என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நம்பிக்கை மீது நம்பிக்கை வை!
- மனத்தில் குழப்பம் சூழ்வதால் செயலில் எந்தத் தெளிவும் இல்லாமல் போய்விடும்.
- நிலையானதைக் கண்டறிவதற்கு நிலைத்த நம்பிக்கை என்பது அவசியம் தேவை.
'யானைக்கு வலிமை தும்பிக்கையில்! மனிதனுக்கு வலிமை நம்பிக்கையில்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள வாசகப் பெருமக்களே வணக்கம்!.
மனித வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் எதிரெதிர்த் தன்மைகளில்தான் எல்லா நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுள்ளன. நேர்முறை அல்லது எதிர்மறை ஆகிய இவ்விரண்டின் திசைகளில்தான் நமது திட்டமிடல்களும் செயல்பாடுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன; இதன் முடிவு, நன்மையில் விடிவது! அல்லது தோல்வியில் துவள்வது! இரண்டில் ஒன்றாகவே இருக்கிறது. எது எப்படியாயினும் தளர்ந்து போகாத நம்பிக்கையே மனிதனைத் தொய்ந்து போகாத வெற்றி இலக்கைநோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கையும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டது ஆகும். நன்னம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை என்பவை அவை. ஒரு செயலில் இறங்கும்போதே, வெற்றி பெறுவதே இலக்கு என்றாலும், சிலவேளைகளில் அவநம்பிக்கை நம்மை அறியாமலேயே வந்து நமது ஆழ்மனத்தில் அமர்ந்து கொள்ளும். ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்போது, நாம் நம்பிக்கையுடன் சென்று கலந்து கொண்டால், தெரியாத கேள்விக்கு விடையளிக்கும் போதுகூட, அது சரியான பதில்போல அமைந்து விடுவதுண்டு.
அதேநேரத்தில், நேர்முகத் தேர்வுக்கு, இந்த வேலை நமக்குக் கிடைக்கவே கிடைக்காது என்கிற அவநம்பிக்கையோடு போய்க் கலந்துகொண்டால், தெரிந்த கேள்விகளுக்குக்கூடப் பிழையான பதில்களையே மனம் கொண்டுவந்து நிறுத்தும். ' மருந்து கால்! நம்பிக்கை முக்கால்!' என்கிற பழமொழி, நோய்த் தீர்வுக்கான சூத்திரம் மட்டுமல்ல; வெற்றி இலக்கை எட்டுவதற்கான நம்பிக்கை மந்திரமும் கூட.
வாழ்வின் ஒவ்வொரு நொடியும், அடுத்த நொடி குறித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது; அதுவும் நன்னம்பிக்கையாக இருந்தால், வெகு சிறப்பாகவே இருக்கும். நாளைக் காலையும் விடியும்; சூரியன் உதிக்கும்; பகலின் வெளிச்சக் கிரணங்கள் நமது சுறுசுறுப்பான இயங்குதலுக்கு வழிகாட்டும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை நெஞ்சத்தில் ஆழமாக இருப்பதால் தான், நாம் முதல்நாள் இரவில் நிம்மதியாகக் கண்மூடித் தூங்கப் போகிறோம்.
நெஞ்சத்தில் நிச்சயமின்மை புகுந்து விட்டால், தூக்கம்கூடத் தொலைதூரத்திற்குச் சென்றுவிடும்; மனத்தில் குழப்பம் சூழ்வதால் செயலில் எந்தத் தெளிவும் இல்லாமல் போய்விடும். அதனால்தான் நம்பிக்கை வேண்டும்; அதுவும் அவநம்பிக்கையற்ற நன்னம்பிக்கை வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
"வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை
வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை
ஊனிடில்
நானிலாதது ஒன்றில்லை நானுமில்லை
நன்னிடில்
தானிலாதது ஒன்றுமே தயங்கி
ஆடுகின்றதே!"
சுந்தர ஆவுடையப்பன்
என்கிற சிவவாக்கியர் பாடல், இந்த உலகில், நிலையானதுபோல் தோன்றுகிற எதுவுமே நிலையானது இல்லை என்கிறது. வானம், உடம்பு, நான் என்னும் ஆளுமை எல்லாம் இருப்பதுபோல் தோன்றி உலகிற்கும் மனித உடம்பின் செயல்பாட்டிற்கும் ஒரு கட்டமைப்பை வழங்கினாலும், உண்மையில், வானமும், உடம்பும், நான் என்னும் தன்முனைப்பும் நிச்சயமாக இல்லை என்பதே கண்கண்ட உண்மை; தான் என்பது இல்லாமல் ஜோதி சொரூபமாய் ஆடிக்கொண்டிருக்கும் இறையே நிலையானது ஆகும் என்பதை இப்பாட்டு உணரச் செய்கிறது.
நிலையில்லாதவற்றிலிருந்து நிலையானவற்றைக் கண்டறிவதே உலகியல் வாழ்வின் தத்துவம். நிலையானதைக் கண்டறிவதற்கு நிலைத்த நம்பிக்கை என்பது அவசியம் தேவை.
திபெத் நாட்டில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு துறவியை நாடி ஓர் இளைஞன் வந்தான். "குருவே! என்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்!. எனக்கு உங்களது ஆசிகளையும் அறிவுரைகளையும் வழங்குங்கள்!" என்று மன்றாடிக் காலில் விழுந்தான். அந்த இளைஞனைத் தூக்கி நிறுத்திய துறவி," இன்று முதல் உன்னைச் சீடனாக ஏற்று ஆசீர்வதிக்கிறேன்; அறிவுரை என்று பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை; என்னை குருவாக ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாய், இனிமேல் நீ எதைச் செய்தாலும், என்னுடைய பெயரைச் சொல்லிச் செய்!.
முழுமையாக என்னுடைய பெயரை மட்டும் நம்பு! வெற்றி நிச்சயம்! "என்று சொல்லி அனுப்பினார்.
அன்றுமுதல் குருவின் திருப்பெயரைச் சொல்வதையே மந்திரமாகக் கருதிச் செயல்படத் தொடங்கினான் அந்த இளைஞன்; திடீரென ஒருநாள், அந்த ஊரின் குளத்திற்குக் குளிக்கச் சென்ற இளைஞன், குளித்து முடித்தவுடன், குளத்து நீரின் மீதேறி அக்கரைக்கு நடந்தே சென்று அடைந்தான்; சீடன் குளத்து நீரின் மீதேறி நடந்து சென்ற அதிசயத்தை அந்தத் துறவியிடம் சென்று மக்கள் ஆச்சரியமாகச் சொன்னார்கள். அடுத்த நாளே, அந்த ஊரில் உயரமாக இருந்த குன்றின் உச்சிக்குச் சென்ற சீடன், குருவின் பெயரைச் சொல்லிக் கீழே குதித்து விட்டான்; குன்றின் அடிவாரத்தில் விழுந்த சீடன், ஒரு பொட்டுக் காயமின்றி எழுந்து நடக்கவும் தொடங்கி விட்டான்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட துறவி, சீடன் இவ்வளவும் செய்வதற்கு எது காரணம்? யார் காரணம்?; அந்த இளைஞனின் தனிப் பயிற்சியா? அல்லது சிறப்பான திறமையா? என்று ஊர் மக்களைப் பார்த்துக் கேட்டார். "வேறு எதுவுமே காரணமில்லை! நீங்கள் ஒருத்தர் மட்டுமே காரணம்!. நீரின்மீது நடக்கும்போதோ அல்லது குன்றின் உச்சியிலிருந்து குதிக்கும்போதோ அந்த இளைஞன் உங்கள் பெயரை மட்டுமே தொடர்ந்து மந்திரம்போலச் சொல்லிக்கொண்டு செயலில் ஈடுபட்டான்; வெற்றியும் கண்டான்.
அந்த ஆற்றலை அவன் பெறுவதற்கு உங்கள் பெயரே உறுதுணையாக இருந்திருக்கிறது; உண்மையில், உங்கள் பெயர் மட்டுமல்ல, நீங்களும் ஆற்றல் மிக்கவர்" என்று துறவியிடம் கூறினர் பொதுமக்கள்.
மகிழ்ந்துபோன துறவி, தன்னுடைய ஆற்றலைப் பரிசோதித்துப் பார்க்க, அவரே நேரடியாகக் குளத்தங்கரைக்குச் சென்று, குளத்தின்மீது நடக்கத் தொடங்கினார்; பாவம் நீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறலுக்கு ஆளானார்.
பிறகு குளத்துக்குள் குதித்த நீச்சல் தெரிந்த சில பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார். நல்லவேளை முதல் பரிசோதனைக்குக் குளத்தங்கரைக்கு வந்ததால், அவர் சேதாரமின்றிக் காப்பாற்றப்பட்டார்; நேராகக் குன்றின் உச்சிக்குச் சென்று குதித்திருந்தால், ஆதாரமின்றி உடல் சிதறியிருப்பார். இப்போதுதான் அவருக்கு உண்மை விளங்கியது. உண்மையில் தனது சீடனுக்கு மந்திர ஆற்றலை வழங்கிய சக்தி, தானோ அல்லது தன்னுடைய பெயரோ இல்லை; அந்த இளைஞன் அந்தப் பெயரின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நன்னம்பிக்கை.
நம்பிக்கை கொள்வது என்பது இயல்பானது; ஆனால் நம்பிக்கைமீதே மாற்றமுடியாத நம்பிக்கை கொள்வதில்தான் வெற்றியின் விலாசம் அடங்கியிருக்கிறது. நம்பிக்கை கொள்வது என்பது ஒரு செயலோடு உறவுகொள்வது மட்டுமல்ல; அதனோடு உரிமை கொள்வதும் ஆகும். அப்போதுதான், செயலாற்றும்போது தளராத முயற்சி, இடைவிடாத உழைப்பு, அயற்சி கொள்ளாத மகிழ்ச்சி ஆகிய அத்தனையும் நம்மோடு உரிமை கொண்டாடி வந்து உயரத்திற்கு உயர்த்தும்.
விருப்பத்தோடு கல்லையும் சாப்பிட்டால், அதையும் வயிறு சீரணித்துவிடும்; இதற்குக் காரணம் விருப்பமும் நம்பிக்கையுமே காரணம். அதே நேரத்தில், நம்பிக்கையில்லாமல் பச்சைத் தண்ணீரைப் பருகினாலும் வயிற்றுப் போக்கும் வாந்தியுமே இறுதி விளைவாக இருக்கும். எதில் ஈடுபட்டாலும் அதில் முழு மனஈடுபாட்டோடும், மகிழ்ச்சி நம்பிக்கையோடும் ஈடுபட்டால் தளர்ச்சியில்லாத வெற்றி, தகுதிப் பரிசாகக் கிட்டும்.
நம்பிக்கை வைப்பதுகூடத் திடீரென வந்துவிடக்கூடாது; அப்படி வந்துவிட்டால் அது மூடநம்பிக்கையாகக் கூட மாறிவிடும். இன்றைய புதிய அறிவியல், மனித மூளையை நம்பிக்கை இயந்திரமாகப் பார்க்கச் சொல்கிறது. இதுவரை இறங்கிச் செய்த வேலைகளில் ஏற்பட்ட தடைகளையும் தோல்விகளையும் பாடங்களாக எடுத்துக்கொள்ளச் சொல்கிறது மூளை; இந்த இடத்தில் நம்பிக்கை நமக்குக் கற்றுத்தருகிற போதகாசிரியராகவும் திகழ்கிறது.
கடந்த காலம் நமக்குத் தந்தது தோல்வி மட்டுமே! என்றாலும் அவநம்பிக்கை கொள்ளாமல், அதிலிருந்தும் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு எதிர்காலம் இனிமையானது எனும் நன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். எதிலும் தளராமல் உறுதியான நம்பிக்கை எண்ணங்களோடு செயல்படத் தொடங்கினால் நேர்முறையான விளைவுகளே நமக்கு அமைதியையும் வளத்தையும் அள்ளிக்கொண்டு வந்து கொட்டும்.
உலகம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கை நமது எண்ணங்களிலும் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் நமது வாழ்வின் ஒவ்வொரு விடியலும் ஒளிக்கிரணங்களோடு மலர்கிறது. ஒளி என்பது அறிவின் குறியீடு; ஒளி மகிழ்வின் வெளிப்பாடு; ஒளி நம்பிக்கையின் புறப்பாடு. நம்பிக்கை மகிழ்வோடு, மகிழ்ச்சி ஈடுபாட்டுடன் ஒரு செயலில் இறங்கும்போது, எல்லாத் தடங்கல்களும் சூரியக் கதிர் பட்ட பனிபோல விலகிவிடுகின்றன.
நமது ஒவ்வொரு செயலின் தீர்க்கமான வெற்றிக்கும் அடிப்படையாக நமது மனமும் உடலும் சோர்ந்துபோகாத சுறுசுறுப்போடு திகழ வேண்டும். செயலில் இறங்கும்போதே அவநம்பிக்கையின் சுவடுகள் அணுவளவும் சிதைக்காத வண்ணம் நம்மைப் பாதுகாப்பதற்கு நாம் நன்னம்பிக்கை கொள்வதே சிறந்த ஊக்கமாகும்.
நன்னம்பிக்கை நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க, செயலில் இறங்குவதற்கு முன், மூன்றுவிதமான தன்மைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இறங்கப் போகும் செயல்குறித்த பொதுவான விழிப்புணர்வு அடிப்படையான முதல் தேவையாகும். செயலின் தன்மை எப்படி? எதிர்கொள்ளும்போது ஏற்படும் விளைவுகளும் தடங்கல்களும் எப்படிப்பட்டவை? போன்றவற்றில் ஆழ்ந்த அறிவு இதற்கு வேண்டும்.
"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்"
என்னும் குறளில் வள்ளுவப் பேராசான், 'எதிர்விளைவு பின்விளைவு குறித்து அறியும் எதிரதாக் காக்கும் அறிவு' ஒவ்வொரு செயல் தொடக்கத்திற்கு முன்னும் வேண்டும் என்கிறார். இரண்டாவதாக, அந்தச் செயலில் இறங்கிய பிறகு ஆற்றவேண்டிய செயலின் அளவு குறித்த கணக்கீடு வேண்டும். இதைத் திட்டமிடல் என்றும் கூறலாம்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியார்
திண்ணியராகப் பெறின்"
என்பது வள்ளுவம். திட்டமிடல் என்றால் மேம்போக்காகத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்குவது அல்ல. ஏற்படப்போகும் சாதக பாதகங்கள் அனைத்தையும் எதிர்பார்த்துத் திட்டமிட்டு இறங்குவது; தேவைப்படும் முழுமையான மனித வளம், பொருள்வளம், தொழில்நுட்பத் திறம் சகலத்தையும் தயாராக வைத்துக்கொண்டு செயலில் இறங்குவது.
மூன்றாவது, முழு நம்பிக்கையோடு செயல்படத் தொடங்குவது. 'குத்தொக்க சீர்த்த விடத்து' என்பதைப்போல எவ்வளவு விரைவாகச் செயலை முடித்துக் காட்ட வேண்டுமோ அவ்வளவு உறுதியாக, விரைவாகச் செய்துகாட்ட வேண்டும். இப்படி அனைத்து முன்னேற்பாடுகளோடு நம்பிக்கை இயந்திரமாகிய மூளையைத் தயார் செய்துகொண்டு இறங்கினால் என்றென்றும் வெற்றியே!.
தொடர்புக்கு 9443190098






