search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறாவளி காற்று"

    • வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

    • தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் அந்த மான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வருகிற 29-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 29-ந் தேதி அன்று தாழ்வு மண்டலமாக மாறுவதால அன்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, அது தாழ்வு மண்டலமாக மாறிய பிறகே தெரியவரும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும். தமிழக பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நகர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தனுஷ்கோடி -அரிச்சல்முனை சாலையை முழுமையாக மணல் மூடியது.
    • வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநா தசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிச னம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் அருகில் உள்ள சுற்றுலா தலமான தனுஷ் கோடி, அப்துல் கலாம் நினை விடம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க் கின்றனர்.

    குறிப்பாக நாட்டின் தென் எல்லையாக உள்ள தனுஷ்கோடியின் கடல் அழகை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் அங்கு சென்று வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடியில் வழக் கத்தை விட கடல் கொந் தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் அலைகள் பனைமர உயரத் துக்கு எழும்பின.

    சூறாவளி காற்றால் தனுஷ்கோடி சாலைகள் முழுவதும் மணல்கள் மூடி யது. அடிக்கடி புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சில பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மணல் குவிந்ததால் வாகனங்கள் அதில் சிக்கின. இதனால் தனுஷ்கோடிக்கு செல்லும் வாகனங்கள் ரவுண்டானா வரை செல்ல முடியாமல் அரிச்சல் முனையில் நிறுத்தப்படு கிறது. அங்கு இருந்து சுற்று லாப் பயணிகள் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தனுஷ் கோடியின் நினைவுச் சின்னங்களை பார்த்து வரு கின்றனர்.

    தனுஷ்கோடியில் கடல் சீற்றம், சூறாவளி காற்று காரணமாக அடிக்கடி சாலை களை மணல்கள் மூடுவது வழக்கம். நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப் பார்கள். ஆனால் இந்த முறை ஒரு வாரத்திற்கு மேலாக சாலையில் குவிந் துள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந் துள்ளது.

    • தஞ்சை உள்ளிட்ட பல இடங்களில் நேற்று திடீரென கன மழை பெய்தது.
    • காற்று வீசியதால் வீட்டின் மேற்கூரை பறந்தது

    சுவாமிமலை:

    தஞ்சை, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று திடீரென கன மழை பெய்தது.

    சுவாமிமலை சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 60).

    இவரது வீட்டின் முதல் மாடியில் கூலிங் சீட் மேற்கூரை போடப்பட்டிருந்தது இந்த நிலையில் கடுமையான காற்று வீசியதால் மேற்கூரை பறந்து அருகில் சின்னக்கடை வீதி பெரியசாலியர் தெரு ஆகிய சந்திப்புகளில் உள்ள மின்சார கம்பத்தில் சிக்கி தொங்கியது.மழையை முன்னிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதால்

    பெரும் பாதிப்பும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. காலையில் தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மேற்கூரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் சுவாமி மலை காவல் நிலையத்திற்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இரண்டு புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன.நேற்று பெய்த மழையால் விடிய விடிய மின்சாரம் தடைப்பட்டது ஆங்காங்கே சாலைகளில் சிறு மற்றும் பெரிய மரங்கள் விழுந்து கிடக்கின்றன அரசு அதிகாரிகள் அப்புறப்ப டுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5.30 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோன்று மரங்களும் வேரோடு சாய்ந்தன. விளம்பர தட்டிகள், பேனர்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது.

    ஈரோடு புதுமை காலனியில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த காளியம்மன் கோவில் கோபுரத்தில் விழுந்தது. இதில் கோபுரம் சேதம் அடைந்தது. மரக்கிளைகள் அங்கிருந்த டீ கடை மீது விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேப்போல் ஈரோடு ஐஸ்வர்யா ஓட்டல் அருகே இருந்த மரம், பெரியண்ணா வீதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மூலப்பட்டறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் மற்றும் ஏ.பி.சி, மருத்துவமனை பகுதியில் தலா ஒரு மரம் விழுந்தது. ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சிறிய மரம் ஒன்று விழுந்தது. பழைய மோப்பநாய் பிரிவு பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதேபோல் அந்த பகுதியில் உள்ள பல்வேறு மரக்கிளைகள் முடிந்து விழுந்தன. ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மணிக்கூண்டு எல்லை மாரியம்மன் கோவில் அருகே இருந்த பழமையான மரம் கீழே விழுந்தது. ஈரோடு அண்ணாமலை லேஅவுட் பகுதியில் வேருடன் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோட்டில் சுவர் இடிந்து விழுந்தது. ஈரோடு கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. நேற்று மழை பெய்த கனமழையால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரே நாளில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டில் விழுந்து கிடக்கும் மரம் மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பஸ்சில் ஏறி தீயணைப்பு நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு இருந்த சாக்கடை கால்வாய் முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 45 நிமிடம் பெய்த மழையால் ஈரோடு மாநகரம் ஸ்தம்பித்தது.

    இதேப்போல் கவுந்தப் பாடி, மொடக்குறிச்சி, கோபி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-40, கவுந்தப்பாடி-26.80, மொடக்குறிச்சி-9, கோபி-4.20, சென்னிமலை, அம்மாபேட்டை-3 பெருந்துறை-2.

    • சென்னை அசோக்நகர் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்று வீசியது.
    • போலீசார் சாலையில் கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னை அசோக்நகர் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றின் வேகம் காரணமாக 7-வது அவென்யூ பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் இரவு 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்தபடி மரம் விழுந்ததால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்து அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீசார் சாலையில் கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மரம் முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தபட்டது இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மரம் விழுந்தபோது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    • மரகிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு, ஆலப்பாக்கம், முறுக்கேறி, பிரம்மதேசம், எண்டியூர், கந்தாடு ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்கம்பம், மாமரங்கள், பலாமரங்கள், தைல மரங்கள் போன்றவைகள் மின் வயரில் விழுந்து சேதமானது. இதனால் மின்சாரம் அடியோடு நிறுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 30 கிராம மக்கள் மின்சாரம் இன்றி இரவு முழுவதும் அவதிக்குள்ளாகினர். ஊரணி கிராம சாலை முழுவதும் மா மரங்கள் விழுந்து மின்கம்பம் உடைந்து போக்குவரத்து அடியோடு துண்டி க்கப்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழி குப்பம் கிராமத்தில் மர கிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மரக்காணம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர கிளை களை அப்புறப்ப டுத்தினார்கள். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மரக்காணம் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது.
    • நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

    அவினாசி :

    கடந்த மாதம் 29 ந்தேதி உடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது. பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் பொதுமக்களை வாட்டி எடுத்தது.

    கடந்த 1 ந்தேதி பள்ளிகள் செயல்பட இருந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காரணமாகபள்ளிகள் செயல்படும் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை அவினாசி பகுதியில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. இதையடுத்து கருமேகங்கள் சூழ்ந்தது. நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் மழை நீர் குட்டை போல் தேங்கி நின்றது. சில இடங்களில் ரோட்டில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தது.
    • மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனல் காற்று வீசி வருகிறது. இரவு நேரங்களில் கடுமையான புழுக்கம் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இரவில் மழை பெய்தாலும், காலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் உள்ளது.

    கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மழையின்போது சூறாவளி காற்றும் இடி மின்னலும் அதிக அளவில் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றில் பெருந்துறை கருக்கம்பாளையம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பறந்தது. 3 ஆயிரம் வாழைகளும் முறிந்து விழுந்து சேதமானது. வழக்கம் போல் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், சின்ன செட்டியார் பாளையம், நல்லக்கட்டிபாளையம், அழகம்பாளையம், வரப்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது.

    மாலை 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை இடைவிடாமல் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்தது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 100 ஆண்டுக்கும் மேலான பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    நம்பியூர் மலையப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்தது. மலையப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இருந்த ராட்சத ஆலமரம் மற்றும் சந்தைக்கடை பகுதியில் இருந்த மரம் ஆகியவை வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மேலும் வாழை, தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் மலையப்பாளையம்-திருப்பூர் ரோட்டில் ஒரு டிரான்ஸ்பார்மரும் சாய்ந்தது. மழை பெய்யத் தொடங்கியதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சூறாவளி காற்றின்போது பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்ததால் மரம் விழுந்தபோது பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்ததால் நம்பியூர்-திருப்பூர், நம்பியூர், குன்னத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ஆலங்கட்டி மழை காரணமாக வீடுகளில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

    மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சூறாவளி காற்று, மழை நின்றதும் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் மின் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி காற்று வீசி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. நல்ல வேளையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீடுகளின் மேற்கூரைகளும் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தது. எனவே சேதமான வீடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.
    • பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவடைந்ததும் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. அனல் காற்றுடன், புழுக்கமும் நிலவியதால் வாகன ஓட்டிகள், வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் 9 மணி அளவில் காற்றின் வேகம் அதிக அளவில் இருந்தது.

    அப்போது இடி மின்னல் பயங்கரமாக இருந்தது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. பலத்த காற்றால் விளம்பர பேனர்கள் பறந்து சென்றன. இதேப்போல் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 45 மி.மீ மழை பெய்தது. பவானி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    ஈரோட்டில் இருந்து பவானி லட்சுமி நகர் வரை காற்று கடுமையாக வீசியதால் அந்த சமயம் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடும் அவதி அடைந்தனர். சென்னி மலையில் இரவு 10 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    பெருந்துறை பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பெருந்துறை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி, கந்தசாமி ஆகியோருக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்தது. இதே போல் அதே பகுதியில் சின்னப்பன் என்பவர் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். நேற்று வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 15 வீடுகளின் மேல் இருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் பறந்து சென்றன. மேற்கூரைகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டு காட்சி அளிக்கிறது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளிலும் இரவு ஒரு மணி நேரம் இடி , மின்னலுடன் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் மண்ணும் வாரி இறைத்து வந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். எனினும் இந்த எதிர்பாராத மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை - 45, பவானி - 31.60, அம்மாபேட்டை - 30, சென்னிமலை - 25.60, ஈரோடு-2.

    • பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது.
    • திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாநகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன்காரணமாக பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது. சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள வீதியில் சாலையோர மரத்துக்கு அடியில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்து கார் மேல் விழுந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்து சேதமானது.

    உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு உதவி மாவட்ட அதிகாரி வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி காரை அப்புறப்படுத்தினார்கள். இதுபோல் பி.என்.ரோட்டில் சரிந்த மரங்களால் போக்குகுவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரங்களையும் வெட்டி அகற்றினார்கள். இதுபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் பகுதிகளில் சாலையோரம் நின்ற மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணியில் இருந்து மழை கொட்டியது. அத்துடன் காற்றும் பலமாக வீசியது. இதனால் ஆங்காங்கே உள்ள குட்டைகளில் மழைநீர் நிரம்பியது. தொடர்ந்து குளிர் காற்றும் இதமாக வீசியது.  

    • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் கடுகாம்பாளையம், தோட்டகாட்டூர், ஆலங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை,நேந்திரன், கதளி உள்ளிட்ட 500-க்கும் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.

    ஒரு வாழை நடவு செய்ய சுமார் 10 முதல் 150 ரூபாய் வரை செலவு செய்து இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடபட்ட வாழை மரங்களுக்கு காப்பீடு செய்து இருந்தும் காற்றினால் சாய்ந்த மரங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில்லை எனவும், பெரும்பாலும் இயற்கை சீற்றத்தின் போது காற்றினால் வாழை மரங்கள் சேதம் ஆவதாகவும் அவ்வாறு காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கும் காப்பீட்டு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×