என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது.
    • பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி- பெங்களூரு இடையே அரசு (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் சம்பவத்தன்று புதுச்சேரி அரசு பஸ் பெங்களூருலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்டு வந்தது.

    அந்த பஸ்சை டிரைவர் அரிதாஸ் ஓட்டி வந்தார். கண்டக்டராக வெங்கடாசலபதி (வயது 53) பணியில் இருந்தார். இந்த பஸ் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வந்தபோது பி.ஆர்.டி.சி. பறக்கும் படையினர் பஸ்சில் ஏறி திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது. அந்த பார்சல் யாருடையது? என்ற விவரமும் இல்லை. இந்த பார்சல் சம்பந்தமாக பறக்கும் படையினர் கண்டக்டர் வெங்கடாசலபதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

    இதனிடையே பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது.

    இதுகுறித்து மேலாண் இயக்குனர் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பஸ் கண்டக்டர் வெங்கடாசலபதியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.

    இந்த போதைப்பொருட்களை புதுச்சேரிக்கு அனுப்பியவர்கள் யார்? போதைப்பொருள் கும்பலுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதுபோன்று பெங்களூருரில் இருந்து புதுச்சேரிக்கு போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வந்ததா? என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.

    • 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருபுவனை:

    புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனம் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பலமுறை அந்த நிறுவனத்திடம் சம்பள பாக்கி கேட்டு முறையிட்டனர். ஆனாலும் சம்பளம் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் உடனடியாக சம்பளம் வழங்கக் கோரியும் இ.எஸ்.ஐ., பி.எப். பிடிப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி திருபுவனை 4 வழி சாலையில் குப்பை வண்டிகள், குப்பை கூடைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை துப்புரவு தொழிலாளர்கள் ஏற்க வில்லை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா சாலை மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் குப்பை வாரும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன பொதுமேலாளர் நரேன்னிடம் தொலைபேசியில் பேசி 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக ஊழிகளுக்கு வழங்க அவர் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு தனியார் குப்பை வாரும் நிறுவன பொதுமேலாளர் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் புதுவை-விழுப்புரம் 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.
    • வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நடிகைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும், அமை திகாக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் நேற்று நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.

    கோவில் பீடா திபதி நடாத்தூர் ஜனார்த்தனன் சாமிகள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் 108 கிலோ மிளகாய் வத்தல் உட்பட 108 யாக பொருட்களைக்கொண்டு பூஜைகள் நடந்தது. இதில் இந்திய முறைப்படி வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.

    பின்னர் பய பக்தியுடன் பிரத்தியங்கிரா காளியை வழிபட்டனர். ஜப்பான் நாட்டினர் இந்திய முறைப்படி யாகம் நடத்தி சாமி தரிசனம் செய்ததை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து வியப்படைந்தனர்.

    • போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனுார் மூலக்கடை சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.

    1996-ல் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த சாலை புறவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது.

    சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபின் புதிதாக எம்.ஜி.ஆர். வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சிலையின் கல்வெட்டில் தங்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.

    தங்களின் பெயரும், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெயரும் இடம்பெற வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதனிடையே புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், நேற்று முன்தினம் எந்த முன் அறிவிப்புமின்றி கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் இன்று மீண்டும் அந்த சிலையை திறக்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு புதுவை அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அந்த சிலைக்கும், மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது என போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வில்லியனுார் புறவழிச்சாலை சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு மேல் ஒருபுறம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினரும், மறுபுறம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் உரிமை மீட்பு குழுவினரும் திரண்டனர்.

    மேலும் அவர்கள் எதிர் எதிராக கோஷம் எழுப்பியதால் அங்கு கடும் பதட்டம் ஏற்பட்டது. அப்போது போலீசார் ஓம்சக்தி சேகரிடம், சிலைக்கு மாலை அணிவிக்க எந்த தடையும் இல்லை, ஆனால் திறப்பதற்கு அனுமதியில்லை என தெரிவித்தனர்.

    ஓம்சக்தி சேகரும், அவரின் ஆதரவாளர்களும் இதனை ஏற்கவில்லை. போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.

    இதையடுத்து ஓம்சக்தி சேகர் தலைமையிலான உரிமை மீட்பு குழுவினர் சிலையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஓம்சக்தி சேகர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஜூலை மாதம் இறுதி வாரத்தில் 12-வது உலக தமிழ் மாநாடு நடத்த முடிவு.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    அதனையொட்டி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் 12-வது உலக தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான இந்தியாவின் கிளை நிர்வாகிகள் புதுச்சேரி சட்ட சபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவர்னரின் செயலாளர் மணிகண்டன், கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    புதுச்சேரியில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.
    • 5-ந் தேதி பசுபதி நாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6-ந் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர்.

    புதுச்சேரி:

    நேபாள அரசு அங்குள்ள சட்டசபையைக்காண புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்தது.

    நேபாள அரசின் அழைப்பின் பேரில் புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் ஒரு வார கால சுற்றுலா பயணமாக நேபாளம் செல்கின்றனர். இதன்படி எம்.எல்.ஏ.க்கள் இன்று (சனிக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கு தங்குகின்றனர்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.

    3-ந் தேதி காலை விமானம் மூலம் போகரா செல்லும் எம்.எல்.ஏ.க்கள், அங்கு சட்டசபையை பார்வையிடுகின்றனர். அதன்பிறகு அங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர்.

    4-ந் தேதி போகராவில் இருந்து காத்மாண்டு திரும்புகின்றனர். மாலையில் பதான்தர்பார், சுயம்புநாதர் கோவிலை பார்வையிடுகின்றனர்.

    5-ந் தேதி பசுபதி நாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6-ந் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர்.

    7-ந் தேதி காத்மாண்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்புகின்றனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் நேபாளம் செல்வார்கள் என கூறப்படுகிறது.

    • முதலமைச்சர் ரங்கசாமி த.வெ.க. ஆண்டு விழாவில் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியானது.
    • த.வெ.க. கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என பதில் அளித்தார்.

    புதுச்சேரி:

    நடிகர் விஜயின் த.வெ.க. கட்சியின் ஆண்டு விழா நாளை மகாபலிபுரத்தில் நடக்கிறது.

    இதில் பங்கேற்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி த.வெ.க. ஆண்டு விழாவில் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியானது.

    இதுகுறித்து புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் த.வெ.க. கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்கிறீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு அவர்கள் மாநாடு நடத்துகிறார்கள். த.வெ.க. கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என பதில் அளித்தார்.

    இதன் மூலம் த.வெ.க. ஆண்டு விழாவில் முதலமைச்சர ரங்கசாமி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

    • பட்ஜெட்டில் வரிச்சலுகைகள், இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
    • கூட்டத்தொடரை ஒரு மாத காலம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை கூட்டம் கடந்த 12-ந்தேதி நடந்தது. கூட்டத்தில் அரசின் 2024-25ம் நிதியாண்டின் கூடுதல் செலவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பட் ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    மார்ச் மாதம் 2-வது வாரத்தில் சட்டசபையை கூட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியாக உள்ளது.

    2026-ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளதால் அப் போது முழு பட்ஜெட் தாக் கல் செய்ய முடியாது. எனவே தற்போது மார்ச் மாதம் கூட்டத் தொடரில் முழுமையான பட்ஜெட்டை நிதிதுறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த முழு பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சலுகைகளுடன் கூடிய பட்ஜெட் தயாரிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    எனவே பட்ஜெட்டில் ஏராளமான வரிச்சலுகைகள், இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இந்த கூட்டத் தொடரை ஒரு மாத காலம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்துவது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பார்.

    சட்டசபை நடவடிக்கைகளை காகித பயன்பாடு இல்லாததாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
    • காக்கிநாடா, கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் 27, 28-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புதுச்சேரிக்கு இயக்கப்படும் சில ரெயில்கள் தற்காலிகமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17655), கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17653) ஆகிய ரெயில்கள் 27-ந்தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

    திருப்பதி-புதுச்சேரி மெழு எக்ஸ்பிரஸ் ரெயில் (161II) 28-ந் தேதி அன்று திருப்பதியில் இருந்து விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

    அதேபோல் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய மெமு ரெயில் அதற்கு பதிலாக மாலை 5.07 மணிக்கு விக்கிரவாண்டியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

    28-ந் தேதி மதியம் புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17654) அதற்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். புதுச்சேரி -காக்கிநாடா (17656) எக்ஸ்பிரஸ் ரெயிலும் அன்று மாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது.
    • தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கடந்த 7-ந்தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழாவில் கட்சியின் நிறுவனரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி பேசும்போது, கட்சியை தமிழக பகுதிக்கும் விரிவுபடுத்தி நிர்வாகிகளை நியமித்து வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சியினருடன் போட்டியிட தயாராகி வருவதாக அறிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பரத்குமார் என்பவரின் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள அப்பா பைத்திய சுவாமி கோவிலில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.

    அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் பல தலைவர்கள் என்னிடம் வந்தனர். நான் யாரிடமும் செல்லாமல், அ.தி.மு.க., கூட்டணியுடன் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தேன். தற்போது கூட்டணியுடன் ஆட்சி நடத்தி வருகிறேன்.

    நான் தமிழகப் பகுதிகளுக்கு செல்லும்போது, அப்பகுதி மக்கள் மற்றும் எனது நண்பர்கள் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அவர்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளிக்கும் விதத்தில் வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழ கத்தில் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர். அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதலில் இணைந்துள்ளனர். புஸ்சி ஆனந்த் மற்றும் விஜய் எனது நண்பர்கள். அதனால் சந்திக்கின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் பற்றி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 15 ஆண்டில் 2 முறை காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்று முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது, தமிழகத்திலும் கட்சியை விரிவுபடுத்த தீவிரம் காட்டி வருவது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒவ்வொரு அமைச்சரும் தலா ஒரு கார் பயன்படுத்துகிறார்கள்.
    • பொதுப்பணித்துறை அமைச்சர் மட்டும் அரசு முறை பயணமாக 6 முறை வெளிநாடு சென்றுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையத்தை சேர்ந்த அசோக்ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் புதுவை அமைச்சர்கள் அலுவலகத்தில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் வரை அலுவலக டீ, காபி மற்றும் பூங்கொத்து வாங்கிய செலவுகள், கார் பயன்பாடு, வெளிநாட்டு பயணம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

    அமைச்சர்களின் செலவு தொடர்பாக அமைச்சரவை அலுவலக பொதுதகவல் அதிகாரியான அமுதன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு அமைச்சரும் தலா ஒரு கார் பயன்படுத்துகிறார்கள். அமைச்சர்களின் அலுவலகத்தில் தலா 14 பேர் பணிபுரிகிறார்கள். உள்துறை அமைச்சர் அலுவலக காபி, டீ செலவாக ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 635-ம், பொதுப் பணித்துறை அமைச்சருக்கு ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 421-ம், வேளாண்துறை அமைச்சருக்கு ரூ.11 லட்சத்து 84 ஆயி ரத்து 320-ம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 39-ம் செலவிடப்பட்டுள்ளது.

    பூங்கொத்து வாங்கிய வகையில் உள்துறை அமைச்சருக்கு ரூ.22 லட்சத்து 31 ஆயிரமும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ரூ.8 லட்சத்து 4 ஆயிரத்து 955-ம், முன்னாள் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சருக்கு ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்து 700-ம், இந்நாள் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சருக்கு ரூ.1 லட்சத்து 400-ம் செலவிடப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை அமைச்சர் மட்டும் அரசு முறை பயணமாக 6 முறை வெளிநாடு சென்றுள்ளார். அமைச்சர்களின் தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் குறித்த தகவல் ஏதும் அரசு பதிவேடுகளில் கிடையாது. முதலமைச்சர் ரங்கசாமி 3 முறை மட்டுமே அரசு பயணமாக டெல்லி சென்று வந்துள்ளார். ஆனால் வெளிநாடு பயணம் ஏதும் செல்லவில்லை.

    அமைச்சர்கள் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை எரிபொருள் தேவைக்கு செலவிட்டுள்ளனர்.

    இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

    • பஸ், வேன், ஆட்டோ, பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கியது.
    • 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது.

    இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் செந்தமிழ் என்ற மீனவர் காலில் பயங்கர அடிபட்டு காலை எடுக்கும் நிலையிலும், மணிகண்டன் என்ற மீனவர் கண் பறிபோகும் நிலையிலும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களுக்கு மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து இன்று 8-வது நாளாக, மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால் பஸ், வேன், ஆட்டோ, பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கியது.

    மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

    மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ×