search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv gandhi murdered case"

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும் விலகி விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #BanwarilalPurohit #Perarivalan
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்துள்ள வழக்கை காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான முட்டுக்கட்டையை அகற்ற மத்திய அரசின் இந்நிலைப்பாடு பெரிதும் உதவும். அந்த வகையில் மத்திய அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432, 435 ஆகிய பிரிவுகளின் கீழ் விடுதலை செய்ய 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது.

    அதை எதிர்த்து ராஜீவ் காந்தி கொலையின் போது உயிரிழந்த வேறு சிலரின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72 மற்றும் 161-வது பிரிவுகளின் கீழ் ஏற்கனவே தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட மத்திய அரசு, 7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு தேவையற்றது; அவர்களின் கோரிக்கை காலாவதியாகி விட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.


    7 தமிழர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்த அப்பாஸ் என்பவர் உள்ளிட்ட சிலர் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தமிழக ஆளுனர் பன்வாரிலாலை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்வரை பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதை தமிழக ஆளுனர் தாமதப்படுத்தி வந்த நிலையில் தான் மத்திய அரசு இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

    மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்று 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் எந்த நேரமும் தள்ளுபடி செய்யலாம்.

    உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அப்பாஸ் உள்ளிட்ட சிலரின் வழக்குகளைக் காரணம் காட்டி 7 தமிழர்கள் விடுதலையை தாமதப்படுத்தி வந்த ஆளுனர், மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்? என்பது தான் இப்போது விடை காணப்பட வேண்டிய வினாவாகும். 7 தமிழர்களையும் விடுதலை செய்யப் பரிந்துரைத்து கடந்த 9.9.2018 அன்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாளில் இருந்தே, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், யாருடைய விருப்பத்தையோ நிறைவேற்றுவதற்காக அவர்களின் விடுதலையை தமிழக ஆளுனர் திட்டமிட்டு தாமதித்து வந்தார்.

    7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இன்றுடன் 93 நாட்கள் ஆகி விட்ட நிலையில், இனியும் ஆளுனர் தாமதிப்பது முறையல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு இல்லை என்ற ஒற்றை விதியை மட்டும் வைத்துக் கொண்டு, 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்வதை தாமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். இந்தத் தவறை தமிழக ஆளுனர் மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும் விலகி விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்து வரும் 17-ம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குள்ளாக பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை தமிழக அரசும், தமிழக ஆளுனரும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss #BanwarilalPurohit #Perarivalan
    கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 684 பேர் மீதும் அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #Vaiko
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட் டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கடந்த 3-ந்தேதி கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 684 பேர் மீதும் அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #Vaiko
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். #Vaiko #BanwarilalPurohit
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார். மாவட்டம் தோறும் கலெக்டர்களை அழைத்து கொண்டு புரோக்கர் போல் செயல்படுகிறார்.


    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இதுகுறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அப்பாவி மாணவிகள் சாவுக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறு செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் ? இதனை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.

    இதில் நாங்கள் அனுமதி கேட்ட இடம் வரை செல்ல போலீசார் அனுமதி மறுத்தால் ஜல்லிக்கட்டு போல் மிகப்பெரிய போராட்டமாக மாறும்.

    இவ்வாறு வைகோ கூறினார். #Vaiko #BanwarilalPurohit
    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலைக்காக கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் வைகோ போராட்டத்தை தி.மு.க. ஆதரிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #DMK #MKStalin
    சென்னை:

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி ம.தி.மு.க., திராவிடர் கழகம் ஆகியவை ஒருங்கிணைந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளன.

    வருகிற 3-ந்தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்திருந்தார். இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, வைகோ கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

    இதனை ஏற்றுக் கொண்டு ம.தி.மு.க. நடத்தும் போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.


    இது தொடர்பாக மு.க. ஸ்டாலின், வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு.

    ஆகவே அந்த 7 பேரையும் விடுதலை செய்யாமல் மனித நேயமின்றி காலம் தாழ்த்தி வரும் தமிழக கவர்னரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து ம.தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இணைந்து அறிவித்துள்ள “கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு” பாராட்டை தெரிவித்து அப்போராட்டத்தை வரவேற்கிறேன்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக கவர்னர் செயல்பட்டு, 27 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும் முற்றுகைப் போராட்டத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MDMK #Vaiko #DMK #MKStalin
    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
    பெரியகுளம்:

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நேற்று பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் 2 முறை கவர்னரிடம் பரிந்துரை செய்து உள்ளோம். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.


    ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குடிசைகளை மாற்றி 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இதில் 3¾ லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடிசைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.

    தமிழகத்தில் எந்தவொரு தொகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. 234 தொகுதிகளிலும் மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வையில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் துரோகிகள் கைவசம் உள்ளது என்று சிலர் கூறுவது தவறு. 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி போன விரக்தியில் அவர்கள் பேசுகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை குறித்தும், வர இருக்கிற கஜா புயலால் சராசரி அளவை காட்டிலும் அதிக பாதிப்புகள் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டும் அனைத்து அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ளனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு பதவி கொடுத்தவர் சசிகலா என்று தினகரன் கூறுகிறார். எனக்கு பதவி கொடுத்தவர் ஜெயலலிதாதான். எங்களுக்கு அரசியல் ரீதியான எதிர்க்கட்சி தி.மு.க.தான். துரோகி கட்சி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். வரும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று இரட்டை இலையை வெற்றி சின்னமாக மாற்றுவோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam 
    ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்ட தமிழக அரசின் சிபாரிசை மத்திய உள்துறை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்ப மறுத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. #TNGovt #CentralGovt RajivGandhi
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறார்கள்.

    நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக அரசும் அவர்களை விடுவிப்பதற்கு சம்மதம் தெரிவித்து மத்திய அரசிடம் இது சம்பந்தமாக சிபாரிசு செய்தது.

    மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கவர்னரே இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுத்து கொள்ளலாம் என கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையும் அவர்களை விடுவிக்கலாம் என கவர்னருக்கு சிபாரிசு செய்துள்ளது. இது, கவர்னரின் பரிசீலனையில் உள்ளது.

    ஏற்கனவே கொலையாளிகள் 7 பேருக்கும் மன்னிப்பு அளித்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது.

    இந்த கடிதம் 2.3.2016 அன்று மத்திய உள்துறை மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த கடிதம் தொடர்பாக மத்திய உள்துறை கடந்த ஏப்ரல் 18-ந் தேதி ஒரு தகவலை தமிழக அரசுக்கு அனுப்பியது.

    அதில், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கொலையாளிகளை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சம்பந்தப்பட்ட கொலையாளிகள் மோசமான ஒரு கொலை குற்றத்தை செய்திருக்கிறார்கள். அவர்கள் முன்னாள் பிரதமருடன் சேர்த்து 15 பேரை கொலை செய்துள்ளனர்.

    அதில் பலர் போலீஸ் அதிகாரிகள். கொலையாளிகளில் 4 பேர் வெளிநாட்டினர். அவர்கள் 3 இந்தியர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருக்கிறார்கள். எனவே, அவர்களை விடுவிக்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதன் பிறகு தமிழக அரசு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் என்ன ஆனது? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.


    இந்த நிலையில் கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜனாதிபதி மாளிகைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கடிதம் எழுதி, தமிழக அரசின் சிபாரிசு கடிதம் என்ன ஆனது? என்று கேட்டு இருந்தார்.

    புழல் சிறையில் உள்ள அவருக்கு தற்போது தகவல் அறியும் ஆணையத்தில் இருந்து பதில் கடிதம் வந்துள்ளது.

    அதில், தமிழக அரசு சிபாரிசு செய்த கடிதம் எதுவும் இதுவரை எங்களுக்கு (ஜனாதிபதி அலுவலகம்) வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    அதாவது தமிழக அரசு சிபாரிசு கடிதத்தை மத்திய உள்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்ப மறுத்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

    மத்திய உள்துறையின் உயர்மட்ட அதிகாரிகளே இதுபற்றி முடிவு எடுத்து கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டதாக உள்துறை வட்டாரங்கள தெரிவித்தன.

    இது சம்பந்தமாக பேரறிவாளன் வக்கீல் சிவக்குமார் கூறும்போது, தமிழக அரசின் சிபாரிசு கடிதம் எங்களுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் மாளிகையின் செயலகம் தெரிவித்துள்ளது.

    ஜனாதிபதிக்கு அனுப்பாமலே வேண்டும் என்றே முடக்கி இருக்கிறார்கள். இந்த வி‌ஷயத்தை பொறுத்த வரை சட்ட ரீதியான நடவடிக்கைகளை விட அரசியல் ரீதியான நடவடிக்கைகளே உள்ளது.

    மத்திய உள்துறையின் செயல்பாடுகள் தவறானவை. எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். #TNGovt #CentralGovt RajivGandhi
    ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கவர்னர் தாமதிப்பது ஏன்? என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வியெழுப்பியுள்ளார். #MansoorAlikhan
    அவனியாபுரம்:

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி கண்மாயில் பனைமர விதைகளை நடும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடந்தது. இதில் நடிகர் மன்சூர்அலிகான் கலந்து கொண்டு பனைமர விதைகளை நட்டார். இதில் ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 27 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக எச்.ராஜா போன்றோர் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது.

    ஆனால் தமிழக கவர்னர் இது தொடர்பாக முடிவு எடுக்காமல் தாமதம் செய்து வருகிறார்.


    உச்சநீதிமன்ற உத்தரவு, தமிழக அரசு தீர்மானம் ஆகியவை அனுப்பியும் 7 பேரை விடுவிக்க கவர்னர் தாமதிப்பது ஏன்? மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படும் கவர்னரை உடனே மாற்ற வேண்டும்.

    ராஜீவ் கொலை வழக்கில் சுப்பிரமணியசாமி, சந்திரசாமியை விசாரிக்காமல் அப்பாவிகள் மீது வழக்கு போட்டு 27 வருடம் சிறை வைத்துள்ளனர்.

    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை குறையும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MansoorAlikhan

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. #RajivCaseConvicts #SupremeCourt
    புதுடெல்லி:

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    இதற்கிடையே, 7 பேர் விடுதலை தொடர்பாக 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம் மற்றும் ராம சுகந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


    இந்த வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

    மேலும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. #RajivCaseConvicts #SupremeCourt
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #RajivCaseConvicts
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் கலைஞர் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த கழகத்தின் நிலைப்பாடாகும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும்; 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RajivCaseConvicts #DMK #MKStalin
    ×