என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கடந்த மாதம் ஃப்ரீபயர் தடை செய்யப்பட்ட நிலையில் பப்ஜியை போலவே உள்ள பி.ஜி.எம்.ஐயும் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
    இந்திய உட்பட உலகின் மிக பிரபலமான மொபைல் கேமாக பப்ஜி இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய அரசு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பப்ஜி உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு தடை விதித்தது. 

    இதையடுத்து பப்ஜிக்கு மாற்றாக ஃப்ரீபயர் உள்ளிட்ட கேம்கள் விளையாடப்பட்டு வந்தன. இதில் பப்ஜியை போன்றே இருக்கும் பி.ஜி.எம்.ஐ என்ற மொபைல் கேமும் இந்தியாவில் அறிமுகமாகி பெரும் ஆதரவை பெற்றது. 

    இந்நிலையில் கடந்த மாதம் சீனாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறி ஃப்ரீபயர் கேமிற்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து தற்போது பி.ஜி.எம்.ஐ கேமையும் தடைவிதிப்பதற்காக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அந்த மனுவில் பப்ஜி கேம் தான் பி.ஜி.எம்.ஐ என்ற பெயரில் தென் கொரியா தயாரிப்பாளர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அந்த கேமை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பப்ஜி விளையாட்டும், பி.ஜி.எம்.ஐ விளையாட்டும் வேறு வேறு என்பதை உறுதி செய்தபின் தான் அனுமதி அளிக்கப்பட்டது என விளக்கம் அளித்தது.

    ஃப்ரீபயர் கேமும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தது. ஆனால் சீனாவுடன் தொடர்பில் இருப்பதாக அந்த கேம் தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று பி.ஜி.எம்.ஐயும் எந்நேரத்திலும் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
    இந்த மேக்புக் ஏர் எம்1 லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப நிலை லேப்டாப்பான மேக் ஏர் எம்1 லேப்டாப்பிற்கு சிறப்பு தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ரூ.92,900 விலை மதிப்புள்ள இந்த லேப்டாபிற்கு ரூ.8000 தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த லேப்டாப் ரூ.84,990-க்கு கிடைக்கிறது. 

    மேலும் இந்த லேப்டாப்பிற்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.23,100 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதையும் சேர்த்தால் ரூ.61,890-க்கு இந்த மேக் புக் ஏர்-ஐ வாங்கலாம்.

    மேக்புக் ஏர் எம்1

    இத்துடன் ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கார்ட் பயன்படுத்துபவர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக்கும் உண்டு.

    இந்த மேக்புக் ஏர் எம்1 லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
    யூடியூப்பால் இந்தியாவில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 900 முழு நேர வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
    இன்று யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் படைப்பாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். தனிப்பட்ட வீடியோ படைப்பாளிகளில் இருந்து பெரும் நிறுவனங்கள் வரை யூடியூப் மூலம் பயனடைகின்றன. 

    யூடியூப் வீடியோக்கள் தயாரிப்பு மூலம் வேலைவாய்ப்புகளும் தோன்றியுள்ளன. இந்நிலையில் யூடியூப் படைப்பாளிகள் சூழலமைப்பு இந்திய பொருளாதாரத்திற்கு பலன் அளித்து வருவதாகவும், கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.6,800 கோடி பங்களிப்பு யூடியூப் படைப்பாளிகள் மூலம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் எகானாமிக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    யூடியூப் மூலம் இந்தியாவில் பொருளாதார, சமூக, கலாசார தாக்கங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் யூடியூப் படைப்பாளிகள் சூழலமைப்பு மூலம் மட்டும் இந்திய ஜிடிபிக்கு ரூ.6,800 கோடி பங்களிப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 6 லட்சத்து 83 ஆயிரத்து 900 முழு நேர வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. 

    யூடியூப் விளம்பரங்களால் வரும் வருமானம், சந்தா, ஸ்பான்ஷர்ஷிப் உள்ளிட்ட வழிகளில் மூலம் கிடைக்கும் வருமானமும் இதில் கணக்கிடப்பட்டுள்ளன. 

    யூடியூப் கிரியேட்டர்கள்

    மேலும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளிகள் மற்றும் குழுக்கள், அவர்களால் உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவையும் இதில் ஆராயப்பட்டுள்ளன. 

    யூடியூப்பில் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி படைப்பாளிகளுக்கு உலக அளவில் ரசிகர்கள், பிராண்ட் பார்ட்னர்ஷிப்கள், நேரலை நிகழ்ச்சிகள் மூலமும் வருமானம் கிடைக்கின்றன. இந்த வருமானங்களால் படைப்பாளிகள் மட்டும் பயனடையவில்லை, அவர்களை சார்ந்திருக்கும் பிற துறைகளும் பயனடைகின்றன.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 44.8 கோடி யூடியூப் பயனர்கள், 53 கோடி வாட்ஸ் அப் பயனர்கள், 41 கோடி ஃபேஸ்புக் பயனர்கள், 21 கோடி இன்ஸ்டாகிராம் பயனர்கள் உள்ளனர்.
    பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (விஐ) உள்ளிட்ட 13 நிறுவனங்களின் 5ஜி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    இந்தியாவில் வரும் சுதந்திர தினத்தன்று 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு (டிஓடி) பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் டிராய் இன்னும் பரிந்துரை வழங்காததால் 5ஜி அலைக்கற்றை ஏலத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையடுத்து டிராய் தனது செயல்முறையை விரைவுப்படுத்தி இந்த மாதத்திற்குள் பரிந்துரையை சமர்பிக்க வேண்டும் என தொலைத்தொடர்புத்துறை கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு அறிக்கை சமர்பிக்கப்பட்டால் 5ஜி அலைக்கற்றை ஏலம் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும், வரும் ஆகஸ்டு 15-ம் தேதி 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (விஐ) உள்ளிட்ட 13 நிறுவனங்களின் 5ஜி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் 6ஜி நெட்வொர்க்கும் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு முன்னதாகவே வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆசுஸ் நிறுவனம் ‘விவோபுக் 13 ஸ்லேட்’ என்ற புதிய டிடேச்சபிள் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பை 2-இன்-1 யூஸாக பயன்படுத்தலாம்.

    இந்த லேப்டாப்பில் 13.3 இன்ச் டால்பி விஷன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, ஆசுஸ் பென் 2.0 ஸ்டைலஸ் சப்போர்ட், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், டிடேச்சபிள் கீபோர்ட், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவோபுக் 13 ஸ்லேட் OLED லேப்டாப்பில் OLED TV டால்பி விஷன் ஸ்கிரீனுடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஆசுஸ் விவோபுக் 13 ஸ்லேட்

    இதில் வழங்கப்பட்டுள்ள 50Whr பேட்டரியில்,  30 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும். அதேபோல ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். 

    மேலும் டைப்-சி சார்ஜிங் போர்ட், டால்பி ஆட்டம் ஸ்பீக்கர்ஸ் ஆகியவை இதில் உள்ளன.  

    மூன்று மாடல்களில் வெளிவந்துள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.45,990-ல் இருந்து ஆரம்பமாகிறது.

    ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டைலஸ், ஹோல்டர் கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.57,990 என்றும், அதன் 8ஜிபி வேரியண்டின் விலை ரூ.62,990 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போனுடன் வி.ஆர் ஹெட்செட் மற்றும் பிற வி.ஆர் மற்றும் ஏ.ஆர் சாதனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் பெற்ற நிறுவனமாக இருந்த ஹெச்.டி.சி, தனது பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பை கூகுளிடம் நல்ல விலைக்கு ஒப்படைத்துவிட்டு மெய்நிகர் தொழில்நுட்ப உருவாக்கத்தில் இறங்கியது. அந்த தளத்திற்கு ‘வைவ்’ என பெயரிட்டிருந்தது. 

    இந்நிலையில் தற்போது மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில், ஹெச்.டி.சி நிறுவனம் வைவ் தளத்தின் கீழ் தனது மெட்டாவெர்ஸ் போனை வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. 

    இந்த போனுடன் வி.ஆர் ஹெட்செட் மற்றும் பிற வி.ஆர் மற்றும் ஏ.ஆர் சாதனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் மூலம் பயனர்கள் வி.ஆர் மற்றும் ஏ.ஆர் செயலிகளை பயன்படுத்தி மெட்டாவெர்ஸுக்குள் செல்ல முடியும். 

    அதீத திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    ஹெச்.டி.சி நிறுவனம் கடந்த வாரம் தனது புதிய தயாரிப்புகளான மெய்நிகர் கார் அனுபவம், இடம்சார்ந்த பொழுதுபோக்கு, மேலும் வி.ஆர் அனுபவத்தை மேம்படுத்தும் வி.ஆர் பிரவுசர்கள், வி.ஆர் வைவ் கார்டியன் டூல்கள் என பலதரப்பட்ட சாதனங்களை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    இந்த வாட்சின் விலை ரூ.6000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி வாட்ச் 2 லைட்டை வரும் மார்ச் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    1.55 இன்ச் TFT டச் ஸ்கிரீன் கொண்ட இந்த வாட்சில் 360x320 ரெஷலியூஷன் தரப்பட்டுள்ளது. இதன் பிபிஐ டென்சிட்டி 311-ஆக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்சில் பிரிக்க முடியாத Li-Ion 262 mAh பேட்டரி, ஆக்ஸல்ரோமீட்டர், ஹார்ட் ரேட், கைரோ, காம்பெஸ், SpO2 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த வாட்ச் ஏ-ஜிபிஎஸ், GLONASS, GALILEO, BDS ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த வாட்சில் 100-க்கும் மேர்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கபட்டுள்ளன. 10 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கப்படும் இந்த வாட்ச், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ஸையும் க்கொண்டுள்ளது.

    இதன் விலை ரூ.6000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வரும் ஜூன் மாதத்தில் புதிய அறிவிப்புகளை நெட்ஃபிலிக்ஸ் வெளியிடும் என கூறப்படுகிறது.
    இன்று உலகம் முழுவதும் வீடியோ கேம்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸும் கேமிங் துறையில் தனது வணிகத்தை விரிவு செய்ய திட்டமிட்டுள்ளது. 

    ஏற்கனவே நெட்ஃபிலிக்ஸ் சில கேம்களை மட்டும் தனது தளத்தில் வழங்கி வந்த நிலையில், தற்போது ஃபின்லாந்து நாட்டின் மொபைல் கேம் தயாரிப்பு நிறுவனமான நெக்ஸ்ட் கேமை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

    ரூ.550 கோடி விலையில் நெக்ஸ்ட் கேம் நிறுவனத்தை வாங்குவதற்காக  நெட்ஃபிலிக்ஸ் பேரம் பேசிவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அந்த நிறுவனத்தை கைப்பற்றி, கேமிங் துறையில் புதிய அறிவிப்புகளை நெட்ஃபிலிக்ஸ் வெளியிடும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் பெரிதும் எதிர்பார்த்த பல சாதனங்களை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தின் முதல் டிஜிட்டல் சாதன அறிமுக நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம், எம்2, எம்1 ப்ரோ, எம்1 மேக்ஸ் மற்றும் அதிசக்தி கொண்ட எம்1 மேக்ஸ் சிப்களை கொண்ட மேக் சாதனங்களை வெளியிடவுள்ளது. 

    மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மேக் மினி ஆகியவை எம்2 சிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐமேக் ப்ரோ, எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் ஆப்ஷனுடனும், புதிய மேக் மினி எம்1 ப்ரோ சிப்புடனும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வருடம் வெளியாகவுள்ள மேக்புக் ஏர், கடந்த ஆண்டு வெளியான மேக்புக் ப்ரோவை போலவே டிசைனில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது பல நிறங்களிலான டிசைன்கள் மற்றும் மினி எல்.இ.டிக்களை கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    எம் 1 ப்ரோ, எம்1 மேக்ஸ் சிப்கள்

    இந்த நிகழ்வில் அனைவராலும் பெரிதும் எதிபார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் எஸ் இ+, ஐபோன் எஸ் இ 5ஜி ஆகிய போன்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பழைய ஐபோன் எஸ் இ-யை விட மேம்படுத்தபட்ட அம்சங்களுடன் வெளியாகும் இந்த போன் இந்திய மதிப்பில் ரூ.25,000-க்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காணலாம்.

    விரைவில் உலகம் முழுவதும் வொர்க் ஃபிரம் ஹோம் செயல்முறை நிறுத்தப்பட்டு அனைவரும் அலுவலகம் திரும்பும் கட்டாயம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் நாம் வாழும் சூழலையே மாற்றிவிட்டது. பணியாளர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் “ஒர்க் ஃபிரம் ஹோம்” என்று  செயல்முறையை பெரும்பாலான நிறுவனங்கள் அமல்படுத்தின.

    குறிப்பாக அமெரிக்காவில் கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கொரோனா தொற்று முடியும் வரை நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யுமாறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்து வருகின்றன.

    கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட பெரும்பாலான ஊழியர்களை ஏப்ரல் 4 முதல் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ளும் வழிமுறைகள் அதிகரித்துவிட்டன. தொற்றும் கட்டுக்குள் வந்துவிட்டது. இதையடுத்து அலுவலர்கள் வீடுகளில் சில நாட்களும், அலுவலகத்திற்கும் வந்து சில நாட்களும் ஹைப்ரிட் முறையில் பணியாற்ற வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

    கூகுள் அலுவலகம்

    அடுத்த மாதத்தில் இருந்து வாரம் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும். அதன்பிறகு நிலைமையை பொறுத்து முழுதாக அலுவலகத்தில் இருந்தே பணியாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அலுவலகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள், கேம் மற்றும் இசைக்கூடங்கள் ஆகியவை திறக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளது.

    கூகுளை தொடர்ந்து மெட்டா, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றன. இந்நிலையில் விரைவில் உலகம் முழுவதும் ஒர்க் ஃபிரம் ஹோம் செயல்முறை நிறுத்தப்பட்டு அனைவரும் அலுவலகம் திரும்பும் கட்டாயம் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வீடியோ பிரியர்களுக்கு அமேசான் பிரைம் அறிமுகமானது போல வீடியோ கேம் பயனர்களை கவர இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.
    ஆன்லைனில் புத்தக விற்பனை தளமாக அறிமுகமாகிய அமேசான் நிறுவனம் இன்று அமேசான் பிரைம் வீடியோ, கிண்டில், அமேசான் ஆடிபிள் உள்ளிட்ட பல்வேறு இணைய சேவைகளை வழங்கி வருகிறது. 

    இந்நிலையில் தற்போது வீடியோ கேம் விளையாடுபவர்களையும் கவரும் வகையில் அமேசான் நிறுவனம் அமேசான் லூனா என்ற கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

    தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த சேவையின் மூலம் ஃபயர் டிவி, ஃபயர் டேப்லெட், விண்டோஸ் கணினி, குரோம்புக், மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் கேம்கள் விளையாட முடியும்.

    இந்த லூனாவில் 3 புதிய சேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரைம் கேமிங் சேனல் மூலம் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் இலவசமாக கேம் விளையாடலாம். ரெட்ரோ சேனல் மூலம் பழைய கேம்களை விளையாட முடியும். மேலும் ஜேக்பாக்ஸ் கேம் சேனலிலும் புதுவகையான கேம்கள் விளையாட கிடைக்கும்.

    அமேசான் லூனா

    ட்விட்ச் நிறுவனத்துடன் இணைந்து லைவ் ஸ்ட்ரீமிங் வசதியையும் லூனா வழங்கியுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

    மேலும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொருமாதமும் முக்கியமான கேம்கள் இலவசமாக விளையாட கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

    இந்த லூனா சேவைக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ.750-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லூனா ஃபேமிலி சேனலுக்கு இந்திய மதிப்பில் ரூ.450-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சேவை இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிக்டாக் பயனர்களை தன்பக்கம் இழுப்பதற்காக இன்ஸ்டாகிராம் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    இன்று இணையவாசிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது.

    ஆரம்பத்தில் புகைப்படங்களை பகிரும் சமூக வலைதளமாக இருந்த இன்ஸ்டாகிராம் இன்று வீடியோக்கள், ரீல் வீடியோக்கள் உள்ளிட்ட பல அம்சங்களை வழங்கி வருகிறது.

    இன்று உலகம் முழுவதும் இணையத்தில் அதிகம் வீடியோக்கள் தான் பார்க்கப்படுகின்றன. இதனால் பயனர்கள் வீடியோ காணும் அனுபவத்தை மேம்படுத்துவதில் இன்ஸ்டாகிராம் தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில் அதில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது ஆட்டோ ஜெனரேட்டட் கேப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை அப்லோட் செய்பவர்கள் கேப்ஷனை (சப் டைட்டில்) தனியாக சேர்க்க வேண்டும். ஆனால் இனி வீடியோவில் பேசப்படும் வார்த்தைகள் தானாக மொழிபெயர்க்கப்பட்டு கேப்ஷனில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்துவதற்கு பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலிக்குள் Advanced Settings > Accessibility > Show Captions சென்று செட்டிங்கை மாற்றிகொள்ள வேண்டும்.

    இன்ஸ்டாகிராம் ஆட்டோ கேப்ஷன் அம்சம்

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ஆட்டோ கேப்ஷன் அம்சத்தில் தற்போது 17 மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி, ரஷ்யன், ஜப்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் அறிமுகமாகியுள்ள இந்த அம்சத்தில் தமிழ் மொழி இன்னும் இடம்பெறவில்லை.

    டிக்டாக் அடைந்த வளர்ச்சி மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பின்னடைவை சந்திக்க வைத்தது. டிக்டாக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆட்டோமேட்டட் கேப்ஷனை கொண்டு வந்தது. இதையடுத்து டிக்டாக் பயனர்களை தன்பக்கம் இழுப்பதற்காக இன்ஸ்டாகிராமும் தற்போது இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    ×