என் மலர்
நீங்கள் தேடியது "நம்பிக்கை"
- மனத்தில் குழப்பம் சூழ்வதால் செயலில் எந்தத் தெளிவும் இல்லாமல் போய்விடும்.
- நிலையானதைக் கண்டறிவதற்கு நிலைத்த நம்பிக்கை என்பது அவசியம் தேவை.
'யானைக்கு வலிமை தும்பிக்கையில்! மனிதனுக்கு வலிமை நம்பிக்கையில்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள வாசகப் பெருமக்களே வணக்கம்!.
மனித வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் எதிரெதிர்த் தன்மைகளில்தான் எல்லா நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுள்ளன. நேர்முறை அல்லது எதிர்மறை ஆகிய இவ்விரண்டின் திசைகளில்தான் நமது திட்டமிடல்களும் செயல்பாடுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன; இதன் முடிவு, நன்மையில் விடிவது! அல்லது தோல்வியில் துவள்வது! இரண்டில் ஒன்றாகவே இருக்கிறது. எது எப்படியாயினும் தளர்ந்து போகாத நம்பிக்கையே மனிதனைத் தொய்ந்து போகாத வெற்றி இலக்கைநோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கையும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டது ஆகும். நன்னம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை என்பவை அவை. ஒரு செயலில் இறங்கும்போதே, வெற்றி பெறுவதே இலக்கு என்றாலும், சிலவேளைகளில் அவநம்பிக்கை நம்மை அறியாமலேயே வந்து நமது ஆழ்மனத்தில் அமர்ந்து கொள்ளும். ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்போது, நாம் நம்பிக்கையுடன் சென்று கலந்து கொண்டால், தெரியாத கேள்விக்கு விடையளிக்கும் போதுகூட, அது சரியான பதில்போல அமைந்து விடுவதுண்டு.
அதேநேரத்தில், நேர்முகத் தேர்வுக்கு, இந்த வேலை நமக்குக் கிடைக்கவே கிடைக்காது என்கிற அவநம்பிக்கையோடு போய்க் கலந்துகொண்டால், தெரிந்த கேள்விகளுக்குக்கூடப் பிழையான பதில்களையே மனம் கொண்டுவந்து நிறுத்தும். ' மருந்து கால்! நம்பிக்கை முக்கால்!' என்கிற பழமொழி, நோய்த் தீர்வுக்கான சூத்திரம் மட்டுமல்ல; வெற்றி இலக்கை எட்டுவதற்கான நம்பிக்கை மந்திரமும் கூட.
வாழ்வின் ஒவ்வொரு நொடியும், அடுத்த நொடி குறித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது; அதுவும் நன்னம்பிக்கையாக இருந்தால், வெகு சிறப்பாகவே இருக்கும். நாளைக் காலையும் விடியும்; சூரியன் உதிக்கும்; பகலின் வெளிச்சக் கிரணங்கள் நமது சுறுசுறுப்பான இயங்குதலுக்கு வழிகாட்டும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை நெஞ்சத்தில் ஆழமாக இருப்பதால் தான், நாம் முதல்நாள் இரவில் நிம்மதியாகக் கண்மூடித் தூங்கப் போகிறோம்.
நெஞ்சத்தில் நிச்சயமின்மை புகுந்து விட்டால், தூக்கம்கூடத் தொலைதூரத்திற்குச் சென்றுவிடும்; மனத்தில் குழப்பம் சூழ்வதால் செயலில் எந்தத் தெளிவும் இல்லாமல் போய்விடும். அதனால்தான் நம்பிக்கை வேண்டும்; அதுவும் அவநம்பிக்கையற்ற நன்னம்பிக்கை வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
"வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை
வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை
ஊனிடில்
நானிலாதது ஒன்றில்லை நானுமில்லை
நன்னிடில்
தானிலாதது ஒன்றுமே தயங்கி
ஆடுகின்றதே!"

சுந்தர ஆவுடையப்பன்
என்கிற சிவவாக்கியர் பாடல், இந்த உலகில், நிலையானதுபோல் தோன்றுகிற எதுவுமே நிலையானது இல்லை என்கிறது. வானம், உடம்பு, நான் என்னும் ஆளுமை எல்லாம் இருப்பதுபோல் தோன்றி உலகிற்கும் மனித உடம்பின் செயல்பாட்டிற்கும் ஒரு கட்டமைப்பை வழங்கினாலும், உண்மையில், வானமும், உடம்பும், நான் என்னும் தன்முனைப்பும் நிச்சயமாக இல்லை என்பதே கண்கண்ட உண்மை; தான் என்பது இல்லாமல் ஜோதி சொரூபமாய் ஆடிக்கொண்டிருக்கும் இறையே நிலையானது ஆகும் என்பதை இப்பாட்டு உணரச் செய்கிறது.
நிலையில்லாதவற்றிலிருந்து நிலையானவற்றைக் கண்டறிவதே உலகியல் வாழ்வின் தத்துவம். நிலையானதைக் கண்டறிவதற்கு நிலைத்த நம்பிக்கை என்பது அவசியம் தேவை.
திபெத் நாட்டில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு துறவியை நாடி ஓர் இளைஞன் வந்தான். "குருவே! என்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்!. எனக்கு உங்களது ஆசிகளையும் அறிவுரைகளையும் வழங்குங்கள்!" என்று மன்றாடிக் காலில் விழுந்தான். அந்த இளைஞனைத் தூக்கி நிறுத்திய துறவி," இன்று முதல் உன்னைச் சீடனாக ஏற்று ஆசீர்வதிக்கிறேன்; அறிவுரை என்று பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை; என்னை குருவாக ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாய், இனிமேல் நீ எதைச் செய்தாலும், என்னுடைய பெயரைச் சொல்லிச் செய்!.
முழுமையாக என்னுடைய பெயரை மட்டும் நம்பு! வெற்றி நிச்சயம்! "என்று சொல்லி அனுப்பினார்.
அன்றுமுதல் குருவின் திருப்பெயரைச் சொல்வதையே மந்திரமாகக் கருதிச் செயல்படத் தொடங்கினான் அந்த இளைஞன்; திடீரென ஒருநாள், அந்த ஊரின் குளத்திற்குக் குளிக்கச் சென்ற இளைஞன், குளித்து முடித்தவுடன், குளத்து நீரின் மீதேறி அக்கரைக்கு நடந்தே சென்று அடைந்தான்; சீடன் குளத்து நீரின் மீதேறி நடந்து சென்ற அதிசயத்தை அந்தத் துறவியிடம் சென்று மக்கள் ஆச்சரியமாகச் சொன்னார்கள். அடுத்த நாளே, அந்த ஊரில் உயரமாக இருந்த குன்றின் உச்சிக்குச் சென்ற சீடன், குருவின் பெயரைச் சொல்லிக் கீழே குதித்து விட்டான்; குன்றின் அடிவாரத்தில் விழுந்த சீடன், ஒரு பொட்டுக் காயமின்றி எழுந்து நடக்கவும் தொடங்கி விட்டான்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட துறவி, சீடன் இவ்வளவும் செய்வதற்கு எது காரணம்? யார் காரணம்?; அந்த இளைஞனின் தனிப் பயிற்சியா? அல்லது சிறப்பான திறமையா? என்று ஊர் மக்களைப் பார்த்துக் கேட்டார். "வேறு எதுவுமே காரணமில்லை! நீங்கள் ஒருத்தர் மட்டுமே காரணம்!. நீரின்மீது நடக்கும்போதோ அல்லது குன்றின் உச்சியிலிருந்து குதிக்கும்போதோ அந்த இளைஞன் உங்கள் பெயரை மட்டுமே தொடர்ந்து மந்திரம்போலச் சொல்லிக்கொண்டு செயலில் ஈடுபட்டான்; வெற்றியும் கண்டான்.
அந்த ஆற்றலை அவன் பெறுவதற்கு உங்கள் பெயரே உறுதுணையாக இருந்திருக்கிறது; உண்மையில், உங்கள் பெயர் மட்டுமல்ல, நீங்களும் ஆற்றல் மிக்கவர்" என்று துறவியிடம் கூறினர் பொதுமக்கள்.
மகிழ்ந்துபோன துறவி, தன்னுடைய ஆற்றலைப் பரிசோதித்துப் பார்க்க, அவரே நேரடியாகக் குளத்தங்கரைக்குச் சென்று, குளத்தின்மீது நடக்கத் தொடங்கினார்; பாவம் நீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறலுக்கு ஆளானார்.
பிறகு குளத்துக்குள் குதித்த நீச்சல் தெரிந்த சில பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார். நல்லவேளை முதல் பரிசோதனைக்குக் குளத்தங்கரைக்கு வந்ததால், அவர் சேதாரமின்றிக் காப்பாற்றப்பட்டார்; நேராகக் குன்றின் உச்சிக்குச் சென்று குதித்திருந்தால், ஆதாரமின்றி உடல் சிதறியிருப்பார். இப்போதுதான் அவருக்கு உண்மை விளங்கியது. உண்மையில் தனது சீடனுக்கு மந்திர ஆற்றலை வழங்கிய சக்தி, தானோ அல்லது தன்னுடைய பெயரோ இல்லை; அந்த இளைஞன் அந்தப் பெயரின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நன்னம்பிக்கை.
நம்பிக்கை கொள்வது என்பது இயல்பானது; ஆனால் நம்பிக்கைமீதே மாற்றமுடியாத நம்பிக்கை கொள்வதில்தான் வெற்றியின் விலாசம் அடங்கியிருக்கிறது. நம்பிக்கை கொள்வது என்பது ஒரு செயலோடு உறவுகொள்வது மட்டுமல்ல; அதனோடு உரிமை கொள்வதும் ஆகும். அப்போதுதான், செயலாற்றும்போது தளராத முயற்சி, இடைவிடாத உழைப்பு, அயற்சி கொள்ளாத மகிழ்ச்சி ஆகிய அத்தனையும் நம்மோடு உரிமை கொண்டாடி வந்து உயரத்திற்கு உயர்த்தும்.
விருப்பத்தோடு கல்லையும் சாப்பிட்டால், அதையும் வயிறு சீரணித்துவிடும்; இதற்குக் காரணம் விருப்பமும் நம்பிக்கையுமே காரணம். அதே நேரத்தில், நம்பிக்கையில்லாமல் பச்சைத் தண்ணீரைப் பருகினாலும் வயிற்றுப் போக்கும் வாந்தியுமே இறுதி விளைவாக இருக்கும். எதில் ஈடுபட்டாலும் அதில் முழு மனஈடுபாட்டோடும், மகிழ்ச்சி நம்பிக்கையோடும் ஈடுபட்டால் தளர்ச்சியில்லாத வெற்றி, தகுதிப் பரிசாகக் கிட்டும்.
நம்பிக்கை வைப்பதுகூடத் திடீரென வந்துவிடக்கூடாது; அப்படி வந்துவிட்டால் அது மூடநம்பிக்கையாகக் கூட மாறிவிடும். இன்றைய புதிய அறிவியல், மனித மூளையை நம்பிக்கை இயந்திரமாகப் பார்க்கச் சொல்கிறது. இதுவரை இறங்கிச் செய்த வேலைகளில் ஏற்பட்ட தடைகளையும் தோல்விகளையும் பாடங்களாக எடுத்துக்கொள்ளச் சொல்கிறது மூளை; இந்த இடத்தில் நம்பிக்கை நமக்குக் கற்றுத்தருகிற போதகாசிரியராகவும் திகழ்கிறது.
கடந்த காலம் நமக்குத் தந்தது தோல்வி மட்டுமே! என்றாலும் அவநம்பிக்கை கொள்ளாமல், அதிலிருந்தும் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு எதிர்காலம் இனிமையானது எனும் நன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். எதிலும் தளராமல் உறுதியான நம்பிக்கை எண்ணங்களோடு செயல்படத் தொடங்கினால் நேர்முறையான விளைவுகளே நமக்கு அமைதியையும் வளத்தையும் அள்ளிக்கொண்டு வந்து கொட்டும்.
உலகம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கை நமது எண்ணங்களிலும் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் நமது வாழ்வின் ஒவ்வொரு விடியலும் ஒளிக்கிரணங்களோடு மலர்கிறது. ஒளி என்பது அறிவின் குறியீடு; ஒளி மகிழ்வின் வெளிப்பாடு; ஒளி நம்பிக்கையின் புறப்பாடு. நம்பிக்கை மகிழ்வோடு, மகிழ்ச்சி ஈடுபாட்டுடன் ஒரு செயலில் இறங்கும்போது, எல்லாத் தடங்கல்களும் சூரியக் கதிர் பட்ட பனிபோல விலகிவிடுகின்றன.
நமது ஒவ்வொரு செயலின் தீர்க்கமான வெற்றிக்கும் அடிப்படையாக நமது மனமும் உடலும் சோர்ந்துபோகாத சுறுசுறுப்போடு திகழ வேண்டும். செயலில் இறங்கும்போதே அவநம்பிக்கையின் சுவடுகள் அணுவளவும் சிதைக்காத வண்ணம் நம்மைப் பாதுகாப்பதற்கு நாம் நன்னம்பிக்கை கொள்வதே சிறந்த ஊக்கமாகும்.
நன்னம்பிக்கை நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க, செயலில் இறங்குவதற்கு முன், மூன்றுவிதமான தன்மைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இறங்கப் போகும் செயல்குறித்த பொதுவான விழிப்புணர்வு அடிப்படையான முதல் தேவையாகும். செயலின் தன்மை எப்படி? எதிர்கொள்ளும்போது ஏற்படும் விளைவுகளும் தடங்கல்களும் எப்படிப்பட்டவை? போன்றவற்றில் ஆழ்ந்த அறிவு இதற்கு வேண்டும்.
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்"
என்னும் குறளில் வள்ளுவப் பேராசான், 'எதிர்விளைவு பின்விளைவு குறித்து அறியும் எதிரதாக் காக்கும் அறிவு' ஒவ்வொரு செயல் தொடக்கத்திற்கு முன்னும் வேண்டும் என்கிறார். இரண்டாவதாக, அந்தச் செயலில் இறங்கிய பிறகு ஆற்றவேண்டிய செயலின் அளவு குறித்த கணக்கீடு வேண்டும். இதைத் திட்டமிடல் என்றும் கூறலாம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியார்
திண்ணியராகப் பெறின்"
என்பது வள்ளுவம். திட்டமிடல் என்றால் மேம்போக்காகத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்குவது அல்ல. ஏற்படப்போகும் சாதக பாதகங்கள் அனைத்தையும் எதிர்பார்த்துத் திட்டமிட்டு இறங்குவது; தேவைப்படும் முழுமையான மனித வளம், பொருள்வளம், தொழில்நுட்பத் திறம் சகலத்தையும் தயாராக வைத்துக்கொண்டு செயலில் இறங்குவது.
மூன்றாவது, முழு நம்பிக்கையோடு செயல்படத் தொடங்குவது. 'குத்தொக்க சீர்த்த விடத்து' என்பதைப்போல எவ்வளவு விரைவாகச் செயலை முடித்துக் காட்ட வேண்டுமோ அவ்வளவு உறுதியாக, விரைவாகச் செய்துகாட்ட வேண்டும். இப்படி அனைத்து முன்னேற்பாடுகளோடு நம்பிக்கை இயந்திரமாகிய மூளையைத் தயார் செய்துகொண்டு இறங்கினால் என்றென்றும் வெற்றியே!.
தொடர்புக்கு 9443190098
- 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் ஊர்வலமாக வந்து கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
- கன்னி பெண்கள் சேகரித்து வைத்த விநாயகரை ஆற்றில் விட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியில் மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அறுகம்புல் சாண விநாயகர் வைப்பது வழக்கம்.
திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் பிடித்து வைத்த பிள்ளையாரை ஆற்றில் கரைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
இதன் அடிப்படையில் காணும் பொங்கலை யொட்டி செல்லியம்மன் கோவில் வளாகத்தில் 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் ஊர்வலமாக வந்து உப்பாற்றின் அருகே கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
பின், கன்னி பெண்கள் சேகரித்து வைத்த விநாயகரை ஆற்றில் விட்டனர். நிகழ்ச்சிக்கு பல ஊர்களில் இருந்து பெண்கள் வந்து நட்பை பரிமாறி கொண்டனர்.
- நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
- துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.
தஞ்சாவூர்:
பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசும் போது, சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விஷயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது, இந்த படத்தின் கதை அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான்.
இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.
இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விஷயம் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் துரை சுதாகர், திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும்.
- மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் நடைபயணமானது தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும் என்று ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் இடத்தில் தொடங்கி வைக்கிறார்.முன்னதாக அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாம லை,ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.நாளை (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம்,பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.எனது தலைமையிலான ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.மத்திய அமைச்சர் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை வரவேற்ப தற்காக ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. விழா மேடை யானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வரை மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.இந்த நடைபயணமானது தமிழ கத்தில் தாமரை மலர ஏதுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.தமிழக மக்கள் இந்த நடை பயணத்தில் பங்கேற்று பா.ஜ.க.விற்கு முழு ஆதரவையும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
- எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது
நாகர்கோவில் :
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டுக்கு சென்று திரும்பிய குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி படிவம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோ விலில் நேற்று நடந்தது.
அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசி னார். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூத் கமிட்டி படிவத்தை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
மதுரையில் நடைபெற்ற வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றியினை வரலாற்றில் இடம்பெற செய்துள்ளது. தொண்டர்களிடம் புதிய தெம்புடனும் எதிர் காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
நினைவுகள் அழிவதில்லை. வெற்றிகள் முடி வதில்லை. அ.தி.மு.க.-வின் வெற்றிகள் மறைவதில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக நாம் ஒவ்வொருவரும் முனைப்போடு போர்க ளத்தில் நிற்பது போன்று செயல்பட வேண்டும். எதிரி கள் நமக்கு செய்யும் துரோகங்களை மக்களின் வாக்குகளால் வீழ்த்திக் காட்டி வெற்றி வாகை சூட வேண்டும். இதற்கு உண்மையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டசபை தொகுதி களில் பூத் கமிட்டி அமைத்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் ஜெசிம், பொன் சுந்தர்நாத், ஜீன்ஸ், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்,குளச்சல் நகர கழக செயலாளர் ஆண்ட்ரோஸ் , குளச்சல் சட்ட மன்ற தொகுதி முன்னாள் கழக செயலாளர் ஆறுமுகராஜா , முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திரவர்சன், ஆனக்குழி சதீஷ் , அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
- தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.
இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.
குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.
கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.
பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.
ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.
கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.
முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.
காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.
மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.
சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.
அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.
- முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது.
- தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருப்பூர்:
கடந்த ஓராண்டாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சு விலை சீராக இல்லாத நிலையில் வியாபாரிகள் இருப்பு வைத்து பஞ்சு விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது.இருப்பினும் விலை குறைவாக இருக்கும் போது பஞ்சை வாங்கி இருப்பு வைத்து செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது. உற்பத்தியை சீராக செய்ய முடியாமல், உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக, நூல் விலை காரணமின்றி உயர்வதால், தீபாவளி பண்டிகை ஆர்டர் கையை கடித்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது.
அக்டோபர் 1 முதல் 2023-24ம் பருத்தி ஆண்டு துவங்கியுள்ளது. விரைவில் இந்திய பருத்தி கழகம் ஆலோசனை செய்து நடப்பு ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட உள்ளனர்.வழக்கமாக பருத்தி சீசனில் வரத்து அதிகரித்து விலை சீராக இருக்கும். இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையிலும் ஏற்றம் இருக்காது என, உற்பத்தியாளர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
கடந்த 2 மாதங்களாக, 15 நாட்கள் இடைவெளியில் நூல் விலை உயர்ந்தது. தற்போது நூல் விலையில் மாற்றம் இல்லையென, முன்னணி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையில் உயர்வு இருக்காது என்று பின்னலாடை உற்பத்தியாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதனால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.
- எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.
மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.
நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.
* கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.
* கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.
* உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.
* உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
* உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.
- நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாளுக்குநாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி சமூகப் பணித்துறை மாணவி ஆர்த்தி வரவேற்று பேசினார்.
திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலை வகித்தார். திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையேற்று மனநலத்தை பற்றியும் மறுவாழ்வு சிகிச்சை பற்றியும் நம்பிக்கை மனநல காப்பக சேவைகள் அனைத்தையும் படும் சிரமங்களையும் விவரமாக எடுத்துக் கூறி தலைமை உரையாற்றினார் .
வழக்கறிஞர் கதா க. அரசு தாயுமானவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்பிக்கை மனநலக் காப்பகத்தின் சிறப்பான சேவைகளையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுகுதல், கண்காணித்தல், வழிபடுத்துதல், ஆற்றப்படுத்துதல், மறுவாழ்வு செய்தல், மன சிகிச்சை அளித்தல் போன்றவற்றை எடுத்துக் கூறினார்.
நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நாளுக்கு நாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.
அவர்களை மீட்டெடுத்தல், பாதுகாப்பு கொடுத்தல், உணவளித்தல்,
மனநல சிகிச்சை அளித்தல் ஆற்றப்படுதல் குடும்பத்துடன் சேர்த்து வைத்தல் போன்றவற்றை விவரித்தார்.
நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் தன்னார்வலர்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சமூகப் பணி ஆர்த்தி பயனுள்ள நூல்களையும் பூக்கன்றுகளையும் கொடுத்து வாழ்த்து பெற்றார்.
நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் கோகிலா, சுபா, சக்தி பிரியா, சரவணன், சங்கர், செவிலியர் சுதா, வள்ளி கலந்து கொண்டனர்.
முடிவில் நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் விஜயா நம்பிக்கை மனநல காப்பகத்தை பற்றியும் பணியாளர்களையும் சமூக பணியில் முதுகலை பட்டம் பெரும் ஆர்த்தியை பற்றியும் எடுத்துக் கூறினார்.
- ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியம் அருளும் என்னும் நம்பிக்கை நிலவிவருகிறது.
- மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த ஜீவ பீடத்தை புனரமைப்பு செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது.
ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), குடும்பத்தினருக்கு ஆன்ம பலத்தை அருளும் என்னும் நம்பிக்கை நிலவி வருகிறது.
நாகை அருகே நாகூரில் குயவர் மேட்டு தெருவில் 400 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து இங்கே ஜீவ சமாதி நிலையை அடைந்த ஸ்ரீ காங்கேய சித்தர் மடம் உள்ளது.
மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த இந்த ஜீவ பீடத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் புனரமைப்பு செய்து தின, வார, மாதாந்திர பூஜையினை செய்து வருகின்றனர்.
ஆவணி மாத பவுர்ணமி தினத்தன்று சித்தருக்கு தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடி வேள்வி செய்து அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.
உபயத்தினை சிவா குடும்பத்தினர் செய்தனர்.
இந்த வேள்வியில் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேள்வியினை காங்கேய மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் சிவாச்சாரியார் செய்தனர்.
நிகழ்ச்சியை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்தனர்.
- ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள் எனவே அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.
- நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது,
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த ஸ்ரீமதி மரணம், தற்கொலை எனவும் கொலையோ அல்லது பாலியல் துன்புறுத்தலோ இல்லை என உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தை தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.
நீதிமன்றங்கள் இப்படி தவறுதலான ஒரு நீதியை வழங்கினால் மக்கள் நீதிமன்றங்கள் மீது உள்ள நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.
நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.
தமிழக முதல்வர் ஸ்ரீமதி உயிரிழப்புக்கு உரிய நீதியையும் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
அதே போல ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள்.
அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.
தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் ஒண்டிவீரன் விழாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல புலித்தேவன், மருது பாண்டியன் மற்றும் ஆக.30 நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த மன்னர்கள் மற்றும் மாவீரர்களின் புகழை பரப்புவதற்கு எல்லா மக்களும் நேரில் சென்று பார்த்து வழிபட வேண்டும்.
ஆனால் அவர்கள் வழிபடாத அளவிற்கு தமிழக அரசு 144 உத்தரவை பிறப்பிப்பதாகவும், அதிமுக அரசு தொடர்ச்சியாக இந்த 144 தடை உத்தரவை செய்திருந்தது.
திமுக அரசு 144 தடை உத்தரவை அகற்ற வேண்டும் என்றார்.
புலித்தேவனின் 307வது பிறந்தநாள்
நெல்லை சீமையை ஆண்டு வெள்ளையரை எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திரப் போராட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை ஒட்டி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் பூலித்தேவனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் பூலித்தேவனுக்கு அரசின் சார்பில், சென்னை தலைநகரில் உருவச்சிலை அமைக்க வேண்டும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூலித்தேவன் விழாவுக்கு போடப்படும் 144 தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






