க வேண்டாமா... எனத் தெரிவித்து எங்களுடன் வந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு எனத் தெரிவித்துள்ளார்.

    மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலங்களில் சுயாட்சி என்ற திராவிட கட்சிகளான திமுக, அதிமுக-வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காத வகையில், தற்போது மற்ற சிறு கட்சிகளை குறிவைத்து இவ்வாறு பேசியிருக்கலாம் என்பது தெளிவாகிறது.

    ஊழலை எதிர்த்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் என்றால் தி.மு.க., அதிமுக அரசைத்தான் சொல்ல முடியும். 1967-ல் இருந்து இந்த இரண்டு கட்சிகள்தான் மாறிமாறி ஆட்சி செய்துள்ளன. இதில் தி.மு.க.-வை விட அ.தி.மு.க.தான் அதிக முறை ஆட்சி செய்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் ஊழல் வழக்கில் சிறை வரை சென்று வந்தவர். ஆனால் பெயர் சொல்லியோ, அதிமுக-வையோ அவர் ஊழல் பற்றி பேசும்போது காரசாரமாக ஏதும் பேசவில்லை.

    ஆனால் தனது சுமார் 45 நிமிட பேச்சில், தன்னை கூத்தாடி எனக் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் ஆகியோரும் அந்த வழியில் வந்தவர்கள்தான் என்பதற்கு எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தினார்.

    அ.தி.மு.க.-வை அவர் ஏன் இழுக்கவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. அதோடு மட்டுமல்ல அ.தி.மு.க.-வினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது நமக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க.தான் எதிரி. அதை மட்டுமே எதிர்த்தால் தி.மு.க. - த.வெ.க. ஆகியவற்றிற்கு இடையில்தான் போட்டி என்ற பிம்பத்தை ஏற்படுத்த அப்படி செய்திருக்கலாம் என உணரப்படுகிறது.

    ஒருவேளை அ.தி.மு.க. விஜய் கட்சியுடனோ, த.வெ.க. , அ.தி.மு.க.-வுடனோ இசைவுடன் செல்லலாம் என எடுத்துக்கொள்ளலாமா என்றால், அ.தி.மு.க. பலமுறை ஆண்ட கட்சி., எனவே அந்த கட்சி ஒரு புதிய கட்சியின் கீழ் செல்லாது. இதனால் அ.தி.மு.க. உடன் இசைவுடன் செல்ல வாய்ப்பு இல்லை என உணர முடிகிறது.

    இதனால் அ.தி.மு.க.-வை நமது போட்டி வளையத்தற்குள் இழுக்காமல் நேரடியாக தி.மு.க.-வை மட்டுமே குறிவைத்து விஜய் பேசியிருக்கலாம்...

    எது எப்படியோ... விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மூலம் அவரது கட்சி செல்லும் பாதை என்ன என்பது தெளிவாகும் என நம்புவோம்.

    • திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
    • 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டசபை தொகுதிகளின் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

    வரும் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

    • காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • அருவிகளில் குளிக்க தொடர்ந்து 16-வது நாளாக தடை நீடிக்கிறது.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து பகுதியில் பெய்த மழை குறைந்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 16-வது நாளாக தடை நீடிக்கிறது.

    இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமல், பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 20 ஆயிரத்து 255 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 107.54 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 20 அடிக்கு குறையாமல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
    • நாளை பயணம் செய்ய 53 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

    தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி 30-ந் தேதி வரை 3 நாட்கள் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் செய்துள்ளது.

    சென்னை கோயம்பேடு, மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் பஸ் முனையங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதே போல பிற நகரங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளன. சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள் குழப்பம் இல்லாமல் பயணம் செய்ய ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான 2092 பேருந்துகளுடன் சிறப்பு பஸ்கள் 700 இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதால் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, கடலூர், திருச்சி, சிதம்பரம், சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகிறது. அரசு பஸ்களில் பயணம் செய்ய 1.25 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதில் சென்னையில் இருந்து 12 ஆயிரம் பேர் செல்கிறார்கள்.

    நாளை பயணம் செய்ய 53 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதனால் வழக்கமான பஸ்களுடன் 2,125 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் முனையம் செல்வதற்கு மாநகர பஸ்கள் கூடுதலாக இன்று முதல் இயக்கப்படுகிறது. மேலும் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியூர் பஸ்கள் புறப்படும் இடத்துக்கு 8 மின்சார பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    பயணிகள் வசதிக்காக குடிநீர், ஏ.டி.எம். வசதி, தங்குமிடம் போன்றவை கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து இன்று முதல் வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதற்கேற்ப பஸ் வசதியினை அதிகாரிகள் செய்துள்ளனர். மேலும் தீபாவளி பயணம் மேற்கொள்கின்ற மக்கள் நெரிசல் இல்லாமல் சொந்த ஊர் செல்ல வசதியாக போலீசாருடன் போக்குவரத்துத் துறையும் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    குறிப்பக சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க ரோந்து போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். கார் மற்றும் இதர வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி டிரைவர்-கண்டக்டர்கள் அனைவரும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்குமாறு அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மூலம் கிளை மேலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திமுக கூடி கலையும் மேகக்கூட்டங்கள் இல்லை கொள்கை கூட்டம்.
    • புயல், மழை, வெள்ளம் வந்தாலும் திமுகவை அசைத்துப்பார்க்க முடியாது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த மாநாட்டில் பேசிய விஜய்,

    இந்த நாட்டை பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி. திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் அடுத்த எதிரி,

    அரசியல் எதிரி. கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்துபார்க்க போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். நாம் எந்த குறிப்பிட்ட அடையாளத்தின்கீழும் நம்மை சுருக்கி கொள்ளாமல், மதச்சார்பற்ற சமூக நீதிகொள்கைகளை, நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம் என்று கூறினார்.

    இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,

    * திமுக கூடி கலையும் மேகக்கூட்டங்கள் இல்லை கொள்கை கூட்டம். எந்த சக்தியாலும் திமுகவை அசைத்து பார்க்க முடியாது.

    * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளவரை எந்த சக்தியாலும் திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

    * புயல், மழை, வெள்ளம் வந்தாலும் திமுகவை அசைத்துப்பார்க்க முடியாது என்று கூறினார்.

    • தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது.

    தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிரடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880

    26-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880

    25-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,360

    24-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    23-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    26-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    25-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    24-10-2024- ஒரு கிராம் ரூ. 110

    23-10-2024- ஒரு கிராம் ரூ. 112

    • இளம் வயதிலேயே போர்க்களத்திற்கு சென்ற பாண்டிய மன்னன் குறித்து குட்டிக்கதை.
    • சேர, சோழ நாட்டைச் சேர்ந்த குறுமன்னர்கள் மொத்தவாக படையெடுத்து வந்த நிலையில், வெற்றி பெற்ற மன்னர் ஆவார்.

    தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது வழக்கும்போல் ஒரு குட்டி கதை சொன்னார்.

    தனது குட்டிக் கதையைில் "ஒரு நாட்டுல ஒரு பெரிய போர் வந்துச்சாம். அப்போ அந்த நாட்டுல பவர் FULL ஆன தலைமை இல்லாம போனதால ஒரு பச்சப் புள்ள கைல தான் அந்த பொறுப்பு இருந்துச்சாம். அதனால அந்த நாட்டுல இருந்த பெரிய தலைங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டாங்களாம். அந்த சின்னப் பையன் படைய நடத்துற பொறுப்ப ஏத்துக்கிட்டு போர்க்களம் போலாம்னு சொன்னானாம்.

    அப்போது, அந்த பெருந்தலைங்க எல்லாம் நீயே சின்ன பையன்.. இது பெரிய போர்க்களம் பவர் FULL ஆன பெரிய எதிரிங்கலாம் இருப்பாங்க களத்துல அவங்கள சந்திக்கறதுலாம் சாதாரண விஷயம் இல்லப்பா சொன்னா கேளு இது விளையாட்டு இல்ல போர்னா படைய நடத்தனும் அத்தனை எதிரிங்களையும் சமாளிக்கணும்... தாக்கு பிடிக்கணும்.. உனக்கு யாரும் கூட்டோ துணையோ இல்லாம எப்படி பா போர நடத்துவ எப்படி ஜெயிப்பன்னு எல்லாரும் கேட்டப்போ..

    எந்த பதிலும் சொல்லாம போருக்கு தனியா தன் படையோடு போன பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பய என்ன செஞ்சான்னு.. சங்க இலக்கியத்துல சொல்லியிருக்காங்க. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க இல்லன்னா..படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க" என முடித்தார்.

    குட்டிக் கதையில் விஜயன் சொன்ன அந்த மன்னர் யார்? என்ற கேள்வி தெரியாதவர்களின் எழுந்தது. மற்றர்வர்களிடம் ஏன் கேட்க வேண்டும். நம்மிடம்தான் கூகுள் இருக்கிறதே... என நெட்டிசன்கள் இணைய தளத்தில் மன்னர் பெயரை தேட ஆரம்பித்தினர்.

    அந்த மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவார். தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர் ஆவார்.

    தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும்போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.

    நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர்.

    இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தார் என்பது வரலாறு.

    பகை மன்னர்கள் பாண்டியன் இளம் பருவத்தினன் என்பதை எண்ணினார்களேயன்றிப் படையை இயக்கிய தலைவர்கள் பல போரில் வெற்றி பெற்றுக் கைதேர்ந்தவர்கள் என்பதை எண்ணவில்லை.

    பாண்டி நாட்டின் எல்லையில் சிறிது நேரந்தான் போர் நடைபெற்றது. பகைப்படை மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்தது. சோழ நாட்டின் எல்லைக்குள் போர் நடக்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல நகர்ந்தது பகைப்படை. பின்பு வேகமாகவும் சென்றது. கடைசியில் தலையாலங்கானம் என்னும் இடத்தில் நின்று போர் செய்தது.

    அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படை வந்து விட்டமையால் எளிதில் சுற்றி வளைத்து விடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் சொல்லி ஊக்கம் அளித்தான்.

    போர் கடுமையாக மூண்டது. இரு பெரு வேந்தர்களும், மற்ற குறுநில மன்னர்களும் தம் தம் படைக்குத் தலைவராக நின்று சண்டையிட்டனர். பாண்டி நாட்டுப் படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு படைவீரர் அத்தனை பேரும் ஊக்கமுற்றனர்.

    வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம் பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித் தரவேண்டியது நம் கடமை' என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

    முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்துவந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கிவித்து வந்தான்.

    அந்தப் போரில் அவர்களுக்குத் தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான். குறு மன்னர்கள் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன.

    சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப் போராக இருப்பினும் அவனுடைய போர்த் திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் உண்டாக்கியது. மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. குறும்படையில் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அது கண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.

    எருமையூரன் படைவீரர்களுக்குத்தான் முதல் முதலில் சோர்வு உண்டாயிற்று. "நம்முடைய ஊர் எங்கே? இந்த இடம் எங்கே? பாண்டியனுக்கும் நமக்கும் என்ன பகை? சோழனுக்கும் நமக்கும் என்ன உறவு? நம்முடைய தலைவர் பைத்தியக்காரத் தனமாக இந்தச் சோழன் பேச்சைக் கேட்டு ஏமாந்து போய்விட்டார். பாண்டியன் தோல்வியுற்றாலும் அவன் நாட்டை நம்மால் ஆள முடியுமா? சோழனுக்குத்தானே அது காணியாகும்? பல நாடுகள் இடையிட்டு நாம் வாழ்கிறோம். சில பொருளை அள்ளிக் கொண்டு போகலாம். அவை எத்தனை நாளைக்கு உதவும்?' இப்படி அவர்களுக்குள் இருந்த தன்னம்பிக்கை தளர்ந்தது. இந்த எண்ணம் புலிகடிமால் படையில் உள்ளவர்களுக்கும் அடுத்தபடி தோன்றியது. தமக்கு நன்மை ஏதும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் பிறகு போரில் எப்படி ஊக்கம் தொடர்ந்து இருக்க முடியும்?

    அங்கங்கே பகைப்படைகளில் உள்ள வீரர்கள் பின் வாங்கினர். சோழன் மட்டும் துணிவோடு நின்றான். சேரனுக்குக்கூட ஊக்கம் குறைந்துவிட்டது. சோழப் பெரும்படையே நெடுநேரம் பாண்டியன் படையின் முன் நின்று சண்டையிட்டது. கடைசியில் அதுவும் பின் வாங்கியது.

    பாண்டிப் படையின் ஆற்றலும் ஒற்றுமையும், நெடுஞ்செழியனது வீரமும் அன்பும் வெற்றியை உண்டாக்கின. அச்செழியன் கன்னிப்போரில் வெற்றிப் பெற்றான். எங்கே பார்த்தாலும் வெற்றி ஆரவாரந்தான். சோழன் அடிபணிந்தான். சேரன் ஓடிப்போனான். மற்றவர்களும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டார்கள். தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

    • திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள்.
    • திமுக பற்றி இதுதான் எங்கள் முதல் எதிரி என்று பேசி உள்ளார். நாங்கள் அதை வரவேற்கிறோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய்,

    இந்த நாட்டை பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி. திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் அடுத்த எதிரி,

    அரசியல் எதிரி. கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்துபார்க்க போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். நாம் எந்த குறிப்பிட்ட அடையாளத்தின்கீழும் நம்மை சுருக்கி கொள்ளாமல், மதச்சார்பற்ற சமூக நீதிகொள்கைகளை, நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம் என்று கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறுகையில்,

    * திமுக பற்றி இதுதான் எங்கள் முதல் எதிரி என்று பேசி உள்ளார். நாங்கள் அதை வரவேற்கிறோம்.

    * கொள்கை நிலைப்பாடை வெளிப்படுத்திய முதல் பேச்சிலேயே, போலி திராவிட மாடலை எதிர்த்து குரல் கொடுத்தது மிக முக்கியம் என்று நினைக்கிறோம்.

    * எங்களை பொறுத்தவரை அதிமுகவுடன் உடன்பாடில்லாத கொள்கை எதுவும் இல்லை. செயல்பாட்டுக்கு கொண்டு வராதது திமுகவின் பிரச்சனை.

    * அவர் என்ன நிலைப்பாடு எடுத்து இருக்கிறாரோ நாங்கள் அதை வரவேற்கிறோம் என்று கூறினார்.

    • பெரியாருக்கு பிறகு எங்கள் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய்,

    பெரியாருக்கு பிறகு எங்கள் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். நேர்மையான நிர்வாக செயல்பாட்டிற்கு வழி வகுத்தவர், அவரை எங்களுக்கு வழிகாட்டியாக ஏற்கிறோம். அம்பேத்கர் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவோர் நடுங்குவார்கள், அவரும் எங்கள் கொள்கை வழிகாட்டி. வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் அவர்களையும் எங்கள் வழிக்காட்டியாக ஏற்கிறோம். பெண் தலைவர்களை அரசியல் வழிகாட்டியாக முன்னிறுத்தும் முதல் கட்சி நாம்தான் என்று பேசினார்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்,

    * இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    * பா.ஜ.க.வே காமராஜரை கொண்டாடுகிறது.

    * காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை உள்ளது என்று கூறினார்.

    • உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான்.
    • அ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகள் தமிழ்நாடு மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் கட்சி வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும், எங்களுடைய கொள்கைகளை அதில் சில வெற்றிக்கு விளக்கங்களை கொடுத்திருக்கிறாரே தவிர திராவிட மாடல் ஆட்சியையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்கின்ற கொள்கைகளையும் தமிழ்நாடு மக்களிடம் இருந்து எடுத்து விடவும் பிரித்து விடவும் முடியாது.

    உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகத்திற்கே வழிகாட்டுகின்ற திட்டம். தமிழ்நாடு மக்களின் இதயங்களில் அவருக்கென்று தனி இடம் உள்ளது. உழைப்பின் மற்றொரு வடிவமாக திகழ்ந்து வருபவர் தான் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு மக்களிடையே அவர் உழைப்புக்கும் மரியாதை உள்ளது. இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடிய ஒன்று அரசியல் அது போக போக தெரியும்.

    இது வரைக்கும் பல அரசியல் கட்சிகளுடைய ஏ டீம், பி டீம் பார்த்துள்ளோம். இது பாஜகவுடைய சி டீம். ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழ்நாட்டில் எடுபடும். தமிழ்நாடு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது. வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஆளுநரை பற்றி பேசினால் அவருக்கு மரியாதை கிடைக்கும் என்பதால் ஆளுநரை எதிர்த்து விஜய் மாநாட்டில் பேசப்பட்டுள்ளதே தவிர இது முழுக்க முழுக்க பாஜகவின் ஏ டீம் பி டீம் அல்ல பா.ஜ.க.வின் சி டீம்.

    அவர் யாருடைய ஏ டீம், பி டீம் அல்ல என்று விஜய் கூறியுள்ளார். அவருக்கே தெரியும் அவர் சி டீம் என்று. ஆட்சிக்கு வரட்டும், அப்போது பாத்துக்கலாம். மக்களை சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். மக்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும். பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும்.

    அதற்கு பிறகு தான் ஆட்சியில் பங்கு என்பதற்கெல்லாம் வாய்ப்பு. எங்களது கூட்டணியை யாரும் பிரித்து விட முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் காட்டுகின்ற பாசத்தை விட்டு யாரும் சென்று விட மாட்டார்கள்.

    அ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது. அ.தி.மு.க.வை அவர் கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அங்கிருக்க தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள். பா.ஜ.க.வுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அ.தி.மு.க. தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க.வைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஊழலை பற்றி பேச வேண்டும் என்றால் 2011-21 பற்றி தான் பேச முடியுமே தவிர 21-26 ஐ பற்றி பேசுவதற்கு யாராலும் முடியாது. எந்த தவறுக்கும் நாங்கள் ஆளாகவில்லை.

    பழுத்த பழம் தான் கல்லடி படும். தி.மு.க.வை பற்றி தாக்கி பேசினால் தான் மக்கள் மன்றத்தில் ஏதாவது பேச முடியும். தமிழ்நாட்டில் அரசியலில் அண்ணா, பெரியார், கலைஞர் அதேபோல் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கக்கூடியவர் எங்களது தலைவர் மு.க. ஸ்டாலின். இதை மீறி யாரும் அரசியல் செய்ய முடியாது இவர்களைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்து விடவும் முடியாது.

    183 படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் தி.மு.க.வின் கொள்கைகளை பரப்புவதற்காக சிறந்த பேச்சாளர்களாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் அவர்கள் மூலமாக அடுத்த கட்ட பிரசாரத்தை திமுக இளைஞரிடத்தில் கொண்டு செல்லும்.

    தி.மு.க. நினைத்தால் 5 மடங்கு கூட்டத்தை கூட கூட்ட முடியும் எங்களின் இளைஞர் சக்தி அதிகரித்துள்ளது குறையவில்லை. இன்று இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் இருக்கிறது. நேற்று நடந்த மாநாடு எங்களைப் பொறுத்தவரை சினிமா குறித்தான மாநாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×