search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை கையாளும் வழிகள்
    X

    வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை கையாளும் வழிகள்

    • சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
    • தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

    குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.

    பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.

    கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.

    முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.

    சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.

    அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.

    Next Story
    ×