search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor mansoor alikhan"

    வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தேர்தலுக்காக என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
    பழனி:

    நடிகர் மன்சூர் அலிகான் பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி அல்ல, ராணுவ ஆட்சி. மக்களின் குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மக்களுக்கான உதவி அல்ல. வருகிற தேர்தலில் ஓட்டுக்கான பணம். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கொலைக்குற்றச்சாட்டு உள்ளது.

    அம்பானி, அதானிக்கு கடன் தள்ளுபடி செய்கிறார்கள், ஆனால் விவசாயக்கடன் தள்ளுபடி இல்லை. தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் தற்போது கூட்டணி குறித்து பேசி வருகின்றன. கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் வேலை. அது தேர்தல் வரைக்கும் மட்டுமே.

    அதன்பின்னர் தேனிலவு போன்று கூட்டணியை கலைத்து விடுகிறார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆண்ட கட்சிகள் ஏன் தனியாக நிற்க கூடாது?. நாங்கள் வருகிற தேர்தலை தனியாக நின்று சந்திப்போம். தில்லு இருந்தால் அவர்கள் தனியாக நிற்கட்டும். நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் ஆண்ட கட்சிகள் என கூறுபவர்களிடம் உள்ள மக்கள் பணத்தை பிடுங்கி, தமிழக அரசின் கடனை அடைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருப்பது கொடுமை என்று ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley
    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.

    அப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.

    தமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.

    பெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.


    தி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவியை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்? என கேள்வி எழுப்புகிறேன்.

    பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.

    இந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.   #MansoorAliKhan   #ArunJaitley
    ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கவர்னர் தாமதிப்பது ஏன்? என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வியெழுப்பியுள்ளார். #MansoorAlikhan
    அவனியாபுரம்:

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி கண்மாயில் பனைமர விதைகளை நடும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடந்தது. இதில் நடிகர் மன்சூர்அலிகான் கலந்து கொண்டு பனைமர விதைகளை நட்டார். இதில் ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 27 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக எச்.ராஜா போன்றோர் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது.

    ஆனால் தமிழக கவர்னர் இது தொடர்பாக முடிவு எடுக்காமல் தாமதம் செய்து வருகிறார்.


    உச்சநீதிமன்ற உத்தரவு, தமிழக அரசு தீர்மானம் ஆகியவை அனுப்பியும் 7 பேரை விடுவிக்க கவர்னர் தாமதிப்பது ஏன்? மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படும் கவர்னரை உடனே மாற்ற வேண்டும்.

    ராஜீவ் கொலை வழக்கில் சுப்பிரமணியசாமி, சந்திரசாமியை விசாரிக்காமல் அப்பாவிகள் மீது வழக்கு போட்டு 27 வருடம் சிறை வைத்துள்ளனர்.

    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை குறையும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MansoorAlikhan

    8 வழிசாலை போட்டால் 8 பேரை வெட்டி கொல்வேன் என பேசியதால் தொடரப்பட்ட வழக்கில் கைதான நடிகர் மன்சூர்அலிகான் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
    காடையாம்பட்டி:

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களை கடந்த மாதம் 3-ந் தேதி நடிகர் மன்சூர் அலிகான் சந்தித்து பேசினார்.

    அப்போது பேட்டி கொடுத்த அவர் 8 வழி சாலை போட வருவோரில் 8 பேரை வெட்டி கொல்வேன் என்று ஆவேசமாக கூறினார். இது குறித்து தும்பிப்பாடி வி.ஏ.ஓ. மாரிமுத்து தீவட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நடிகர் மன்சூர்அலிகான் மீது மக்களை கலவரத்திற்கு தூண்டுதல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்தல், குற்றம் செய்ய மக்களை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. அன்பு தலைமையிலான போலீசார் மன்சூர் அலிகானை கைது செய்து சேலத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிந்ததும் இரவு 7 மணியளவில் மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கன்னியாதேவி முன்பு நடிகர் மன்சூர் அலிகானை ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கன்னியாதேவி உத்தரவிட்டார். அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னையில் இருந்து சேலம் வரும் வழியில் ஆத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    8 வழி சாலை நாசமாக்கும் திட்டம். 10 ஆயிரம் கோடியில் சாலை அமைத்து 20 ஆயிரம் கோடி சுங்க கட்டணம் வசூலிப்பார்கள். தமிழகத்தை ராவண பூமி என மத்திய அரசு புறக்கணிக்கிறது.

    8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக அறவழியில் தொடர் போராட்டம் நடத்த ஜாதி, மதம் கடந்து தமிழர்கள் ஒன்று திரள வேண்டும், அமைச்சர்களுக்கு லாரி, பொக்லைன் உள்ளதால் 300 கோடி ரூபாய் சாலைக்கு 900 கோடி ரூபாய் ஒப்பந்தம் அறிவித்து சாலை போட்டு உள் நோக்கத்துடன் கொள்ளையடிக்கிறார்கள்.

    முதல்வர் பழனிசாமி 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும். ஜெயலலிதா போன இடம் கூட தெரியவில்லை. சிலர் பெங்களூரு சிறையில் கம்பி எண்ணுகின்றனர். அராஜக அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது.

    சேலம்-உளுந்தூர் பேட்டை 4 வழிச்சாலையில் மரம் வளர்த்து இந்த சாலையை மேம்படுத்துவது தான் இதற்கு மாற்று வழி. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MansoorAlikhan
    ×