கணவன்-மனைவி உறவில் தவிர்க்க வேண்டியவைகள்

திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.
கணவன்-மனைவி உறவில் தவிர்க்க வேண்டியவைகள்
Published on

மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.

நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.

* கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.

* கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.

* உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.

* உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

* உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com