search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand kidnapping"

    பரமக்குடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    பரமக்குடி:

    பரமக்குடி அருகே ராஜாக்கள்பட்டி சாலையில் பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்டபோது உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கட்டியாயலை சேர்ந்த அருண்குமார்(வயது 25) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல போகலூர் யூனியன் முதலூர் அருகே அந்த பகுதியை சேர்ந்த பாலாஜி, மணிமாறன், சிலம்பரசன் ஆகியோர் மணல் அள்ளுவதாக சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் போலீசார் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    போடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியது தொடர்பாக டிராக்டர் மற்றும் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே ஆற்று படுகையில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதால் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் பொட்டிபுரம் மற்றும் பூதிப்புரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது மின்னல் வேகத்தில் வந்த 2 லாரிகளையும் ஒரு டிராக்டரையும் மடக்கி சோதனை நடத்தினர். அவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து லாரிகளையும், டிராக்டரையும் மணலுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். லாரி உரிமையாளர் ராஜசேகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருப்புவனம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலையாரியை லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக மேலும் 10 பேர் சிக்கினர்.
    திருப்புவனம்:

    திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது கொத்தன்குளம் கிராமம். இங்குள்ள கண்மாயின் கரையை சேதப்படுத்தி மணல் அள்ளுவதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்புவனம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த சில நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். உடனே தலையாரி மலைச்சாமி அந்த லாரிகளை நிறுத்த முயன்றார். அப்போது அவர் மீது லாரியை மோதுவது போல் சென்றனர். இதில் நிலை தடுமாறி தலையாரி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் திருப்பாச்சேத்தி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த காளஸ்வரன், ரவி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து காளஸ்வரனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    பூவந்தி அருகே திருப்புவனம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி வந்த 4 லாரிகளை அதிகாரிகள் பிடித்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக லாரி உரிமையாளர்களான திருச்சியைச் சேர்ந்த சரவணன், சிவச்சந்திரன், சங்கர், தர்மர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் திருப்புவனத்தை அடுத்த மணலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் ராஜா, பூமி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி அருகே கொத்தரிவிலக்கு பகுதியில் பள்ளத்தூர் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் மேட்டுக் குடிப்பட்டியைச் சேர்ந்த சந்திரன் (வயது 30) என்பவர் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சந்திரன் கைது செய்யப்பட்டார்.
    பள்ளி வேனில் மணல் கடத்தி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி காவிரி மற்றும் குடமுருட்டி ஆறுகளில் தொடர்ந்து மணல் கடத்தல் சம்பவங்கள் லாரி, மாட்டு வண்டிகளில் தினமும் அரங்கேறி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் ரோந்து சென்று அதனை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் மணல் கடத்தலில் ஈடுபடும் கும்பல் பல்வேறு வகைகளில் மணல் கடத்தலை தொடர்கின்றனர்.

    லாரி, மாட்டு வண்டிகளில் மணல் கடத்தினால் அதிகாரிகள் ஆய்வில் சிக்கி கொள்வதால் சமீப நாட்களாக மோட்டார் சைக்கிளில், ஜீப், சொகுசு கார்களில் அதிகாரிகளின் கண்ணில் ‘மண்’ணை தூவி விட்டு மணல் கடத்தி வருகின்றனர். இதையும் அதிகாரிகள் எப்படியோ கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளிவேனில் மணல் கடத்தி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து, அங்கிருந்து பாசனத்துக்காக கடந்த 22-ந்தேதி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்னும் கும்பகோணம் பகுதி குடமுருட்டி ஆற்றை வந்தடையவில்லை.

    எப்படியும் இன்று மாலைக்குள் ஆற்றில் தண்ணீர் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் மணல் எடுக்கமுடியாது என்பதால் மணல் கடத்தும் கும்பல் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள காவிரி மற்றும் குடமுருட்டி ஆற்றுக் கரைகளில் அவசர அவசரமாக மணல் எடுத்து கடத்தி வருகின்றனர்.

    இதனால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில், கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் தாசில்தார் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குடமுருட்டி ஆற்றில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தனிப்படையினருக்கு புகார்கள் வந்தது. இதன்பேரில் தனிப்படையில் நேற்று இரவு குடமுருட்டி ஆற்றங்கரை பகுதிக்கு சென்று பதுங்கி இருந்து மணல் கடத்தலை கண்காணித்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் குடமுருட்டி ஆற்றுக்குள் இருந்து ஒரு வேன் கரைக்கு ஏறியது.

    இதனைக் கண்ட தனிப்படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது வேனை கரை மேல் ஏற்றிய டிரைவர் அதிகாரிகள் வருவதை கண்டு திடுக்கிட்டார். இதனால் தானியங்கி கதவை கொண்ட வேனை எலக்ட்ரானிக் லாக் சிஸ்டத்தில் அதனை பூட்டி விட்டு சாவியுடன் டிரைவர் மற்றும் சிலர் இருட்டுக்குள் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    வேனின் அருகில் சென்ற அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். அந்த வேன் கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கதவை திறக்க முயன்றனர். ஆனால் அதனை திறக்க முடியவில்லை.

    இதற்கிடையே தப்பி ஓடிய தில்லையம்பூர் பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் மட்டும் அதிகாரிகளிடம் சிக்கிகொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வேன் டிரைவர் வலங்கைமான் வரதராஜம்பேட்டையை சேர்ந்த வைரமுத்து (28) என தெரிய வந்தது.

    இதையடுத்து கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து டிரைவர்கள் மற்றும் மெக்கானிக்குகளை வரவழைத்து திறக்கும் முயற்சியில் இறங்கினர். பெரும் முயற்சிக்குப்பின் அதிகாலை வேனின் கதவை திறந்தனர். அப்போது தனியார் பள்ளிக்கு சொந்தமான அந்த வேனில் ஆற்றிலிருந்து சுமார் 150 மூட்டைகளில் மணல் நிரப்பப்பட்டு அதில் ஏற்றி கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.

    பள்ளி வேனில் மணல் கடத்தலா? என்று அதிகாரிகள் திகைத்தனர். பின்னர் தனிப்படையினர் பள்ளி வேனை பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வேனில் மணல் கடத்தலில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    தற்போது சப்-கலெக்டர் பிரதீப்குமாருக்கு மேல் நடவடிக்கைக்காக வருவாய் ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர். தனியார் பள்ளி வேனில் நள்ளிரவில் மணல் கடத்திய சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விழுப்பணங்குறிச்சி பகுதியில் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆற்றில் இருந்து லாரியில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்த வெற்றியூரை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் (வயது 19), விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (26), கார்த்திகேயன் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து, பொக்லைன் எந்திரம்- 2 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது மணல் கடத்தி வந்த 2 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    ரிஷிவந்தியம்:

    மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையிலான போலீசார் அரும்பராம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து, அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் பரமனந்தல் பகுதியை சேர்ந்த சின்னராசு (வயது 24) என்பதும், முஸ்குந்தா நதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராசுவை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் காட்டு வன்னஞ்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் மணி நதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×