என் மலர்
அசாம்
- விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது.
- சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கவுகாத்தி:
மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 178 பயணிகள் இருந்தனர். அப்போது கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நில வியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு டாக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, "கவுகாத்தியில் மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து கவுகாத்திக்கு சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தின் டாக்காவிற்கு திருப்பிவிடப்பட்டது.
டாக்காவில் இருந்து கவுகாத்திக்கு விமானத்தை இயக்க மாற்றுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
- நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
- நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது
அசாமில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடர்பாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்க உள்ள யாத்திரை அரசியல் காரணங்களுக்காக அல்ல. நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. நாட்டில் வெறுப்புக்குப் பதிலாக அன்பு பரவ வேண்டும் " என்பதை இந்த யாத்திரையில் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வன்முறை காரணமாக மணிப்பூர் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மணிப்பூர் மக்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை நாட்டுக்கு சொல்லவே யாத்திரையை மணிப்பூரில் இருந்து தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு குறித்தும், நமது நாட்டின் விவசாயிகள் சந்தித்து வரும் பேரழிவு குறித்தும் இந்த யாத்திரையில் நாங்கள் பேசு இருக்கிறோம். இளைஞர்களுக்கு நீதி வேண்டும், பெண்களுக்கு நீதி வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு நீதி வேண்டும். இதை வலியுறுத்தவே இந்த யாத்திரையை தொடங்குகிறோம். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான மிகப் பெரிய மேடையாக இந்த யாத்திரை திகழும் என்றார்.
நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கே.சி வேணுகோபால், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு அனுமதி கோரி மணிப்பூர் தலைமைச் செயலருக்கு மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விண்ணப்பம் கொடுத்த நிலையில், அனுமதியை தங்களால் வழங்க முடியாது என்றும், டெல்லியில் இருந்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மணிப்பூர் அரசு கூறுவதாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் குற்றம் சாட்டுகிறார். ஒரு மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்த விரும்பினால் அதற்கு டெல்லி அனுமதி வழங்க வேண்டுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
- பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
- ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது.
அசாமில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் குளிர் தாங்க முடியாததால் வரட்டியை தீமூட்டி குளிர்காய்ந்த அரியானாவைச் சேர்ந்த இருவரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக கேட்மேன் அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து, ஓடும் ரெயிலில் நெருப்பை பற்றவைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அலிகரில் உள்ள ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில், "ஜனவரி 3 ஆம் தேதி இரவு, பர்ஹான் ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரெயில்வே கிராசிங்கில் கேட்மேன், வந்து கொண்டிருந்த ரெயிலின் பெட்டியிலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதை கண்டு உடனடியாக பர்ஹான் ரயில் நிலையத்தில் உள்ள தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பிறகு ஆர்பிஎஃப் குழு ரெயிலை அடுத்த ஸ்டேஷன் சாம்ரௌலாவில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதே நேரத்தில், ஓடும் ரெயிலின் வழியாகச் சென்று பாதுகாப்பு படை பார்த்தபோது, கடும் குளிரில் இருந்து விடுபடுவதற்காக, ரெயில் பெட்டி ஒன்றில் சிலர் வரட்டியில் தீ மூட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.
பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பின்னர் ரெயில் அலிகார் சந்திப்பிற்குச் சென்றது. அங்கு இதுதொடர்பாக 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
மேலும், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்களுடன் இணைந்த மற்ற 14 சக பயணிகளும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்" என்றார்.
- அசாம் மாநிலத்தில் அத்கேலியா நகரில் இருந்து பலிஜன் ஊரை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
- பஸ் டெர்கான் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நிலக்கரி லாரி பயங்கரமாக மோதியது.
அசாம் மாநிலத்தில் அத்கேலியா நகரில் இருந்து பலிஜன் ஊரை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45 பேர் இருந்தனர். சுற்றுலா சென்று விட்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் டெர்கான் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நிலக்கரி லாரி பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த 14 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடுகின்றன.
- இந்த தொடரின் முதல் இரு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
கவுகாத்தி:
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், கவுகாத்தியில் இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து, இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
- ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
திஸ்பூர்:
ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இதற்கிடையே, அசாம் மாநில கவர்னர் குலாப் சந்த் கடாரியா பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ராஜஸ்தானின் உதய்பூரில் பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், அசாம் கவர்னரை நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, திரிணாமுல் காக்ங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரிபுன் போரா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், அசாம் கவர்னர் குலாப் சந்த் கடாரியா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பா.ஜ.க.வுக்காக பிரசாரம் செய்து வருகிறார். இது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால். அவர்மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருந்தும் அவர் பா.ஜ.க.வுக்காக பிரசாரம் செய்வது மிகவும் வெட்கக் கேடானது. அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியும் அசாம் கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
- இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும் இந்தியா, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தது
- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். தற்போது வரை இஸ்ரேலில் உயிரிழப்பு 1,400-ஐ தாண்டியுள்ளது. பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேவேளையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹமாஸ் அமைப்பை கண்டிக்காத காங்கிரஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் உள்ளவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இந்திய மக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் அது.
காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதை பார்த்து இருப்பீர்கள். ஹமாஸ் தாக்குதல் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நேரம், ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதை கூட்டத்தின்போது ஒவ்வொருவரும் தெரிவித்தனர். ஆனால், ராகுல் காந்தி தெலுங்கானாவில் தேர்தல் வர இருப்பதால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார். காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்ததை நான் உங்களுக்கு சொல்கிறேன். அதன்பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்து சமநிலையில் இருந்திருக்கலாம். அதாவது, நாங்கள் ஹமாஸ் அமைப்பை கண்டிக்கிறோம். அதேவேளையில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம் என்ற நிலையை எடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை.
இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். காங்கிரஸ் மிகவும் பழமை வாய்ந்த கட்சி. அவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்றும் சொல்ல முடியும். இரண்டும் மாறுபட்ட விவகாரம். ஓவைசியின் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டுள்ளதால், ஹமாஸ் உடன் இணைந்து நிற்கிறது.
ராகுல் காந்தி வாகன ஓட்டுநர் என்பதால், ஒருநாள் காசா சென்று பைக் ஓட்டலாம், அல்லது டிராக்டரில் ஏறலாம்.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
- துப்ரி மாவட்டத்தில் இன்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.
- வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
துப்ரி:
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
- கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
ஷில்லாங்:
கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
மத்திய அரசின் சமரசத்தால் கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருமாநில எல்லையில் மோதல் சம்பவங்கள் தொடர் கதையாய் உள்ளன.
இந்த நிலையில் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும் அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இருதரப்பினரும் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும் இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
- பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி:
அசாமின் சில்சார் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரது வீட்டில் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியை சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். இதற்காக ராஜ்தீப் ராய் எம்.பி.யின் வீட்டில் ஒரு பகுதியில் அந்த பெண், தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் 10 வயது மகன் நேற்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினான். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் வீடியோ கேம் விளையாட அவனது தாய் மொபைல் போன் கொடுக்காததால் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பக்கவாட்டு சுவற்றில் பேட்மிண்டன் பிரபலங்கள் படங்கள்
- வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர இருக்கைகள் அமைப்பு
பொதுவாக மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படும். சில இடங்களில் பூங்கா உருவாக்கி, பயன்படுத்தப்படும். ஆனால், அசாமில் உள்ள ஒரு இடத்தில் தொழில் அதிபர் ஒருவரால் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதி அழகிய பேட்மிண்டன் மைதானமாக உருவாகியுள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள நா-அலி (Na-Ali) ரெயில்வே பாலம் செல்கிறது. ரெயில்வே பாலத்திற்கு கீழ் நீளமான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை பேட்மிண்டன் மைதானமாக மாற்றினால் என்ன? என அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.பி. அகர்வாலாவிற்கு தோன்றியது.
இதுகுறித்து ஜோர்ஹாட் மாவட்ட பேட்மிண்டன் நிர்வாகத்தை அணுக, அவர்களும் அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து அகல்வாலா அந்த இடத்த அழகிய பேட்மிண்டன் மைதானமாக மாற்றினார். சுவற்றின் இரு புறங்களிலும், பேட்மிண்டன் பிரபலங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.
வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வு மிகவும் குறைவாக நிர்ணயிக்க இருப்பதால், பேட்மிண்டன் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.
இந்த மைதானத்தை ஜோர்ஹாட் பேட்மிண்டன் சங்கம் பராமரிக்கும் என அசாம் மாநில பேட்மிண்டன் சங்க செயலாளர் திகான்டா புர்காகோஹைன் தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர் அகர்வாலா, தனது தந்தையின் நினைவாக இந்த மைதானத்தை கட்டி கொடுத்துள்ளார். கடந்த 16-ந்தேதி இந்த மைதானத்தை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மான தொடங்கி வைத்தார். விரைவில் இந்த மைதான நடைமுறை பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
- நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
- அசாம் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லாங்கில் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருந்ததால் இதுவரை எங்கும் சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். மக்கள் நீண்ட நேரம் பீதியில் இருந்தனர்.
இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் விழித்து இருந்தனர். அசாம் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அசாம் மட்டுமல்லாமல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் அடுக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்கங்கள் குறைந்த அளவில் பதிவாவதால் உயிர்சேதம் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






