search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school van"

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
    • பொதுமக்கள் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம்.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த 14-ந் தேதி பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி பிரதீப் என்ற 5-ம் வகுப்பு மாணவன் பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 6,754 பள்ளி வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.1.36 கோடி அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது.

    பள்ளி மாணவ-மாணவிகளை விதிமுறைகளை மீறி மிக அதிகமாக ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகமும் அவ்வப்போது தங்களது குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் பாதுகாப்பாக ஓட்டுகின்றனரா? சாலைவிதிகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா? குழந்தைகளிடம் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா? என்பதையும் விசாரித்து அந்தந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கோ அல்லது வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களுக்கோ நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

    மேலும் பொதுமக்களும் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம். மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலுவலக எண்கள், செல்போன்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு விரிவான வழிமுறைகளை கொடுப்பதற்கு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவும் பிற மாநிலங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை அளித்துள்ளது. அதனடிப்படையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் துறையின் மூலம் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்தின் பின்புறமாக பக்கவாட்டில் மோதியது.
    • விபத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 6ம் வகுப்பு மாணவன் , 7-ம் வகுப்பு மாணவி ஆகிய இருவர் காயம் அடைந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் - தாராபுரம் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் 25க்கும் மேற்பட்டோரை பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டு கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி பேருந்து பனப்பாளையத்தில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் சாலையில் வலது ஓரமாக திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்தின் பின்புறமாக பக்கவாட்டில் மோதியது.அதன் பின்னரும் நிற்காமல் அருகே உள்ள பெருமாள் கோவில் சுற்று சுவரில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் பயணித்த 6ம் வகுப்பு மாணவன் , 7-ம் வகுப்பு மாணவி ஆகிய இருவர் காயம் அடைந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பள்ளி வேனில் இருந்த மாணவ, மாணவிகளை மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜா என்பவரை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல் பல்லடம் - தாராபுரம் சாலை பிரிவு அருகே தேனி மாவட்டம் குமுளியில் இருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று முன்னாள் சென்ற சொகுசு காரின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது .இதில் சொகுசு கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பல்லடத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துக்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழே விழுந்த பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பழனிசாமி உயிரிழந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி என்ற இடத்தில் நேற்று முன்தினம் 1ந்தேதி தேதி அன்று திங்கட்கிழமை காலை லக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (77) என்பவர் மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த முத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வேன் ஒன்று பழனிச்சாமி ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்த பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்று முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆரணி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி அடுத்த சிறுமூர் வடக்கு கொட்டாமேடு பகுதியை சேர்ந்தவர் அருள்மணி விவசாயி. இவரது மனைவி கனகா இவர்களுக்கு பவஸ்ரீ (வயது6), தாரகேஸ்வரன் (3).என்ற மகள் மகன் உள்ளனர்.

    பவஸ்ரீ ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகின்றார். பள்ளியில் இருந்து தினமும் வீட்டிற்கு வேன் வந்து பவஸ்ரீயை அழைத்து செல்வது வழக்கம். இன்று காலை பள்ளிவேன் மாணவி வீட்டிற்கு வந்து நின்றது. கனகா தனது மகள் பவஸ்ரீயை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டிலிருந்த 3 வயது குழந்தை தாரகேஸ்வரன் வீட்டைவிட்டு வெளியே வந்து வேனின் முன்பக்க சக்கரத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தான். இதனை கவனிக்காத வேன் டிரைவர் வேனை இயக்கினார். அப்போது குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தது.

    அவனது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் குழந்தையை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் வேன் டிரைவர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மத்திய பிரதேசத்தில் பள்ளி வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் டிரைவர், பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம் பீர்சிங்கபூர் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பேருந்தும், பள்ளி வேனும் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனில் பயணித்த  6 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுனர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    சங்கராபுரம் அருகே தறிகெட்டு ஓடிய பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். #SchoolBusAccident
    சங்கராபுரம்:

    சங்கராபுரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சங்கராபுரம், பிரம்மகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்களை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வருவதற்காக வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சங்கராபுரம் நோக்கி புறப்பட்டது. அந்த வேனை சங்கராபுரத்தை சேர்ந்த நசீர் மகன் காஜா ஷரீப் (வயது 22) என்பவர் ஓட்டினார்.

    சங்கராபுரம் அருகே மூக்கனூர் என்ற இடத்தில் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர்.

    இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 12-ம் வகுப்பு மாணவிகள் கீதா, சுப்ரியா, மாணவர்கள் பரகான், நிசார் அலி, முஷரப், 11-ம் வகுப்பு மாணவி பிரிதா(16), மாணவர்கள் சஞ்சய், முஷரப், 10-ம் வகுப்பு மாணவர்கள் ஷாவித், ஜெயக்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதில் மாணவி பிரிதா மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
    பள்ளி வேனில் மணல் கடத்தி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி காவிரி மற்றும் குடமுருட்டி ஆறுகளில் தொடர்ந்து மணல் கடத்தல் சம்பவங்கள் லாரி, மாட்டு வண்டிகளில் தினமும் அரங்கேறி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் ரோந்து சென்று அதனை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் மணல் கடத்தலில் ஈடுபடும் கும்பல் பல்வேறு வகைகளில் மணல் கடத்தலை தொடர்கின்றனர்.

    லாரி, மாட்டு வண்டிகளில் மணல் கடத்தினால் அதிகாரிகள் ஆய்வில் சிக்கி கொள்வதால் சமீப நாட்களாக மோட்டார் சைக்கிளில், ஜீப், சொகுசு கார்களில் அதிகாரிகளின் கண்ணில் ‘மண்’ணை தூவி விட்டு மணல் கடத்தி வருகின்றனர். இதையும் அதிகாரிகள் எப்படியோ கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளிவேனில் மணல் கடத்தி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து, அங்கிருந்து பாசனத்துக்காக கடந்த 22-ந்தேதி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்னும் கும்பகோணம் பகுதி குடமுருட்டி ஆற்றை வந்தடையவில்லை.

    எப்படியும் இன்று மாலைக்குள் ஆற்றில் தண்ணீர் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் மணல் எடுக்கமுடியாது என்பதால் மணல் கடத்தும் கும்பல் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள காவிரி மற்றும் குடமுருட்டி ஆற்றுக் கரைகளில் அவசர அவசரமாக மணல் எடுத்து கடத்தி வருகின்றனர்.

    இதனால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில், கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் தாசில்தார் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குடமுருட்டி ஆற்றில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தனிப்படையினருக்கு புகார்கள் வந்தது. இதன்பேரில் தனிப்படையில் நேற்று இரவு குடமுருட்டி ஆற்றங்கரை பகுதிக்கு சென்று பதுங்கி இருந்து மணல் கடத்தலை கண்காணித்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் குடமுருட்டி ஆற்றுக்குள் இருந்து ஒரு வேன் கரைக்கு ஏறியது.

    இதனைக் கண்ட தனிப்படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது வேனை கரை மேல் ஏற்றிய டிரைவர் அதிகாரிகள் வருவதை கண்டு திடுக்கிட்டார். இதனால் தானியங்கி கதவை கொண்ட வேனை எலக்ட்ரானிக் லாக் சிஸ்டத்தில் அதனை பூட்டி விட்டு சாவியுடன் டிரைவர் மற்றும் சிலர் இருட்டுக்குள் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    வேனின் அருகில் சென்ற அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். அந்த வேன் கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கதவை திறக்க முயன்றனர். ஆனால் அதனை திறக்க முடியவில்லை.

    இதற்கிடையே தப்பி ஓடிய தில்லையம்பூர் பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் மட்டும் அதிகாரிகளிடம் சிக்கிகொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வேன் டிரைவர் வலங்கைமான் வரதராஜம்பேட்டையை சேர்ந்த வைரமுத்து (28) என தெரிய வந்தது.

    இதையடுத்து கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து டிரைவர்கள் மற்றும் மெக்கானிக்குகளை வரவழைத்து திறக்கும் முயற்சியில் இறங்கினர். பெரும் முயற்சிக்குப்பின் அதிகாலை வேனின் கதவை திறந்தனர். அப்போது தனியார் பள்ளிக்கு சொந்தமான அந்த வேனில் ஆற்றிலிருந்து சுமார் 150 மூட்டைகளில் மணல் நிரப்பப்பட்டு அதில் ஏற்றி கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.

    பள்ளி வேனில் மணல் கடத்தலா? என்று அதிகாரிகள் திகைத்தனர். பின்னர் தனிப்படையினர் பள்ளி வேனை பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வேனில் மணல் கடத்தலில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    தற்போது சப்-கலெக்டர் பிரதீப்குமாருக்கு மேல் நடவடிக்கைக்காக வருவாய் ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர். தனியார் பள்ளி வேனில் நள்ளிரவில் மணல் கடத்திய சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பீகார் மாநிலத்தின் பானியாபுர் பகுதியில் இன்று உயரழுத்த மின்கம்பி அறுந்து கீழே சென்ற பள்ளி வேன் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
    பீகார்:

    பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் இன்று பள்ளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 11 குழந்தைகள் மீது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×