

மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மரவனூர், பாலப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தது. சில இடங்களில் மரங்களும் சாய்ந்தது.இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு சாலையோரத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு மின்கம்பம் பாதி சாய்ந்தது.இதனால் மின்கம்பிகள் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பின்னர் தகவல் அறிந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை நிறுத்தி விட்டு மின்கம்பிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் வாகனங்கள் வழக்கமாக இயக்கப்பட்டது. மேலும் அணைக்கருப்ப கோவில்பட்டி அருகே பனைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் திடீரென மரம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயால் மரம் கருகியது. இதே போல் துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டுள்ளது.