என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
    • பட்ஜெட் மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.

    ஆகஸ்ட் 14-ந் தேதி கூட்டத்தொடர் முடிந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை விதிப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சபை கூட்டப்பட வேண்டும். அதன்படி வருகிற 14-ந் தேதிக்குள் சபை கூட்டப்பட வேண்டும்.

    இதன்படி புதுச்சேரி சட்டசபை நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சபையில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    மேலும் தணிக்கை அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. புதுச்சேரி பட்ஜெட் தொகையை இறுதி செய்யும் பணியில் நிதித்துறை உட்பட அரசு துறைகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் அனுமதிக்காக கோப்பு டெல்லிக்கு அனுப்பப்படும்.

    மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மீண்டும் வருகிற மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும். அப்போது நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார்.

    • புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி முருகன் புதுச்சேரி வந்தார். மத்திய நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்கினார்.

    இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ.க. மாநிலத்தலைவர் செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோரைச் சந்தித்து புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும் கேட்டறிந்தார்.

    இதையடுத்து புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    அப்போது புதுச்சேரிக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க தயாராக இருப்பது குறித்து மத்திய இணை மந்திரி முருகன் கூறினார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி பெற பிரதமர் மோடியை சந்திக்க மார்ச் மாதம் டெல்லி செல்ல திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மாநில வளர்ச்சி தொடர்பாக பிரதமரை வந்து சந்திக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி முருகனும் கேட்டுக் கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து ராஜ் நிவாஸ் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவர்னர் கைலாஷ்நாதனும் வருகிற மார்ச் மாதம் பிரதமரை சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழலில் புதுச்சேரிக்கு அளித்த வாக்குறுதிகள் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆளும் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

    அதன்படி சிறப்பு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பிரதமரை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.

    • வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாறி இருப்பதாக கூறப்படுகிறது.
    • கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார்.

    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பெயரில் மீண்டும் போலி வெப்சைட் உலா வருவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்ப்பாரண்னேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தர முடியாத பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெப்சைட்டில் சென்று, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தேவையான அர்ச்சனை, அபிஷேகங்களை செய்து பிரசாதங்களை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் வெப்சைட் போலவே போலியான வெப்சைட் ஒன்று உருவானதையடுத்து, காரைக்கால் மாவட்ட கிரைம் போலீசார் கண்டுபிடித்து அதனை சரி செய்தனர். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு மீண்டும் கோவில் பெயரில் போலியான வெப்சைட் உலா வருவதாக கூறப்படுகிறது. அதில் பக்தர்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    இந்த வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாறி இருப்பதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடான ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாட்டை சேர்ந்த பக்தர்களும் கோடிக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் உள்ளூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

    குறிப்பாக சனிக்கிழமை நடைபெறும் ஆசூஷா அர்ச்சனைக்கு இந்தியர்களுக்கு ரூ. 2750 மற்றும் வெளிநாட்டினருக்கு 82 டாலர்களும் வசூல் செய்தது தெரிய வந்தது. இதே போல் மாதந்தோறும் நடைபெறும் சவர்சனம் அர்ச்சனைக்கு இந்தியர்களுக்கு ரூ.5001 மற்றும் வெளிநாட்டினருக்கு 151 டாலர்களும் வசூல் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலி வெப்சைட்டில் ஏமாந்த பக்தர்கள் அல்லது கோவில் நிர்வாகம் போலீசாரிடம் புகார் கொடுக்கும் பட்சத்தில் ஏமாந்தவர்கள் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் போலி வெப்சைட் உலா வருவது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
    • காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி, பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி அலுவலக வாசலில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி கட்சி அலுவலகத்தில் உள்ள சாமி படங்களுக்கு பூஜை செய்தார்.

    தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணிகளே நடைபெறாத சூழ்நிலை இருந்தது. எமது அரசு பொறுப்பேற்றது முதல் காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். அரசின் அனைத்து துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மீதமுள்ள காலிபணியிடங்களையும் நிரப்புவோம்.

    ஆளும்கட்சி, எதிர்கட்சி என எம்.எல்.ஏ.க்களில் வேறுபாடும், வித்தியாசமும் பார்க்காமல், மாநில வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.

    கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 11 தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை இருந்து வருகிறது. தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும்.

    காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும். மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள். அரசிடமும் தெரிவியுங்கள், அரசு அதை நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது.
    • மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்லைக்கழகத்தின் கீழ் தாகூர் கலைக்கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    தேசிய கல்விக் கொள்கைபடி இந்த கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கேள்வித்தாள்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் மொழிப்பாடம் (தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு) தேர்வு நடந்தது. இதற்காக மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்வு எழுத வந்தனர்.

    இந்த நிலையில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு முதல் செமஸ்டருக்கான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இல்லாமல் 2-ம் ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கேள்வித்தாள் மாறி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்கள் தேர்வு அறையில் உள்ள பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகம் மூலமாக பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் முதல் நாள் தேர்வை ரத்து செய்வதாகவும். இந்த தேர்வு தேதி குறிப்பிட்டு மற்றொரு நாள் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    முதல் நாளில் தேர்வு எழுத வந்த புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    • லாரி டிரைவரான முகமது ஷரீப்பும் அவருடன் சேர்ந்தவர்களும் ரூ.465 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
    • மோசடி கும்பலிடம் இருந்து ரூ.331 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். குறைந்த வட்டியில் கடன் என பல்வேறு விதமான ஆசைகளை காட்டி கோடிக்கணக்கில் மோசடிகள் நடந்து வருகின்றன.

    இந்த ஆன்லைன் மோசடி கும்பலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள மோசடி கும்பலுக்கும் தொடர்புகள் உள்ளது.

    இதனிடையே கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் அந்த தொகையை கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களுடைய படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ரூ. பல கோடி மோசடிகள் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் (வயது 42) என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். லாரி டிரைவரான முகமது ஷரீப்பும் அவருடன் சேர்ந்தவர்களும் ரூ.465 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக மத்திய அமலாக்கத்துறையும் புதுவை சைபர் கிரைம் போலீசாரிடம் மோசடி நபர்களின் விவரங்களை பெற்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து மோசடி கும்பலிடம் இருந்து ரூ.331 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    கைதான முகமது ஷரீப்பிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் இன்னும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த மிகப்பெரிய டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.

    அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகள், அதன் மூலம் வெளிநாட்டிற்கு சென்றவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க சைபர் கிரைம் போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    • பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது.
    • புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.

    பாகூர்:

    புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது. அதில் நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும், இல்லை யென்றால் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மெயில் காலையில் வந்திருந்த நிலையில், மாலை 5 மணிக்கே பார்க்கப்பட்டது.

    இது குறித்து உடனடியாக கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் தகவல் தெரிவித்து புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.

    அவர்கள் பள்ளியில் வெடி குண்டு ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியு டன் சோதனை செய்தனர். பள்ளி வளாகம், வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆசிரியர்கள் ஓய்வறை என அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது சோதனையின் முடி வில் தெரியவந்தது.

    பள்ளிக்கு வந்த இ-மெயில் முகவரியை வைத்து, மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • காரின் ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தபோதும் அந்த காவலர்கள் தேவையற்ற சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.
    • இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம். இவரது நண்பர்கள் சிலர் புதுவை கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இவர்கள் காரில் புதுவையை சுற்றி பார்த்து விட்டு ரிசார்டுக்கு திரும்பினர்.

    அப்போது கிருமாம்பாக்கம் போலீசார் அவர்களின் காரை மடக்கி விசாரித்துள்ளனர். இதில் காரின் ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தபோதும் அந்த காவலர்கள் தேவையற்ற சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.

    அதோடு வலுக்கட்டாயமாக அபராதம் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறு செய்து அத்துமீறியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    இதனையடுத்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய ஏட்டுகள் ஞானமூர்த்தி, திவித்ரசன், நவீன் காந்த் மற்றும் போலீஸ்காரர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் அதிரடியாக ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி. சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.

    • 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதாக புகார்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன் பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நெல்லித்தோப்பு சிக்னல் சந்திப்பு, திருவள்ளுவர் சாலை நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக கொசப்பாளையம் சிலம்பரசன் ரசிகர் மன்றம் சார்பில், பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    ரசிகர் மன்ற நிர்வாகிகள் பசுபதி, அசோக் ராஜா, மற்றும் பாபு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2-ந் தேதி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க வரும் வி.ஐ.பி.க்கள், அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று 60-க்கும் மேற்பட்ட பேனர்கள் சாலை முழுதும் வைக்கப்பட்டிருந்தன.

    இதைக்கண்ட பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், பேனர் வைத்தவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் பேனர் வைத்த மர்ம நபர்கள் மீது புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்கெடுத்தல் பிரிவின் கீழ் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
    • கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சமீப காலமாக உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரியில் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்கள் நடந்து வருகிறது.

    எனவே மாணவிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் எம்.பி.பி.எஸ். பயிற்சி மருத்துவ மாணவிகள் 2 பேருக்கு முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மருத்துவ மாணவரை 6 மாதம் சஸ்பெண்டு செய்துள்ளது.

    இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகருக்கு தொழில் வளர்ச்சி, வனம், வனத்துறை, கல்வி, அறிவியல் தொழில் நுட்பத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் முத்தம்மாவுக்கு, திட்டம் மற்றும் ஆராய்ச்சி, போக்குவரத்து, மின்சாரம், குடிமைப்பொருள் வழங்கல்துறை, பொதுப்பணி, தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் கலெக்டர் மணிகண்டன், புதுச்சேரி கவர்னரின் செயலராகவும், கூடுதலாக சுற்றுலா, மீன்வளத்துறை செயலராகவும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அரசு செயலர் ஜெயந்த்குமார் ரேவுக்கு சுகாதாரத்துறை, குடும்பநலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அரசு செயலர் நெடுஞ்செழியனுக்கு வேளாண், கால்நடைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வக்புவாரியம், கலை, பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு செயலர் கேசவனுக்கு பொது நிர்வாகம், நகர அமைப்பு குழுமம், வீட்டு வசதி, உள்ளாட்சி, தீயணைப்பு, செய்தி விளம்பரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், நகர மேம்பாடு, டி.ஆர்.டி.ஏ., வருவாய் சிறப்பு செயலர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார். சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை கவர்னர் உத்தரவின்படி தலைமை செயலர் சரத்சவுகான் பிறப்பித்துள்ளார்.

    • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் கொள்ளை அடித்துள்ளார்.
    • சிவானந்தம் 2 வீடுகளிலும் கொள்ளை அடித்ததை ஒப்பு கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் போலீசார் எல்லைப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். இதனால் அவரை கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று உரிய முறையில் விசாரித்தனர். அப்போது அவர் பூம்புகாரை சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் (வயது 34) என தெரிய வந்தது.

    தச்சுத்தொழில் செய்யும் சிவானந்தம் தன்னை அப்பாவி போல காட்டி கொண்டார். ஆனால் அவரது செல்போனை சோதனை செய்த போது கடந்த டிசம்பர் 10-ந் தேதி காரைக்கால் வந்துள்ளார். அதேபோல ஜனவரி 14-ந் தேதி மீண்டும் காரைக்காலுக்கு வந்துள்ளார்.

    அதே நாளில் காரைக்காலில் 2 இடங்களில் 2 வீட்டை உடைத்து நகைகள் திருடு போய் இருந்தது. அவரது செல்போன் டவரும் அந்த வீட்டு அருகே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    தொடர் விசாரணையில் சிவானந்தம் 2 வீடுகளிலும் கொள்ளை அடித்ததை ஒப்பு கொண்டார். அங்கு திருடிய ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை உருக்கி தனது வீட்டு தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

    தச்சு வேலை செய்யும் சிவானந்தம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வழி இல்லாத காரணத்தால் வீடுகளில் கொள்ளை அடித்துள்ளார்.

    காரைக்காலை போல மயிலாடுதுறையில் 4 வீடுகளை உடைத்து நகை-பணத்தை அவர் கொள்ளை அடித்துள்ளார். மேலும் ஒரு கொலை வழக்கிலும் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    பகலில் தச்சு வேலை செய்யும்போது வீடுகளை நோட்டமிடும் இவர் இரவில் மது குடித்து விட்டு அந்த வீடுகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    சினிமா கதாநாயகனை போல பகலில் தச்சு தொழிலாளியாகவும், இரவில் வீடு புகும் கொள்ளையனாகவும் இரட்டை வேடங்களில் உலாவி வந்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த கோட்டுச்சேரி போலீசார் உருக்கிய நகைகளை மீட்டனர். 

    ×