என் மலர்
சினிமா செய்திகள்
- தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
- அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது.
'மெரினா' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படங்களில் நடித்தாலும் மக்களிடையே கலவையான விமர்சனத்தை இப்படங்கள் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வசூல் செய்யவில்லை.
தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள்.
2013 ஆம் ஆண்டு வெளியான 'எதிர் நீச்சல்' திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொள்வதுமாக இருந்தனர்.
இப்படியாக சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில மன கசப்புகளால் பிரிந்தனர். அதன் பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை. இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியது சர்ச்சையை எழுப்பியது. அவர் பேசுகையில், " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என பேசியது சர்ச்சையானது.
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக 'மதராஸி' அமேசான் ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 3-ந்தேதி வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1-ந்தேதியே வெளியாக உள்ளது.
அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தை ஓ.டி.டி.யில் அன்றைய தினமே வெளியிட்டு நடிகர் தனுஷை குறி வைக்கிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
- ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'மதராஸி' திரைப்படம் வருகிற 1-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருகிற 3-ந்தேதி 'மதராஸி' அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாவது குறிப்பிடத்தக்கது.
- நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
- இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'டிரெயின்', 'ஏஸ்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதனை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும் பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் டீசர் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
- 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள பணக்கார நடிகைகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நயன்தாரா அதிக சொத்து சேர்த்த நடிகை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
2-வது இடத்தில் பால்நிற மேனி நடிகை தமன்னா இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். தென்னிந்திய சினிமா தாண்டி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.
முன்னணி நடிகை திரிஷா ரூ.85 கோடி சொத்துடன் 4-ம் இடத்தில் இருக்கிறார். 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.
- ‘பாடிகார்டு'க்கு வழங்கும் மாத சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.
- ‘பாடிகார்டு’க்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கும் நடிகராக மாறி போயிருக்கிறார், யாஷ்.
'கே.ஜி.எப்.' படத்துக்கு பிறகு, இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார் யாஷ். யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்சிக்' படத்திலும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் 'ராமாயணா' படத்திலும் (ராவணன் கதாபாத்திரத்தில்) நடித்து வருகிறார்.
இதற்கிடையில் யாஷ் தனது 'பாடிகார்டு'க்கு வழங்கும் மாத சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.
யாஷ் 'பாடிகார்டு' ஆன சீனிவாஸ் என்பவருக்கு மாத சம்பளமாக ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படுகிறதாம். இதனால் கார், மோட்டார் சைக்கிள் என பந்தா ஆசாமியாக அவர் வலம் வருகிறார்.
அந்தவகையில் 'பாடிகார்டு'க்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கும் நடிகராக மாறி போயிருக்கிறார், யாஷ். சமூகம் பெரிய இடம் தான் போல...
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்களை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
குற்றம் தவிர்:
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'. இப்படத்தில், ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
பல்டி:
ஷேன் நிகாம், செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பல்டி. இப்படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக ப்ரீதி நடிக்கிறார்.
ரைட்:
அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கும் படம் Right. இப்படத்தில், நட்டி நடராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடிக்கின்றனர்.
சரீரம்:
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "சரீரம்".
- பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி அறிவித்தார்.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.
திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இரு பிரபலங்கள் இணையும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதைதொடர்ந்து, பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி அறிவித்தார்.
அதாவது, தான் 100 படங்களை எட்டியதும் திரையுலகிலிருந்து ஓய்வு எடுக்க விரும்புவதாக அவர் கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பிரியதர்ஷன் கூறுகையில்," எனது 100வது படம் முடிந்ததும் ஓய்வு பெற விரும்புகிறேன். நான் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருக்கிறேன். பிளான் எதுவுமில்லை. ஆனால் ஒரு விஷயம், எனது 100வது திரைப்படத்தில் மோகன்லால் இருப்பார். ஏனென்றால், நான் இன்று இவ்வாறு இருப்பதே அவரால்தான்'' என்றார்.
மோகன்லால் நடித்த பூச்சக்கொரு மூக்குத்தி (1984) படத்தின் மூலம் பிரியதர்ஷன் இயக்குனராக அறிமுகமானார்.
இதற்கு முன்பு, மோகன்லால் நடித்த திரனோட்டம் (1978) படத்தில் இயக்குனர் வி. அசோக் குமாரிடம் உதவியாளராக பிரியதர்ஷன் பணியாற்றினார்.
பிரியதர்ஷன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அதே ஹீரோவுடன் (மோகன்லால் ) தனது கடைசி படத்தை இயக்கி ஓய்வு பெற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
- தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இரவின் விழிகள் விழாவில் நடிகர் போஸ் வெங்கட் கூறினார்.
- இரவின் விழிகள் படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் 'இரவின் விழிகள்'. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான 'பங்காரா' என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.
சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில், நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது:-
இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள்.
ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ?
என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.
ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த 'குட்டி பட்டாஸ்' பாடல் வெளியானது.
- 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.
குக் வித் கோமாளி' மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
2021 ஆம் ஆண்டு அஷ்வின், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்த 'குட்டி பட்டாஸ்' பாடல் வெளியானது. அ.ப. இராசா வரிகளில், சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து இருந்தார். 4 ஆண்டுக்கு முன் வெளியான இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.
மிக விரைவிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்த இப்படம் தற்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
- நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
- கார்மேனி செல்வம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகும் படம் கார்மேனி செல்வம்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும், கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது. வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் 'கார்மேனி செல்வம்' குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று மாலை 5.55 மணிக்கு வெளியானது.

நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கார்மேனி செல்வம் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர்.
- Naal 2 என்ற மராத்திய படத்துக்காக 4 வயது குழந்தை Treesha தேசிய விருது வென்றார்.
- உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள் என்று கமல் பாராட்டு
செப்டம்பர் 23 ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் Naal 2 என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4 வயது குழந்தை Treesha-க்கு நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் என் 6 வயதில்தான் என் முதல் விருதை வென்றேன்; அந்த சாதனையை முறியடித்ததற்காக Treesha Thosar-க்கு, என் மனம் நிறைந்த பாராட்டுகள்; நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். உங்கள் அபார திறமையை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுங்கள்: உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் எனது பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.
- ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம்
- ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக் கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாசமுள்ள பாட்டுக்காரா!
நினைவு நாளில் அல்ல
உன்னை
நினைக்காத நாளில்லை
நீ பாடும்போது
உடனிருந்த நாட்கள்
வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்
'பொன்மாலைப் பொழுது'
உன் குரலின்
அழகியல் வசீகரம்
'சங்கீத ஜாதிமுல்லை'
கண்ணீரின் திருவிழா
'காதல் ரோஜாவே'
கவிதைக் கதறல்
'வண்ணம்கொண்ட
வெண்ணிலவே'
காதலின் அத்வைதம்
'பனிவிழும் மலர்வனம்'
சிருங்காரச் சிற்பம்
'காதலே என் காதலே'
தோல்வியின் கொண்டாட்டம்
ஒவ்வொரு பாட்டிலும்
உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப்
பூசியிருப்பாய்
உன் வரவால்
திரைப்பாடல் பூச்சூடிநின்றது
உன் மறைவால்
வெள்ளாடை சூடி நிற்கிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






