search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. பள்ளி வேனில் மணல் கடத்தியதால் அதிகாரிகள் திகைப்பு
    X

    ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. பள்ளி வேனில் மணல் கடத்தியதால் அதிகாரிகள் திகைப்பு

    பள்ளி வேனில் மணல் கடத்தி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி காவிரி மற்றும் குடமுருட்டி ஆறுகளில் தொடர்ந்து மணல் கடத்தல் சம்பவங்கள் லாரி, மாட்டு வண்டிகளில் தினமும் அரங்கேறி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் ரோந்து சென்று அதனை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் மணல் கடத்தலில் ஈடுபடும் கும்பல் பல்வேறு வகைகளில் மணல் கடத்தலை தொடர்கின்றனர்.

    லாரி, மாட்டு வண்டிகளில் மணல் கடத்தினால் அதிகாரிகள் ஆய்வில் சிக்கி கொள்வதால் சமீப நாட்களாக மோட்டார் சைக்கிளில், ஜீப், சொகுசு கார்களில் அதிகாரிகளின் கண்ணில் ‘மண்’ணை தூவி விட்டு மணல் கடத்தி வருகின்றனர். இதையும் அதிகாரிகள் எப்படியோ கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளிவேனில் மணல் கடத்தி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து, அங்கிருந்து பாசனத்துக்காக கடந்த 22-ந்தேதி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்னும் கும்பகோணம் பகுதி குடமுருட்டி ஆற்றை வந்தடையவில்லை.

    எப்படியும் இன்று மாலைக்குள் ஆற்றில் தண்ணீர் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் மணல் எடுக்கமுடியாது என்பதால் மணல் கடத்தும் கும்பல் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள காவிரி மற்றும் குடமுருட்டி ஆற்றுக் கரைகளில் அவசர அவசரமாக மணல் எடுத்து கடத்தி வருகின்றனர்.

    இதனால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில், கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் தாசில்தார் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குடமுருட்டி ஆற்றில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தனிப்படையினருக்கு புகார்கள் வந்தது. இதன்பேரில் தனிப்படையில் நேற்று இரவு குடமுருட்டி ஆற்றங்கரை பகுதிக்கு சென்று பதுங்கி இருந்து மணல் கடத்தலை கண்காணித்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் குடமுருட்டி ஆற்றுக்குள் இருந்து ஒரு வேன் கரைக்கு ஏறியது.

    இதனைக் கண்ட தனிப்படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது வேனை கரை மேல் ஏற்றிய டிரைவர் அதிகாரிகள் வருவதை கண்டு திடுக்கிட்டார். இதனால் தானியங்கி கதவை கொண்ட வேனை எலக்ட்ரானிக் லாக் சிஸ்டத்தில் அதனை பூட்டி விட்டு சாவியுடன் டிரைவர் மற்றும் சிலர் இருட்டுக்குள் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    வேனின் அருகில் சென்ற அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். அந்த வேன் கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கதவை திறக்க முயன்றனர். ஆனால் அதனை திறக்க முடியவில்லை.

    இதற்கிடையே தப்பி ஓடிய தில்லையம்பூர் பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் மட்டும் அதிகாரிகளிடம் சிக்கிகொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வேன் டிரைவர் வலங்கைமான் வரதராஜம்பேட்டையை சேர்ந்த வைரமுத்து (28) என தெரிய வந்தது.

    இதையடுத்து கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து டிரைவர்கள் மற்றும் மெக்கானிக்குகளை வரவழைத்து திறக்கும் முயற்சியில் இறங்கினர். பெரும் முயற்சிக்குப்பின் அதிகாலை வேனின் கதவை திறந்தனர். அப்போது தனியார் பள்ளிக்கு சொந்தமான அந்த வேனில் ஆற்றிலிருந்து சுமார் 150 மூட்டைகளில் மணல் நிரப்பப்பட்டு அதில் ஏற்றி கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.

    பள்ளி வேனில் மணல் கடத்தலா? என்று அதிகாரிகள் திகைத்தனர். பின்னர் தனிப்படையினர் பள்ளி வேனை பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வேனில் மணல் கடத்தலில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    தற்போது சப்-கலெக்டர் பிரதீப்குமாருக்கு மேல் நடவடிக்கைக்காக வருவாய் ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர். தனியார் பள்ளி வேனில் நள்ளிரவில் மணல் கடத்திய சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×